புனித கன்னிமரியின் லூர்து மலைக்காட்சி


பிரான்ஸ் நாட்டில் லூர்து நகருக் கருகில் 1858ஆம் ஆண்டு பிப்ரவரி 11இல் பிரனீஸ் மலையடிவாரத்தில் மசபியேல் குன்றுகளுக்கிடையே முதன் முறை யாக பெர்நதத் சுபீருஸ் என்ற நாட்டுப்புறத்து 14 வயதுச் சிறுமிக்கு, விறகு சேகரிக்கச் சென்ற இடத்தில் கன்னிமாமரி காட்சியளிக்கின்றார்.  இளமைத் தோற்றம் என்றும், மிக அழகானவராகக் காணப்பட்டார் என்றும் பெர்நதத் குறிப்பிடுகின்றார்.  கையில் ஒரு ஜெபமாலை இருந்ததையும் பார்க்கின்றார்.  பெர்நதத்திற்கு வாழ்த்துக் கூறி தன்னுடன் ஜெபிக்க அழைக்கின்றார் கன்னிமரி.

பிப்ரவரி 25இல் மீண்டும் காட்சியளித்து மரியன்னை கூறுவார் “அங்கு தெரிகின்ற அருவியில் போய் உன்னைக் கழுவிக் கொண்டு, நீர் பருகு”. அருவியை நோக்கிப் போகும் போது, அங்கு அல்ல என்று சொல்லி குகையின் தரைப் பாகத்தைச் சுட்டிக் காட்டினார்.  பெர்நதத் அங்கே போனாள்.

மார்ச் 25ஆம் நாள் மங்கள வார்த்தைத் திருநாள்.  மரியன்னை மீண்டும் அவ்விடத்தில் காட்சி தருகின்றார்.  இந்த முறை அந்த அம்மாளின் பெயரைக் கேட்கின்றாள் சிறுமி பெர்நதத்.  “நானே அமல உற்பவி” என்ற பதில் கிடைக்கிறது.  4 ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருத்தந்தை 9ஆம் பத்திநாதர் “தேவமாதா அமல உற்பவி, ஜென்ம பாவம்­ இன்றி உற்பவித்தவர்” என்னும் விசுவாசப் பிரமாணத்தை அறுதியிட்டுக் கூறியிருந்தார்.  கடைசியாக, 18-வது முறையாக கார்மேல் மலைக் கன்னியின் திருநாளன்று மரியன்னை பெர்நதத்துக்குக் காட்சியளித்தார்.  காட்சிகளிலெல்லாம் பாவிகளுக்காக மன்றாடப் பணிக்கின்றார்.  ஜெபத்துடன் தவ முயற்சிகள் அத்தியாவசியம் என்று குறிப்பிடுகிறார்.  அந்த இடத்தில் பவனி வரவேண்டும், ஆலயம் எழுப்பப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.  பலரும் கூடினாலும் பரவசமாகிவிட்ட பெர்நதத் மாத்திரமே மரியின் உருவத்தைப் பார்க்க முடிந்தது.

உலகின் எத்திசையிலிருந்தும் இன்று ஆண்டு தோறும் லட்சோபலட்சம் திருப்பயணிகள் அங்கு செல்கின்றனர்.  ஆயிரக்கணக்கான புதுமைகள் நடைபெறுகின்றன.  பலதரப்பட்ட கொடிய வியாதிகள் குணமா கின்றன.  மருத்துவர்களால் முற்றிலும் கைவிடப்பட்டவர்களுக்கு அவர்கள் முன்னாலேயே குணம் கிடைத்து உள்ளது.பல பாவிகள் மனந்திரும்புகின்றனர் என்பது தான் மிக முக்கியம்.  “உனக்கு நான் காட்சி கொடுத்ததினால், நீ இவ்வுலகில் துன்பம் இல்லாமல் வாழ்வாய் என்று நான் கூற மாட்டேன்.  மாறாக உனக்கு கலப்பில்லா மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு மறு உலகில்தான்” என்று லூர்துமேரி பெர்நதத்துக்குக் கூறியிருந்தபடி பல வேதனைகளை அனுபவித்த பிறகு இறைவனடி சென்றார். 

சிந்தனைக்கு : பெர்நதத் என்பவரைப் போல் குழந்தை உள்ளம் கொண்டு தேவ தாயின் மேல் பற்றுதல் கொண்டு ஜெபமாலையை உருக்கமாய் ஜெபிக்கவும் கற்றுக்கொள்வோம்.

எட்வர்டு

0 comments:

Post a Comment