இது பூக்களின் காலம் . . .பள்ளிகள் செய்வோம்

விலைகொடுத்தும்
கல்வியை வாங்கலாம்
இலவசமாய்க் கிடைக்குமா வேலை?
- ஆசுரா
மதம் போதித்ததைவிட
உலகமெங்கும் கல்வியைப் போதித்தது
கிறிஸ்தவம்

சோழ நாட்டு
அந்தப்புரங்கள் அனைத்தும்
பள்ளிகளாயின
‘கோவில்கள் அனைத்தையும்
பள்ளிகள் செய்வோம்’
என்றான் முண்டாசுக் கவி

மூன்று மைல்களுக்கு
ஒரு பள்ளியயன்றார்
பெருந்தலைவர்

திண்ணையில் இருந்து
மரத்தடிக்கு வந்தது கல்வி - பின்
மரத்தடிகள்தானே
பள்ளிகள் ஆயின!

சரஸ்வதியின்
கண்கள் திறந்திருந்தும்
கல்வி காசாகிப்போனது
நீதித் தேவதையின் கண்கள்
கட்டப்பட்டது போல்
எல்லாம் இலவசம்
என்கிறார்கள்

வேலை?
மாவட்டங்கள் தோறும்
வேலை வாய்ப்பு அலுவலகம்
வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது

தமிழ் நாட்டில்
1.5 காலி இடங்கள்
நிரப்பப்படுமா?
இதில் வேடிக்கை என்ன தெரியுமா?

70 லட்சம் பேர் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள்
கிடைக்குமா?  பட்டதாரிகளே
கனவு காணுங்கள்  2020-ல்
இந்தியா வல்லரசு!

ஜே. தமிழ்ச்செல்வன்

ஜெபத்தில் மறையுரை


நற்செய்தியாளரான புனித யோவான் தன் வயது முதிர் காலத்திலும் எபேசு நகர் ஆயராகவே இருந்தார்.  அவரின் மறையுரைகளிலும் மக்களுடன் வாழ்ந்த புனித நாட்களிலும் அவர் அன்பை மட்டுமே வெளிப்படுத்துகிறவராய் இருந்தார்.  இரவு பாஸ்கா உணவின்போது இயேசுவின் நெஞ்சிலும் மார்பிலும் சாய்ந்து இயேசுவின் இதய உணர்வுகளையே அறிகிறவராய் இருந்தார்.  அதற்குப்பின் தன் வாழ்நாட்கள் முழுவதும் இயேசுவின் இதய வெளிப்பாடுகளை ஜெப உணர்வில் இயேசுவின் மார்பில் சாய்ந்து வெளிப்படுத்துகிறவராய் இருந்தார்.

புனித யோவானின் நற்செய்தியின் இறைஇயல் சிந்தனைகளும், அவரின் திருமுகங்கள் அனைத்தும் அன்பின் வெளிப்பாடுகள் நிறைந்தும், திருவெளிப்பாடு மனித அறிவுக்கே புலப்படாத பரம இரகசியங்களையே வெளிப்படுவதாகவும் இருக்கின்றன;  இதற்கெல்லாம் காரணம் இயேசுவின்மீது கொண்டிருந்த அளவிட முடியா அன்பே காரணம்.
தியானமும், தனிமையில் இயேசுவுடன் இருந்த ஜெபவாழ்வும், தாழ்ச்சி நிறைந்த அர்ப்பண உணர்வும், மாசற்ற தூய்மை இதயமுமே காரணம்.  இயேசுவின் பாதம் அமர்ந்த மரியாளைப் போலவே (லூக் 10:39) புனித யோவானும் பாதம் அமர்ந்து கேட்ட இறைஇயல் சிந்தனைகளையே தம் இறை வார்த்தைகளில் எழுதினார். இயேசுவின் பாதம் அமராத எந்த ஒரு இறைப்பணியாளரும் இயேசுவின் இறைவார்த்தை நற்செய்திப் பணியை வல்லமையாய்ச் செயல்படுத்த முடியாது என்பதே உண்மை.
வேதாகமத்தில் இவ்வாறு வாசிக்கிறோம் : “இதோ நல்வார்த்தைகளை உமது வாயில் ஊட்டினோம்.  அவைகளையே நீ பேசுவாய்” (எரே 1:9).  “உம் வார்த்தைகளைக் கண்டடைந்தேன்.  அவற்றை உண்டேன்;  உம் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியாயின.  என் உள்ளத்திற்கு இன்பம் தந்தன” (எரே 15:16).  “அவர்கள் (இறைவாக்கினர்கள்) நமது ஆலோசனைக் குழுவில் இருந்திருந்தால் நம் வாக்கியங்களை நம் மக்களுக்கு அறிவித்து மெய்யாகவே அவர்களை அவர்களுடைய தீய வழிகளினின்றும், தீய எண்ணங்களினின்றும் விலக்கி இருப்பார்கள்.” (எரே 23:22) என்கிறார் ஆண்டவர்.
எனவே இறைவார்த்தைப் பணி செய்வோர் இயேசுவின் பாதம் அமர்ந்து அவரின் ஆலோசனைகளையும் அறிவையும் பெற்றும் போதிக்கவில்லை எனில் ஒரு குருவானவரின் பிரசங்கம் ஒலிக்கும் வெங்கலமும் ஓசையிடும் தாளமுமாய் மாறிவிடும் என்பதே உண்மை.
இயேசுவின் வாழ்வைக் குறித்து மிகச் சுருக்கமாக இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.  “அதிகாலையில் கருக்கலோடு எழுந்து புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார்.  அங்கே ஜெபம் செய்து கொண்டிருந்தார்.  பின் எழுந்து புறப்பட்டுச் செல்வோம் . . .  ஏனெனில் நான் தூது அறிவிக்கவே வந்திருக்கிறேன்” என்கிறார் (மாற் 1:35-39).

சார்லஸ் பின்னி என்ற ஒரு தலை சிறந்த நற்செய்திப்பணியாளர் பற்றி நாம் அறிந்திருக்கலாம். அவரின் உடல் முழுவதும் தேவ வல்லமை நிறைந்தே இருந்தது.  ஆனால் அவருக்கு மிகப் பெரிய குறைபாடு ஒன்று இருந்தது.  அதாவது அவருக்குப் பேச வராது.  மறையுரை கொடுக்கவும் வாய்ப்பேச்சற்ற வராய் இருந்தார்.
அவர் ஒரு நாள் தொழிற்சாலை ஒன்றுக்குப் பார்வையாளராகச் சென்றார்.  பரிசுத்த ஆவியின் வல்லமை மிகுதியாகவே அவருக்குள் நிரம்பி வழிந்தது.  அவர் தொழிற்சாலையில் நுழைந்த உடனே அநேகப் பெண்களும், ஆண்களும் வேலை செய்து கொண்டிருந் தவர்கள் அவரைப் பார்த்தார்கள். சார்லஸ் பின்னியின் பார்வை இவர்களில் பட்டவுடனே அவர்கள் அனைவருக்குமே பாவ உணர்த்துதல் ஏற்பட்டது.  உள்ளம் குத்துண்டவர்களாய்க் கதறிக் கதறி அழத் தொடங்கினார்கள்.  பாவங்களை வெளிப்படுத்தி இறை மன்னிப்பிற்காய் மண்டியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தார்கள்.  சார்லஸ் பின்னியின் கண்களில் ஒளிர்ந்த ஒளியாலேயே  அநேகரை மனந்திருப்பினார்.
இன்று பெரிய திருத்தல இறைவழிபாட்டில்கூட மறையுரைகள் இறை வல்லமை இல்லாத சொற்பொழிவுகளாகவே இருக்கின்றன.  இறை வார்த்தைகளுக்காய் ஏங்கும் மக்கள்! ஆனால் இயேசுவின் பாதம் அமர்ந்து ஜெபிக்காத குருவானவர்களின் பிரசங்கங்கள். மக்கள் தேடி அலைவதை, இறை வார்த்தைகளுக்காய் ஏங்கும் மக்கள் பொன்னான நேரத்தை ஆலயத்தில் இறைபாதம் அமர்ந்திருக்கும் மக்களை உணராத குருவானவர் வாழ்ந்து என்ன பயன்?  ஒன்றுமில்லை.
எத்தனை ஆண்டுகள் மறை உரைகள் அளித்தாலும், அதே வேதாகம பகுதியைக்குறித்து பிரசங்கம் வைத்தாலும் ஒவ்வொரு முறையும் மணிக்கணக்காய் மண்டியிட்டு ஜெபிக்கும்பொழுது ஆண்டவர் இயேசு புதிய விளக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறார் என்பதே உண்மை.  குருவானவர்களே, இறைபாதம் அமர்வோம்.  ஜெபத்தில் இயேசுவின் மறை உண்மைகளை அறிவோம்.  அதையே மக்களுக்கு இறைவார்த்தைகளாக 
அறிவிப்போம். ஆமென்.
Fr.  ச. ஜெகநாதன், அய்யம்பாளையம், திண்டுக்கல்

முன்னுரை
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்றார் திருநாவுக்கரசர். ஒவ்வொரு வருக்கும் உரிய கடமைகள் உள்ளன. நமது சமுதாயத்திற்காக இளைஞர் ஆற்ற வேண்டிய கடமைகளும் உள்ளன. இன்றைய இளைஞர் நாளைய தலைவர் என்பதற்கேற்ப ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றார் பாரதியார். எனவே ஒவ்வோர் இளைஞனும் விழித்து ஒளி வீச வேண்டும்.

சமூகத் தொண்டு
ஓர் உயிர் படும் துன்பத்தைக் கண்டு மனம் வருந்தி அதனைத் தாங்க முடியாமல் உதவுதலே தொண்டு. அவ்வாறு நம் நாட்டு மக்களுக்கு இளைஞர் ஆற்ற வேண்டிய தொண்டு பலவாகும். தீண்டாமை, அறியாமை, சாதி மத வேறுபாடுகள், மணக் கொடை, மூடப் பழக்கம் போன்றவற்றில் சிக்குண்டு பலர் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். கிராமப்புற மக்களில் பெரும்பாலானோர் இன்னலுற்று வருகின்றனர். அவர்களைக் காப்பதே இளைஞர்களின் கடமையாகும்.
சாரணர் இயக்கம்
சாரணர் என்ற சொல்லுக்குத் ‘தயாராக இரு’ என்பது பொருள். எப்போதும் தம் மனத்தாலும் உள்ளத்தாலும் செய்கையாலும் தயாராக இருத்தலே சாரணரின் குறிக்கோளாகும்.
சாரணர் இயக்கத்தின் உறுதிமொழி
  1. நான் எப்பொழுதும் கடவுளுக்கும், என் நாட்டிற்கும் தொண்டு செய்வேன்.
  2. பிறருக்காக உதவி செய்வேன்
  3. சாரணர் கொள்கைகளைப் பின்பற்றி நடப்பேன்.
என்பது சாரணரின் உறுதிமொழியாகும்.
நாட்டு நலப்பணி இயக்கம்
கல்லூரி மாணவர்கள் ஓய்வு நேரங்களில் நாட்டு நலப் பணிகளில் ஈடுபட இவ்வியக்கம் இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தற்போது இவ்வியக்கம்  வளர்ச்சி அடைந்து மேனிலைப் பள்ளிகளுக்கும் பரவியுள்ளது. இதன் மூலம் சில தொண்டுகளான சுகாதாரத்தை ஏற்படுத்துதல், சாலைகள் அமைத்தல், தெருக்களைத் தூய்மை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
செஞ்சிலுவைச் சங்கம்
1920-ஆம் ஆண்டு செஞ்சிலுவைச் சங்கம் இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த ஹன்றி டியூனாண்டு என்பவரால் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் முதலுதவி அளித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பயிற்சிகள் இளைஞர்களுக்காக வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இளைஞர்கள் சேரி மற்றும் நகர்ப்புற மக்களிடையே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இளைஞரும் அரசியலும்
இளைஞர் வரலாறுகளையும், அறிவியல், கணிதம் போன்றவற்றைக் கற்ற பின்னர் அரசியலையும் கற்றுக் கொள்வது கடமையாகும். படித்த இளைஞர் அரசியலில் நுழைந்தால்தான் நாடு நலம் பெறும். இளைஞன் செய்துகாட்டுவான் என்பது அனுபவ மொழி. அஸ்ஸாமில் நடந்த தேர்தலில் இளைஞர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பது இம்மண்ணில் நடந்ததே. காந்தியடிகளின் அறைகூவலை ஏற்றுக்கொண்ட இளைஞர்கள் ஆங்கில மொழியைப் புறக்கணித்து சுதந்திரத்திற்காகப் பாடுபட்டனர்.
தொழில் வளர்ச்சியில்...
தொழில் வளர்ச்சியில் பாரதி கண்ட கனவு, இரும்பை உருக்கிடுவீரே, இயந்திரங்கள் வகுத்திடுவீரே அரும்பும் வியர்வை தெளித்து ஆயிரம் தொழில் செய்திடுவீரே, பட்டினியில் ஆடையும் வறுமையில் உடையும் கொண்டு 
ஆலைகள் செய்வோம், கல்விச் சாலைகள் செய்வோம்.
ஞாலம் வியக்கும் கப்பல் செய்வோம்
என்று பாரதி அன்று கண்ட கனவு இன்று நனவாக வேண்டும்.
இளைஞர் ஆற்ற வேண்டிய தொண்டுதெருக்களைத் தூய்மை செய்தல், குடிநீர் நிலைகளைச் சுத்தம் செய்தல், சுகாதார அமைப்புகளை ஏற்படுத்துதல், விழாக் காலங்களில் கூட்டங்களை நெறிப் படுத்துதல், களவு போன பொருட்களைக் கண்டுபிடித்துக்கொடுத்தல், எழுத்தறி வித்தவன் இறைவன் என்னும் சான்றோர் வாக்குக்கேற்ப எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுத்தல், செய்தித் தாள்களை வாசித்துக்காட்டுதல், நூலகங்கள் அமைக்க ஏற்பாடு செய்தல், பூகம்பம் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடை, பணம் போன்றவற்றை திரட்டி உதவி செய்தல், ஆண்டு முடிந்ததும் தமது புத்தகங்களைப் பிற மாணவர்களுக்குக் கொடுத்து உதவுதல் போன்றவற்றையும் செய்யலாம்.
ஒற்றுமையைக் காத்தல்
நமது இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு விளங்குவதைக் காணும் அந்நிய சக்திகள் நம் மீது பொறாமை கொண்டு நம் நாட்டு இளைஞர்களைத் திசைதிருப்பிவிடுகின்றன. எனவே இளைஞர் பாரதியின் வாக்கிற்கிணங்க
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் எண்ணம் வளர்த்து முடிந்ததும் இந்நாடே”
என நாட்டுப்பற்று கொண்டு விளங்க வேண்டும்.
அறிஞர்களின் இளமைக் காலம்
  • அப்துல் கலாம் : இந்தியாவின் தென் கோடியில் ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்து, நாட்டின் உயர் பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்குச் சென்றவர். அவர் செய்தித்தாள்களை விற்று வரும் வருவாயைக் கொண்டும், மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் படித்துத்தான் வந்தாராம்.
  • கொலம்பஸ் : உலகமே தன்னைத் திரும்பிப் பார்த்து வியக்க வைத்தவர். அவர் ஓர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் மண்வெட்டியில் கரிக்கட்டையால் எழுதித்தான் கல்வி பயின்றாராம்.
  • கலிலியோ இருபுறமாகக் குவிக்கும் தன்மை கொண்ட ஒரு கண்ணாடியைக் கொண்டுதான் தொலைநோக்கியை உருவாக்கினார். 
  • மேலும் அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், கரோலஸ், லின்னேயஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் வாழ்விலும் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
ஆனால் இன்று உண்ண உணவு, உடை, நல்ல இருப்பிடம், கணினிக் கல்வியயனச் சிறப்புற்று விளங்கும் 21-ஆம் நூற்றாண்டை நாம் நன்றாகப் பயன்படுத்துதல் வேண்டும். எனவேதான் “இன்றைய இளைஞர் நாளைய தலைவர்” என்பர்.
முடிவுரை
ஒவ்வொருவரும் நம் நாடு, நம் மக்கள் எனக் கொண்டு விளங்க வேண்டும். புறக்கண் இல்லாவிட்டாலும், அகக் கண்ணாலே கல்வியைப் பெற வேண்டும்.  “தொண்டர் சொல்லவும் பெரிதே” என்றார் ஒளவையார். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பத்கேற்ப இளமையிலேயே நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். 
“தமிழ்மொழி அவர் மூச்சு - அதன்
தனிச்சிறப்பே அவர் பேச்சு” 
பாவேந்தர் பாரதிதாசரின் வாக்கிற்கிணங்க மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் கொண்டு “இளைஞனே! விழித்தெழு!! ஒளிவீசு!!!”
ஆ. மஞ்சுளா,
புனித பேட்ரிக் மே.நி.பள்ளி, அளுந்தூர்

இவர் போல் யார்?

 புனித மரிய கொரற்றி
கன்னி மறைசாட்சி (கி.பி. 1890 - 1902)
2,50,000 மக்கள் இவரது புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் திருநகருக்கு வருகை தந்தனர்.  கல்வி கற்குமளவுக்கு வீட்டில் வசதி இல்லாமல் போய்விட்டது.  12 வயதில் இவருக்குப் புதுநன்மை கொடுக்கும்போது கூட மற்றவர்களைவிட எளிமைத்தனத்தில் இருந்தார்.  ஆனால் தாய் இவருக்கு ஊட்டி வந்த ஞானச் சத்துணவு பிரமாதம்.

புதுநன்மைக்குப் பின் 5 வாரங்கள் கழியவில்லை.  அலெக்சாண்ட்ரோ யஸரனெல்லா என்ற 18 வயது இளைஞன், மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார் என்ற ஆத்திரத்தில், பலமுறை அவரது மென்மையான உடலைக் குத்தினான்.  “இது பாவம்;  இதற்காக நீ நரகத்திற்குப் போவாய்” என்று எச்சரித்தும் பலனில்லை.  குற்றுயிராய் விடப்பட்ட அவர் மருத்துவ மனையில் 24 மணி நேரம் கழித்து உயிர் நீத்தார். ‘மன்னித்து விட்டேன்’ என்று கூறினார்.  30 ஆண்டுகள் அவனுக்குச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.  பல காலமாக மனந் திரும்ப மனமில்லாத அவன் திடீரென பாவ மன்னிப்பை மன்றாடினான்.  மரிய கொரற்றி விண்ணின்று மலர்களைத் தன் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டேன் என அறிவித்தான்.  கப்புச்சின் 3ஆம் சபைத் துறவியாக வாழ்ந்து 1970-இல் மரித்தார்.  50 ஆண்டுகளுக்குள் மரியாளுக்கு 12ஆம் பத்திநாதர் புனிதர் பட்டம் கொடுத்தார். அருகில் மரியாளின் தாயும், 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உடனிருந்தனர்.  புனிதர் பட்டம் கொடுப்பதைப் பார்க்க மண்டியிட்டு இருந்த கூட்டத்தில் அலெக்சாண்ரோவும் பங்குபெற்று மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினார்.
எட்வர்டு

கடவுளின் கவலை = குழந்தைகள்

இராக்கேல் ஒரு திருமணமாகாத பெண், பள்ளி ஆசிரியை.  அவருடைய அக்காள் திருமணமாகி குழந்தை குட்டிகளைக் கவனித்துவந்த இல்லத்தரசி.  ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக்கூடம் கோடைவிடுமுறைக்குப்பின் திறக்கும்.  இராக்கேல் வகுப்பில் அவளிடம் படித்த குழந்தைகள் தேர்ச்சி பெற்று உயர்வகுப்புக்கு மாறிவிடுவார்கள். மறுபடியும் ‘கலகலக்கும்’ குழந்தைகளின் புது முகங்கள்;  புது உறவுகள்;  மறுபடியும் கல்வி ஆண்டு முடியும்.  வேறு வகுப்புக்கு மாறிப்போய் விடுவார்கள்.  அது ஒரு தொடர்கதை நிகழ்வுதான்!

இராக்கேல் அக்காளைப் பற்றி நினைத்தாள்;  அவளுக்கெனக் குழந்தைகள்  பாசத்தைப் பரிமாறிக் கொள்ளும் பந்தங்கள்;  சொந்தங்கள் எனக்கு?  எத்தனை குழந்தைகள் இருந்தும் வகுப்பில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே தற்காலிகச் சொந்த பந்த உறவு . . .  ஆண்டு முடிவில் நீ யாரோ?  நான் வேறோ?  என்று அந்த உறவு நிச்சயமற்றுப் போகிறதே!  மனச்சோர்வு!  அக்கா வீட்டில் இருக்கும் போது உள்ளத்தைத் திறந்து கொட்டித் தீர்த்தாள்.  அக்காள் சொன்ன ஆறுதல்தான் “கடவுளின் கவலை!”  மார்கிரேட் லாரன்ஸ் ஆங்கிலப் புனை கதையாக எழுதியுள்ள ‘A jest of God’ பரமன் காரணமாகச்  சொல்லப்பட்ட  பகடிதான்!  அதன் அர்த்தங்கள் ஆழமானவை!
அதுசரி - இங்கே தொடருவது
இது கதையா?  கவிதையா? கட்டுரையா?
எல்லாம்தான்!  என் பேராசிரியர் 
அபி சொன்னபடி :
அதுஅது பூத்ததுக்குத் தக்கபடி!  புரியும்;
ஆனால் புரியாது!  என்றாலும் புரிந்துவிடும்!!
நாம் வெறும் பாதுகாவலர்கள்
நம் குழந்தைகள்
நமக்கே உரியவர்கள் அல்ல!
நாம் பெற்றோர்கள்தான்!  என்றாலும்
நாம்  பாதுகாவலர்களேதான்!!
ஒவ்வொரு குழந்தைக்கும் ஓர்
உண்மைப் பெற்றோர் உண்டு!
கடவுள்தான்!  என்ன புரியவில்லையா?
உங்கள் வேலை, பெற்றோர் என்னும்
பெயரால் குழந்தைகளைப் பேணுவதுதான்!
நன்றாகக் கவனித்துக் கொள்வதுதான்!
உங்களைப்போல - ஆனால்
உங்களையும்விடக் கடவுள்  அவர்களுடன்
எங்கும் எதிலும் எப்போதும் ...
கண்ணுள் மணியாய்!
இப்போது நன்றாகப் புரிந்திருக்குமே!
என்னவெல்லாம் செய்கிறார்!
உங்கள் குழந்தைகள் மீது அவர்
பொழிகிறார் மழைபோல் பாசத்தை!
கோட்டையாய் மாறிப்
பராமரிக்கின்றார்!
குயிலாய் மாறிக் கொஞ்சுகிறார்
கிளியாய் மாறிக் கெஞ்சுகிறார்
குறும்புகள் செய்து மிஞ்சினால் ...?
நிரம்பவும் கவலை கொள்கிறார்
குழந்தைகள் மொழியில்: பாவம் கடவுள்!
விழுமியங்களை விதைக்கிறார்
விழிப்புறச் செய்கிறார் அன்புப் பண்பை!
உங்கள் குழந்தையின் பள்ளி நண்பர்கள்
யார்? யார்? என்று கூர்ந்து கவனிக்கிறார்.
வீட்டுக்கு வந்ததும் பொழுதுபோக்காய்
சின்னத்திரையில் எதைப் பார்க்கிறார்கள்?
கணினிப் பக்கம் புரட்டிப்புரட்டி
குழந்தை விளையாட்டு என்று                               
என்ன காட்சிகள்
கண்டு - “கண்டபடி” சிரிக்கிறார்கள்?
என்னென்ன பிம்பங்களுடன் என்ன
பேசி நகைக்கிறார்கள்? கண்காணித்து
எல்லாமே பார்க்கிறார்!  பார்த்துக்கொண்டே இருக்கிறார்!
உறங்குவார் - உறங்கமாட்டார்
இரவு ஒன்பது ஆனதா?
உறக்கம் கொள்ள அழைக்கிறார்!
குழந்தை உடன்படுத்துக் கொள்கிறார் - ஆனால்
உறங்கி எழும்வரை  உறங்காமல்  இருக்கிறார்
அம்மா மென்மைக் கரங்களினால்
போர்த்திப் பொத்தும் அரவணைப்பில்
அருகே இருந்து இரசிக்கிறார்!
அவரே அம்மாவாய் ... அவரே அப்பாவாய் ...
நிரப்புவார்கள் பெற்றோர்கள்
பசித்த குழந்தை வயிற்றைத்தான்!
நிரப்புவார்கள் ஆசான்கள்
வெற்றிட மூளையில் அறிவைத்தான்!
நிரப்பிவிடுவார் கடவுளும்தான்
தூய்மையைக் குழந்தை மனத்தில்தான்!
குழந்தைகள் விழிகள் மட்டும்தான்
கனவிலும் கடவுளைத் தரிசிக்கும்!!
கடவுளுக்கும் கவலை வந்தது
பெற்றோர் சொல் கேட்காமல் அடம்பிடித்தால் ...
என்ன நீங்கள் சொன்னாலும் முகம்  திருப்பினால்  . . .
அடிப்பதுபோல் கை ஓங்கிப் பாவனை செய்தால்
அடிவாங்க புறபுமுதுகைத் திருப்பிக்காட்டினால் . . .
தன்னெறியை
வாழ்ந்து காட்டியும் புறக்கணித்தால்
மனம் போன போக்கில்தான் போவேன் என்றால் ...
கடவுளும் அதிகம் கவலையில் மூழ்கிடுவார்
ஓர் நாள் . . . .
நரகவாசலின் முற்றத்தில் காத்திருந்தார்
சகித்தபடி பொறுமையுடன் பார்த்திருந்தார்
ஊதாரிப் பிள்ளையே என்றாலும்                        
ஓடித்தடுக்கி
நரகத்தில் விழாமல் தடுத்துநின்றார்
அன்பு, அக்கறை, பதற்றம், ஆறுதல் ...
பெற்றோர் பண்பில் அவர்                    
திருக்காட்சிதானோ?
எச்சரிக்கை மணிஓசை ஆலயத்தில் அல்ல!
விபத்து, தற்கொலை, தீயநட்பு, போதைப்பொருள்
உங்கள் குழந்தையைக் கொன்றுவிடத்
துடிதுடிக்கும் சாத்தான்கள்!         
அறச்சின கர்ச்சனை
அப்பாலே போ!  சாத்தானே கடவுள் முழக்கங்கள்!
அப்பாக்கள் அம்மாக்கள் கலக்கத்தில்...
நல்லாத்தானே நான் வளர்த்தேன்!
சரியாக வழிகாட்டித்தானே கிடந்தேன்!
ஏன் தோல்வி?  ஏது பிழை?  யார் தவறு?
கலங்காதே!  திகையாதே!
365 நாள்களும் எதிரொலி கேட்டது!
விடுங்கள் கவலையைக் கடவுளிடம்
உங்கள் குழந்தையைக் கணந்தோறும்
பராமரிப்பவர் அவரல்லவோ?
பாதுகாப்பவர் அவரல்லவோ?
பாசம் பொழிபவர் அவரல்லவோ?
மகிழ்ச்சியில் ஆழ்த்துவார் அவரல்லவோ?
உங்கள் கவலை -
கடவுளின் கவலை - அப்புறம்
என்ன கவலை?

மாதாபக்தி பரப்பு

அன்னை  பக்தி     பரப்பு
அது    கொடுக்கும்    சிறப்பு!
உன்னை    உயர்த்திக்    காட்டும்
உன்ன(த)    வாழ்வைக்    கூட்டும்!!
அன்னை    நமக்கு    அடைக்கலம்
அலகை    ஓடும்    படைக்கலம்!
உன்னைப்    பாதுகாப்பாள்
உரிய    மோட்சம்    சேர்ப்பாள்!!
மாதாவை    நம்பி     வாழ்வாய்
மறுத்தால்    நீயும்    தாழ்வாய்!
ஆதாம்    ஏவாள்    பாபம்
அழிக்கப்    பிறந்த    அன்னை
தன்னைத்    தாழ்த்தி    உயர்ந்தாள்
தாய்குலத்துச்    சிறந்தாள்!
அன்னை    உன்னத    நற்கதி
அமர    வைப்பாள்     உசத்தி!!
தன்னைத்    தாழ்த்தி    உயர்ந்தாள்
தாய்குலத்    திலகம்    பேறடைந்தாள்!
அன்னை    நமக்குத்    தாய்தான்
அனைவரும்    அன்னை   சேய்தான்!!
மரியை    வாழ்வில்    நம்பு
மனத்தில்    வளரும்    தெம்பு!
புரிந்து    வாழ்வில்    நடப்பாய்
புரிந்த    பாபம்    அழிப்பாள்!!

கவிஞர் பெஸ்கிதாசன்

கல்வி வணிகர்களை ஜெயிப்பது எப்படி?


(திருச்சபை கல்வி நிறுவனங்களுக்கான சில ஆலோசனைகள்)

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூகத்திற்கு ஆற்றும் தொண்டாக இருந்த கல்வி மெதுவாக வணிகமாகி இன்று மிகச் சிறந்த லாபம் ஈட்டும் தொழிலாக மாறி நிற்கிறது.

இன்று கல்வி வணிகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து கணிசமாய் பணம் பண்ண ஆரம்பித்துள்ளனர் பணம் படைத்தவர்கள்.இலாபம் ஒன்றே இவ்வணிகக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக இருப்பதனால் அதனை முழுமையாய் அடைவதற்குரிய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
பிரமிப்பூட்டும் கட்டிட வசதிகள், பேருந்து வசதிகள், கணினி, இன்டர்நெட் போன்ற அதி நவீன தகவல் நுட்ப வசதிகள் போன்ற பகட்டான வசதிகளை ஏற்படுத்தி சமூகத்தைப் பரவசப்படுத்துகின்றனர்.

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பின் தேர்ச்சி விகிதம், மதிப்பெண் இவைகளே சிறந்த கல்விக் கூடத்தின் அளவுகோள்களாக இன்றைய பெற்றோரும் சமூகமும் கருதுவதால் தம் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள், சிறப்புப் பயிற்சிகள், சிறப்புச் செயல்பாடுகள் எனப் பல்வேறு விதமான செயல்களில் ஒரு இயந்திரம் போல் படி, எழுது, படி, எழுது என மாணவர்களைத் திரும்பத் திரும்ப ஈடுபடுத்தி அந்தத் தேர்ச்சி விகிதத்தையும் எட்டிப் பிடித்துவிடுகின்றனர்.  அவைகளை அப்படியே பத்திரிக்கை, டி.வி.களில் விளம்பரமாக்கி, தொடர்ந்து தங்கள் வணிகத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.  இவர்களின் அதிக கொள்ளையடிக்கும் போக்கினால்தான் பள்ளிக் கட்டணம் நிர்ணயிப்பதில் அரசு தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்வியைச் சேவையாக, தொண்டாகக் கருதி ஆரம்பிக்கப்பட்ட பல கல்வி நிறுவனங்கள் இந்தக் கல்வி வணிகக் கூடங்களின் அபார வளர்ச்சியோடு போட்டி போட முடியாமல், தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.  குறிப்பாக திருச்சபையின் கல்வி நிறுவனங்களும், திருச்சபைக்கு முகவரி கொடுக்கும் அதன் கல்விப் பணியும் கவலைக்குரிய நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பரிதாபமாய் உள்ளன.

இந்நிலையில் நாம் மேற்கொள்ள வேண்டிய அவசர சிகிச்சை என்னென்ன என ஆராய்தல் அவசியமாகிறது.  அந்த வகையில் நாம் என்ன செய்யலாம்?  எப்படி  இவர்களை மேற்கொள்ளலாம்? என சில ஆலோசனைகளை முன் வைக்க விரும்புகிறேன்.

இலக்கில் தெளிவு :
நாம் ஏற்கெனவே சுட்டியதுபோல் இலாபம் ஒன்றே கல்வி வணிகர்களின் இலக்காக இருப்பதை நாமும் நமது இலக்காக ஏற்க முடியாது.  எனவே நமது கல்விப் பணிக்கென ஒரு தெளிவான இலக்கை நாம் முதலில் நிர்ணயம் செய்திடல் வேண்டும்.

உண்மை, உழைப்பு, உயர்வு போன்ற விருதுவாக்குகளை தேர்ந்தெடுத்து அவற்றைப் பள்ளியின் சுவரிலும், கால அட்டவணையிலும் பதிவு செய்துவிடும் நமது பள்ளிகளில் பல  இன்னும்  தமது இலக்கை நிர்ணயம் செய்யாமலேயே இருக்கின்றனர் என்பதை நாம் கவனமுடன் கவனிக்க வேண்டும்.

கல்வியின் இலக்கான, “முழு ஆளுமை பெற்ற மனிதனை உருவாக்குவது” என்பதையே நமது பள்ளிகளின் இலக்காக நாமும் கொள்ளலாம்.  தெளிந்த பார்வையுடன் நிமிர்ந்த நடையுடன் அவ்விலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

மதிப்பெண், தேர்ச்சி விகிதம் இவைகளை எப்படியாவது பெறச்செய்து தங்களது இலாபத்தைப் பெருக்குவதில் நோக்கமாக இருக்கும் கல்வி நிலைகளுக்கு  மாற்றாக நமது கல்வி நிறுவனங்கள் நமது மாணவர்களை முழுமையான ஆளுமையுடைய மனிதர்களாக ஆக்குவதையே நோக்கமாகக் கொண்டு, மாணவர்கள் வெறும் மதிப்பெண், தேர்ச்சி விகிதங்களில் மட்டுமல்லாது, அறிவு (Knowledge),  திறமை (Talents), மனநிலை (Mindset) ஆகிய மூன்றிலும் மா(ஏ)ற்றம் பெற்றவர்களாக வெளியே வருவதில் கவனம் செலுத்திட வேண்டும்.

முழு ஆளுமை பெற்ற மனிதர்களை உருவாக்குவதே எம் பள்ளியின் நோக்கம் என்பதைத் தெளிவாக நம் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் ஒவ்வொருவரும் அறிந்திடும் வண்ணம் பதிவு செய்திடல் வேண்டும்.  சுவரில் எழுதி வைப்பதோடு நின்றுவிடாமல் இதனை வலியுறுத்தியே நமது ஒவ்வொரு அசைவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  பெற்றோர், ஆசிரியர் கூட்டங்கள் போன்ற நேரங்களில் இதற்கான புரிதலை ஏற்படுத்திட வேண்டும்.

ஆய்வுக் கூடங்கள் :ஒரு சாக்பீஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் கூட அப்பொருளின் தரத்தை உயர்த்த தொடர்ஆய்வுகளும் அதற்கான ஆய்வுக்கூடமும் இருக்கின்றன.  ஆனால் மனிதர்களை உருவாக்கும் பள்ளிகளில் அப்படிப்பட்ட ஆய்வுகள் இல்லை, ஆய்வுக் கூடங்களும் இல்லை.  “முழு ஆளுமை பெற்ற மனிதனை உருவாக்குவது” என்கிற நமது இலக்கின் உண்மையான பொருள் என்ன?  இந்த இலக்கை எட்டிட என்னென்ன செய்திடல் வேண்டும்?  ஏன் ஒருவனை இப்படி உருவாக்க வேண்டும்?  மனிதனாக உருவாக்குவது எப்படி?  ஆளுமை பெறச் செய்வது எப்படி?  முழுமைக்கு இட்டுச் செல்வது எப்படி?  நமது பாடப்புத்தகங்கள், அதன் உள்ளடக்கங்கள் இந்த இலக்கை எட்டுவதற்குப் போதுமானவைதானா?  மாணவர்கள் தங்கள் அறிவில், திறமையில், மனநிலையில் ஏற்றம் பெற நாம் செய்ய வேண்டியது என்ன?  என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் ஆய்வுக்கூடமாக நமது பள்ளிக்கூடங்கள் மாற்றப்பட வேண்டும்.

இத்தகைய ஆய்வுகள் பள்ளிகள் தோறும் இல்லையயன்றாலும் மறை, மாநில (Province) அளவில் உள்ள நிறுவனங்களுக்குள் ஒன்று என்கிற அளவிலாவது கட்டாயம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.  இன்றைய நாளில் பேசப்படும் (Chain of Schools, Group of Schools)  போன்றவைகளை ஏற்கெனவே நாம் கொண்டிருந்தும் அதனைச் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோம்.  நமது பள்ளிகள் தனித் தனியாக தொடர் பற்றுச் சிதறிக் கிடப்பதை நிறுத்தி, நமது சபைகள் அளவில் அல்லது Province அளவில் அவைகளை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாக ஆய்வுகளில் நம் பள்ளிகளை ஒன்றாக ஈடுபடுத்தலாம்.

வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ நமது தலைமை ஆசிரியர்களை மட்டும் ஓரிடத்தில் கூட்டுவதால் மட்டும் ஒருங்கிணைப்பைக் கொணர முடியாது.  மாறாக நமது பள்ளி ஆசிரியர்கள் அளவில், மாணவர்கள் அளவில் அந்த ஒருங்கிணைப்பு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.  இத்தகைய ஆய்வு முறைகள் நமது பயணத்தைத் தெளிவாக வழிநடத்திச் செல்ல உதவும்.  இப்படி திருச்சபை நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டால் அரசின் கல்விக் கொள்கையில்கூட நாம் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
 
மாணவர்கள் பெற வேண்டிய அறிவு எது?  திறமைகள் எவை?  அடைய வேண்டிய மனநிலை எது?  என்பதுடன் அவைகளை அடையச் செய்யும் வழிமுறைகள் என்ன?  என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்து தேடிப் பெற்றதைத் தமிழகமெங்கும் பல பள்ளிகளுக்குப் பயிற்சியாகக் கொடுத்துவரும் என் அனுபவத்தில் உரக்கச் சொல்லுகிறேன், நமது பள்ளிகள் இத்தகைய ஆய்வில் ஈடுபடுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.  அதுவே தகுதியும் நீதியுமாகும்; 

திறமைகள் வளர்ப்பு :
நமது பள்ளிகளில் கையாளப்படும் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் மாணவன் சில திறன்களைப் பெற்றிட வேண்டும்.  பாடத்தினை நடத்தி அதில் தேர்வு வைத்து விடுவதால் மட்டும் மாணவன் அந்தத் திறமையைப் பெற்றுவிட முடியாது.  எனவே நமது பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பெறுவதைவிட திறமைகளைப் பெற்று வளரச் செய்வது நமது கடமையாக இருத்தல் வேண்டும்.
உதாரணமாக, தமிழைத் தாய் மொழியாக 10 ஆண்டுகள் நம் பள்ளியில் பயிலும் மாணவன் சுய சிந்தனையில், தானாக, கொடுத்த தலைப்பில் பேசிடவும், கதை, கட்டுரை, கவிதை போன்ற மொழியின் பல்வேறு கூறுகளில் எழுதி தனது சிந்தனையை வெளிப்படுத்தவும் ஆற்றலைப் பெற்றிட வேண்டும்.  அங்ஙனமே ஆங்கில மொழியில் நான்கு வாக்கியங்களாவது சுயமாக பேசவும், எழுதிடவும் கூடிய திறமை வேண்டும்.  கணிதப் பாடத்தின் வழியாக Test of Reasoning, Logic Mind போன்ற அறிவுத் திறமை பெற்றிட வேண்டும்.

சுருங்கக் கூறின் பாடப்புத்தகத்தில் கேள்விக்கான பதிலைக் குறித்துக்கொடுத்து, பின்பு முக்கியமான கேள்விகளைக் குறித்துக்கொடுத்து அவற்றை மட்டும் திரும்பத் திரும்ப அர்த்தம் புரியாமல்கூட படிக்க வைத்து அப்படியே எழுதிடச்செய்யும் தன்மையிலிருந்து விடுபட்டு நமது மாணவர்கள் திறமைகளில் வளர நாம் அதிக கவனம் செலுத்திடல் வேண்டும்.  இந்தத் திறமைகள் Curricular மற்றும் Extra-Curricular இரண்டிலும் பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

எங்கள் பள்ளியில் சேர்ந்தால் உங்கள் பிள்ளை அறிஞன் ஆவான், பொறிஞன் ஆவான், மருத்துவன் ஆவான் என ஆசை காட்டி சமூகத்தைக் கவர்ந்திழுக்க விளம்பரம் செய்து கல்லா கட்டும் நபர்களிடமிருந்து நாம் மாறுபட்டு எம் பள்ளியில் படித்தால் உங்கள் பிள்ளை நல்ல மனிதனாவான்;  இறுதிவரை உங்களுக்குப் பிள்ளையாய் இருப்பான் எனச் சமூகத்திற்கு நாம் காட்டிட வேண்டும்.  இந்த மன நிலையைப் பெற்று திறமை, அறிவுடன் கூடிய பொறிஞனாய், மருத்துவனாய் அவனால் ஆகிவிட முடியும் என்றும் நாம் சமூகத்திற்கு உணர்த்திட வேண்டும்.

கல்வியாளர்கள் வெறும் வல்லவர்களை உருவாக்க முயற்சிக்கின்ற வேளையில் நமது நிறுவனங்கள் நல்லவர்களை முதலில் உருவாக்க முயற்சித்து பின்பு அவர்களை வல்லவர்களாகவும் உருவாக்க முயன்றிட வேண்டும்.  இத்தகைய இரட்டைச் செயல்பாட்டால் நமது செயல் வேகம் மற்ற  நிறுவனங்களைவிட குறைந்துகூட போகலாம்.  ஆனால் இறுதி வெற்றி நம்முடையதே.  ஏனெனில் “முழு ஆளுமை பெற்ற மனிதனை உருவாக்கவே” என்கிற கல்வியின் இலக்கைச் சமூகம் எட்டிப்பிடிக்க நாம்தான் வழிகாட்டி நிற்கின்றோம் என்கிற மன நிறைவையும் நல்ல மனிதர்களையும் நாம்தான் பெற முடியும்.

இதனைச் சரியாய்ப் புரிந்து கொண்டு முறையாய் முயற்சித்துப் பார்ப்போம்.   சமூகத்தைச் சரிப்படுத்தும் கருவியாய் கல்வியைக் கவனமாய்க் கையாளுவோம்!
சகோ. பிலோ F.S.J.
கருமண்டபம், திருச்சி

காலத்தின் அருமை

காலத்தின் அருமை யாருக்குத் தெரியும்?  கல்லூரியில் காம்பவுண்ட் சுவர்களிலே காலையிலிருந்து மாலை வரை ‘கலர்’ பார்க்கக் காத்துக் கிடக்கும் வாலிபர்களுக்குத் தெரியுமா?  இல்லை ஊர் ஓர ஓடைத் திட்டுகளிலே அமர்ந்து வெட்டிப் பேச்சு பேசும் மாணவர்களுக்குத் தெரியுமா?  கால் முட்டிக்குமேல் கைலியைத் தூக்கிக் கட்டி தகப்பன் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒவ்வொரு காலணாவையும் 5, 10 ரூ என்று காப்பிக் கடையிலே கண்டபடி செலவழித்துக் கால்கடுக்க காத்து நிற்கும் இளைய தலைமுறைக்குத் தெரியுமா?  இல்லை, தொலைந்து போன வாழ்க்கையைத் தொலைக்காட்சி பெட்டியிலே தேடி, தொலைக் காட்சித் தொடர்களுக்குத் துதி பாடி அதற்காக மட்டுமே வாழ்க்கையைப் பலியாக்கும் வேலைக்குச் செல்லா இல்லத்தரசிகளுக்குத் தெரியுமா?  காலத்தின் அருமை இவர்களுக்குத் தெரியாது.  நேரம் விரயமாவதால், வாழ்க்கை வீரியமாகாது என்பதை இவர்கள் அறியவில்லை.

அன்பு மாணவச் செல்வங்களே, இந்தப் புதிய கல்வி ஆண்டை ஆண்டவர் நமக்கு ஆசீர்வதித்துக்கொடுத்திருக்கிறார்.  இந்தப் புதிய கல்வி ஆண்டு உங்களுக்கு ஆசீர்வாதமான ஆண்டாக அமைய நான் ஜெபிக்கிறேன்.  காலத்தின் அருமை உங்கள் கையில்தான் உள்ளது.    விரல்களால் எண்ணிவிடக் கூடிய  குறுகிய நாட்கள் உள்ளன.  ஒவ்வொரு கட்டத்திலும் தேர்வுகளைச் சந்திக்க இருக்கும் மாணவ நண்பர்கள் நேரத்தின் அருமையை உணர்ந்து அதைப் பட்டியலிட்டுப் பயன் படுத்துவது அவசியம்.  எந்தப் பாடங்களை எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்ற முன்கணிப்பும், திட்டமும் இருக்க வேண்டும்.  கடினமான பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குதலும், படித்தபின் அவற்றை எழுதிப் பார்த்தலும் சாலச் சிறந்தவை.  ஆனால் குழுவாக அமர்ந்து நண்பர்களோடு படிக்கிறோம் (றூrலிற்ஸ்ரீ றீமிற்dதீ) என்ற பெயரில் வெட்டிப் பேச்சு பேசி நேரத்தை வீணடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.  கண்டிப்பாக கண்காணிக்கக் கூடிய ஒரு ஆசிரியரோ அல்லது பெற்றோரோ இல்லாதபோது குழுவாகப் படிக்கும் முயற்சியைக் கைவிடுதலும் தவிர்த்தலும் நலம் பயக்கும்.

வருடா வருடம்  பொதுத் தேர்வுகளின் போது மாணவர்கள் சந்திக்கும் சவால் கிரிக்கெட் போன்ற தொலைக்காட்சி ஒளிபரப்பு.  ஒரு முறை பார்த்து விட்டுப் போய் படிக்கலாம் என்ற எண்ணத்தோடு தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்கின்ற மாணவர்கள்  நேரத்தை வீணடிப்பது மட்டுமல்ல தாம் விரும்பிய வீரர்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் வருகின்ற மனச் சோர்வு, ஆத்திரம் இவற்றால் தேர்வு மீதுள்ள கவனம் எங்கோ திசைமாறிச் செல்லுகிறது.  தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வலுவான எண்ணம் வலுவிழந்து போகிறது.  40 மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.  இதை அறிந்த பெற்றோர் இணைந்து “இவை வேண்டாம்” என்ற ஒரு தியாக முயற்சியில் ஈடுபட்டால் கோடி நன்மை கிடைக்கும்.

பன்னிரெண்டாம், பத்தாம் வகுப்பு மாணவர்கள் கவலையில்லாத காலத்தைக் கரைக்கும் மாணாக்கர் சந்திக்க இருக்கும் விளைவுகளை இப்போதே எண்ணிப் பார்ப்பது நலம்.  நீங்கள் வீணடிக்கும் ஒவ்வொரு மணித் துளியும் உங்கள் வெற்றி வாய்ப்பை விலக்கிவிடும் சக்தி படைத்தது என்பதை உணர்ந்தீர்களா?  சாதனைச் சிகரங்களிலிருந்து சற்றுத் தொலைவிலேயே உங்களை நிறுத்திவிடும் சக்தியுடையது என்பதை அறிந்திருக் கிறீர்களா?  நீங்கள் விரயமாக்கும் ஒவ்வொரு மணித் துளியும் உங்களை முதல் ரேங்கிலிருந்து முப்பதாவது ரேங்கிற்கும், நூற்றுக்கு நூறு மதிப்பெண்களிலிருந்து நாற்பது மதிப்பெண்களுக்கும் இழுத்துச் செல்லக்கூடியது என்பதை எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?  இல்லை என்றால் இப்போதே எண்ணிப் பாருங்கள், உணர்ந்து கொள்ளுங்கள்.

காலத்தை வீணாக்குவதால் இழந்து போகின்ற ஒரே ஒரு மதிப்பெண்ணினால் சிலரின் தலைவிதியே மாறிப்போன வரலாற்று நிகழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன்.  ஒரே ஒரு மதிப்பெண் குறைவினால் வெற்றியை நழுவவிட்டவர், தான் சாதிக்க வேண்டும் என்ற மருத்துவ படிப்பையும் தவறவிட்டவர்களையும் பார்த்துப் பரிதாபப்பட்டிருக்கிறோம்.  கையிலிருக்கும் காலம் பொன்னானது என்பதை நீங்கள் இப்போதே உணர்ந்து செயல்பட்டால் விபரீதங்களைத் தவிர்க்கலாம், வேண்டி விரும்பிய வெற்றியைக் குவிக்கலாம்.
பொன்னான நேரம் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளை எட்டிப் பிடிக்கும் ஏணிப்படிகள்.  எனவே நேரத்தை நேர்த்தியாய்ச் செலவிட்டு நீண்ட நாள் கனவுகளை நனவாக்க வாழ்த்துகிறேன்.             

சில சிந்தனைத் துளிகள்


கரம் பிடித்து, முகம் பார்த்து, தோள் தொட்டுப் பேசுவது நம் உறவுக்கும் உரிமைக்கும் பரிவுக்கும் பாசத்திற்கும் அடையாளங்கள்.

தம்பி!  தங்கைகளே! புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் இருக்கும் உங்களைப் பாசத்தோடு அழைத்து, தோழமையுணர்வோடு கரம்பிடித்து, சூரியனைப் போல் பிரகாசிக்கும் உங்களது முகம் பார்த்து, பரிவோடு தோள்களை வருடி, சில சிந்தனைத் துளிகளை உங்களது இதயத் தோட்டத்தில் விதைக்கவே இந்த வரிகளை எழுதுகிறேன்.

“கோடை விடுமுறை இவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து விட்டதே!” என்று நீங்கள் நினைப்பதை என்னால் உணர முடிகிறது.  என்ன செய்வது, வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும் காலத்தை யார்தான் வேலிபோட்டு நிறுத்த முடியும்?

புத்தகங்களைச் சுமந்து சென்று, புதிய நண்பர்களைச் சொந்தமாக்கி, உற்சாகத்தோடு  தொடங்குகிற கல்வியாண்டில், உயர்ந்த இலட்சியங்கள், சிறந்த குறிக்கோள்கள், மேலான சிந்தனைகள், எந்தச் சூழ்நிலையிலும் நேர்மறையான மனநிலைகள், பயனுள்ள முயற்சிகள், தொடர் பயிற்சிகள் இவற்றை அணிகலன்களாக வைத்துக் கொண்டு முனைப்போடு செயல்பட்டால்  வாழ்க்கை  எனும் தோட்டத்தில் வெற்றிக் கனிகளைப் பறிப்பது அவ்வளவு கடினமல்ல!

“இளைய சமுதாயமே கனவு காணுங்கள்!  இன்று கனவு காண்பவரே நாளைய சாதனையாளர்” என்று முழக்கமிடுகிறாரே நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், எதற்காக?  கனவிலிருந்துதான் உயர்ந்த இலட்சியங்களும், முயற்சிகளும் உருப்பெருகின்றன.  நமது கற்பனைகளால்தான் நாம் வாழ்கிற வாழ்க்கை வளமடைகிறது.  எனவே உங்களது உள்ளக் கதவுகளைத் திறங்கள்.  உங்கள் கற்பனை பறக்கட்டும் வெகு உயரத்தில்!

“நான் எங்கே இருக்கிறேன், எங்கே செல்கிறேன்”  என்ற தொடர் கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.  ஏனென்றால் இக்கேள்விகள் நம்மைச் சரியான பாதையில் அழைத்துச் செல்கின்றன.  பறவைகள்கூட வானில் தங்களது பாதையை அறிந்திருக்கின்றன அல்லவா!
இளைய தலைமுறையின் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர் நார்மன் வின்சென்ட் பீல், நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கூறும் நான்கு படிநிலைகளை மனதிருத்துவோம

மிகச் சிறந்த ஒன்றிற்காக நம்மை அர்ப்பணம் செய்ய வேண்டும். நமது விருப்பம் மற்றும் குறிக்கோள் இவற்றிற்கான வேறுபாட்டை அறிந்து செயல்படுதல் வேண்டும். இடைப்பட்ட குறிக்கோளை அடைவதின் மூலம் இறுதியான குறிக்கோளை அடைய முயல வேண்டும்.  எல்லாவற்றிற்கும் மேலாக தொடர் முயற்சியும் பயிற்சியும் நமக்குத் தேவை.  இச்சிந்தனைத் துளிகளை மனதிருந்தி இப்புதிய கல்வியாண்டில் வெற்றி நடைபோட அன்போடு வாழ்த்துகிறேன்.

பணி. அந்தோணி மதலைமுத்து
நல்லாயன் குருமடம், கோவை

Snow Ball

சாலையில் நடந்து செல்கையில் ஒரு சின்ன நாய்க்குட்டியை இரண்டு பெரிய நாய்கள் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.  அதன் ஈனக் குரல் மிகவும் பரிதாபமாக இருந்தது.  மனம் பாதித்த சத்யன் ஓடோடிச் சென்று அந்தப் பெரிய நாயை விரட்டி விட்டு குட்டியைக் கையில் ஏந்திக் கொண்டான்.  அருகிலிருந்த கால்நடை மருத்துவ மனைக்கு அதனை அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தான்.  டீக்கடையில் ஒரு டம்ளர் பாலும் பிஸ்கட்டுகளும் வாங்கி குட்டிக்கு உண்ணக்கொடுத்தான்.  அருகிலிருந்த ஒரு கடையில் ஒரு அட்டை டப்பா வாங்கி குட்டியை அதில் போட்டு சாலையோரமாக வைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டான் சத்யன்.  பாதி நாள் வரையில் வேலையில் மனம் செல்லவில்லை.  சே!  அந்தக் குட்டியை நாம் அங்கேயே விட்டு வந்தது தப்போ.  மீண்டும் அந்தப் பெரிய நாய்கள் வந்திருந்தால் அதன் நிலை என்ன?  போக்குவரத்து மிகுந்த சாலையாயிற்றே.  ஏதாவது வண்டியில்  அடிபட்டு விட்டால் என்ன செய்வது?  மனம் அலை பாய்ந்தது.  மதிய உணவுகூட தேவைப்படாத அளவிற்கு மனம் சஞ்சலப்பட்டது.  மதியத்திற்கு மேல் மனம் எப்படியோ வேலையில் நிலைத்தது.  சத்யன் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான்.
 
மாலை ஆனதும் மனசு மீண்டும் குட்டி நாயைச் சுற்றி வந்தது.  தலைவலிக்கு ஒரு காப்பி அருந்தலாம்  என நினைத்தவன் சட்டென அந்த  எண்ணத்தைக் கைவிட்ட வாறு குட்டி நாய் இருந்த இடம் தேடி வேக வேகமாய் ஓடினான்.  அங்கே பெட்டி மட்டும் இருந்ததே ஒழிய குட்டி இருக்கவில்லை.  மனம் கலங்கியது சத்யனுக்கு.  தப்பு செய்து விட்டோமோ.  ஒரு சின்ன ஜீவனைக் காக்க தவறிவிட்டோமோ என மனசாட்சி குத்தியது.  கலங்கிய மனதைத் தேற்ற முடியாமல், கண்ணில் கசியும் நீரை துடைக்கத் தோன்றாமல் நடந்து கொண்டிருந்தவன் காலில் இரண்டொரு முறை எதுவோ தடுக்கியது போலிருந்தது.  சட்டெனக் குனிந்து பார்த்த சத்யனின் முகம் முழுமையாய் மலர்ந்தது.  காரணம் அந்தக் குட்டி ஜீவன், தன் சின்ன வாலை ஆட்டியவாறு, பிஞ்சுக் கால்களால் அவனுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தது.  அதை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டான் சத்யன்.  பாசமாய்த் தடவிக்கொடுத்தான்.  அந்த நாய்க்குட்டியும் தான் சொல்ல நினைத்த வி­யங்களை எல்லாம் அவனுடன் தன் வாலாட்டலில் பரிமாறியது.  தன் நன்றியை அவன் முகத்தையும் கரங்களையும் நக்கி நக்கித் தெரிவித்தது.  நாயின் மொழி அதன் வாலில் என்பதை  சத்யன் நன்கு புரிந்து கொண்டான்.

வீட்டிற்குச் சென்ற சத்யன் குட்டி நாயை நன்கு குளிப்பாட்டி, மருந்திட்டு, உணவிட்டு,        “Snow Ball” என்று பெயரிட்டு அதனைச் செல்லமாக வளர்க்க ஆரம்பித்தான்.  அன்று முதல் Snow Ball சத்யனின் உற்ற தோழனாய், உறவுப் பாலமாய் ஆகிவிட்டது.  எங்கு ஒரு ஆதரவற்ற மிருகத்தைக் கண்டாலும் அதை ஆதரித்து, அழைத்து வந்து பாதுகாப்பது சத்யனின் வேலையாயிற்று.  வீட்டிலும் வெளியிலும் சத்யனின் உற்ற தோழன், உறவினன் snow Ball என்றாகி விட்டது.
இப்படியயல்லாம்கூட நட்பு பிறக்குமா?  வளருமா? எனப் பார்ப்போர் ஆச்சரியம் அடையுமளவிற்கு அவர்கள் அன்பும் பாசமும் பின்னிப் பிணைந்து இருந்தன.  ஒரு நாள் இருவரும் வெளியே சென்றிருந்த வேளையில் கட்டுப்பாடு இழந்து வந்த ஒரு வாகனம் சத்யனை மோத வருகையில் snow Ball சட்டென அவன் மீது பாய்ந்து, அவனை நிலைக் குலையச் செய்து வேறு திசையில் விழ வைத்தது.  ஆனால் அதற்கு ஆழமாக அடிபட்டு விட்டது.  துடித்தான் சத்யன்.  துவண்டான்.  ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றான்.  அவனோடு ஓடியாடிய snow Ball-ன் இரண்டு கால்கள் சேதப்பட்டதால் அகற்றப்பட்டன.  ஆனாலும் அதன்மேல் கொண்ட அன்பு சிறிதும் குறையவில்லை சத்யனுக்கு.

சின்ன வயதில் தன்னைக் காப்பாற்றி, உயிர்கொடுத்து, பாதுகாப்புக்கொடுத்து வளர்த்த சத்யனுக்கு அவன் தனக்குத் தந்த நட்பிற்குப் பதில் நன்றியைத் தெரிவித்து விட்டது Snow Ball.  நட்பிற்கு நீ என்றால் நன்றிக்கு நான் என நிரூபித்து விட்டது.  சத்யனுக்கு Snow Ball -ன் மேல் பிரியம் இன்னும் அதிகமாயிற்று.  தொண்டு நிறுவனங்கள் + யயிற்e ளீrலிவிவி உதவியுடன் snow Ball-ற்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன.  சத்யனுடனான snow Ball-ன் வாழ்க்கைப் பயணம் தொடரலாயிற்று.  தனக்கு அன்பு காட்டிய மனிதனுக்குப் பதில் அன்பு காட்டிவிட்ட தெம்பில் செயற்கைக் கால்களுடன், சத்யனுடன் தினம் தெருக்களில் நடை செல்கிறது.  தன்னுயிரைக் காத்த Snow Ball-இடம் கொண்ட நன்றிக் கடனுக்காக ஊனமுற்ற மிருகங்களைப் பாதுகாத்து, பணி செய்யும் அமைப்பை நடத்த ஆரம்பித்தான் சத்யன்.  snow Ball விலங்குகள் காப்பகம் என்னும் பெயரில் அக்காப்பகம் சிறந்த தொண்டு நிறுவனமாக நடக்கிறது.  யாருக்கு நன்றியுணர்வு அதிகம்?  மனிதனுக்கா, மிருகத்திற்கா?  இருவருக்குமா? 

சாந்தி ராபர்ட்ஸ், உதகை

ஆசிரியர் பக்கம்

15 நாட்கள் மேலும் நீட்டிக்கப்பட்ட கோடைவிடுமுறை முடிவடையும் நேரம்.  மீண்டும் புதிய கல்வியாண்டைத் (2011-2012) தொடங்கும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!  கற்பிப்போர், கற்போர் அனைவருமே வளமும் நலமும் பெற்று வாழ ஜெபிப்போம்.
2011 ஜுன்  முதல் 2012 ஜுன் வரை நம் திருச்சபை மறைக்கல்வி ஆண்டைக் கொண்டாடுகிறது.  நமது பங்குகளில், பள்ளிகளில் நமக்குள்ள சிறப்புத் திட்டமாக இம்மறைக்கல்வி வகுப்புகள் தரப்படுவதால் இறையறிவும் ஞானமும் வளர வழி பிறக்கிறது.  அனைத்துப் பள்ளிப் பாடங்களோடு மறைக்கல்வி/நன்னெறிப் பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும் அவற்றிற்கான முக்கியத்துவம் இன்னும் உணரப்படாமலேயே மறைந்தும் விடுகின்றது.  மறைக்கல்வியின் மேன்மையையும் அது நம் நிறுவனங்கள், பங்குகள் அளவில் செயல்படுத்தப்பட வேண்டிய தேவையையும் உணர்த்தும் இவ்வாண்டில் மறைக்கல்விச் செயல்பாடுகள் சிறக்க வாழ்த்துவோம்.  இணைந்து செயல்படுவோம்.
  
ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பாதைகளைத் தேடும் நோக்கில் இக்கல்வி ஆண்டு முழு மனித வளர்ச்சி தருவதாக அமைய வேண்டும்.  மனிதனுக்குள் அறிவு (knowledge) மட்டுமல்ல அதைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறும் ஞானமும் (Wisdom) அதன் விளைவான ஆன்மீகம், பொருளுள்ள கலாச்சாரம், ஒழுக்க வாழ்வு இவை இன்றைய சமூக மனிதருக்குத் தேவைப்படுபவை.  கல்வியில், கண்டுபிடிப்பில் முன்னேறும் இச்மூகத்தில் நிறைவான வாழ்வும், மகிழ்வான சூழலும், சமாதானச் சுவடுகளும் குறைந்து போகக் காரணமே ஒட்டு மொத்த வளர்ச்சி என்றில் லாமல் படிப்பறிவு மட்டுமே முன்னிலை பெறுவது.
வேகமாக வளரும் (?) இன்றைய மனித முன்னேற்றத்தை நினைக்கும் போது எதிர்காலச் சந்ததிகள் உண்மையான நிறைவைக் காண்பார்களா! என்ற சந்தேகமே வலுக்கிறது.  மனித வளர்ச்சி மற்றும்  வளத்தின் உண்மையை உணருவோம்... அவ்வளர்ச்சி வெறும் அறிவு சம்பந்தப்பட்ட கல்வியில் மட்டுமல்ல அதற்கு மேலான ஒழுக்கக் கல்வி என்று பலதரப்பட்ட உயர் கல்விகள் கற்பிக்கப்படல் கட்டாயமே.  இங்கும் “கல்வி” என்ற வார்த்தையை நான் பயன்படுத்தும் போது “தேர்வு”, “மதிப்பெண்”, “பாடத்திட்டம்” என்பன வற்றை நான் மையப்படுத்தவில்லை.  மாறாக, மேற்கூறிய வார்த்தைகள் - அவற்றின் அர்த்தங்கள் எல்லாமே வாழ்வோடு இணைந்து கொள்ள வேண்டும் என்பதே பொருள்.

பரபரப்பான இச்சமூக வாழ்வில் சில சமயங்களில் பெற்றோர்கள் இக்கருத்தை உணர்ந்து செயல்படாத நிலையில் - ஒருவேளை உணர்ந்தாலும் அதைத் தம்  பிள்ளைகளுக்குச்  சொல்லித்தர நேரம் கூட இல்லாத நிலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியப் பெருமக்களும் நிறுவனங்களும் இப்பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை உள்ளது.  இது காலத்தின் தேவை என்பதை உணர்தல் வேண்டும்.  நல்லவற்றைப் பற்றிக் கேள்விப்படாமலேயே இத்தலைமுறை வளர்ந்தால், நலமான சமூகம் என்பது இல்லாமலேயே போய்விடும் அபாயம் உண்டு.

அறிவு ஜீவிகளை மட்டுமல்ல; ஆன்மீக ஒழுக்க உயர்பண்பாடு , கலாச்சார மனிதரை உருவாக்கும் பணியில் ஈடுபட நம்மை அர்ப்பணிப்போம்.  இக்கல்வியாண்டில் இத்தொடக்கச் சிந்தனை மேன்மையுடையதாய் அமையட்டும் !

சே. சகாய ஜாண்