புனித கன்னிமரியின் லூர்து மலைக்காட்சி


பிரான்ஸ் நாட்டில் லூர்து நகருக் கருகில் 1858ஆம் ஆண்டு பிப்ரவரி 11இல் பிரனீஸ் மலையடிவாரத்தில் மசபியேல் குன்றுகளுக்கிடையே முதன் முறை யாக பெர்நதத் சுபீருஸ் என்ற நாட்டுப்புறத்து 14 வயதுச் சிறுமிக்கு, விறகு சேகரிக்கச் சென்ற இடத்தில் கன்னிமாமரி காட்சியளிக்கின்றார்.  இளமைத் தோற்றம் என்றும், மிக அழகானவராகக் காணப்பட்டார் என்றும் பெர்நதத் குறிப்பிடுகின்றார்.  கையில் ஒரு ஜெபமாலை இருந்ததையும் பார்க்கின்றார்.  பெர்நதத்திற்கு வாழ்த்துக் கூறி தன்னுடன் ஜெபிக்க அழைக்கின்றார் கன்னிமரி.

பிப்ரவரி 25இல் மீண்டும் காட்சியளித்து மரியன்னை கூறுவார் “அங்கு தெரிகின்ற அருவியில் போய் உன்னைக் கழுவிக் கொண்டு, நீர் பருகு”. அருவியை நோக்கிப் போகும் போது, அங்கு அல்ல என்று சொல்லி குகையின் தரைப் பாகத்தைச் சுட்டிக் காட்டினார்.  பெர்நதத் அங்கே போனாள்.

மார்ச் 25ஆம் நாள் மங்கள வார்த்தைத் திருநாள்.  மரியன்னை மீண்டும் அவ்விடத்தில் காட்சி தருகின்றார்.  இந்த முறை அந்த அம்மாளின் பெயரைக் கேட்கின்றாள் சிறுமி பெர்நதத்.  “நானே அமல உற்பவி” என்ற பதில் கிடைக்கிறது.  4 ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருத்தந்தை 9ஆம் பத்திநாதர் “தேவமாதா அமல உற்பவி, ஜென்ம பாவம்­ இன்றி உற்பவித்தவர்” என்னும் விசுவாசப் பிரமாணத்தை அறுதியிட்டுக் கூறியிருந்தார்.  கடைசியாக, 18-வது முறையாக கார்மேல் மலைக் கன்னியின் திருநாளன்று மரியன்னை பெர்நதத்துக்குக் காட்சியளித்தார்.  காட்சிகளிலெல்லாம் பாவிகளுக்காக மன்றாடப் பணிக்கின்றார்.  ஜெபத்துடன் தவ முயற்சிகள் அத்தியாவசியம் என்று குறிப்பிடுகிறார்.  அந்த இடத்தில் பவனி வரவேண்டும், ஆலயம் எழுப்பப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.  பலரும் கூடினாலும் பரவசமாகிவிட்ட பெர்நதத் மாத்திரமே மரியின் உருவத்தைப் பார்க்க முடிந்தது.

உலகின் எத்திசையிலிருந்தும் இன்று ஆண்டு தோறும் லட்சோபலட்சம் திருப்பயணிகள் அங்கு செல்கின்றனர்.  ஆயிரக்கணக்கான புதுமைகள் நடைபெறுகின்றன.  பலதரப்பட்ட கொடிய வியாதிகள் குணமா கின்றன.  மருத்துவர்களால் முற்றிலும் கைவிடப்பட்டவர்களுக்கு அவர்கள் முன்னாலேயே குணம் கிடைத்து உள்ளது.பல பாவிகள் மனந்திரும்புகின்றனர் என்பது தான் மிக முக்கியம்.  “உனக்கு நான் காட்சி கொடுத்ததினால், நீ இவ்வுலகில் துன்பம் இல்லாமல் வாழ்வாய் என்று நான் கூற மாட்டேன்.  மாறாக உனக்கு கலப்பில்லா மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு மறு உலகில்தான்” என்று லூர்துமேரி பெர்நதத்துக்குக் கூறியிருந்தபடி பல வேதனைகளை அனுபவித்த பிறகு இறைவனடி சென்றார். 

சிந்தனைக்கு : பெர்நதத் என்பவரைப் போல் குழந்தை உள்ளம் கொண்டு தேவ தாயின் மேல் பற்றுதல் கொண்டு ஜெபமாலையை உருக்கமாய் ஜெபிக்கவும் கற்றுக்கொள்வோம்.

எட்வர்டு

இறைவன் மீது நம்பிக்கை


நான் அறியாப் பருவமாகிய முதலிரு பருவங்களில் பெற்றோர்களின் அடக்குமுறை காரணமாக குழம்பி, மூன்றாம் பருவமாகிய இளமைப் பருவமதில் மனம் போன போக்கில் சென்று மென் மேலும் குழப்பத்திற்கு உள்ளானேன்.  பெற்றோர்களும் என் விருப்பத்திற்கு என்னை விட்டு விட்டார்கள்.  நம்பிக்கையின் வாசல்கள் எல்லாம் எனக்கு மட்டும் திறக்கவே திறக்காது என மனம் நொந்து சோர்ந்து போனேன்.  மேலும் இறைவனிடம் மன்றாடிய போதிலும் என் எண்ண அலைகள் வெகுவாக அலைமோதி விரக்தியின் விளிம்பில், வாழ்க்கையின் ஓரத்திற்கு சென்று, தனிமையில் தவித்து நின்றன. 

என் சுவாசம் போல நெருக்கமாய் இருந்த நண்பர்கள் எல்லாம் முகர்ந்து எறிந்துவிட்டனர்.  நம்பிக்கையற்ற நேரங்களில் கூட அவர்கள் என் மதிப்பைத் தாக்கி தரக்குறைவாக எடை போட்டார்கள்.  தனிமை விசும்பலில் இனி அந்தத் துரோகிகளின் நிழல் கூட படிய விடமாட்டேன் என்று நினைத்தேன்.  நான் விதைத்த விதைகளை மட்டும் எந்த மண்ணும் இறுக பற்றிக் கொள்ள வில்லையே என ஏங்கினேன்.  கடின பாறையும், கருவேல முட்களும் என்னைச் சிதைக்க முகவரி அற்றுப்போனேன்.  ஏமாற்றமோ, வலியோ எனக்குப் புதிதல்ல.  வெட்ட வெளியின் இருட்டு அமைதியில் அன்புக்காக ஏங்கிய நேரங்கள் உண்டு.  மனதில் ஓங்காரமிடும் நினைவலைகளாகிய மிருகத்தை வேட்டையாட இயலாமல் என்னையே காவு கொடுக்க நினைத்த தருணங்களும் உண்டு.  ஆழ்மன எண்ணங்கள் மிதந்து நடுமனதினில் கோரத்தாண்டவம் ஆடின. 

இருப்பினும் என் மீது ரோஜாக்களும் விழுந்தது உண்டு.  வாழ்விற்கு இனிமையூட்டும் அந்த இரசத்தைப் பருக விரும்பினேன்.  என்னைத் தேடும் இறைவனைத் தேடலாமா? என்ற பசுமையான கனவுகள் என்னில் மிதக்க ஆரம்பித்தன.  செபத்தில் இணைந்த கரங்கள்  உலகத்தைத் தாங்கும் கரங்கள் என்று எண்ண தொடர்ந்து செபிக்கும் அளவிற்கு எனக்குள் நம்பிக்கைக் காற்று வீசச் செய்தது.    “இறைவன் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாகமாட்டார்.  அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நன்மைகளைச் செய்வார்” (உரோ 10:11-12) என்ற இறைவார்த்தையைச் சிந்தித்தேன்.

வாழ்வில் என்ன இருக்கிறது? என்று சலித்துக் கொண்டாலும் புறங்கையால் அந்த எண்ணத்தைத் தள்ளிவிட்டு என் மனம் சொல்லிற்று அட வாழ்வதற்குத் தான் எவ்வளவோ இருக்கிறது.  எனவே எழுந்து இறைவன் அருளோடு பறக்கும் தட்டினில் விண்வெளியில் பறந்தேன். பல நாள் பயணத்திற்குப் பின் நம்பிக்கை என்ற கோலில் காலூன்றி வாழ்க்கை என்னும் படகை செலுத்தினேன்.

செப வாழ்வு


படைப்பு ஒவ்வொன்றும் அதனதன் நிலைக்கேற்ப வாழ்ந்து தம்மைப் படைத்தவரின் புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு படைப்பும் இறை பிரசன்னத்தின் வெளிப்பாடு. கடவுளின் சாயலாகவும் பாவனையாகவும் படைக்கப்பட்ட மனிதர்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதிலும் சிறப்பாக இறைவனுக்கு நண்பர்களாகவும், இறைமக்களுக்குப் பணியாளர்களாகவும் இருக்கும் துறவிகள், கிறிஸ்துவை முழுமையாகப் பின்பற்றி வாழ மனமுவந்து தம்மை அர்ப்பணித்தவர்கள். இந்த அர்ப்பண வாழ்வு ஆழம் காண செபம் அவர்களுக்கு இன்றியமையாததாய் இருக்கிறது. இயேசு இறைமகனென்று இருந்தாலும், தம் வாழ்வு முழுவதும் செப அனுபவத்தில் வாழ்ந்தார் என்பதை நற்செய்தியில் பல இடங்களில் நாம் காண்கிறோம்.

  • இயேசு விடியற்காலையில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார் (மாற் 1:35).
  • ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டி வந்தார்        (லூக் 15:16).
  • அவர் அவர்களை விட்டு கல்லெறி தூரம் விலகிச் சென்று முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டினார் (லூக் 22:41).
  • இயேசுவும் திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது வானம் திறந்தது (லூக் 3:21).
  • இயேசு தனித்திருந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர் (லூக் 9:18).
  • யோவான் 17-ஆம் அதிகாரம் முழுவதுமே இயேசுவின் உருக்கமான செபமாக உள்ளது. 

இவ்வாறு ஒருசில இடங்களை நாம் கோடிட்டுக் காட்டினாலும் இயேசு தந்தையோடு கொண்டிருந்த அனுபவப் பகிர்வினை அவரின் வாழ்வு முழுவதும் இருப்பதைப் பார்க்கிறோம். இந்த அனுபவப் பகிர்வின் கனிகள்தான் அவரது பணியில் நிகழ்ந்த அற்புதங்களும் அருளடையாளங்களும். இவற்றின் மூலம் தந்தையை வெளிப்படுத்தி, மக்களை இறையாட்சிக்கு இட்டுச் செல்கிறார்.

இந்த இறையாட்சிப் பணியைத் தொடர இறைவனால் விரும்பி அழைக்கப்பட்டு, அனுப்பப்பட்டிருக்கும் துறவிகளின் நிலைப்பாட்டை, செப அனுபவப் பகிர்வினைப் புதுப்பிப்பது நன்மை தருவதாக அமையும். 

நற்செய்தி எடுத்துரைக்கும் முறையில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதே துறவற வாழ்வின் அடிப்படை அளவுகோல். நற்செய்தியை ஒவ்வொரு நாளும் வாசிப்பதும், தியானிப்பதும், அதை வாழ்வாக்குவதும்தான் துறவிகளின் மேலான செப அனுபவமாகும். இறைவனை மட்டுமே தேடுபவர்களாய், தம் மனத்தாலும் இதயத்தாலும் செபத்தின் மூலம் அவரோடு ஒன்றித்திருப்பவர்கள், நற்செய்தி அறிவுரைகளைக் கடைப் பிடிப்பவர்கள், அவற்றால் அன்பிற்கு இட்டுச் செல்லப்படுகிறார்கள். இவ்வறிவுரைகளை வெளிப்படையாக ஏற்பதால் அதன் வாழ்வோடும் புனிதத்தன்மையோடும் பிரிக்க முடியாத முறையில் கிறிஸ்துவோடு தொடர்பு கொள்பவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாய் இறைவனைத் தேடி அவருக்கு அன்பு செலுத்துபவர்கள் என்று துறவிகளின் மேன்மையையும், செப வாழ்வையும், பணிப்பகிர்வையும் பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கம் தெளிவாகக் கூறுகிறது.

அர்ப்பண வாழ்வை விரும்பி ஏற்றுக்கொண்ட துறவிகள் அனைத்து நிலைகளிலும் தம்மிலே புனிதத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இந்தப் புனிதம் அவர்களின் செப வாழ்வால் பாதுகாக்கப் படுகிறது. துறவிகளின் பணி நேரத்தைப் பகுத்துக் கூறலாம். ஆனால் அவர்களின் செப நேரம் இதுதான் என்று பிரித்துக் கூற இயலாது. தம்மோடு இருப்பதற்கும் நற்செய்தியைப் பறைசாற்றவும் (மாற் 3:14) இயேசு சீடர்களை அழைக்கிறார். அவரோடு இருப்பது என்பது வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவரது பிரசன்னத்தில் வாழ்வது. அவர்கள் எங்கிருந்தாலும், என்ன பணி செய்தாலும் அனைத்துமே செப அனுபவத்தின் வெளிப்பாடுகள். அவர்களின் வாழ்க்கை முறைகளும், வாழ்வும் செபமாக வெளிப்படுகின்றன

இன்று துறவிகளிடம் செபமும், செப அனுபவத்தின் பகிர்வும் குறைந்து வருகின்றன. உலகப் போக்கில் அதிக அளவில் ஈடுபாடு வளர்ந்துள்ளது. எனவே துறவிகளிடம் செபம் என்பதில் இறை மக்களுக்கு அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் நடை, உடை, பாவனைகளும், உறவு முறைகளும் அவர்களின் புனிதத்தைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றன. “உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” (மத் 5:16).

இறைமக்களை இறைவனிடம் அழைத்துச் செல்லும் ஒளிச்சுடர்களாக இருக்க வேண்டியவர்கள் துறவிகள். அவர்களின் செப வாழ்வும் அணுகு முறையும் மக்களைச் செபிக்கத் தூண்ட வேண்டும். அவர்களின் சொல், செயல், கண்ணோட்டம், உறவு முறை, உழைப்பு, பங்கெடுப்பு, வளர்ச்சி, சோர்வு அனைத்துமே  செபத்தின் கனிகளாக மிளிர வேண்டும்.

இங்ஙனம் வாழும்போது அவர்களின் வாழ்வும் பணியும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மக்களிடம் இவர்கள் இறைபணியாளர்கள் என்ற மதிப்பு உண்டாகும். செபமும் வாழ்வும் இணைந்து செல்லும்போது அர்ப்பணம் உறுதிப்படுத்தப்படுகிறது. இக்காலக் கட்டத்தில் துறவிகள் அதிகமான அளவில் செபத்தில் ஈடுபாடு கொண்டு இறை மக்களை வழிநடத்த வேண்டும்; செபிக்கின்ற துறவிகளாக வாழ வேண்டும். 

சகோ. கிறிஸ்து ராணி FSJ,
சென்னை - 16

விசுவாச விதைகள்


பாவத்திற்கான காரணிகளாக உலகம், பசாசு, சரீரம் என்று நம் அடிப்படை மறைக்கல்வி போதிக்கிறது. இவை மூன்றில் ஏற்படும் பாவங்கள் நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கின்றன;  பல சமயங்களில் முற்றிலுமாகப் பிரிக்கின்றன. உலகத்தின் மாயக் கவர்ச்சி பலரின் பாவ எண்ணங்களுக்கு வித்திடுகிறது. உள்ளிருந்தே கொல்லும் வியாதி போல் பசாசு நம்மை ஆண்டவரிடம் அண்டவிடாமல் தொடர் தாக்குதலை நடத்துகிறது. உடல் இச்சை நமது ஜென்ம பாவத்தின் தொடர்ச்சியாக நாளும் இம்சிப்பதை உணரலாம். இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர் புடையவையாதலால், கடைசி வரை பலரால் தம் தவறைத் திருத்திக் கொள்ள முடிவதில்லை. மீள மீளப் பாவச் சேற்றில் வீழ்ந்து ‘இதுதான் வாழ்க்கை’ என்றாக்கிக்கொள்கிறோம். தன்னை வென்றவனே உலகை வெல்கிறான்.

இன்று உலகம் பரந்து விரிந்து காணக்கிடக்கிறது; ஒரு கிராமமாய்ச் சுருங்கிவிட்டது. சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் அன்றாட வாழ்க்கையின் தேவையாகிவிட்டன. இந்த உலகம் பசாசின் கையில் உள்ளதால் அழிந்து போகும் மாயக் கவர்ச்சிகள் சரீரத்திற்கு விருந்தாக வைக்கப்படுகின்றன. உலகை நேசிப்பவன் உலகைச் சார்ந்தவன். கடவுளை நேசிப்பவன் கடவுளைச் சார்ந்தவன். இரண்டுக்கும் ஒருவர் ஊழியம் செய்வது சமரசத்தில் சன்மார்க்கம் தேடுவது ஆகும். மனசாட்சியற்ற மகிழ்ச்சி மருந்துக்கும் உதவாது. பசாசு ஒளியின் தூதனாய் நடிப்பது போல் நாமும் இருந்தால் ‘மீட்பு’ எட்டாக்கனியாகி விடும்.

உலகம், பசாசு, சரீரம் இவற்றால் உலகில் பரவி வரும் நோய்கள் எண்ணிலடங்கா. போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பாலியல் கலவையில் தன்னை இழத்தல், குறுகிய சார்பு எண்ணங்களால் அழுத்தம் பெற்று வெறுப்பு கசப்போடு பிறர் அன்புக்கு எதிராய் வாழ்தல் மன நிறைவான வாழ்வுக்கு வழியாகுமா? பொறாமை மிகக் கொண்டு அடுத்தவரை அழித்து வாழ நினைக்கிறோம். குடும்பத்தில் சமாதானம் இல்லை. குடும்பங்களுக்குள் ஒற்றுமை இல்லை. சுயநலம் பலரையும் ஆட்டிப் படைக்கிறது. அவரவர் தம் பலத்தை, சாதுர்யத்தை, சமத்தை வெளிக்காட்ட முனைகிறார்கள். இதனால் மனித உறவுகள் கொச்சைப்படுத்தப் படுகின்றன. உறவுகளின் விரிசலினால் மனிதநேயம் சிதைக்கப்படுகிறது. கடவுள் மறைந்து உலகம் முன்வைக்கப் படுகிறது.

உடல் சார்ந்த நோய்களைத் தவிர்த்து பல்வேறு சமூக நோய்களான பொறாமை, வெறுப்பு, கசப்பு, பகை, விரக்தி, ஏமாற்றம், போட்டி, கட்சி மனப்பான்மை போன்றவை மனிதனைக் கடவுளுக்கு எதிராகச் செயல்படவைக்கின்றன. உலகுக்கும் கடவுளுக்கும் ஊழியம் செய்வதாகச் சொல்லிக் குழப்பத்தில் இன்றைய மனிதன் வாழ்கிறான். இதன் விளைவாய் உண்மையான இறைப்பற்றுதல் இல்லை, ஜெபம் இல்லை, தபம் இல்லை. பணம் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்ற மிதப்பில் வாழ்கிறான். கூடி ஜெபிக்கும் குடும்பம் கோடி நன்மை பெறும் என்ற காலமெல்லாம் மலையேறி, அவசர கதியில் அல்லோலப்படுகின்றன குடும்பங்கள்.

பல மனிதரில் உலகை வெல்லும் வெறி இருக்கிறதே ஒழிய கடவுளைத் தேடும் ஆர்வம் இல்லை. பெற்றவர்களும் மற்றவர்களும் ‘ரோல் மாடல்களாக’ இல்லாததால் ஒரு வறட்சி, ஒரு தேக்கம் சமூகத்தில் காணப்படுகிறது. இதனால் தேவ அழைத்தல் குடும்பங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை. அப்படி ஒரு எண்ணம் எழுந்தால், ‘அழைப்பு பிழைப்பிற்கே’ என்ற நிலைதான் உள்ளது. இல்லறம் நல்லறமாக, ஒவ்வொரு குடும்பமும் குட்டித் திருச்சபையாக எழும்பி, ‘விசுவாச விதைகளை’ வேரூன்றச் செய்து களை விதைப்பவனை அப்புறப்படுத்த ஜெபத்தை ஆயுதமாக எடுத்தால், ‘விசுவாசம்’ தழைக்கும்; குடும்பங்களில் தேவ அழைத்தலுக்கான வாய்ப்புப் பெருகும். எச்சூழலிலும் இறை இயேசுவைப் பற்றி அன்னையின் துணையோடு வாழ முயற்சிப்போம். உண்மையான அறுவடை காண்போம். ‘இறைவார்த்தையை’ வெளிச்சமாகக்கொள்வோம். தேவ நற்கருணையில் ஆண்டவரைக் காண்போம்.

வாழ்க்கையிலே சரியான முடிவுகள் எடுப்பதற்கு....


அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டு அதுக்கப்புறம் அல்லாடுறவங்க நிறைய பேர் உண்டு இந்த உலகத்துலே.

எட்வர்டு. டி. போனா-ன்னு ஒருத்தர்.‘Lateral Thinking’ - என்று சிந்தனையிலே ஒரு புதிய பாணி வார்த்தையை உருவாக்கினதே இவர் தானாம்.

வாழ்க்கையிலே சரியான முடிவுகள் எடுப்பதற்கு இவரது கருத்து மிகவும் உபயோகமாக இருக்கும்.   

முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதெல்லாம் கற்பனைத் தொப்பிகள் ஆறையும் ஒன்றன்பின் ஒன்றாக மாட்டிக்கொண்டுதான் முடிவெடுக்கணுமாம்.

முதல்லே வெள்ளைத் தொப்பி : தகவல்களைத் திரட்டறதுதான் இந்தத் தொப்பியின் வேலை.

அடுத்து பச்சைத் தொப்பி : கிடைச்ச தகவல்களை வச்சி புதுப்புது ஐடியாக்களை உற்பத்தி செய்யும்.

அடுத்து மஞ்சள் தொப்பி : பச்சை தொப்பி கொடுத்த சிந்தனைகளில் எதெல்லாம் நடைமுறைக்குச் சரிப்பட்டு வரும்ங்கறதை சரியாக இனம் கண்டு மற்ற சிந்தனைகளையயல்லாம் வடிகட்டும்.

அடுத்து கருப்புத் தொப்பி : நியாய தர்மங்களைப் பாதுகாக்கும் தொப்பி. 
இதுக்கு அடுத்து சிவப்புத் தொப்பி : இது ஏதோ என் மனசுக்குப்படுது - இது சரியா வரும் - இப்படிச் சொல்லுவோம் இல்லையா?  இந்த உள்ளுணர்வு (Intuition) தான் இந்தத் தொப்பி.

கடைசியாக நீலத் தொப்பி : இது மற்ற ஐந்து தொப்பிகள் எடுக்கும் முடிவுகளை ஆராய்ந்து சரியான முடிவு எடுக்கும் தொப்பி.

இத்தனை தொப்பிகள் கூறுவதையும் நாம வரிசைப்படுத்தி, உபயோகப்படாத யோசனைகளை ஒதுக்கி, நடைமுறைக்கு தேவையானதை எடுத்து, மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதைத் தவிர்த்து, நம் உள்ளுணர்வு சொல்வதைப் பார்க்கணும்.  பிறகு நல்ல முடிவுக்கு வரணும்.

இவை அனைத்திற்கும் மேலாக நமது மனசு தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.  இதுதான் இத்தொப்பிகளின் முக்கிய கருத்து.நமக்கு வரும் எதிர் மறையானவற்றை எதிர்கொள்ள தெளிந்த சிந்தனையை வளர்ப்போம்!

நன்றி. தகவல் களஞ்சியம்

குணம்பெறவும் குணப்படுத்தவும்


அருள்சகோதரிகளுக்காக நடத்திக் கொண்டிருந்த அந்த கருத்தமர்வில் “A World without”  என்கிற தலைப்பில் ஆளுக்கொரு கருத்து சொல்லும்படி கேட்டேன்.
போர், பகைமை, பாகுபாடு, தீவிர வாதம், வன்முறை, வறுமை,  லஞ்சம்,  ஜாதியம், மத துவேசம், பெண்ணடிமைத் தனம், குழந்தைத் தொழில், சுரண்டல், வேலையின்மை, நோய்கள், போதைப் பொருட்கள், அணு ஆயுதங்கள், உழைப்புச் சுரண்டல், மாசு போன்ற இவைகள் இல்லாத உலகம் வேண்டும் என அவர்கள் ஆசையோடு கருத்து தெரிவித்தனர்.

பின்பு “A World with”என தலைப்பை மாற்றிக் கொடுத்து ஆளுக்கொரு கருத்து சொல்லத் தூண்டினேன்.  அமைதி, சமத்துவம், வேலை வாய்ப்புகள், எல்லோருக்கும் அடிப்படை வசதிகள், நல்ல உறவுகள், சகோதரத் துவம், சமத்துவம், ஒற்றுமை, மனித நேயம், பொருளாதார முன்னேற்றம், மனித உரிமைகள் என அவர்களின்பட்டியல் தொடர்ந்தது. இப்படிப்பட்ட உலகம் உங்களுக்கு வேணுமா? என்றேன்.  எங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்குப் பின்வருபவர்களுக்கும் இதுதான் வேண்டும் என்றனர்.  நீங்கள் எல்லோரும் தேவ அழைப்பு பெற்ற அருள்சகோதரிகள் என்பதால் இப்படி ஆசைப்படுகிறீர்களோ? என்றேன்.  இல்லையில்லை.  மனிதனாகப் பிறந்த எவனுமே இதுதான் வேணும் என்பான்.  இதில் என்ன தேவ அழைப்பு சிறப்பிருக்க முடியும்? என்றனர்.  நல்லது.  மனித குலமே பெற விரும்பும் இத்தகைய உலகம் எப்படி இருக்கும்? என்றேன்.  அதுதான் சொர்க்கம், மோட்சம், இறையரசு எனக் குதூகலமாய்க் கத்தினர்.

ஆம்!  மோட்சம், சொர்க்கம் இறையரசு என நாம் ஆளுக்கொரு விதமாய்ச் சொல்லும் தலமாக இந்த உலகம் உருவாகிவிட வேண்டுமென்று தான் ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறான்.  அவன் படித்தவன் - படிக்காதவன், பாமரன் - பணக்காரன் என எவனாக இருந்தாலும், எந்நிலையில் இருப்பினும் அவனின் உள்மனம் இதனையே விரும்புகிறது.  அதனையே தேவனின் அழைப்பு என்றும் சொல்லலாம்.  இந்த அழைப்பு தேவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக் குள்ளும் தாராளமாகவே இருக்கிறது.  அதிலும் நாலு பேர் குழுமியிருக்கிற இடத்தில் இந்த ஆவல் இன்னும் அதிகமாகவே வெளிப்படுகிறது.  ஆனால், தனியே சென்றவுடன் இந்த ஆவல் சிறிது சுருங்கி எனக்கும் என்னைச் சார்ந்தவருக்கும் மட்டும் கிடைக்க வேண்டுமென ஆளாய்ப் பறக்கிறது.  அந்தத்  தனிப்பட்ட ஆசையே பேராசை யாகி சுயநலமாய்ச் சூழ்ந்து இந்த உலகம் மோட்சமாய், இறையரசாய் மாறாமல் தடுத்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

இறையரசாய் இவ்வுலகம் மாறிட வேண்டும் என ஆசிக்கும் மனிதனே அவனின் “சுய நலத்தால்” அதனைத் தடுத்து விடுகிறான்.  மனிதனைப் பிடித்துள்ள “சுய நலம்” என்கிற நோயிலிருந்து அவனைக் குணப்படுத்தி விட்டால் இந்த உலகமே சொர்க்கமாய் மாறும்.  சுயநல நோயிலிருந்து அவனை எப்படிக் குணப்படுத்துவது?  இது மனநிலை சம்மந்தப்பட்ட விசயம்.  எனவே அவனின் மன மாற்றத்திற்கு உதவிட வேண்டும்.

மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதையே கல்வியாக ஆக்கி அவனுக்கு வழங்கிட வேண்டும்.  இத்தகைய மனநிலை மாற்றத் திற்கான கல்வியைச் சொல்லித் தருவதாலோ, உபதேசிப்பதாலோ, சட்டங்களாலோ விளைவிக்க முடியாது.  மாறாக இது அனுபவக் கல்வியாகிட வேண்டும்.

அதாவது சுயநலம் பாவம், பேராசை பெருநஷ்டம் என உபதேசம் செய்யும் ஆசிரியர்களைக் காட்டிலும் சுயநல மில்லாமல் வாழ்ந்து காண்பிக்கும் ஆசான்களாலும், ஆசையைத் துறந்து வாழும் துறவிகளாலும் மாத்திரமே மகத்தான மாற்றத்தை ஏற்படுத்திட முடியும்.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை அறுத்த துறவிகள் சுயநலமில்லாமல் வாழ்ந்து காண்பிப்பதைக் கண்டு அந்த அனுபவத்தைச் சுவைக்கும் எந்தவொரு மானிடனும் மனநிலை மாற்றம் பெற்று சுயநலம் அறுப்பான். எனவே மனிதனின் சுயநலம் என்ற நோய் ஒழிய வேண்டுமாயின் அவர்களுக்கு முன்பாக சுயநலம் அறுத்த, ஆசைகள் துறந்த ஆசான்களும் துறவிகளும் தங்களது முன்மாதிரியான வாழ்க்கையை மக்கள் கண்டுணரச்  செய்ய  வேண்டும்.  அதுவே இந்நோய்க்கான அரு மருந்தாய் மக்களுக்கு உதவி மாற்றத்தை விதைக்கும்.  இத்தகைய குணப்படுத்தும் ஆற்றலுக்கான அழைத்தலே தேவ அழைப்பு, தெய்வீக அழைப்பு.  அறிவியல் தொழில் நுட்பத்தில், பொருட்களின் நுகர்வு வெறியில், பகட்டில், படோடோபத்தில் மாட்டிக் கொண்ட மதங் களோ, மதத் தலைவர்களோ, போலிச் சாமியார்களோ, போலித் துறவிகளோ இக்குணப்படுத்தலில் ஈடுபட முடியாது.  ஏனெனில் நோயாளியால் இன்னொரு நோயாளியைக் குணப்படுத்திட முடியாது.  மாறாக நோயைப் பரப்பிடத்தான் முடியும்.

சுயநலம் மறுத்த துறவிகளும் குருக்களும் பிறர்நலப் பணியில் தம்மை முழுவதுமாய் ஈடுபடுத்தி சுயநலத்திற்கான மாற்றை விதைக்கும்போது விண்ணரசு முளைக்கும்.  ஆம்  உலகின் சுயநல நோய் போக்கிடும் அருமருந்துகளான  சுயநலம் (அ)மறுத்தல், பிறர் நலம் வளர்த்தல் என்கிற இருபெரும் வழிகளைக் கையாண்டு நோயைக் குணப்படுத்தலாம்.  இதுவே இன்றைய தேவ அழைத்தலின் குணப்படுத்தும் பணி.  அதிலும் குறிப்பாக சுயநல உலகின் ஓட்டத்தில் ஆடி, பாடி, ஓய்ந்து, நோய் நொடி வந்து மருத்துவமனையில் வீழ்ந்து கிடப்போரைச் சென்று சந்தித்து அவர்களிடம் ஒருவர் பிறநலப் பணிகளைச் செய்து காட்டுவாரேயானால் அது அவர்களை உலுக்கிப்போடும்.  துன்ப வேளையில் ஆறுதல், ஆபத்தில்/அழிவில் உதவுதல் ஒருவனின் வாழ்வை உரசிப் பார்க்க வைக்கிறது.  எனவே தேவ அழைத்தலின் குணப் படுத்தும் பணி அங்கிருந்தே ஆரம்பிக்கப்பட்டால் அதன் பலன் விண்ணைத் தாண்டுமளவிற்கு விரிந்து கிடக்கும்.  மார்க்கம் இருக்கிறது.  மனம்தான் வேண்டும். குணம்பெறவும் குணப்படுத்தவும் முயன்று பார்ப்போம்!

எஸ். எரோணிமுஸ்,  
“ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி

அர்த்தமுள்ள பணியாளர்


என் இறைப்பணியின் தொடக்க நாட்களில் கொக்கூரணிப் பங்கில் பணியாற்ற என்னை அனுப்பினார்கள். அதுதான் பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்ற முதல் பங்கு.  மிகவும் பின்தங்கிய மக்கள் வாழும் பகுதி அது. சிறிய எண்ணிக்கையுடைய குடியிருப்புகளே அங்கு காணப்பட்டன. போக்குவரத்திற்கு நல்ல சாலை வசதியும் இல்லை. கிராமப்புற எளிய வாழ்வு.

ஆனால் அங்கிருந்த ஆலயம் 300 ஆண்டு பழமையான புனித செபஸ்தியார் ஆலயம். மக்கள் அந்த ஆலயத்தையும், புனித செபஸ்தியாரையும் மிகப் புனிதமாய் நினைத்து பெருந்திரளாய் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஜெபிக்க அங்கு வருவார்கள்.

மக்களின் ஏக்கத்தையும், அவர்களின் விசுவாசத்தையும் பார்த்து வியாதிப்பட்டவர்கள் சுகமடைய இறைவனின் வல்லமைக்காய் என்னையே ஒடுக்க ஆரம்பித்தேன். ஜெபித்தேன். வல்லமை முகாமில் பங்கு பெற்று பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றேன். இறைவல்லமை என்னில் செயல்பட ஆரம்பித்தது.

ஒரு செவ்வாய்க்கிழமை அன்று சுமார் ஐந்து வருடங்களாய்ப் பேச முடியாத ஒரு சிறுமியை என்னிடம் கொண்டு வந்திருந்தார்கள். பேயின் பிடியில் சிக்கி அவள் பேச முடியாதவளாய் இருந்தாள். அன்று இரவு திருத்தலத்திலேயே தங்கி இருக்கச் சொன்னேன். ஏனெனில் அடுத்த நாள் புதன்கிழமை காலை ஐந்து மணித் திருப்பலியில் அப்பெண்ணுக்காக ஜெபிப்பதாய்க் கூறி இருந்தேன்.  நானோ அன்று இரவு அச்சிறுமிக்காகவும், என்னில் இறைவல்லமை நிரப்பப்படவும் வெகுநேரம் ஜெபம் பண்ணிவிட்டு உறங்கப் போனேன்.

காலைத் திருப்பலி நேரத்தில் அச்சிறுமியைப் பீடத்தின் அருகில் வைத்து ஜெபித்தேன். என் கரங்கள் அவள் தலையில்பட்டவுடன் பிசாசு கத்திக் கொண்டு வெளியேறியது. அவளும் அடுத்த நொடியிலே “இயேசுவே உமக்குப் புகழ்” எனச் சத்தமாய்க் கூறி பேச ஆரம்பித்தாள். அவளின் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.

ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்து விண்ணகம் செல்லும் முன் தம் சீடர்களுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பொழிந்து, “வியாதிப்பட்டவர்களைச் சுகமாக்குங்கள், இறந்தவர் களையும் எழுப்புங்கள்...” என்கிறார் (மாற் 16:17).

இறைப்பணிக்குத் தேர்ந்து கொள்ளப்பட்டு அபிஷேகம் பெறும் ஒவ்வொருவருக்குமே அபிஷேகத்தினால் வல்லமை அளிக்கப்படுகிறது. புனித பவுல் திமொத்தேயுவுக்கு இவ்வாறு எழுதுகிறார் : “உம்மீது என் கைகளை விரித்ததால் கடவுளின் வரம் உமக்குள் வந்துள்ளது”   (2 திமொ 1:6).
எசாயா எழுதிய இறைவாக்கு தன்னுள் நிறைவேற்றப்பட்டதாக இயேசு இவ்வாறு கூறுகிறார் : “ஆண்டவருடைய ஆவி என் மேலே. ஏனெனில் என்னை அபிஷேகம் செய்துள்ளார்... குருடர் பார்வை பெறவுமே....” (லூக் 4:18; எசா 61:1).ஒவ்வொரு குருவும் அபிஷேகம் பெறும்போது இறைவல்லமையும் இறைஅறிவும் ஊற்றப்படுகின்றன (1 யோவா 2:20). இறைப்பணியாளர்களின் முக்கிய வல்லமையாக புதுமை செய்யும் ஆற்றல் விளங்குகிறது.

புனித திருமுழுக்கு யோவான் தன் சீடர்களை இயேசுவிடம் அனுப்பி, வரவிருக்கும் மீட்பர் இவர்தானா என இயேசுவிடமே கேட்டு வாருங்கள் எனக் கூறி அனுப்புகிறார். அதற்குப் பதிலாக இயேசு, “நீங்கள் என்னிடம் கண்ட அற்புத செயல்களையும் புதுமைகளையும் அவரிடம் கூறுங்கள்” என்கிறார். ஏனெனில் அதுவே ஒரு இறைவாக்கினர் என்பதற்கு அடையாளம் என இயேசு குறிப்பிடுகிறார்.

புனித பவுல் தான் ஓர் இறைவாக்கின் அப்போஸ்தலர் என்பதற்கு அடையாளமாக “நான் கொண்டிருந்த தளராமன உறுதி, செய்த அருங்குறிகள், அற்புதங்கள், புதுமைகள் இவையே அப்போஸ்தலருக் குரிய அறிகுறிகள்” (2 கொரி 12:12) என்கிறார்.

நான்கு நற்செய்திகளில் இயேசு செய்த புதுமைகளையும், அற்புத நிகழ்வையும் நீக்கிவிட்டால் வேறு அதிகமாக ஒன்றுமே இருக்காது. ஒவ்வொரு குருவும் ஒரு மறுகிறிஸ்துவே. எனவே நம்மில் கட்டாயம் புதுமை செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும். அதுவே மக்களை மனம் திருப்பி இறைவனிடம் கொண்டுவரும் அருள் சாதனமாக விளங்குகிறது (மத் 11:21, 23).
இறைவல்லமைக்காய் ஜெபிப்போம்; அர்த்தமுள்ள பணியாளர் குருக்களாய் வாழ்வோம். ஆமென்.


உண்மையாய்க் காதலிப்போம்


காதலர் தினத்தில் இன்றைய இளைஞர்கள் மேற்கொள்ளும் அநாகரீகச் செயல்களைக் கண்டு சமுதாய அமைப்பினரும் கல்வியாளர்களும் பெற்றோர்களும் முகம் சுளிக்கின்றனர். காவல் துறையினர் அன்று சிறப்பு ரோந்துப் பணியில் அமர்த்தப்படுகின்றனர். ஏதோ சுனாமி வருவதைப் போல எல்லாரும் பயப்படுகின்றனர்; அருவருப்பு அடைகின்றனர்.

ஏன் இந்தப் பதட்டமும் பயமும் வெறுப்பும்? நட்பு என்ற போர்வையில், காதல் என்ற பெயராலே நாகரீகத்தையும் பண்பாட்டையும் குழி தோண்டிப் புதைக்கும் செயல்பாட்டில் தங்களை இளைஞர்கள் இழப்பதால்தான் இத்தகைய பயமும் பதட்டமும். போதைக்கும் தீய பழக்கத்திற்கும் அடிமையான சில இளைஞர்கள் இளம் பெண்களைக் காதல் என்ற போர்வையில் மயக்கி, அவர்களுக்கும் போதைப் பொருட்களைப் பழக்கப்படுத்தி, கற்பைச் சூறையாடி அவர்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி விடுகின்றனர். இவர்களின் இத்தகைய செயல்பாட்டால் இளைஞர்களை நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய பாரதம் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றது.

காதலர்களே காதல் தினத்தைக் கொண்டாடுங்கள். உங்கள் கொண்டாட்டங்கள் மற்றவர்களின் மனத்தைப் புண்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட வரைமுறைக்குள் இருக்கட்டும். நாம் ஆடை உடுத்துவது நம் மானத்தைக் காக்கத்தான். அதைப் போல நம் கொண்டாட்டங்களும் இருக்க வேண்டும். காதல் என்பது என்ன? ஆணும் பெண்ணும் இரண்டு இரண்டு பேராகச் சேர்ந்து கொண்டு பொது இடங்களான கடற்கரையிலும், பொழுதுபோக்குப் பூங்காக்களிலும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும் இருப்பதற்குப் பெயர்தான் காதலா?

இருவர் ஒருவரை ஒருவர் விரும்பி ஒத்த அன்பு உடையவராக இருப்பதே காதல். காதலுக்கு இலக்கணமாகச் சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி காணப்படுகிறது. கொடும் கானகத்தில் இரண்டு பிணை மான்கள் கடும் கோடைக் காலத்தில் சென்று கொண்டிருக்கின்றன. இடையே இரண்டிற்கும் கடும் தாகமெடுக்கிறது. தாகத்தைத் தணித்துக்கொள்ள தண்ணீரைத் தேடி அலைகின்றன. அலைந்த அலைச்சலில் வெப்பத்தின் கொடுமையைத் தாங்க முடியாமல் பெண் மான் தவிக்கிறது. எங்காவது ஒண்டிக்கொள்ள சிறு நிழல் கிடைக்குமா என்று தவிக்கிறது. அதன் தவிப்பை உணர்ந்த ஆண் மான் கொளுத்தும் அந்த வெயிலில் தன் கால்களை அகற்றி இடைப்பட்ட நிழலில்  தன் இணைக்கு நிழலாக நிற்கிறது. 

பின் தன் பயணத்தைத் தொடர்ந்த அவ்விரண்டு மான்களும் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள தண்ணீரைத் தேடி அலைகின்றன. ஓர் இடத்தில் கொஞ்சமாக இருக்கும் கலங்கிய நீரைப் பார்த்து இரண்டும் வேகமாக ஓடுகின்றன. சிறிதளவே இருக்கும் தண்ணீர் இரண்டு பேரின் தாகத்தைத் தீர்க்காது என்பதை உணர்ந்த ஆண் மான், பெண் மான் குடிக்கட்டும் என ஒதுங்கிக் கொள்கிறது. அதைப் போலவே ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மான் விட்டுக்கொடுக்கிறது. பெண் மான் தனக்கு விட்டுக்கொடுத்ததை உணர்ந்துகொண்ட ஆண் மான், தான் குடிக்காமல் போனால் பெண் மானும் குடிக்காது வருந்தும் என்பதை உணர்ந்து தண்ணீரைக் குடித்துவிட்டதாகப் பாவனை காட்டி தாகத்தில் தவிக்கும் பெண் மான் குடிக்க வழிவிடுகிறது.

ஆம், அதுதான் காதல் என்பது. காதலின் பரிமாணத்தை அன்பு என்ற வார்த்தையின் குணங்களில் புரிய முடியும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரின் நலனில் மற்றவர் அக்கறையோடு விட்டுக்கொடுத்து, தியாகம் செய்வது, இரக்கப்படுவது, கருணை கொள்வதே அன்பு. அவ்வன்பு என்றும் பொறாமை கொள்ளாது, சகிப்புத் தன்மை மிக்கது, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டது. அது எப்பொழுதும் கோபப்படாது, வன்மம் கொள்ளாது.

உடல் தேவைக்காக ஒருவரை ஒருவர் காதலிப்பது காதல் இல்லை. மழலையின் மீது தாய் கொண்ட பாசத்திற்குப் பெயர் தாயன்பு. நண்பர்களிடையே உள்ள உண்மையான நட்பு, பக்தன் கடவுளின் மீது கொண்ட ஒப்பற்ற பக்தி, அழகான பொருட்களின் மீது மனிதர்கள் கொள்ளும் பற்று, மனிதன் இயற்கை மீது கொண்ட அக்கறை, வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் மனம் வாடினேன் பராபரமே என்று வடலூர் வள்ளலார் உயிர்களின் மீது கொண்ட இரக்கம், அடிமைப்பட்ட பாரத தேசத்தில் சுதந்திர உணர்வு கொண்டு அகிம்சை வழியில் போராடி வெற்றி பெற்ற மகாத்மா காந்திஜி அவர்கள் நாட்டின் மீது கொண்ட பற்று, உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று சுதந்திர முழக்கமிட்ட முண்டாசுக் கவிஞர் பாரதி தமிழ்க் கவிதையாலே வீர முழக்கமிட்டாரே அந்த உணர்வு என்று பல்வேறு நேசப் பண்புகள் மிளிர்ந்து விளங்கட்டும். இவ்வழியாத காவிய உணர்வுகளைக் கொண்ட உண்மையான காதல் என்றும் வற்றாது, வாடியும் போகாது.

மானிட உருக்கொண்டு மரியின் மடியில் மகனாகப் பிறந்த இயேசுபிரான் பரிதாபத்திற்குரிய, சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பாவிகளான மக்களுக்காகப் பரிந்து பேசி, அவர்களின் உரிமைக்காகப் போராடி மனிதத்தின் உன்னத உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, தலைகுனிந்து வாழ்ந்திருந்த ஏழைகளைத் தலைநிமிரச் செய்து, அவர்களின் இருண்ட வாழ்வில் உண்மை ஒளியை ஏற்றி வைத்து வையகத்து மாந்தர் எல்லாம் ஏற்றம் பெற வாழ வழிகாட்டினாரே அந்த உன்னத அன்பின் வடிவம் போற்றுதற்குரியது; வாழ வேண்டியது.

எனவே காதல் என்பது எல்லாருக்கும் பொதுவானதே. நண்பர்களே, தங்களின் நலனே பெரியது என எண்ணி, பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்த பிள்ளைகளே, இந்தக் காதலர் தினத்தில் உங்களைப் பெற்றவர்களை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்து உங்களோடு வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆறுதலாய் இருங்கள். மனமுறிவுக்காய் நீதி மன்றத்தை நாடிய கணவன் மனைவிகளே, இந்தக் காதலர் தினத்தில் போட்ட வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டு உங்கள் காதலைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். மாமியார் மருமகள்களே, இந்தக் காதலர் தினத்தில் ஒற்றுமையாய் இருங்கள். அதனால்தான் பாரதியும் காதல் காதல் காதல் காதல் பேயின் சாதல் என்றார். கவி கண்ணதாசனும் இளமையில் காதல் வரும், எதுவரையில் கூட வரும் என்ற கேள்விக்கு முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை கூட வரும் என்று பாடியிருக்கிறார். எனவே உயிர் உள்ளவரை காதலிப்போம், உண்மையாய்க் காதலிப்போம். வாழ்க காதலர்! வாழ்க காதலர் தினம்!

பின்செல் என்ற அழைப்பு!


சேசு உரைத்தார் என்னைப்
பின்செல் என்ற அழைப்பு!
நேச முடனே புகன்றார்
தேர்வு செய்தார் சீடரை!!
அழைத்த உடனே சேசுவை
அடியயாற்(றி) பின்தொடர்ந் தாரே!
நிலைத்து நின்று உயிரை
ஈந்திடவும் துணிந்தாரே!!
இறைவன் அழைப்பே அழைப்பு
பிறரால் வருதல் (கண்)துடைப்பு!
குறையும் இன்றி வாழ்வோம்
குறுமதி பெற்று நுழைந்தார்
நிறைவு வாழ்வை இழந்து
தீமைக் கடலில் மூழ்வர்
கறையும் படிந்து வாழ்வில்
சேறும் குடியும் கொள்ளும்
தூயர் வாழும் திருக்கூடம்
சோதனை வெல்லும் அருள்கூடம்
தீயர் தீய்ந்து போவாரே
தேவன் அழைப்பே அழைப்பு!!

 (கவிஞர் பெஸ்கிதாசன்)


நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்” (யோவான் 15:16) என்பது இறை அழைப்புத்தான்.

இறை அழைப்பைப் பெற்றுள்ளவர்களின் வாழ்க்கை (மாற் 3:13, 14) யேசு தம்மோடு இருக்கவும், நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும், பேய்களை ஓட்டவும் அதிகாரம் கொண்டிருக்கவும்  நியமித்தார்.
இறை அழைத்தல் பெற்றவர்களின் வாழ்க்கை முதலாவதாக, இறைவனோடு இருந்தாக வேண்டும் என்பது இறைவன் விருப்பம் . நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும், நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்” (யோவா 15:5) என்கிறார் இயேசு.

இரண்டாவது, இறை அன்பிலும் பிறர் அன்பிலும் இறை அழைத்தல் பெற்றவர்கள் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்துகொள்வர்” (யோவா 13:35) என்றார். “‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவா 13:34, 35).

மூன்றாவதாக, இறை அழைத்தலைப் பெற்றவர்களிடம் இருக்க வேண்டிய பண்பு இறை வேண்டலும் நோன்பும். இதைத் தான் இயேசு மத் 17:21-இல் குறிப்பிடுகிறார். இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது.

இறை அழைத்தல் பெற்றவர்களின் வாழ்க்கையில் இறைவனும் இணைந்து இருக்கிறார். இதனால் இவர்கள் வாழ்க்கையில் இறைப்பணியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் தன்னலம் இருக்கக்கூடாது என்பதை இயேசு தன் வாழ்வில் வெளிப்படுத்துகிறார். நான் தந்தையின் விருப்பத்தையே நிறைவேற்ற வந்தேன்என்று குறிப்பிடுகிறார்.

இறை அழைத்தலைப் பெற்றவர்களின் வாழ்வில் முதல் குறிக்கோளாக இருப்பது நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்பது உலகெங்கும் போய் என் நற்செய்தியை அறிவியுங்கள்என்று இயேசு தன் திருத்தூதர்களிடம் கூறினார். புனித பவுல் அடிகளாரும் இதைத்தான் தன் வாழ்வில் நற்செய்தி அறிவிப்பதே எனது பணிஎன்று வாழ்ந்தார்.

இறை அழைத்தல் வாழ்வில் போதிக்கும் பணியும், அதே நேரத்தில் இறைவாக்கு உரைக்கும் பணியும் இருக்கின்றன. பழைய ஏற்பாட்டில் இறைவன், இறைவாக்கினர் வாயிலாக பேசியுள்ளார் என்று பார்க்கின்றோம். அவர்கள் இறைவனிடம் பெற்ற வார்த்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.

இறை அழைத்தல் பெற்றவர்கள் வாழ்வில் இந்த இரண்டு பணிகள்தானா? என்றால் இல்லை. மூன்றாவது பணியாக ஒன்று இருக்கின்றது. அதுதான் குணமளிக்கும் பணி. இதுவும் இறை அழைத்தலில் சிறப்புப் பணியாகும்.
இறை அழைத்தல் பெறறவர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு நல்ல ஆயனாக இருக்க வேண்டும். ஆடுகளை வழிநடத்துதல் மட்டுமல்ல, அந்த ஆடுகள் வழிதவறும்போது, தேடுகிற ஆயனாகவும்,அதே நேரத்தில் துன்பப்படும்போது குணமளிக்கும் ஆயனாகவும் இருக்க வேண்டும். இதைத்தான் இயேசு தன் வாழ்வில் நல்ல சமாரியர்என்னும் உவமையால் குறிப்பிடுகிறார். அடிபட்ட மனிதனுக்கு உதவும்போது நல்ல மனிதனாக, நல்ல ஆயனாக இருக்கிறாய் என்று குறிப்பிட்ட இயேசு, “நீரும் போய் அவ்வாறே செய்யும்என்று சொல்லும்போது, இறை அழைத்தல் பெற்றவர்கள் குண மளிக்கும் அழைப்பைப் பெற்று இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

குணமளிக்கும் பணி : இயேசு தம் சீடர்களை அனுப்பும்போது, அவர் சொன்ன வார்த்தைகள் (மாற் 16:17, 18) : “அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர், பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர், கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர் மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்.

இறை அழைப்பில் குணமளிக்கும் அழைப்பும் உள்ளது. இயேசுவின் வாழ்வில் பார்க்கிறோம். ஓய்வு நாளில் ஜெபக்கூடத்தில் போதிக்கிறார். அங்கிருந்த சூம்பிய கையனைக் குணப்படுத்துகிறார். அதேபோல், ஓய்வு நாளில் ஜெபக்கூடத்தில் போதித்தார். 18 ஆண்டுகளாய் சாத்தானால் கட்டப்பட்ட கூனி என்ற பெண்ணைக் குணப்படுத்துகிறார்.

இவ்வாறு இயேசு போதனையோடு சாதனையாக குணப்படுத்தும் பணியைச் செய்வதைப் பார்க்கிறோம். காரணம், குணப்படுத்தும் பணியை இறை அழைத்தல் பெற்றவர்களும் செய்ய வேண்டும் என்பதுதான்.
குணப்படுத்தலில் பலவகை இருப்பதைப் பார்க்கிறோம்.
  1. தொட்டுக் குணப்படுத்தினார்:  அவரிடம் அநேக நோயாளிகள் வந்தார்கள்; குணமாக்கினார் (மத் 4:23; 9:35). தொழுநோயாளியைத் தொட்டார், அவரும் குணமானார் (மத் 8:3). இரத்தப்போக்கு நோய் உடைய பெண் ஆண்டவரின் ஆடையைத் தொட்டார், குணம் பெற்றார் (மத் 9:21, 22). சிறுமியைத் தொட்டு உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திருஎன்றார், எழுந்தார் (மாற் 6:41).
  2.  வார்த்தையால் குணப்படுத்தினார்:  நூற்றுவர் தலைவரை நோக்கி நீர் போகலாம், நீர் நம்பிய வண்ணமே நிகழும்என்றும் (மத் 8:13), “லாசரே, வெளியே வாஎன்றும் (யோவா 11:43) வார்த்தையால் குணமாக்கினார்.
  3. போதனையால் குணப்படுத்தினார்: சமாரியப் பெண் தன் தவறான பாதையிலிருந்து திருந்தி சாட்சி ஆகிறார்.

  
நிக்கொதேமு  இயேசுவைச் சந்தித்ததால் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு புதிய வாழ்வை மேற்கொள்கிறார் நிக்கொதேமு (யோவா 3:4-8)

இயேசு குணமளிக்கும் ஆண்டவர் (விப 15:26). குணமளிக்கும் பணியை இறை அழைத்தல் பெற்றவர்களும் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

திருத்தூதர் பணியில் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலர் பேதுரு பேசுகின்றபொழுது அநேகர் இறைவனிடம் வந்தார்கள் என்று பார்க்கிறோம். அதே பேதுரு சப்பாணி மனிதனுக்குக் குணம் கொடுக்க அவரும் எழுந்து நடந்து வருவதைப் பார்க்கிறோம். அதே பேதுரு இறந்து போன சிறுமியை உயிர் பெற்று எழச்செய்வதைப் பார்க்கிறோம்.

இறை அழைத்தல் பெற்றவர்களைத் தூய ஆவியார் விசுவாசமூட்டும் வார்த்தையால் நிரப்புகிறார். அது குணப் படுத்தும் ஆற்றலைக் கொடுக்கிறது.  அவருடைய வார்த்தையில் அதிகாரம் வெளிப்படுகிறது. குணப்படுத்தும் பணியைச் செய்கின்ற ஊழியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
  1. அவர்கள் கிறிஸ்துவின் தூதர்கள் (2 கொரி 5:20); பெரிய காரியங்களைச் செய்ய தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் (மாற் 16:18).
  2. அவர்கள் ஆண்டவருடைய ஆவியின் அபிஷேகத்தால் நிறைந்தவர்கள் (2 கொரி 3:17, 18).
  3. இறை ஆற்றல் தம்மிடம் உண்டு என விசுவசிப்பவர்கள் எனக்கு வலுவூட்டு கிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு  (பிலி 4:13).

இவ்வாறு இறை அழைத்தல் பெற்றவர்கள் குணமளிக்கும் அழைப்பையும் பெற்று இருக்கிறோம் என்பதை உணர்ந்து இறைவனோடு பணியாற்றுவோம்.

Fr. தனிஸ்லாஸ் சந்திரன்,
இயக்குநர், அருங்கொடை இல்லம்,
திருச்சி

அன்பு


உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் நூலக மேஜையின் மேலேயே இருந்தது.  சின்ன புத்தகம்தான்.  மங்கலான அட்டைதான்.  பழுப்பு நிற தாள்கள்தான்.  கைகளால் வரையப்பட்ட தலைவர்களின் படங்கள்தான்.  ஆனால் முதல் பக்கத்தில் பார்க்கையில் பலபேர் எடுத்துப் படித்ததற்கான அடையாளம் ஏகமாய் இருந்தது.  நல்ல புத்தகம்தான் போலும்.  அதனால்தான் பலபேர் படித்திருக் கிறார்கள்.  நாமும்தான் படித்துப் பார்ப்போமே.  தீர்மானித்த தினேஷ் அந்த புத்தகத்தையே எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்.

களைப்பு தீர நீராடிவிட்டு, உணவை முடித்துக் கொண்டு ஆயாசமாக கட்டிலில் சாய்ந்தான்.  ஒவ்வொரு தலைவரின் வாழ்க்கை வரலாறும் படிக்க நன்றாகவும், சுவாரசியமாகவும் இருந்தது.  தொலைக் காட்சி பெட்டிமுன் அமரும் விருப்பம்கூட இல்லாமல் புத்தகத்தில் மூழ்கிப் போனான் தினேஷ்.  நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு வந்தது.  படிக்க ஆரம்பித்தான்.  அவருடை இளமைக் காலம், இலட்சியங்கள், போராட்டங்கள், வெற்றி-தோல்விகள், நாடு கடத்தப்பட்டது எல்லாமே அதில் இருந்தது.  இடையில் அவர் தன் காதலியிடம் கொண்ட அன்பு பற்றி எழுதப்பட்டிருந்தது.  வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்று பெரிய வெற்றி வேந்தராய் திகழ்ந்தவர் எப்படி தான் கொண்ட அன்பில் தோற்றுப்போய், மனமுடைந்து, கண்ணீர் விட்டு கசிந்துருகினார் என்று எழுதப்பட்டிருந்தது. “அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கெல்லாம் ஏமாற்றமும் கண்ணீரும்தான் பரிசாக கிடைக்குமோ?” நெப்போலியன் நெஞ்சுருகி எழுதி இருந்தார்.  பிரியம் கொண்ட தன் இதயம் தன்னிடம் பிரியம் காட்டாதது, உண்மையாய் இராதது அவருக்கு மனதில் பெரிய வலியை ஏற்படுத்தியது.  ஆனாலும் தான் கொண்ட அன்பில் அவர் பின்வாங்கவே இல்லை.  தன் பலத்தால், பராக்கிரமத்தால் பல வெற்றிகளைக் கண்டார்.  பல வெற்றி வீரர்களை உருவாக்கினார்.  கோழைக்கும் வீரம் வரும்படி வாழ்ந்து காட்டினார்.  பல மாபெரும் சாதனைகளைக் கண்டவர் இதயத்தில் குத்திய வலி காரணமாக சோர்ந்து போயிருந்த வேளையில் எதிரிகளால் கைது செய்யப்பட்டார்.  நாடு விட்டு நாடு கடத்தப்பட்டார்.  அங்கே அவரது வாழ்வு தனிமைப்படுத்தப்பட்டது.  துக்கமும் வேதனையும் தலைதூக்கியது.  எங்கே தன் அன்பில் களங்கம் ஏற்பட்டது.  எப்படி தன் நேர்மை தடம் புரண்டது.  கட்டிய கனவுக் கோட்டை ஏன் இடிந்து விழுந்தது, யோசித்து யோசித்து குழம்பிப் போனவர் இதுதான் உண்மையான அன்புக்கு கிடைக்கும் பரிசு என்றால் அதையும் ஏற்றுக் கொள்வதுதான் முறை என தீர்மானித்துக் கொண்டார்.  தன் டைரியில் “ஒருவேளை தான் இறந்துவிட்டால், தன்னை அடக்கம் செய்யும் முன் தன் இதயத்தை கிழித்தெடுத்து, மதுரசத்தில் ஊறவைத்து, தன் அன்பை வெளிப்படுத்தும் முகமாக அதைத் தன் மனம் கவர்ந்த காதலி ஜோஸ்பினிடம் சேர்த்துவிட வேண்டும்” என எழுதி வைத்துக் கொண்டார்.  பல சிறந்த வீரர்களை தனது அனுபவத்தால் உருவாக்கினார்.

ஏக்கத்திலும் துக்கத்திலும் மூழ்கி மூழ்கியே அவர் வாழ்நாட்களும் முடிந்துப் போயின.  அவர் அடக்கம் செய்யப்பட்டார்.  எந்த காதலிக்காக தன் இதயத்தை கிழித்தெடுத்து அவளிடம் சேர்க்க வேண்டும் என விரும்பினாரோ அந்த விருப்பம் நிறைவேற்றப்படாமல் அவருடைய இதயமும் புதைக்கப்பட்டது.  காலங்கள் கடந்தன.  ஒன்றல்ல இரண்டல்ல பதினெட்டு ஆண்டுகள் கடந்தன.  எந்த நாட்டிற்காக பாடுபட்டாரோ எந்த மக்கள் சுதந்தரமும் குடியுரிமையும் பெற்று வாழ வேண்டும் என விரும்பினாரோ அந்த அவருடைய தேசம் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்று குடியுரிமை கொண்டது.  அனைவரும் அணியணியாய் ஒன்றுகூடி தங்கள் முன்னாள் தலைவருக்கு வீர வணக்கமும் நன்றியும் தெரிவித்தனர்.  தங்களுடைய நல்வாழ்விற்காகப் பல பாடுகள்பட்டு, போராடி வாழ்ந்தவர், வேற்று தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டவர்,  அங்கேயே இறந்து புதைக்கப்பட்டவர் - அவரது உடலைத் தோண்டி எடுத்து சொந்த மண்ணில் கொண்டு வந்து புதைத்து, அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதே தாங்கள் அவருக்குச் செய்யக் கூடிய நன்றிக்கடன் என தீர்மானித்தனர்.  அவரது உடல் புதைக்கப்பட்ட நாட்டிற்குச் சென்று, தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடலை மீட்டனர்.  பரிசோதனைக்காக உடலை ஆராய்ந்தபோதே அவருடைய இதயம் மட்டும் எந்தவித சேதாரத்தையும் சந்திக்காமல் அப்படியே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எல்லோருக்கும் ஆச்சரியமான ஆச்சரியம்.  இது எப்படி சாத்தியம்?  என்று பல ஆராய்ச்சிகள் செய்ததில் அது அவருடைய இதயம்தான் என நிரூபிக்கப்பட்டது.  அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் புரட்டியபோதே அவருடைய இறுதி ஆசையாக அவர் இதயம் அவர் காதலியிடம் சேர்க்கப்பட வேண்டும் என இருந்தது.  அன்பு கொண்ட அந்தத் துரதிர்ஷ்ட இதயத்தின் விருப்பமும் நிறைவேற்றப்பட வழியில்லை.  காரணம் அவர் வேறொருவரின் மனைவியாக வாழ்ந்து பிரிந்திருந்தாள்.  அவருடைய ஆசையை நிறைவேற்ற முயற்சித்தவர்களை அழ மட்டுமே முடிந்ததே ஒழிய வேறொன்றும் செய்ய முடியவில்லை.      

தினேச்ன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் வடிந்தது.  முகமெங்கும் வியர்வையாறு பெருகியது.  அன்பிற்கு இவ்வளவு சக்தியா?  அன்பு கொண்டவர்கள் எல்லோரும் அனுபவிப்பது வலியும் வேதனையும்தானா.  ஐயோ நிலையில்லாத வாழ்வில் இந்த அன்பு மட்டும்தான் நிஜமா? இதைப் புரிந்து கொள்ளாமல் உயிருக்கு உயிராய் அன்பு செய்த பெண்ணை, அவளுக்கு இதயத்தில் பிரச்சனை என்றதும் பிரிய துணிந்தது எப்படி? சே!  பிரச்சனை யாருக்கில்லை, வியாதி யாருக்கில்லை,  வருத்தம் யாருக்கில்லை.  எல்லாவற்றுடனும் இயைந்து வாழ்வது தானே வாழ்க்கை.  புரிந்து கொண்ட தினேஷ் தன் இதயத்தோடு இதயமாகக் கலந்துவிட்டவளைக் கண்டு மன்னிப்புக் கேட்டு, அவள் இழக்க இருந்த வாழ்வை மீண்டும் தர, நம்பிக்கையோடு வாழ வைக்க புறப்பட்டான் வித்யாவின் வீடு நோக்கி.

நலம் பெற விரும்புகிறீரா?


சுருக்கு எழுத்துகளுக்கு ஈடாக வார்த்தைகளின் எழுத்துக்களைச் சுருக்கி வேக வேகமாக அனுப்பப்படுகின்ற இ.மெயில், S.M.S. போன்றவற்றில் பரிமாறப்படுகின்ற இன்றைய செய்திகளில் இக்கட்டுரைத் தலைப்பின் வார்த்தைகள் அதிகமாக காணப்படுவதில்லை. ஆனால் இக்கலாச்சாரத்திற்கு முன் நிலைத்து நின்ற கடிதம் எழுதும் காலத்தில் முதல் வரியிலேயே மறக்காமல் கூறப்பட்ட வார்த்தை ‘நான் நலம். நீ நலமா?’ என்பதுதான்.

பிப்ரவரி மாதத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியத்தில் வரும் லூர்து அன்னையின் திருவிழா என்பது நோய் நீக்கும் இறையருளைத் தேடி, நோயாளிகளுக்காய் ஜெபிக்கும் பண்பு கொண்ட நிலையை நினைவு படுத்தும். பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் நோயாளிகள் நலம் பெற்றுச் செல்லும் அதிசயங்கள் நடைபெறு கின்றன. எனவேதான் உலக நோயாளிகள் தினத்தன்று எண்ணற்ற நோயாளிகள் ஒன்று கொணரப்பட்டு நலம் பெற நடைபெறும் பிரார்த்தனைகள் சிறப்பான இடம் பெற்றுள்ளன.

“நலம் பெற விரும்புகிறீரா?” (யோவா 5:6) எனக் கேட்டு, “நீ நோய் நீங்கி நலமாயிரு” (மாற் 5:34) என்று குணம் தந்த இயேசுவின் செயல்கள் பல. தான் செய்த இந்த மகத்துவமான செயல்கள் மூலம், தமது திறமைகளை, உயர் சக்தியை வெளிப்படுத்தி, தம்மைப் பிரபலமாக்கிக் கொள்ள அல்ல, மாறாக மக்களை முன்னிலைப் படுத்தி, அவர்களின் துன்பத்தை, உடல் வேதனையை, உள்ளத்தின் சோர்வைப் போக்குவதற்காக நோக்கம் கொண்ட வையே. இம்மாபெரும் பணி தம்மோடு நிறைவடையக் கூடியதாக இல்லாமல், தனது பெயரினால் தம் சீடர்களும் குணமாக்கும் பணியைத் தொடரும் வல்லமை தந்தார் (மாற் 16:17-18). நோயின் கொடுமை இருக்கிறவரை குணமாக்கும் வல்லமையும் செயல்பட வேண்டும்.

அப்படியயன்றால் இன்றும் பல்வேறு இறைப்பணிகளோடு குணமாக்கும் பணியும் இணைந்தே செல்ல வேண்டும். மருத்துவத்தோடு இறை நம்பிக்கை இணையும் குண மாக்கலில் குருத்துவ துறவற அழைப்பின் மேன்மை வெளிப்பட வேண்டும். இப்பணி இறை வல்லமையில் வெளிப்படுவதால், இறைப் பண்புகளைக் கொண்டுள்ள மனநிலையில் மட்டுமே குண மாக்கலும் நடைபெறும்.

  • மக்களை மையப்படுத்தும் மன  நிலை...
  • அவர்களின் துன்பத்தில் பங்கேற்கும் மனநிலை...
  • கள்ளங்கபடற்ற உறவு நிலை
  • நோயாளிகளைச் சந்திப்பதால் உண்டாக்கும் மகிழ்ச்சி
  • புண்பட்டுப் போன மனதைக் குணமாக்கும் உற்சாக வார்த்தைகள்
  • இறைநம்பிக்கையை உண்டாக்கும் ஜெபங்கள்
  • எதிர்கால நலம் பற்றிய அனுபவப் பகிர்வுகள்

இவை இறை பண்புகளின் சில வெளிப்பாடுகள்.
‘நோய்கள் குணமாக்குதல்’ இறை பணியோடு சேர்ந்தது என்றால், உடல் நோய்களை உருவாக்கும் சமூக நோய்கள் களையப்படுதல்  உயர் பணிகளோடு இணைந்துள்ளதே. நோயாளிகளைக் குணமாக்குகிற இயேசு அவைகள உண்டாக்கக் காரணமான சமய, சமூகத் தீமைகளை இனம் கண்டு போராடி மக்களை விடுவித்தார். ‘வருமுன் காப்போம்’ என்று கூறும் சமூகத்தில், நோய் உண்டாக்கும் காரணிகளைத் தடுக்கும் செயல்பாடும் இறை பணியோடு இணைந்ததே. உடல் நோய்களை உண்டாக்கும் மாசுகள், சுகாதாரமின்மை, உறவுகளை தடுத்து மனநோய்கள் உண்டாக்கும் தன்னலம், பகைமை, பழி யுணர்வுகள், குடும்ப உறவுப் பிரச்சனைகள், மன அழுத்தம் இவற்றை அறிந்து குணமாக்கலும் இறை பணியே. இத்தீமைகளுக்குள் சிக்கிக் கொண்டு தொடர் நோயாளி களாகவே மாறிப்போன மனிதர்கள் மீட்புப் பெறுவது யாரால்? எப்போது?

குணமாக்கல் உடலில் மட்டுமல்ல, மனத்திலும், சமூகத்திலும் தொடர்ந்து நடைபெற வேண்டிய நிகழ்வே. இறையழைப்பு இக்குணமாக்கலில் பொருள் பெறட்டும்.

‘நான் நலம்’ ‘நீயும் நலம் பெறு!’

சே. சகாய ஜாண்