Christmas Message from the Chairman

God wants every family to be a cradle of vocation, primarily Christian vocation. For each Christian is called to witness the kingdom values. Based on this call only, a woman or man is called to live with an undivided heart serving God and His people and not herself or himself.


The Babe of Bethlahem, Jesus, “increased in wisdom, in stature, and in favour with God and men”. There were his parents who helped him to grow both in body and in wisdom, and to gain favour with God and people. They had a sense of reverence, deep insight into the unseen world and total surrender to the Divine. Jesus as a young man picked up these graceful qualities. Consequently he was strengthened to abide by the will of the Father and to perform his ministry to his peole in such a way that the Father proclaimed, “You are my son, the beloved; my favour rests on you.”


It was not easy for our Mother Mary and St. Joseph to understand their own vocation as we listen to them in the Gospels. Yet they believed in every step of the Way. Hence we need to pray for all the families that the parents and the elders discern the Way through Scripture reading, prayer and awareness of God and neighbours. Also a thirst for service with a heart of love will develop a vocational environment for children.


May all of us - Priests and Religious - give the best gift to Jesus in the form of becoming another Jesus and continuing Jesus’ ministry this Christmas and 2011.


May we pray to his and our Mother Mary to behold him in all people irrespective of community and religion and listen to his voice and to live his values. God bless you!
With love and prayers,


+ Jude Paulraj
Bishop of Palayamkottai

கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தன்னுடைய வயது எத்தனை என்றுகூட சரியாகச் சொல்லத் தெரியாத நம் தாத்தா, பாட்டி, முன்னோர்கள் வாழ்ந்து வந்த காலம் சற்றே மாறி, “என் பிள்ளை இந்த மாதத்தில்தான் பிறந்தது” என்று தமிழ் மாதத்தின் ஒரு நாளைக் குறிப்பிட்டுச் சொல்லி, அதன்பின் ஆங்கில மாதத் தேதியைக் கண்டுபிடிக்கும் நிலை வந்தது. இந்த நிலை இன்றும் பல இடங்களில் தொடர்ந்தாலும், இன்றைய கலாச்சார மாற்றத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் வெகு சிறப்பாய், ஏன், சில ‘பெரியவர்களுக்கு’, வாரக்கணக்கில்கூட பல்வேறு நிகழ்வுகள் மூலமாய்க் கொண்டாடப்படுகிற நிகழ்வாய் மாறிப்போனது பெரும் மாற்றமே. சிறு நகர்களில்கூட பள்ளிப் பருவத்தை எட்டியுள்ள நம் பிள்ளைகள் தமது நண்பர்கள் குழாமையே ஒன்றாகத் தம் வீட்டிற்கு வரவழைத்து அல்லது இனிப்புகளையாவது தம் வகுப்புக்கு எடுத்து வந்து தோழர்களோடு பகிர்ந்துகொண்டு பிறந்த நாள் கொண்டாடும் முன்னேற்றம் காண முடிகிறது.

‘பிறப்பு’  ஒரு பெரும் கொடையே. ஓர் புதிய உயிர் தோன்றியுள்ளதால் இரு பெரும் உயிர்கள் அளவில்லா மகிழ்ச்சியில் திளைக்க, அவர்களோடு தொடர்புள்ள அனைவரும்தான் பூரித்துப்போகின்றனர். இப்பிறப்பு ஏனோதானோ என்று தற்செயலாக நடைபெறும் ஒன்று அல்ல. மாறாக, பிறந்தவர்க்கு வாழ்நாள் முழுவதும் பொருளுள்ள வாழ்வு அமைய வேண்டும் என்பதே கடவுளின் கொடையும் மனித விருப்பமும்.

பின் ஏன் இன்று பிறந்தவர்களில் சிலர் ‘ஏன்தான் பிறந்தேனோ?’ ‘ஏன் வாழனும், இவ்வுலகிலிருந்து போய்ச் சேர்ந்து விட்டால் நல்லதுதானே?’ என்று நினைக்கின்றனர்? இத்தகைய எண்ண உருவாக்கத்திற்கும், மனித மகிழ்வில்லாத சூழலுக்கும் ‘நானா’ அல்லது ‘பிறர்’ காரணமா? ‘நான்’தான் என யாரும் ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக, ‘பிறர்’தான் காரணம் என்று பல்வேறு வாதங்களை முன்னெடுப்பது இயற்கை.

  • ‘என் நண்பர்கள் என்னை ஏமாற்றி னார்கள்’
  • ‘இக்கலாச்சாரத்திற்கு ஈடு கொடுத்து வாழும் அளவிற்குப் பொருளாதாரம்             என்னிடம் இல்லை’ 
  • ‘நான் இருப்பது போல பிறர் என்னை ஏற்றுக்கொள்ளாமல் என்னைத்           தண்டித்தார்கள்’ 
  • ‘என் வேலையில் / படிப்பில் தோல்வி’ 
  • ‘என் எதிர்கால வாழ்வு பற்றிய என் கனவு கருகிவிட்டது’ 
  • ‘என் குடும்ப உறவே எனக்குச் சலித்துப் போயிற்று’ 
  • ‘பல தீமைகளுக்கு என்னைப் பலர் ஈடுபடுத்தினர்’ 
இப்படி பல பல காரணங்கள்.

இயேசுவின் பிறப்பு . . .
பிறந்தது ‘மெசியா’தான் என்று பலரும் புரியாத, ஏற்க முடியாத நிலையில், மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, ஏழை களுக்கு மட்டுமே நற்செய்தியாக இப்பிறப்பு அறிவிக்கப் பட்டது. பிறர் ஏற்றுக் கொண்டால் தான் தன் பிறப்பிற்குப் பொருளுள்ளது என்று நினைக்காத இயேசு, ‘எதற்காக என் பிறப்பு’ என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, தன் பிறப்புக்குப் பொருள் தரும் வாழ்வையே வாழ்ந்தார். அவருடைய சமூகம் அவரை ஏற்கவில்லைதான்... பைத்தியக்காரன், பேய் பிடித்தவன் என்று தன் சொந்தத்தாலேயே பெயரிடப்பட்டவர் தான்... சட்டத்தைப் புறக்கணித்தவன் என்று சொந்த மதத்தால் தீர்ப்பிடப்பட்டவர்தான். ‘சமூகத்தால்’ ‘பிறரால்’  ஏற்கப்படாத நான் வாழ்ந்து என்ன பயன்? யாருக்காக வந்தேனோ அவர்களே எதிராகிப் போயினர். நான் ஏன் பிறந்தேன்? என்றவர் அல்லர் இவர். தம் பிறப்புக்குப் பொருள் தந்தார். இளம் வயதிலேயே பொருள் கொண்டவர். 33 ஆண்டுகளிலேயே பிறப்புக்கு முழுமை தந்தவர் - அதனால் தான் அவரின் பிறப்பு விழாவை 2010லும் உலகம் நினைத்துக் கொண்டாடுகிறது.

‘உன் பிறப்பு கடவுளின் கொடை’ என்றால் பிறப்புக்கு ஒரு பொருள் உண்டு தானே! போராடி உன் பிறப்புக்குப் பொருள் தர மறுத்து பிறரால்தான் என் பிறப்பு பொருளில்லாமல் போனது என நினைப்பவர்கள் இக்கிறிஸ்து பிறப்பு விழாவின் செய்தி ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பிறப்புக்குப் பொருள் தரும்படி வாழ்வை உன் கையில் எடு. சமூகம் தரும் சவாலைச் சந்தித்து பிறருக்கான பொருளுள்ள வாழ்வை முன்னிலைப்படுத்து. ஒருவேளை, உன் வாழ்வில் நல்லது செய்து, அதனால் துன்பம் சந்தித்தால் உன் பிறப்பு முழுமை பெறுகிறது என்பதே நிறைவான பிறப்பு விழா. 
“பிறப்பு தரித்திரமானாலும்
  இறப்பு சரித்திரமாகட்டும்” 
பிறப்பு விழா சிறக்கட்டும்!


சே. சகாய ஜாண்

நம்பிக்கை கொண்டோர்

நான் அறியாப் பருவமாகிய முதலிரு பருவங்களில் பெற்றோர்களின் அடக்குமுறை காரணமாக குழம்பி, மூன்றாம் பருவமாகிய இளமைப் பருவமதில் மனம் போன போக்கில் சென்று மென் மேலும் குழப்பத்திற்கு உள்ளானேன்.  பெற்றோர்களும் என் விருப்பத்திற்கு என்னை விட்டு விட்டார்கள்.  நம்பிக்கையின் வாசல்கள் எல்லாம் எனக்கு மட்டும் திறக்கவே திறக்காது என மனம் நொந்து சோர்ந்து போனேன்.  மேலும் இறைவனிடம் மன்றாடியபோதிலும் என் எண்ண அலைகள் வெகுவாக அலைமோதி விரக்தியின் விளிம்பில், வாழ்க்கையின் ஓரத்திற்கு சென்று, தனிமையில் தவித்து நின்றது.
என் சுவாசம் போல நெருக்கமாய் இருந்த நண்பர்கள் எல்லாம் முகர்ந்து எறிந்துவிட்டனர்.  நம்பிக்கையற்ற நேரங்களில் கூட அவர்கள் என் மதிப்பை தாக்கி தரக்குறைவாக எடை போட்டார்கள்.  தனிமை விசும்பலில் இனி அந்த துரோகிகளின் நிழல் கூட படியவிடமாட்டேன் என்று நினைத்தேன்.  நான் விதைத்த விதைகளை மட்டும் எந்த மண்ணும் இறுக பற்றிக் கொள்ள வில்லையே என ஏங்கினேன்.  கடின பாறையும், கருவேல முட்களும் என்னை சிதைக்க முகவரி அற்றுப் போனேன்.  ஏமாற்றமோ, வலியோ எனக்கு புதிதல்ல.  வெட்ட வெளியின் இருட்டு அமைதியில் அன்புக்காக ஏங்கிய நேரங்கள் உண்டு.  மனதில் ஓங்காரமிடும் நினைவலை களாகிய மிருகத்தை வேட்டையாட இயலாமல் என்னையே காவு கொடுக்க நினைத்த தருணங்களும் உண்டு.  ஆழ்மன எண்ணங்கள் மிதந்து நடுமனதினில் கோரத்தாண்டவம் ஆடியது.
இருப்பினும் என் மீது ரோஜாக்களும் விழுந்தது உணடு.  வாழ்விற்கு இனிமையூட்டும் அந்த இரசத்தை பருக விரும்பினேன்.  என்னை தேடும் இறைவனை தேடலாமா? என்ற பசுமையான கனவுகள் என்னில் மிதக்க ஆரம்பித்தன.  செபத்தில் இணைந்த கரங்கள்  உலகத்தை தாங்கும் கரங்கள் என்று எண்ண தொடர்ந்து செபிக்கும் அளவிற்கு எனக்குள் நம்பிக்கை காற்று வீசச் செய்தது.
இறைவன் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்.  அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நன்மைகளை செய்வார் (உரோ 10:11-12) 
என்ற இறைவார்த்தையை சிந்தித்தேன்.
வாழ்வில் என்ன இருக்கிறது? என்று சலித்துக் கொண்டாலும் புறங்கையால் அந்த எண்ணத்தை தள்ளிவிட்டு என் மனம் சொல்லிற்று அட வாழ்வதற்குத் தான் எவ்வளவோ இருக்கிறது.  எனவே எழுந்து இறைவன் அருளோடு பறக்கும் தட்டினில் விண்வெளியில் பறந்தேன். பல நாள் பயணத்திற்குப் பின் நம்பிக்கை என்ற கோலில் காலூன்றி வாழ்க்கை என்னும் படகை செலுத்தினேன்.


Sr. Theresita FSM

மனிதம் சிறந்தால் மட்டுமே பிறப்பார்

மக்களின்
மேட்டுக்குடித் தனத்தால்
மாட்டுக் கொட்டிலில்
மனிதம் பிறந்தது
மக்களிடமிருந்து
இடம் பெயர்ந்தது . . .
படாபடமும் பகட்டும்
பரமனுக்கும்
பாமரனுக்கும்
பாரமானதும்
தூரமானதும் என்று
வரலாறு படைத்தது . . .
ஆடம்பர ஆரவாரத்தை
அணிந்து கொண்ட
நாகரீக உலகம்
மாட்டுக் கொட்டிலை
மாடி வீட்டுப் பகட்டில்
ஜோடித்து வைத்து
வரலாறு மறக்கிறது . . .
கோவில்களில் . . .
குடும்பங்களில் . . .
இல்லங்களில் . . .
உள்ளங்களில் . . .
ஆடம்பரம் ஒழித்து
எளிமையை நிறைத்தால்
இயேசு பிறப்பார்
வலிமை குன்றியோர் வாழ
வழியைச் செய்து
மனிதம் சிறந்தால் மட்டுமே
மனுமகன் பிறப்பார்

திரு. எஸ். எரோணிமுஸ்,

மனிதம் சிறந்தால் மட்டுமே பிறப்பார்

மக்களின்
மேட்டுக்குடித் தனத்தால்
மாட்டுக் கொட்டிலில்
மனிதம் பிறந்தது
மக்களிடமிருந்து
இடம் பெயர்ந்தது . . .
படாபடமும் பகட்டும்
பரமனுக்கும்
பாமரனுக்கும்
பாரமானதும்
தூரமானதும் என்று
வரலாறு படைத்தது . . .
ஆடம்பர ஆரவாரத்தை
அணிந்து கொண்ட
நாகரீக உலகம்
மாட்டுக் கொட்டிலை
மாடி வீட்டுப் பகட்டில்
ஜோடித்து வைத்து
வரலாறு மறக்கிறது . . .
கோவில்களில் . . .
குடும்பங்களில் . . .
இல்லங்களில் . . .
உள்ளங்களில் . . .
ஆடம்பரம் ஒழித்து
எளிமையை நிறைத்தால்
இயேசு பிறப்பார்
வலிமை குன்றியோர் வாழ
வழியைச் செய்து
மனிதம் சிறந்தால் மட்டுமே
மனுமகன் பிறப்பார்

திரு. எஸ். எரோணிமுஸ்,

அழைத்தது யாரோ?

பெண்ணாய்ப் பிறந்ததால் யாருக்கும் அடிமையில்லை. படித்துப் பட்டம் பெற்று, ஆணுக்கு பெண் நிகர் என்னும் அகந்தையில் இணையாய் சம்பாதித்து, சந்தோ­மாய் வாழ்ந்து, தனக்குள் கடவுள் தந்துள்ள பெண் மையை, தாய்மையை, மென்மையை மதியாமல் வாழ்வதில்தான் எவ்வளவு சவால்! பூரித்துப் போயிருந்தாள் சுப மங்களா. அது அன்னை மரியாளின் பெயர்களுள் ஒன்று என்றுகூட எண்ணாமல் சுபா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு, அழகிய கூந்தலைக் கத்தரித்துக்கொண்டு, ஆணுடைகளை அணிந்துகொண்டு, பேச்சிலும் செயலிலும் ஒருவித கர்வத்தைக் காட்டிக்கொண்டு, தனக்குக் கீழ் வேலைசெய்யும் எத்தனையே பேரை அலட்சியமாய் எண்ணிக்கொண்டு...
உலகமே தன் காலடியில் என்பது போல, எல்லோரும் தனக்குக் கீழ் என்பது போல, கணினியில் மேதையான தன்னிடம் எவருமே நெருங்க முடியாது என்பது போல வாழ்ந்தாள் சுபா. அவள் தட்டிய தட்டுக்கு எல்லாக் கணினிகளும் அடங்கி நடந்தன. அவள் கைப்பட்ட எல்லா நிகழ்வு களும் அவளுக்கு வெற்றியாய் மாறின. பணமும் பகட்டும் அவளைத் தேடி வந்து, அவள் நடவடிக்கையை மிகைப் படுத்தின. அவளுடைய இயல்பை மாற்ற எவராலும் முடியவில்லை. கடவுள் என்பது கூட அவளுக்குக் கட்டுப்படும் கணினி போல ஆயிற்று.
புகழின் உச்சியிருந்தாள் சுபமங்களா. அரசின் பாராட்டுகளும் பரிசுகளும் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்துது வந்து குவிந்த வாழ்த்துகளும் பரிசுகளும் வாய்ப்புகளும் அவளை மேலும் மேலும் கர்வமடைய வைத்தன. அன்றும் அப்படித்தான். வெளிநாட்டிலிருந்து அவளுக்கு ஒரு வாய்ப்பு வந்திருந்தது. வீட்டிற்குத் திரும்பியவள், தன் அறைக்குள் சென்று அமர்ந்து அந்த வேலை வாய்ப்பைப் பற்றிய எல்லா விபரங்களையும் தேடித் தேடிச் சேகரித்தாள். ஒவ்வொன்றையும் தன்னுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த வாய்ப்பை மட்டும் தான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், உலகின் சிறந்த பெண்ணாக விளங்கும் வாய்ப்புக் கிடைக்கும் எனப் பூரித்துப் போனாள். வெகுநேரம் கணினி முன்பு அமர்ந்து விட்டதன் பலனாக கண்களும் மனமும், கணினியை இயக்கிய கரங்களும் ஓய்ந்துவிட கொஞ்சம் மாற்றம் தேவைப் பட்டது சுபமங்களாவுக்கு. வேறு திசை நோக்கிக் கணினியை இயக்கினாள். தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய பகுதி அது.
கணினியைத் தட்டி ஒவ்வொரு படமாகப் பார்த்து வந்தவளை, அசர வைத்தது புன்னகை தழுவிய, சுருக்கம் விழுந்த ஒரு பெண்ணின் ஒளிமுகம். ‘Peace to the World’ என்னும் வசனங்களுடன் அன்னை தெரசாவைப் பற்றிய பகுதி அது. மனதிற்குக் கொஞ்சம் லேசாக இருப்பதைப் போல உணர்ந்தவள், மெல்ல அவர்களின் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
சின்ன வயதிலேயே கடவுள் மேல் கொண்ட பக்தி, பெற்றோர் மேல் கொண்ட மதிப்பு, சேவை செய்யும் மனப்பான்மை, போர்க்களத்தில் இந்திய வீரர்கள் படும் துன்பம் கண்டு அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற மனக்கிளர்ச்சி, அதற்கான முயற்சிகள், போராட்டங்கள், விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இந்தியாவுக்குப் பயணப்படுதல், ஆசிரியராகப் பணி துவக்கம், கல்கத்தா தெருக்களில் வலம் வந்தது, உயிரோடு இருக்கும் மனிதர்களை எலிகளும் புழுக்களும் திண்ணும் கொடூரம், சாலையோரங்களிலும் சாக்கடைகளிலும் கவனிப்பார் இல்லாமல் மனிதர்கள்.
மனம் நொந்த அன்னை தெரசா தன் பணியைத் தொடங்க நடத்திய போராட்டங்கள், மோத்திஜில் என்னும் சேரிப்பகுதியைத் தேர்ந்தெடுத்தது, ஒரு துப்புரவுத் தொழிலாளியாக நீல கரைபோட்ட வெள்ளைச் சேலை உடுத்தி வெளியேறியது, சேவை மனப்பான்மை மிக்கவர்களைச் சேர்த்து, ‘நிர்மல் இருதயம்’ என்னும் அமைப்பை உருவாக்கியது, இறந்து கொண்டிருப்பவர்களை இன்முகத்துடன் உணவிட்டு, மருந்திட்டு, புண்களைத் தானே கழுவி சுத்தம் செய்தது, மருத்துவர்களைக் கொண்டு வைத்தியம் செய்தது, சாகும் வேளையில் நமக்கும் சகமனிதன் உண்டு என்கிற மனநிறைவுடன் அவர்களை நிம்மதிப்படுத்துவது, இது எப்படி சாத்தியம் என வினவுகையில் சேவை செய்யப்படும் ஒவ்வொருவரிலும் இறை இயேசுவைக் காண்பதாகக் கூறியது, எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் மனித சமுதாயத்திற்கு அவசியம் எது என்கிற கேள்விக்கு “ஜெபிக்கும் உதடுகளைவிட உதவும் கரங்களே” எனப் பதிலளித்தது.
ஏதோ பாதிப்புடன் கண்ணீருடனும் வெளிறிய முகத்துடனும் வெளிவந்தவள், பெற்றோரைத் தேடிச்சென்று வீழ்ந்து வணங்கினாள். இறை இயேசு முன் மண்டியிட்டுக் கர்வமெல்லாம் கரையுமட்டும் கண்ணீர் சிந்தினாள். மரியாள் முன் சுபமங்களமாய்த் தன்னை அர்ப்பணித்தாள். ஒரு குரல் அவள் இதயத்திலிருந்து அவளை இறைவன் சேவைக்கு அழைத்ததை உணர்ந்தாள். தன் பெண்மை, மென்மை, தாய்மை உயிர் பெற்றதை உணர்ந்தாள். தான் படைக்கப்பட்டது ஆண்டவன் சேவை செய்ய என உணர்ந்தவள், எளிய உடைக்கும், மென்நடைக்கும், சேவை புரியும் கரங்களுக்கும் தயாரானாள். அழைத்தது யாரோ நீதானா தேவா எனத் தன்னையே ஆண்டவனிடம் அர்ப்பணித்தாள் சுபா என்கிற சுபமங்களா.


சாந்தி ராபர்ட்ஸ், உதகை

பிறந்த நாள் வாழ்த்து

2010-ஆம் பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும்
குழந்தை இயேசுவே, இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்! சீரிளமை குன்றாத உன்
அன்பும் அறிவும் எழிலும் வாழ்க!
உலகமெல்லாம் கொண்டாடப்படும் பிறந்த நாள்
இன, மன, ஜாதி, மொழி, நிற பேதமின்றி
உன் அன்பர்கள் யாவரும் ஒருமனப்பட்டு
மகிழ்ச்சி கொண்டாடும் அந்நாள் ஒரு திருநாள்
கன்னியான அன்னையை, கண்ணியமான தந்தையை,
எளிய இடையரை, சிறந்த அரசர்களை
மரத்தை, குடிலை, ஆடு மாடுகளை, நட்சத்திரத்தை
வேறுபாடில்லாமல் பார்க்குமே உன் பிறந்த நாள்.
தேவதூதர்கள் முன்னுரைத்த உன் பிறப்பு
மாந்தரெல்லாம் கொண்டாடும் உன் பிறப்பு
நீ பிறந்த சந்தோ­த்திலேயே தொடரும்
புதிய வருடத்தின் புத்தாண்டுப் பிறப்பு
மாதத்தில் கடைசி மகா ஆசீரின் ஆரம்பம்
முதல் மாதம் மகிழ்ச்சியின் ஆரம்பம்
உன் அன்பில் ஆசீரில் வாழத் தயார்
உலகத்தார் யாவருக்கும் வாழ்த்துச் சொல்லி!

சாந்தி ராபர்ட்ஸ், உதகை

கிறிஸ்து பிறப்பு விழா

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமிற்கு வந்து, யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக் கிறோம் என்றார்கள். (மத் 2:1-2).
இவ்வுலகைத் தனது பிறப்பாலும் உயிர்ப்பாலும் மீட்டுக்கொண்ட இயேசுவாகிய கடவுளுடைய மகனுக்குப் பிறப்பிடம் மாட்டுத்தொழுவம். மனிதர்கள் இடம் கொடுக்க மறுத்துவிட்டார்கள். மாடாவது இடம் கொடுத்ததே இறைமகன் இயேசுவுக்கு! எனவே விண்ணுலக வேந்தன் மண்ணுலகில் பிறந்தார். தாவீது குலத்தின் தவப்புதல்வன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவாகிய கிறிஸ்துமஸ் விழா எல்லோருக்கும் மகிழ்வூட்டும் பெருநாளாகும். இக் கொண்டாட்டத்தில் பிரிக்க முடியாத அடையாளமாக இருக்கும் நட்சத் திரங்களைத் (ஸ்டார்களை) தொங்க விடுவது விழா கொண்டாட்டத்தின் துவக்கமாக அமைந்துள்ளது. சில இடங்களில் இக்காலத்தில் பிற மத்தினரும் ஸ்டார்களைத் தங்கள் வீடுகளின் முன்பு தொங்கவிடும் பழக்கத்தைக் கொண் டுள்ளார்கள். எனவே கிறிஸ்துமஸுக்கும் நட்சத்திரங்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு.
இன்றோ உலகில் எல்லா மூலை முடுக்குகளிலும் பல நட்சத்திரங்கள் தோன்றியுள்ளார்கள். முக்கியமாக சினிமா நட்சத்திரங்கள், அரசியல் நட்சத்திரங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், கலை நட்சத்திரங்கள் எனப் பல நட்சத்திரங்கள் மின்னுகின்றன. இவர்களின் மாயக் கவர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டு, தொண்டர்களாகவும் ரசிகர்களாகவும் மாறி அவர்கள் பின்னால் சென்று வாழ்க்கையை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நட்சத்திரங்களாக ஜொலித்திட பகட்டான ஆடம்பர வாழ்க்கையில் தங்களையே ஈடுபடுத்தி நிற்கின்றனர். இவர்கள் மத்தியில்தான் கிறிஸ்துமஸ் நட்சத்திரமும் ஜொலிக்கிறது. ஆனால் இவ்விரண்டிற்கும் சில வித்தியாசங்கள் உண்டு.
இவ்வுலக நட்சத்திரங்கள் தங்களையே மையப்படுத்தி மக்களைத் தம்பால் ஈர்ப்பதிலேயே கருத்தாக உள்ளனர். எல்லோரையும்விட உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்; தாங்கள் செய்யும் பணிகள் அனைத்தும் பிறர் கண்டு பாராட்ட வேண்டும் என்பதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் வெறும் விளம்பரச் செயல்களே ஆகும்.
ஆனால் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஞானிகள் குழந்தை இயேசுவிடம் வந்துசேர வழிகாட்டியாக அமைந் திருந்தது. மேலும் மக்களைத் தன்னை நோக்கி ஈர்க்காமல், கடவுளை நோக்கியும், பிறரும் ஆண்டவரிடம சென்றடையவும் வழிகாட்டியாக அமைந்தது என்பதை உணர வேண்டும். எனவே இவ்வுலக வாழ்க்கையில் கவர்ச்சிகளைக் கண்டு மயங்காமலும், தங்களுக்கு நலம் தரும் மக்களுக்கு மட்டும் நன்மைகளைச் செய்யும் மனநிலையை மாற்றி வாழ வேண்டும். அப்பொழுதுதான் நம் நிறுவனங்களிலும், வீதிகளிலும், வீடுகளிலும் தொங்க விடப்படும் நட்சத்திரங்களுக்கு ஓர் அர்த்தம் உண்டு.
சிறப்பாக வார்த்தைப்பாட்டை எடுத்துக்கொண்டு வளமையாக வாழ அருட்பணியாளர்கள், துறவிகள் செய்ய வேண்டிய பணிகள் எல்லாம் வீதியில் விடியலுக்காய்க் காத்திருப்பவர் களுக்காகச் செய்து ஒளிவீசும் நட்சத்திரங்களாக மாற வேண்டும். மேலும் கிறிஸ்துவை அடையாளம் காட்டி அவரை அடைய வழிகாட்டுவதுதான் முக்கியமானது என எண்ணி செயல்பட வேண்டும். வார்த்தைகளால் மட்டும் அல்ல, நமது ஒவ்வொருவரின் எடுத்துக் காட்டான வாழ்க்கையில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களாக மாறுவோமாக!
தீண்டாமை அகற்றிடவே
தீய சக்திகளை அழித்திடவே
அன்பை விதைத்துமே
அறத்தை வளர்த்துமே
உறவை வலுப்படுத்தியுமே
உதவும் கரங்களாகிட
இருண்ட உலகினிலே
இனிதாக உழைத்திடவே
மாந்தரை மாற்றிடவே
மகேசன் பிறந்தாரே!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


சகோ. தெரசிட்டா FSM

கிறிஸ்து பிறப்பு விழா இறை அழைத்தலை ஊக்குவிக்கிறதா?

கிறிஸ்து பிறப்பு விழா ஆண்டு தோறும் கிறிஸ்தவர்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிற மத கடவுளர்களுக்குக்கூட பிறப்பு விழா கொண்டாடப் படுகிறது. கிறிஸ்து பிறப்பு விழாவும், பிற தெய்வ-மனிதர் களின் பிறப்பு விழாவும் ஒன்றா? கிறிஸ்து பிறப்பு விழா தன்னிலே வலுவானது. வரலாற்றோடு தொடர்புடையது. தனித்தன்மை வாய்ந்தது. முன்குறித்து அறிவிக்கப்பட்டது. அனைத்துலக மாமன்னர், ஏழ்மைக்கு வடிவாய் எளிய கோலம் பூண்டு மண்ணுக்கு வந்த மகோன்னத பெருவிழா. மக்கள் மனதில் படிந்துள்ள இருளை நீக்க வல்ல ஒளி விழா.
இதோ! என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார் (மாற் 1:2-3) 
என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார் (மாற் 1:7). 
இறைவனால் அழைக்கப்பெற்ற திருமுழுக்கு யோவான் ஆண்டவரின் வழியை ஆயத்தம் செய்த இறைமுன்னோடி.
குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய் (லூக் 1:76)
வாக்கு மனிதர்ஆனார். நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14).
கடவுளோடு இருந்த ‘வாக்கை’ மனிதராக நம்மிடையே குடிகொள்ள அன்னை மரியாளை இறைவன் தேர்ந்து கொண்டார். “மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ! கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்” (லூக் 1:30-31). அன்னை மரியாள் இறை அழைத்தலின் முதல் முன்னோடி.
ஆண்டவரின் தூதர் இடையர் களுக்குத் தோன்றி,
இதோ! எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் (லூக் 2:10-11). 
இந்த நற்செய்திதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் உலகெங்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நற்செய்தியின் தூதுவர்களாய் நாமெல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். துறவறம், இல்லறம் எதில் இருந்தாலும் ஒவ்வொரு மனிதரும் இறை அழைத்தல் ஊக்குநர்களே!
தேவனின் அழைத்தலைப் புரிந்து கொள்ளுகின்ற விதத்தில் கிறிஸ்து பிறப்பு விழாப் பொருள் உள்ளதாக இருக்க வேண்டும். அப்போது அருள் நம்மை வந்து சேரும். கடவுளுக்கு உரியதைத் தேடாமல், மனிதருக்குரியதைத் தேடுவது கனி இருக்கக் காய் கவர்வது போலாகும். ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை யிலிருந்தே தம் பிள்ளைகளுக்கு நல் ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும். பணத்தை இரண்டாம் பட்சமாக வைத்து ஒழுக்கத்தை முதலில் வைத்தால் நல்மணிகள் வீடெங்கும், நாடெங்கும் தோன்றுவர். இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, இரக்கம், சமாதானம், சமத்துவம், நீதி போன்றவை குழந்தைப் பருவத்திலிருந்தே வாழ்வாக்கப்பட்டால், தேவஅழைத்தல் பெருகும்; வீடும் நாடும் செழிப்புறும்.
கிறிஸ்து பிறப்பு விழா மகிழ்ச்சியின் விழா. நம்மை மீட்பின் கருவிகளாக மாற்றும் விழா. இறை அழைத்தலை உணர்ந்து, புரிந்து செயல்படுத்த அழைக்கும் உன்னத விழா. எல்லா விழாக்களைப் போல் பத்தோடு ஒன்றாக கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடாமல், மீட்பின் நற்செய்திப் பெருவிழாவாகக் கொண்டாட அழைக்கப்பட்டிருக்கிறோம். இதன் மூலம் இறை அழைத்தலின் முக்கியம் உணர்ந்து எதிர்வரும் சந்ததியினரை ஆண்டவருக்குச் சித்தமாய் வளர்ப்போம்! வாழ்வோம்! வளம் பெறுவோம்!!
ச. செல்வராஜ், விழுப்புரம்

அன்பு விதை

விந்தையான விதை ஒன்று
இம்மண்ணில் விழுந்தது - அது
மரியின் மண்ணில் தவழ்ந்தது - அன்பு
விந்தைகள் பல புரிந்தது!

எளிமையான உள்ளத்தை அது
இனாமாகக் கேட்டது - பணம்
இருக்கும் மனிதர்களின் பல்லிளிப்பைப்
பாரபட்சமின்றித் தள்ளி வைத்தது!

கொள்ளை கொள்ளும் புன்சிரிப்பால் - அன்புக்
கொள்கையை எடுத்துச் சொன்னது!
கொண்ட கொள்கைக்குத் தடையானவர்களைக்
கோபமின்றி வெளியே நிற்க வைத்தது!

பொறுமையைக் கடைப்பிடித்து
கடுமையாய் உழைத்து வாழச் சொன்னது!
தடைகள் பல வந்திட்டாலும் - அவைகளைத்
தடங்களாய் மாற்றி உயரச் சொன்னது!

தன்னம்பிக்கையைத் தரணியில் விதைக்க வந்தது
தருமத்தை வளர்த்து அதர்மத்தை அழித்து நின்றது!
ஏழைகளுக்கு மனம் இறங்கச் சொன்னது
பாவிகளை மன்னித்து பரலோகம் காட்டியது!

புரட்சிக் கருத்துக்களை இப்புவியில் தூவ வந்தது
புதுமைகள் பல செய்தே புவியை ஆள வந்தது
அரச பதவிக்கு ஆசை இல்லை எனச் சொன்னது
மனித உள்ளங்களை ஆண்டு புனிதமாய் நின்றது!

மதங்களைவிட மனிதம் மேல் ஆசை கொண்டது
மனித நேயத்தை அறுவடை செய்யவே
மரியின் மடியில் மனிதனாய் வந்துதித்தது!
பெத்தலகேமில் இயேசு என்ற பெயரோடே!

தங்க. ஆரோக்கியதாசன், ஆவடி

தூங்கு பாலா தூங்கு

தூங்கு பாலா தூங்கு - எழில்
தும்பை மலரே தூங்கு
ஏங்கி நீயழும் போது - இந்த
ஏழுல குமே கலங்குதே
ஆடு மாடு அடைக்கும் - தொழுவில்
அன்னை மரியின் மடியில்
மூடத் துணியும் இன்று - குளிரில்
வாடி வதங்கும் நிலையே
வானில் விண்மீன் ஒளிதர - தூதர்
பாவும் இசைத்தார் அர்த்தமாய்
கானில் இடையர் கேட்டு -- பாலனைக்
கண்டு வணங்கிச் சென்றாரே
கீழ்த்திசை மூன்று அரசர் - வானில்
நிகழ்ந்த ஒளியை ஆராய்ந்து
வாழ்த்தி வணங்(கி) தந்தார் - மூன்று
காணிக்கைப் பொருளைப் படைத்தார்
தூபத்தால் இறைவனைக் காட்டினர் -   மிளிரும்
பொன்னால் அரசனை விளக்கினர்
மீரையால் மனிதன் என்பதை - இதை
மேதினி அறியச் செய்தாரே
மனிதர் பாபம் தீர்க்க - இறைவன்
மானிட உருவெடுத்துப் பிறந்தார்
புனிதர் ஆக்க துன்பம் - எல்லாம்
கொண்டு பிறந்தார் கடவுள்
(கவிஞர் பெஸ்கிதாசன்)

இயேசுவில் இணைந்த ஒரு வாழ்வாக

புனித அருளானந்தர் சிறுவயதில் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டார். இறைபக்தியும் இறையருளும் நிறைந்த புனித அருளானந்தரின் (1647 - 1693) தாயார், அவர் சுகமாக வேண்டுமெனப் புனித சவேரியாரிடம் (1506 - 1552) வேண்டுதல் செய்துகொண்டார்கள்.
தவ வாழ்வின் அடையாளமாக புனித அருளானந்தர் அவரின் அரண்மனையிலேயே குருவின் வெண் அங்கியைத் தரித்து வலம் வந்தார். சில மாதங்களிலேயே அவர் முற்றிலும் குணமடைந்தார். ஆனால் புனித சவேரியாரின் வேண்டுதலால் கிடைக்கப்பெற்ற உடல்சுகம் அப்புனிதரின் மீது பற்றும் நேசமும் கொள்ள வைத்தது. புனித சவேரியாருக்கு இருந்த ஆன்ம தாகமும் இவரது உள்ளத்தையும் ஆட்கொண்டது. குருவின் உடையைத் தவத்தின் அடையாளமாக உடுத்தியதால், புனித அருளானந்தருக்கும் இறையழைத்தல் மீது நாட்டம் வர ஆரம்பித்தது.
‘இறைவனின் அதிமிக மகிமைக் காகவே’ என்ற விருதுவாக்கை ஏந்திய சேசு சபையில் தன் 15-ஆம் வயதிலேயே சேர்ந்தார். குருப்பட்டம் பெற்று 1673-இல் இந்தியாவின் தென்பகுதியான மரவ மண்ணில் வேத போதகப் பணி செய்ய விருப்பமுடன் வந்தார். கொடுமையாய் நடத்தப் பட்டபோதும், மிகத் தாழ்மையாய் இறை ஊழியம் செய்தார். 1693-இல் ஓரியூர் மண்ணில் வேதசாட்சியாய் மரித்தார். உலகியல் இன்பம் நிறைந்த அரண்மனை வாழ்வைத் துறந்தார். இயேசுவைப் பின்தொடர சகல வற்றையும் இழந்து இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார்.
வேதாகமத்தில் புனித யாகப்பர் இவ்வாறு எழுதுகிறார் : “உலகத்தோடு நட்பு கொள்வது கடவுளைப் பகைப்பது என அறியீர்களோ? உலகுக்கு நண்பனாக விரும்பும் எவனும் கடவுளுக்குப் பகைவனாகிறான்” (யாக 4:4).
மத்தேயு 9:9-13 என்னும் பகுதியில் நற்செய்தியாளரான புனித மத்தேயு இறை அழைப்பைக் குறித்து மிக அழகாக எழுதுகிறார்.
மத்தேயு சுங்கத் துறையில் ஒரு பெரிய அதிகாரி. சமுதாயத்தின் உயர்ந்த பதவியிலும் இருந்தார். மற்றவர்களால் மிகவும் மதிக்கப்படும் நிலையிலும் இருந்தார். பெரிய பணக்காரராகவும் இருந்தார். ஆண்டவர் இயேசு அவர் சுங்கத்துறையில் அமர்ந்திருந்தபோது அவரை நோக்கி, “என்னைப் பின்செல்” என்கிறார். மத்தேயு உடனே எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார்.
இயேசு அழைப்பின் மகிமையை உணர்ந்த அவர் பெருமகிழ்வு கொண்டு தன் வீட்டில் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்கிறார். அந்த விருந்திற்குத் தனக்குக் கீழ் பணிசெய்யும் கடைநிலை ஊழியர்களையும்கூட அழைத்து சாப்பிடும்படிச் செய்கிறார். ஆயக்காரர், பாவிகள் பரிசேயர்களோடும் இயேசு உணவருந்துகிறார். உன்னத காட்சி அவருடைய வீட்டில் இடம் பெறுகிறது.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை முற்றிலுமாய்ப் பின்பற்றிய மத்தேயு ஒரு பெரிய அப்போஸ்தலர் மட்டுமல்ல, மாறாக, நம் கைகளில் தவழும் நற்செய்தி நூலையும் நமக்காக எழுதியிருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவை மெசியாவாக ஏற்றுக்கொண்ட இவர், தன் இனமாகிய யூத மக்களும் இயேசுவை மீட்பராக ஏற்று விசுவசிக்க வேண்டும் என்பதற்காக உண்மை அப்போஸ்தலராக உழைத்தார். கடைசியில் கல்லால் எறியப்பட்டு வேதசாட்சியாக மரித்தார்.
இயேசுவில் அன்புக்குரியவர்களே, புனித பவுல் குறிப்பிடுவது போல், 
நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவர்களாயின் மேலுலகில் உள்ளவற்றையே நாடுங்கள். அங்கேதான் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கம் இருக்கிறார். இவ்வுலகில் உள்ள வற்றின் மீது மனதைச் செலுத்தாதீர்கள் (கொலோ 3:1-2).
சீட்டா (Zita) என்ற புனிதை திருச்சபைச் சரித்திரத்தில் உண்டு. அவரின் தாயார் அவர் சிறு குழந்தையாய் இருக்கும் போதே ஒவ்வொரு செயலையும் சுத்த கருத்தோடு செய்ய வேண்டுமெனக் கூறி அறிவுறுத்தி வந்தார்கள்.
ஒவ்வொரு செயலும் இறைவனுக்குப் பிரியமான செயலாக இருக்கும் அல்லது இறைவனுக்கு மனம் வருத்தப்படுகிற செயலாக இருக்கும். நீயோ இறைவனுக்கு ஏற்புடையதை மட்டுமே செய் எனக் கூறினார். அவரும் வாழ்ந்து காட்டினார். சீத்தா (Zita)வும் அப்படியே வாழ்ந்து பெரிய புனிதையாக மாறினார்கள்.
நம் வாழ்வும் இறை இயேசுவில் இணைந்த ஒரு வாழ்வாக இருக்கட்டும். ஆமென். 
Fr. ச. ஜெகநாதன், கொடைக்கானல்

தேவ அழைத்தல்

(27.11.2010 அன்று நடைபெற்ற மாநில தேவ அழைத்தல் பணிக்குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு குடும்பத்தலைவரின் கருத்து).
யாரும் எவரும், எப்போதும் எவரையும் உருவாக்க முடியாது/ கூடாது. மாறாக உருவாவதற்கான சூழலைத் தான் ஏற்படுத்த முடியும் / வேண்டும் என்பதே உண்மை. சூழல் தான் ஒருவனை உருவாக்குகிறது என்பதால் இல்லறத்தாரும் (பெற்றோரும்) துறவறத்தாரும் இணைந்து ஏற்படுத்தும் சூழலைப் பொறுத்தே ஒருவன் அல்லது ஒருத்தி இறைவனுக்குரியவனா(ளா)க வளரவும் இறை அழைத்தலைப் பெற்று வாழவும் முடியும்.
அந்த வகையில் குடும்பத் தலைவனாக உள்ள நான் எப்படிப்பட்ட குடும்ப சூழலில் எனது குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை முதலில் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
எனது குடும்பத்தில் மூன்று குழந்தைகள். முதல் பையன் பொறியியல் இரண்டாமாண்டு படிக்கிறான். இரண்டாவது குழந்தை பத்தாம் வகுப்பும், மூன்றாவது குழந்தை 5ம் வகுப்பும் படிக்கின்றனர்.
என்னுடன் பிறந்த சகோதரிகள் இருவருமே இன்று அருட்சகோதரிகள். எனது அப்பாவின் தங்கை ஒரு அருட் சகோதரி, எனது சித்தாப்பாவின் பிள்ளைகள் இருவர் அருட்தந்தையர்கள்.
இப்படியாக இறை அழைத்தலை முழுமையாக அனுபவித்த குடும்பம். நான் இதுவரை எந்தவித போதை வஸ்துக்கும் அடிமை இல்லை. “தண்ணீ” அடித்ததில்லை. என் குழந்தைக்கு ஒரு நல்ல முன்மாதிரியான தகப்பனாக இருக்க முடிந்தவரை முயற்சி செய்பவன்.
எந்த நபருக்குமோ அல்லது பணம், பதவி, பட்டம், பகட்டு போன்ற பொருட்களுக்கோ அடிமையாகி விடாது ஓரளவுக்கு ஆளுமையுடன் வாழ விரும்பு கிறவன்.
நாங்கள் அன்றாடும் ஆலயம் செல்பவர்கள் அல்ல. எனினும் ஆண்டவனை மறந்தவர்கள் அல்ல. குடும்ப செபம் சொல்லாமல் படுக்கைக்குச் செல்வதில்லை.
நல்ல படிப்பு, நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என ஒருவித செக்கு மாட்டு வாழ்க்கையை மட்டும் வாழாமல் சமூக அக்கறையுடன் சமூகத்திற்கு உதவும் வகையில் நிறைவாக வாழ முயற்சிக் கனும்ங்கற கருத்தை என் குழந்தை களுக்கு வலியுறுத்தி வருகிறேன்.
இப்படியாக ஒரு நல்ல கத்தோலிக்க கிறித்தவ குடும்பமாக தன்மானத்துடன் நாளும் பொழுதும் வளர வாழ முயற்சி எடுத்து அதற்குண்டான சூழலில் வளர எனது குழந்தைகளுக்கும் வழிகாட்டி வரும் நான் ஒரு முறை கூட எனது குழந்தைகளிடம் நீ துறவறத்திற்குப் போ என்று சொன்னதில்லை.
ஏனென்றால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு ஒரு நல்ல குடும்பத் தலைவனாக இருப்பதற்கு மட்டுமே வழிகாட்டிடும் நான், என் குழந்தைகளை மட்டும் துறவறத்திற்குப் போ என எப்படிச் சொல்வது?
இருப்பினும் அதைப்பற்றிய ஆலோசனையைக் கொடுக்க முயற்சித்த பொழுது என் குழந்தைகள் என்னை ஒரு விதமாய்ப் பார்க்கின்றனர்.
எத்தனையோ குருக்களை, துறவிகளை நாங்கள் சந்தித்திருந்தும் எங்களுக்கு அப்படியயாரு எண்ணத்தை எவருமே தூண்டலையே என்கின்றனர்.
எனவே நல்ல மனிதர்களாய் வாழ சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என் போன்ற பல குடும்பத் தலைவர்களால் நல்ல குருவாக/துறவியாக மாறிட சூழல் ஏற்படுத்த இயலவில்லை. உங்களால் முடிந்தால் முயற்சியுங்கள் எனத் திறந்த மனதுடன் விண்ணப்பித்து பெற்றோர் களின் பணியாக நாங்கள் இன்னும் செய்ய வேண்டிய பொறுப்புகளையும் பட்டியல் இடுகிறேன்.

  1. இறைவனின் அன்பை எங்களது செயல்பாட்டின் மூலம் எங்களது குழந்தைகள் உணரும் வகையில் இன்னும் நல்ல முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும்.
  2. எனது வாழ்வு, எனது குழந்தைகள், எனது குடும்பம் என்கிற அளவில் மட்டும் இந்த ‘முன்மாதிரிகள்’ முடங்கிப் போகாது, முறிந்த குடும்பங் களும் (Broken Families) பிறிந்த உறவுகளுமாய் போதை வஸ்துகளில் மூழ்கி; சினிமா, டி.வி. காட்சிகளில் அமுங்கி; பணம், பகட்டே வாழ்க்கையயன அடிமைப்பட்டுக் கிடக்கும் அடுத்தடுத்த குடும்பங்களுக்குகுள்ளும் ஊடுருவிச் சென்று குணப்படுத்திட வேண்டும். 
  3. குடும்பத்தில் தேவ அழைத்தலுக்காக அதிகமாய் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.
  4. நல்ல மனிதர்களை குறிப்பாக நல்ல குருக்களை / துறவிகளை அடையாளம் காட்டி அவர்களுடன் பழகி அனுபவம் பெற்றிட எம் குழந்தைகளுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வழிகாட்டிட வேண்டும்.
  5. நல்ல ம(பு)னிதர்களாய் வாழ்ந்து காண்பித்தவர்களின் வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லிக் கொடுத்தோ அல்லது வாசிக்கத் தூண்டியோ எம் குழந்தைகளைத் பக்குவப்படுத்த வேண்டும்.
  6. நம் சமூகத்தில் வாழ வழியற்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலையை எம் குழந்தைகள் கிராமம் மற்றும் சேரிகளில் களப்பணி, ஆய்வு போன்றவைகள் மூலம் உணர்ந்து புரிந்திட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் உன்னால் ஆன பங்கு என்ன? என அவர்களைச் சிந்தித்துச் செயல்பட்டிடத் தூண்டிட வேண்டும். 
  7. வெறும் தேவ அழைத்தல் முகாம்கள் மட்டுமல்ல; மாறாக நல்ல மனிதனாய் நல்ல கத்தோலிக்கனாய் வாழத் தூண்டும் - வாழ்வின் நோக்கங் களைப் பெற்றிடத் தூண்டும் முகாம்களில், கருத்தரங்குகளில், நிகழ்வுகளில் ஆர்வமாய் பங்கெடுக்க குழந்தைகளுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  8. துறவற அல்லது குருத்துவ இல்லங்களில் ஓரிரு வார அல்லது மாத கால அளவிற்கு தங்கி குழந்தைகள் அங்குள்ளவர்களின் வாழ்க்கை நிலையை உணர, அனுபவம் பெற (Exposure) வாய்ப்புகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இப்படியாக செய்யும் பட்சத்தில் குடும்பங்களில் தேவ அழைத்தல் பெருகும். எதிர்காலத்தில் நல்ல குருக்கள், துறவிகள் மட்டுமல்ல நல்ல மனிதர்கள் உருவாகி மனிதம் தழைக்கும்.
குருக்கள் / துறவிகளின் பங்கு என்ன? (அடுத்த இதழில் தொடரும்)

எஸ். எரோணிமுஸ்,  
“ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி 

December 24

திருவருகைக் காலம் வந்து விட்டாலே நமது கோவில்களில் குழந்தை இயேசுவின் வரலாற்றுப் பிறப்பினைக் கொண்டாடத் தயாராகிவிடுகிறோம். கிறித்து பிறப்பு விழா என்றாலே பலருக்கும் பலவிதமான கனவுகள், தயாரிப்பு வேலைகள் என நமது மூளையில் சிந்தனைகள் சிறகடித்துவிடும். இந்த ஆண்டு கிறித்து பிறப்பு விழாவினை எப்படி கொண்டாடுவது என்றும், குடிலை எப்படி அலங்காரம் செய்வது என்றும், புத்தாடைகள் எந்தக் கடையில் எந்த விலையில் எடுப்பது என்றும், இனிப்புகள் எப்படி செய்வ தென்றும், வாழ்த்துக்களை எப்படிப் பரிமாறிக்கொள்வதென்றும் (வாழ்த்து அட்டைகள், கைபேசி குறுந்தகவல் உள்பட) சிந்தனைகள் நமது மூளைகளைத் துளைக்கத் தொடங்கிடும். இந்தச் சிந்தனை களெல்லாம் தேர்வு எழுதும் நமது சிறார்களுக்குச் சற்று தாமதமாகத்தான் தோன்றும் என்பதும் தவிர்க்க இயலாதது.
கிறித்து பிறப்பு விழா என்பது நமக் கெல்லாம் அவ்வளவுதானா? வேறு என்னவெல்லாம் இருக்க முடியும்? கிறித்து பிறப்பு விழாவை ஒட்டி புதிதாக ஒலிநாடாக் களைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றில் இருந்து புதிய புதிய பாடக்கூடிய பாடல் களைத் தெரிவு செய்து, பயிற்சி செய்து பாடுவது, பெரிய பெரிய விண்மீன்கள் தொங்கவிடுவது, தாத்தா வேடம் அணிவது, கிறித்து பிறப்பு மரம் அமைப்பது, கிறித்து பிறப்பு மலர் வளையம் (நான்கு நிற வண்ணம் கொண்ட மெழுகுதிரிகள் கொண்ட மலர் வளையம், கிறித்துமஸ் ரீத் என்ற அழைக்கப்படும்) அமைப்பது, திருப்பலியில் பங்கெடுத்து குழந்தை இயேசுவை வணங்கிவிட்டு வருவது எனக் கிறித்து பிறப்பு விழா என்பது இவைகள் மட்டும்தானா? இல்லை, இன்னும் பல உண்டா...?
நல்லதும் தீயதும்
இதில் சில நல்ல உள்ளங்கள் கிறித்து பிறப்பு விழாவினை அர்த்தம் உள்ள வகையில் கொண்டாடுகின்றனர். கிறித்து பிறப்பு விழா கொண்டாட்டத்தில் வழிபாடுகளை அர்த்தம் உள்ள வகையில் அமைக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப கண்டுணர்ந்து கிறித்து பிறப்புக் குடில்களைப் பயனுற அமைக்கிறார்கள். கிறித்து பிறப்பு நாட்களில் வீதிகளில் வாடிடும் ஏழைகளுக்கு, பெற்றோரை இழந்த சிறார்களுக்கு உணவு, உடை போன்றவைகள் கொடுத்து கிறித்து பிறப்பு விழாவினைச் சிறப்பான முறையில் கொண்டாடுகிறார்கள். இவையயல்லாம் பாராட்டக்கூடிய நல்ல செயல்கள். மனதார பாராட்டுவோம்.
ஆனால், சில கிறித்தவர்கள் வெறுமனே வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளுதல், வண்ண விளக்குகள் ஒளிர்வித்தல், விலை உயர்ந்த ஆடைகள் அணிந்து கொள்ளுதல், இயற்கை வாழ்வுக்கு எதிரான பொருள்கள் பயன்படுத்தி குடில்கள் அமைத்தல், இரவு முழுதும் கண்விழித்து கேளிக்கை நடவடிக்கை களில் ஈடுபடுதல் போன்ற அர்த்தமில்லா தவிர்க்கக்கூடிய செயல்களில் ஈடுபடு கின்றனர். இப்படிப்பட்டவர்கள் கிறித்து பிறப்பு விழாவினைக் கொண்டாடுவது பலருக்கு மன வருத்தத்தைத் தருகிறது. எனினும், இவை மட்டும்தான் கிறித்து பிறப்பு விழா கொண்டாட்டங்களா? இல்லை, வேறு ஏதாவது உண்டா? தேடலில் தெளிவு பிறக்கட்டும் எனத் தொடர்ந்து தேடுகின்றபோது இதுபோன்ற வெள்ளி முளைக்கக் கண்டேன்.
மகிழ்வும் வலியும்
காத்திருந்த கண்களுக்குத்தானே களிப்பு உண்டாகும்
எதிர்பார்த்த மனதுக்குத்தானே அகமகிழ்வு உண்டாகும்
ஏங்கித் தவித்த மனிதருக்குத்தானே நற்செய்தி புரியும்
2010 ஆண்டுகளுக்கு முன்பு மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்த வர்களுக்கு அவரின் வருகை பெரு மகிழ்வைக் கொடுத்தது. சாமானியர்கள் காத்திருந்தார்கள், கண்டுகொண்டார்கள்; பெருமகிழ்வு அடைந்தார்கள். ஆனால், மெசியாவின் வருகையைச் சற்று உற்றுக் கவனிக்கின்ற போது, அவரின் வருகை இருவிதமான அதிர்வை ஏற்படுத்தி யிருப்பதை நாம் கண்டுகொள்ள முடியும்.
1. இடையர் போன்ற சாமானியர் களுக்கு இதமான, மகிழ்ச்சியான அதிர்வைத் தந்தது.
2.ஏரோது போன்ற வலியோருக்கு எதிர்ப்பிற்கான அதிர்வைத் தந்தது.
இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும், எதிர்க்கப்படும் அடையாள மாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும்... (லூக் 2:34-35)
 இவ்வாறு சிமியோன் சொன்னதும் இந்த இரண்டு விதமான அதிர்வினைப் பற்றிக் குறிப்பதாக இருக்கிறது. இந்த இருவிதமான அதிர்வினையும் மனுஉருவாதலின் விளைவாக நான் பார்க்கிறேன்.
பிறப்பின் பயன்
கடவுள் மனிதராகப் பிறத்தல் என்பது (கடவுள் வடிவில் விளங்கிய அவர்... பிலிப்பியர் 2:6-8) பிலிப்பியருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்ட தாழ்ச்சியோடு மட்டுமல்லாது, பிறப்பின் பயனையும் பற்றி நமக்கு உணர்த்தக் கூடிய ஒன்றாகும். பிறப்பு என்பது வாழ்வின் தொடக்கம். வாழும் வாழ்க்கையில்தான் அந்தப் பிறப்பின் பயன் வெளிப்படும். இயேசுவின் பிறப்பின் போது இருந்த அந்த இருவிதமான அதிர்வு அவருடைய வாழ்விலும் தொடர்ந்தது. இயேசுவினுடைய இறையாட்சிக் கனவு, அப்பா அனுபவம் இவை இரண்டுமே அவருடைய இறப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தன. இயேசுவின் பிறப்பு போலவே அவருடைய இறப்பிலும் இரண்டு விதமான அதிர்வு இருந்தது. ஆனால் அந்த அதிர்வு அவருடைய பிறப்பு போல் அல்லாமல் தலைகீழாக இருந்தது.

  1. இயேசுவின் இறப்பு இறையாட்சியின் சொந்தங்களுக்கு வலியைத் தந்தது.
  2. இயேசுவின் இறப்பு சீசர் போன்ற வலியோ ருக்கு இதமான மகிழ்ச்சியைத் தந்தது.

தலைகீழாக இருந்த இந்த அதிர்வு நீண்ட காலம் நீடிக்கவில்லை. இயேசுவின் உயிர்ப்பு மற்றும் தூய ஆவியின் வருகைக்குப் பிறகு கிறித்துவைப் பின்பற்றிய ஒவ்வொருவரிடமும் பரவியது. கிறித்துவைப் பின்பற்றிய யாவரும் கிறித்துவுக்குள் புதுப்பிறப்பு அடைந் தார்கள். சமுதாயத்தில் வலியோராய் இருந்தவருக் கெல்லாம் இறையாட்சியின் சொந்தங்கள் எதிர்ப்பின் அதிர்வலை களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருந்தன. அதே வேளையில் இறையாட்சியின் சொந்தங்கள் நாளுக்கு நாள் இன்ப அதிர்வால் பெருகிக் கொண்டே இருந்தன என்பது அன்றைய எதார்த்தம். கிறித்தவம் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பது வரலாறு. மனிதராகப் பிறந்த இறைமகனுடைய பிறப்பிலும் இறப்பிலும் இருந்த அதிர்வு அதன் பின் இயேசுவின் உண்மைச் சீடர்களை அது தொற்றிக்கொண்டு விரவிக் கிடக்கிறது என்பதும் சாட்சிய வாழ்வுக்கு அவர்களை இட்டுச்சென்றது என்பதும் நம்மை இன்று வலுவாகச் சிந்தனை செய்யத் தூண்டுகிறது.
நமது பிறப்பு?
இறைவனின் சாயலைத் தாங்கி இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பிலும் இப்படிப்பட்ட இரு வேறுபட்ட அதிர்வுகள் இருக்கின்றனவா? அந்த அதிர்வுகள் இன்றும் வலுவடைந்து கொண்டே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சாதி, மத, இன வேறுபாடுகளுக்கு என்ன பதிலிருப்பு செய்கின்றன? பிறப்பின் பயனை உணராத பிறப்பு விழாக்கள் தேவை தானா? இந்தக் கேள்விகளுக்குப் பாரதிதாசனின் வரிகள் ஒருவிதமான பதிலைத் தருகின்றன. பிறந்த நாள் ஒன்றில் நண்பன் ஒருவன் தன்னுடைய நண்பனுக்குப் பரிசாகத் தந்த கவிதை வரிகள்தான் இவை. பிறப்பின் காரணத்தைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டு கின்றன இந்த வரிகள்...
எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்
மக்கள் தனை ஈந்த தமிழ்நாட்டிற்கும்
என்னால் தினையளவு நலம் பயக்குமெனில்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்.
இந்த வரிகள் இறைமகன் இயேசுவின் வாழ்வில் உண்மையானது. இந்த ஆண்டு கிறித்து பிறப்பு விழாவின் தயாரிப்பு நாட்களில் கடைசி நாளான டிசம்பர் 24 நமது பிறப்பின் காரணத்தை அறியும் நாளாக அமைத்துக்கொண்டு, சிந்தித்து அதிர்வுகளைத் தெளிவாய் வெளிப்படுத்த யாவரையும் வாழ்த்துகிறேன்.
பணி. தசி. லியோ ஜான்சன், பழையகோவில், திருச்சி

அர்ப்பணிக்க உன்னத ஓர் இலட்சியக் கனவு உண்டே!

உலகமய இவ்வுலகில்
என்னவாக என் குழந்தை
உருவாக வேண்டுமென
என் கனவு?

எத்தகைய மனிதனாய் மனு´யாய்
ஆளாக்கி உலகில் உலவவிட
வேண்டுமென
என் கனவு?

ஆளும் அமைச்சரா?
ஆசானா? ஆட்சித் தலை(வி)வனா?
இராணுவத் தளபதியா?
ஊர்தி ஓட்டியா?
இசை ஞானியா?
கட்டடக் கலைஞரா?
ஒலிம்பிக் வீரனா? வீராங்கனையா?
காவல் அதிகாரியா?
சட்ட வல்லுநரா?
ஆடை அணி வடிவமைப்பாளரா?
தேசத் தலைவ(னா)வியா?
அறிவியல் புலியா?
சமூகத் தொண்டரா?
அறிவாற்றல் மருத்துவரா?
இவற்றைப் போல்
இன்னும் வேறு இனிதான
உயர்வான கனவு உண்டு
இறைபணிக்கே
என் குழந்தை
அர்ப்பணிக்கும்
கனவு
உண்டே!
முனைவர் அ. அந்தோணி குருசு

குழந்தை யேசுவின் கனவு

செல்லும் இடங்களில்
எடுத்துச் செல்லுங்கள்
உடன் உங்கள் மழலையை!

உங்கள் சூழலுக்கேற்பவே
தகஅமைத்துக்கொள்கிறது
உங்கள் குழந்தை!

உங்கள் உடன்செல்லும் இடமெல்லாம்
புதிய இடங்கள்! புதிய மனிதர்கள்!
புதிய ஓசைகள்! புதிய இரைச்சல்கள்!
புதிய நறுமணங்கள்!
அனைத்தும் ஆர்வமாக்கிட அனுமதியுங்கள்!

உங்கள் உடன்வரும் குழந்தை
உந்துதல் தரும் உடன்நிகழ்வில் எல்லாம்
பார்க்கிறது! கேட்கிறது! சிரிக்கிறது!
வியக்கிறது! மகிழ்கிறது! அழுகிறது!

உங்கள் குழந்தை உறங்குவது
தொட்டிலோ! கட்டிலோ! இவற்றைவிட
சுகமான அம்மாவின் நெஞ்சணைப்பில்
கதகதக்கும் மடியிலோ!

என்ன வேண்டும் உங்கள் குழந்தைக்கு?
1000 ரூபாய்களின் டிஜிட்டல் விளையாட்டுக்
கருவிகளா? அதைவிட, அதைவிட -
அன்பு, நட்பு, அறிவு, நிறைவு, பாதுகாப்பு,
தன்னம்பிக்கை, தோழமை...
மிரள்கிறதே உங்கள் மழலை! ஏன்?
உங்களைச் சுற்றி

முட்டாள் பெட்டி (டிவி) முழக்கம்!
அலைபேசி அழைப்பு!!
தொலைபேசி இழுப்பு!
வலைபேசிக் கணினியின்
ஓயாத ஓட்டம்!!!

முனைவர் அ. அந்தோணி குருசு

புனித செசிலி

இப்புனிதையின் பெயராலே உரோமையில் 5ஆவது நூற்றாண்டில் ஒரு பேராலயம் எழுப்பப்பட்டது. “புனித செசிலியாவின் திருப்பாடுகள்” என்னும் நூலின் காரணமாக இவரது பேரும் புகழும் நாற்றிசையிலும் விரைவில் பரவத் தொடங்கியது 1500ஆம் ஆண்டு இவரது கல்லறை திறக்கப்பட்டது. அஃது அழியாத நிலையில் இருந்த மாத்திர மின்றி, அப்போதுதான் உயிர் பிரிந்த உடல் போலவும் இருந்தது.
இந்த மகிமையான கன்னிப் பெண் எப்பொழுதும் கிறிஸ்துவின் நற்செய்தி நூலை எங்கும் எடுத்துச் செல்வாள். எப்போதும் கைகளை விரித்து ஜெபம் செய்வாள். உடை இவளது உடலை மூடியிருக்கும். ஆனால் உடைக்குக் கீழே முள் ஒட்டியானத்தால் தன் புலன்களை அடக்கி, இறைவனிடம் கண்ணீர் விட்டு மன்றாடுவாள்.
வாழ்நாளெல்லாம் கன்னிமையில் வாழ்வதற்கு வார்த்தைப்பாடு கொடுத் திருந்தாள். இவளை விரும்பிய வலேரியன் என்ற வாலிபன் இவளை மணந்து கொண்டார். ஆனால் கன்னி செசிலியா தனது ஒரே மணவாளனாம் ஆண்டவருக்கு பண் இசைத்தாள். “வலேரியன்! நான் ஒர் இரகசியம் சொல்கிறேன் கேளுங்கள். கடவுளின் தூதர் என்னை அன்பு செய்கிறார். அவரே எனது உடலைத் துணிச்சலுடன் காத்துக் கொள்கிறார்” என்றாள். “அத்தகைய தூதரை நான் காண முடியுமானால் நானும் உன் வேதத்தில் சேர்ந்து கொள்கிறேன்” என்று வலேரியன் கூற “ஞானஸ் நானம் இன்றி அவரைப் பார்க்க வொண்ணாது” என்றாள். வலேரியன் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள உடன்பட்டார்.
அந்நாட்களில் திருத்தந்தை உர்பன்னிடம் வலேரியனைச் செசிலி யம்மாள் அனுப்பினார். பின்னர் திருத்தந்தை வலேரியனுக்கு ஞானஸ்நானம் அளித்தார்.  செசிலி தனது அறையில் ஜெபத்தில் அழ்ந்திருப் பதையும் அருகில் தேவ தூதர் நிற்பதையும் கண்டு திகிலுற்றார். பிறகு, அவருடைய தம்பி திபூர்சியுசும் மனந்திரும்பினர். அல்மாக்கியஸ் என்ற ஆளுநர் இதைக் கேள்வியுற்றதும் இவர்களைச் சிறைப் படுத்தக் கட்டளையிட்டான். வலேரியனையும் திபூர்சியுஸையும் கொல்லச் சொன்னான்.
பின்னர் செசிலி ஆளுநரிடம் அழைத்து வரப்பட்டபோது, “இயேசுவின் புனித நாமத்தை அறிக்கையிடுவேம். அவரை மறுதளிக்கமாட்டோம்” என்றாள். அவள் சித்திரவதை செய்யப்பட்டாள். உயிர் பிரியவில்லை. கொலையாளி மும்முறை இவள் கழுத்தை வெட்டி இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தான். இக்கொடூரமான நிலையிலும் மூன்று நாட்கள் உயிர் ஊசலாடியது. தனது இல்லம் எப்போதும் ஓர் ஆலயமாக அமையட்டும் என்று தனது இறுதி விருப்பத்தைத் தெரிவித்தாள். இதுவும் நிறைவேறியது. தனது தூய ஆன்மாவை இறைவனிடம் கையளித்தாள். 

அனனை மரியா

பூலோகத்தில் பெற்ற தாயைப் போற்றாத ஜீவன் இல்லை.  தாயை மதிப்பதாலேயே தாய் நாடு என்றும் தாய் வீடு என்றும் சொல்கிறோம்.  தாயிற்சிறந்த தொரு கோயில் இல்லை என்றும் அன்னை ஓர் ஆலயம் என்றும் பெருமை பாராட்டித் தாயைத் பூலோகத்தில் பெற்ற தாயைப் போற்றாத ஜீவன் இல்லை.  தாயை மதிப்பதாலேயே தாய் நாடு என்றும் தாய் வீடு என்றும் சொல்கிறோம்.  தாயிற்சிறந்ததொரு கோயில் இல்லை என்றும் அன்னை ஓர் ஆலயம் என்றும் பெருமை பாராட்டித் தாயைத்தெய்வமாய் மதிக்கிறோம்.  இந்த தாய்களுக்கெல்லாம் தாயாக விளங்குபவர் அன்னை மரியாள்.  மண்ணகத் தாய் இம்மண்ணகத்தில் மட்டும்தான் தாய்.  ஆனால், தாய் மரியாளோ மண்ணகத்திற்கும் விண்ணகத்திற்கும் தாய்.  அவர் என்றும் வாழும் தாய்!
அன்னை மரியாள் இறைவன் தேர்ந்து கொண்ட ஆலயம்.  இறை இயேசு உறைந்த ஆலயம்.  மாசுமருவற்ற பரிசுத்த ஆலயம்.  “இதோ ஆண்டவரின் அடிமை” என்று தன்னைத்தாழ்த்தி“பேருடையாள்” என உலகம் போற்றுமே என ஆண்டவர்க்குப் புகழ்க் கீதம் பாடியவர்.  “அருள்நிறை பெற்றவர்” எனப் பாராட்டப்பெற்றவர்.  “ஒரு வாள் ஊடுருவும்” என்று முன்னுரைத்து வியாகுலங்கள் பல தாங்கிய வியாகுலத் தாய்.  தம் இறை மகனாம் இயேசுவின் வாழ்க்கையை ஜெபமாலையாக்கி தியானிக்கச் செய்த ஜெபமாலை மாதா.  பாவச் சேற்றில் விழும் மாந்தர் பரமனிடம் சென்று யாசிக்கப் பயப்படும்போது வலிமையுள்ள மிகச் சிறந்த பரிந்துரையாளர்தான் நம் தாய் மரி.
“உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்” என்று ஆண்டவரால் முன் குறிக்கப்பட்டவர்.  சிலுவை அடியில் நின்ற புனித அருளப்பரிடம் “இதோ உன் தாய்!” என்று இறை இயேசுவால் அடையாளம் காட்டப்பட்டவர்.  பிற சபை கிறித்தவ சகோதரர்கள் திருவிவிலியத்தை வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொண்டு அன்னையை மறுதலித்துக் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.  ஆண்டவர் இயேசு “தன் பெற்றோரைவிட ஏன் தன் உயிரைவிட மேலாகத் தன்னைக் கருதுபவன்தான் தன் சீடனாக இருக்க முடியும்” என்று அர்ப்பணத்தின் மேன்மையை உணர்த்துவதால் அன்னை மரியாளை ஒதுக்கிவிட்டதாகச் சொல்ல முடியாது.  இறைவார்த்தைக்கு அதிகமுக்கியத்துவம் தந்ததால் தன் தாயைத் தள்ளிவிட வில்லை.  நம்மையே “சகோதரர்”, “நண்பர்” என்று சொல்லும் போது, அவருடைய சகோதர, சகோதரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் அன்னை மரியாளின் பிள்ளைகள் அல்ல.
மேலும், அப்பாவை வணங்குகின்றவர்கள்; அம்மாவை வணங்குகின்ற வர்கள்; அம்மை அப்பனை வணங்குகின்றவர்கள் என்ற பாகுபாடு நாமாக ஏற்படுத்திக் கொண்டது.  “வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது.  பெண் ஒருவர் காணப்பட்டார்.  அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்.  நிலா அவருடைய காலடியில் இருந்தது.  அவர் பன்னிரு விண்மீன்களைத் தலை மீது சூடி இருந்தார்” திவெ 12:1.  இங்கே கதிரவன் இறைவனையும், நிலா அலகையையும், பன்னிரு விண்மீன்கள் பன்னிரண்டு கோத்திரங்களையும் குறிக்கிறது.  உலகெங்கும் பயன்படும் ஆங்கில நாட்காட்டி சூரியனை மையமாக வைத்தும் பிற நாட்காட்டிகள் சந்திரனை மையமாக வைத்தும் தயாரிக்கப்படுகின்றன.  ஆய்ந்து நோக்கினால் பல உண்மைகள் புரியும்.
இன்று பெண் விடுதலை தேடும் பெண் சமூகம் அன்னை மரியாளைப் போன்று தாழ்ச்சியான உள்ளத்தோடு அர்ப்பண உணர்வோடு தூய ஆவியால் நிரப்பப்பட்டவர்களாய் அலகையை மிதித்து நடமாடும் ஆலயங்களாக மாற வேண்டும்.  அன்னை மரியாளைப் போற்றும் ஆண் சமூகம் உண்மையிலேயே பெண் சமூகத்தை மதிக்க வேண்டும்.  அப்பொழுது பெண்ணடிமைத் தனம் நீங்கி ஆணும் பெண்ணும் சமநீதியோடு சமூகக் காவலர்களாய் வலம்வர முடியும்.  ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை செலுத்தி அன்னை மரியாளை வணங்குவோம்.  தூய ஆவியால் நிரப்பப்பட ஜெபிப்போம்.  நிறை உண்மையை நோக்கிப் பயணம் செய்வோம்.  தய்வமாய் மதிக்கிறோம்.  இந்த தாய்களுக்கெல்லாம் தாயாக விளங்கு பவர் அன்னை மரியாள்.  மண்ணகத்தாய் இம்மண்ணகத்தில் மட்டும்தான் தாய்.  ஆனால், தாய் மரியாளோ மண்ணகத்திற்கும் விண்ணகத்திற்கும் தாய்.  அவர் என்றும் வாழும் தாய்!
அன்னை மரியாள் இறைவன் தேர்ந்து கொண்ட ஆலயம்.  இறை இயேசு உறைந்த ஆலயம்.  மாசுமருவற்ற பரிசுத்த ஆலயம்.  “இதோ ஆண்டவரின் அடிமை” என்று தன்னைத் தாழ்த்தி “பேருடையாள்” என உலகம் போற்றுமே என ஆண்டவர்க்குப் புகழ்க் கீதம் பாடியவர்.  “அருள் நிறை பெற்றவர்” எனப் பாராட்டப் பெற்றவர்.  “ஒரு வாள் ஊடுருவும்” என்று முன்னுரைத்து வியாகுலங்கள் பல தாங்கிய வியாகுலத் தாய்.  தம் இறை மகனாம் இயேசுவின் வாழ்க்கையை ஜெபமாலையாக்கி தியானிக்கச் செய்த ஜெபமாலை மாதா.  பாவச்சேற்றில் விழும் மாந்தர் பரமனிடம் சென்று யாசிக்கப் பயப்படும்போது வலிமையுள்ள மிகச் சிறந்த பரிந்துரையாளர்தான் நம் தாய் மரி.
“உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்” என்று ஆண்டவரால் முன் குறிக்கப்பட்டவர்.  சிலுவை அடியில் நின்ற புனித அருளப்பரிடம் “இதோ உன் தாய்!” என்று இறை இயேசுவால் அடையாளம் காட்டப்பட்டவர்.  பிற சபை கிறித்தவ சகோதரர்கள் திருவிவிலியத்தை வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொண்டு அன்னையை மறுதலித்துக் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.  ஆண்டவர் இயேசு “தன் பெற்றோரைவிட ஏன் தன் உயிரைவிட மேலாகத் தன்னைக் கருதுபவன்தான் தன் சீடனாக இருக்க முடியும்” என்று அர்ப்பணத்தின் மேன்மையை உணர்த்துவதால் அன்னை மரியாளை ஒதுக்கிவிட்டதாகச் சொல்ல முடியாது.  “இறைவார்த்தை”க்கு அதி முக்கியத்துவம் தந்ததால் தன் தாயைத் தள்ளிவிட வில்லை.  நம்மையே “சகோதரர்”, “நண்பர்” என்று சொல்லும் போது, அவருடைய சகோதர, சகோதரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் அன்னை மரியாளின் பிள்ளைகள் அல்ல.
மேலும், அப்பாவை வணங்குகின்றவர்கள்; அம்மாவை வணங்குகின்ற வர்கள்; அம்மை அப்பனை வணங்குகின்றவர்கள் என்ற பாகுபாடு நாமாக ஏற்படுத்திக் கொண்டது.  “வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது.  பெண் ஒருவர் காணப்பட்டார்.  அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்.  நிலா அவருடைய காலடியில் இருந்தது.  அவர் பன்னிரு விண்மீன்களைத் தலை மீது சூடி இருந்தார்” திவெ 12:1.  இங்கே கதிரவன் இறைவனையும், நிலா அலகை யையும், பன்னிரு விண்மீன்கள் பன்னிரண்டு கோத்திரங்களையும் குறிக்கிறது.  உலகெங்கும் பயன்படும் ஆங்கில நாட்காட்டி சூரியனை மையமாக வைத்தும் பிற நாட்காட்டிகள் சந்திரனை மையமாக வைத்தும் தயாரிக்கப்படுகின்றன.  ஆய்ந்து நோக்கினால் பல உண்மைகள் புரியும்.
இன்று பெண் விடுதலை தேடும் பெண் சமூகம் அன்னை மரியாளைப் போன்று தாழ்ச்சியான உள்ளத்தோடு அர்ப்பண உணர்வோடு தூய ஆவியால் நிரப்பப்பட்டவர்களாய் அலகையை மிதித்து நடமாடும் ஆலயங்களாக மாற வேண்டும்.  அன்னை மரியாளைப் போற்றும் ஆண் சமூகம் உண்மையிலேயே பெண் சமூகத்தை மதிக்க வேண்டும்.  அப்பொழுது பெண்ணடிமைத் தனம் நீங்கி ஆணும் பெண்ணும் சம நீதியோடு சமூகக் காவலர் களாய் வலம்வர முடியும்.  ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை செலுத்தி அன்னை மரியாளை வணங்குவோம்.  தூய ஆவியால் நிரப்பப்பட ஜெபிப்போம்.  நிறை உண்மையை நோக்கிப் பயணம் செய்வோம்.
ச. செல்வராசு
விழுப்புரம்

பீடச்சிறுவர்கள்

  1. ஆண்டவரின் பணிக்கென அழைக்கப்பட்ட சின்னஞ்சிறு அப்போஸ்தலர்கள் இவர்கள்.  நினைவு தெரியும் வயதில் ஆண்டவனின் ஊழியம் செய்ய அழைக்கப்பட்ட சீடர்கள்.
  2. அங்கி அணிந்து கொண்டு ஆண்டவனுக்குப் பணி செய்யும் ஜெப ஊழியக்காரர்கள்.  ஆண்டவன் பணிக்கென அழைக்கப்பட்ட ஆலய தீபங்கள், பீடப் புஷ்பங்கள்.
  3. வளரும் வயதில் குறும்புகளை எல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டு, பெரிய மனிதர்களாய் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் குட்டி மனிதர்கள்.
  4. பீடச்சிறுவராய் இருப்பதும் முற்பிறப்பின் புண்ணியப் பலனே ஆகும்.  காரணம் ஆயிரம் சிறுவருள் வாய்ப்பு கிடைப்பது ஒரு சில புண்ணியவான்களுக்கே.
  5. பெற்றோர் செய்த புண்ணியமோ உற்றார் உறவினரின் நற்செயலோ வழிநடத்திய குருவின் ஆசீரோ பீடச்சிறுவரின் பேராசீர் பலன்.
  6. அழைக்கப்பட்டோர் அநேகர் ஆலயத்திற்கு வந்து செல்பவர்கள்.  தேர்ந்தெடுக்கப்பட்டோர் ஒரு சிலர்.  அவர்களே பீடச்சிறுவரும் சிறுமியரும்.
  7. சின்னஞ்சிறுவர் இவர்கள் பெரியவர்களுக்கு வழிகாட்டிகளே.  ஆண்டவனின் ஆசீர் பெற்ற அருமையான ஊழியகாரர்கள்.
  8. சிலுவையைச் சுமக்கும் புண்ணியர்கள்.  தீப, தூபம் காட்டும் அருளாளர்கள், நற்கருணைத் துகள்களைத் தட்டுகளில் ஏந்தும் சின்னஞ்சிறு அதிர்ஷ்டசாலிகள்.

வாழிய பீடச்சிறுவர்கள்!
வளர்க அவர்கள் ஊழியம்!!


சகோ. சாந்தி ராபர்ட்ஸ்,
உதகை

குருக்களே குருக்களை

ஒரு முறை ஒரு பங்கிலே நான் இருக்கும்பொழுது என் பங்கு மக்கள் எனக்கு முன் பணியாற்றிய குருவானவரைப் பற்றிக் கேட்டார்கள்.  அதாவது அவர்கள் என்னிடம் “உங்களுக்கு முன் இருந்த ஃபாதர் இங்கிருந்து மாற்றம் அடைந்து வேறு பங்கிற்குச் சென்ற பிறகு இங்கு வந்ததே கிடையாது.  அவரை நம் பங்கிற்கு அழைக்கலாமே!  திருநாள் மற்றும் தவக்காலம் போன்ற சிறப்பு நாட்களில் அவரைத் தியானத்திற்கோ பிரசங்கத்திற்கோ அழைக்கலாமே!  அவர் இங்கிருந்து போனதிலிருந்து வந்ததே இல்லை” என்று கூறினார்கள்.  நானும் அந்த குறிப்பிட்ட குருவானவரை மாதாந்திர தியானத்திலும் சந்தித்தேன்.  அவரை அவர் பணியாற்றிய பங்கிற்கு அழைத்தேன்.  அவர் எனக்குத் தந்த பதில் என்னைச் சிந்திக்க வைத்தது.  அவர் சொன்ன பதில்: “ஃபாதர்!  நான் ஒரு பங்கிலே பணியாற்றிவிட்டு மற்ற பங்கிற்கு மாற்றம் அடைந்துவிட்டால் மீண்டும் பழைய பங்கிற்கு வருவது இல்லை.  ஏனென்றால் தற்போது பணியாற்றுகின்ற குருவானவருக்கு இறைப்பணி ஆற்றுவதில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.  அதே சமயத்தில் ஒரு வீட்டிற்கு சென்று விட்டு மற்ற வீட்டிற்குச் செல்லவில்லை என்றால் அது இறைமக்கள் மத்தியில் என்மீது தவறான எண்ணத்தை உருவாக்கும்.  ஆகவேதான் நான் பணியாற்றிய பங்குகளுக்கு மீண்டும் செல்வதில்லை.  இந்த Policy எனக்கும் நல்லது  உங்களுக்கும் நல்லது” என்றார்.

மேற்சொன்ன குருவானவரின் எண்ணத்தின்படி மற்ற குருக்களுக்குப் பணியில் தடையாய் இருக்கக் கூடாது என்பது பாராட்டுதற்குரியது.  குருத்துவப் பணி, ஏன் துறவறப் பணியாற்றுகின்ற குருக்கள் ஒவ்வொரு வருக்கும் மேற்சொன்ன குருவானவரின் பரந்த மனநிலை தேவைப்படுகிறது.  நானும் சில சமயங்களில் நான் பணியாற்றிய பங்கின் சில வீடுகளுக்குச் சென்றதுண்டு.  அப்படிச் செல்லுகையில் ஒரு சில மக்கள் “ஃபாதர் அவர்கள் வீட்டிற்கு சென்றீர்களே!  எங்கள் வீட்டிற்கு வாருங்களேன்!  ஏழைங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டீங்க!  வசதி படைத்தவர் வீட்டுக்குத்தான் செல்வீர்கள்!” என்று கேட்டதும் உண்டு.  மேற்சொன்ன குருவானவரின் எண்ணங்கள் என்னையும் சிந்திக்கத் தூண்டின.

இன்றைக்கு ஒரு சில குருக்கள், தான் பணியாற்றிவிட்டு வேறு பங்கிற்கு மாற்றலாகி சென்ற பின்பும் மீண்டும் பழைய பங்கிற்கு வந்து தற்போதைய பங்குத் தந்தைக்கு தெரியாமல் வீடு வீடாக உலா வந்து இறைமக்கள் மத்தியில் குறிப்பிட்ட குருவானவரின் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.  தான் பணியாற்றிய பங்கிற்கு மீண்டும் ஒரு குருவானவர் செல்லக் கூடாது என்ற சட்டம் எந்தத் திருச்சபை சட்டத்திலும் இல்லை.  ஆனால் அந்த பங்கில் உள்ள குருவானவரை மதிப்பின் நிமித்தமாக சந்தித்துவிட்டு மக்களைச் சந்திக்க செல்வது ஒரு குருவானவர் மற்ற குருவானவருக்கு காட்டும் அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்துகிறது.  ஆனால் புதிய பங்குத் தந்தைக்கு தர்ம சங்கடம் ஏற்படும் விதத்தில் முன்னாள் பங்குத் தந்தை செயல்படுவது அவரின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது.  குருக்களே குருக்களை மதிக்கவில்லை என்றால் யார் மதிப்பார்கள்? நமது சாட்சிய வாழ்வு எதில் அடங்கியிருக்கிறது?  நான் தமிழக இறையழைத்தல் பணிக்குழு செயலராக இருந்த பொழுது பல மறைமாவட்ட குருக்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டவைதான் மேற்சொன்ன அனுபவங்கள்.  இதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.  இது குற்றச் சாட்டும் இல்லை.  சிந்திக்க வேண்டியுள்ளது.  இந்த அனுபவங்கள் நான் நல்லவன் மற்ற குருக்கள் கெட்டவர்கள் என்பதற்காக அல்ல.  இதை நானும் நீங்களும் சிந்தித்துப் பார்க்கத்தான்! 

ஏன் என்ற கேள்வி

தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை இப்படி தவழ்ந்து தவழ்ந்து நடப்பதைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளம் வெடித்து விடும்போல் இருக்கும் வித்யா - விஜயன் தம்பதியர்க்கு.  யாருக்கு என்ன தீங்கு செய்தோம்?  இப்படி அனுதினமும் மெழுகாய் உருகி வடிய.  ராஜ நடையாய் நடப்பான் என்றல்லவா ஊர் கூடி, உறவுகள் கூடி ராஜா எனப் பெயரிட்டனர்.  ஆனால் எல்லா அறிவும் திறனும் இருந்தும் அழகாய் நடக்கும் நடை இல்லாமல் போனது ஏன்?  எதனால்?  புரியவில்லை.  அழுது அழுது கண்களே ஓட்டை விழுந்துவிடும்போல் ஆகிவிட்டது.
தங்களுக்குள் அழுது கொண்டாலும் மகனை தன்னம்பிக்கைச்  சுடராய் வளர்த்து வந்தனர் அவர்கள்.  எதைப் பார்த் தாலும் ராஜா கேள்வி கேட்பான்.  ஒரு பூவைப் பார்த்தால்கூட சாமி ஏம்மா இந்தப் பூவை இப்படி படைச்சார்?  ஏம்மா இந்த நிறத்தில் படைச்சார்?  ஏம்மா இந்த வடிவத்தில் படைச்சார்?  இதை வேற மாதிரியா படைச்சிருந்தா எப்படி இருந்திருக்கும் இல்லம்மா?  ஆச்சரியமும், அதிசயமும், அறிவுப்பூர்வமாயும் அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிப்பதை ஒரு வித்தையாகச் செய்து வந்தனர் அவர்கள்.
ஒவ்வொரு படைப்பின் மகிமையையும் எடுத்துச் சொல்லி, அது மனித குலத்திற்குச் செய்யும் நன்மைகளை விளக்கி, அதன் பயன்பாடுகளை எடுத்துச் சொல்லி ஒவ்வொரு நாளும் அவர் களுக்குச் சவாலாய் கழிந்தது.  மகனுக்கு தன் இயலாமையின் குறை ஒரு நாளும் தெரிந்துவிடக்கூடாது என ஜாக்கிரதையாய்  பார்த்துக் கொண்டனர்.  ஆளும் வளர அறிவும் வளர குறை மறைந்து இயல்பான வாழ்க்கைப் பாதையில் சென்று கொண்டிருந்தது அவர்கள் பயணம்.  ஒரு நல்ல ஓவியனாய், கலைஞனாய், கவிஞனாய் உருவாகி வந்தான் ராஜா.  எதிலும் அவனுடைய பார்வை புதிய கோணத்தில் இருக்கும்.  ஆச்சரியமூட்டும் வகையில் அவன் செயல்கள் இருக்கும்.  பெற்றோரின் திறமை இவனில் இல்லாமலா இருக்கும்!  அவர்களைப் போலவே இவனும் உணர்வுகளையும், வலிகளையும், வேதனைகளையும் மறைத்து சிரித்துக் கொண்டே வாழப் பழகிக் கொண்டான்.  மனது அழுவதை மறைத்துக் கொண்டான்.
கண்ணுக்குள் வைத்து வளர்த்த பிள்ளையின் பார்வையில் பட்டாள் வசந்தா.  மெல்ல வசந்தமாய் அவனுள் மாறிப்போனாள்ழி.  அவனும் அவள்மேல் கொண்ட அன்பைத் துடுப்பாய் பற்றிக் கொண்டு வாழப் பழகினான்.  தன் நிலை கருதி யாரிடமும் மனதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனதிலேயே மாளிகை அமைத்து அதில் தன் இனிய சிநேகிதியின் துணையுடன் ஒரு படைப்பாளியாய், மாற்றுத்திறன் படைப்பாளியாய் உலா வந்தான்.  போதும் நினைவுகள் போதும்.  அது தரும் பலம் போதும்.  அன்பான மனசு இருந்தால் அதைக் கொண்டு எதையும் சாதித்து விடலாம்.
மகனின் மனதினுள் நடக்கும் வாழ்க்கைப் போராட்டங்கள் பெற்றவர் களுக்குத் தெரியாமல் இல்லை.  ஆனால் அவனுடைய ஆசையை நிறைவேற்றி வைக்கும் தைரியமும் இல்லை.  வழியும் தெரியவில்லை.  தான் ஊனமாய்ப் பிறந்து பெற்றோர்க்கு சுமையானது விதி.  தெரிந்தே ஒரு ஊனமற்ற பெண்ணின் வாழ்வில் நுழைந்தால் அது தவறு என்றது மதி.  எனவே அன்பு கொண்ட மனதை அடக்கிக் கொண்டு வாழப் பழகிக் கொண்டான் ராஜா.  பார்க்க கண் இருக்கிறது, கேட்க செவி இருக்கிறது, சிந்திக்க மனம் இருக்கிறது.  படைக்க கை இருக்கிறது.  பாராட்ட நல்ல மனங்கள் இருக்கின்றன.  உற்சாகப்படுத்த மனதில் ஒரு மூலையில் வளர்த்துக் கொண்ட ரகசிய சிநேகிதம் இருக்கிறது.
தைரியமாய்த்தான் வாழ்ந்தான் ராஜா.  அம்மா, அப்பா தன்னால் பட்ட, படுகின்ற கவலை எல்லாம் போதும்.  தெரியாமக்கூட அவர்களைக் கஷ்டப்படுத்தி விடக்கூடாது.  தீர்மானமாய் இருந்தான் ராஜா.  ஆனால் வசந்தா வேறு ஒருவருக்கு மனைவியான அந்த நாளில் மட்டும் அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.  அழுகையை அடக்க முடியவில்லை, சிரிப்பதாய் நடிக்க முடியவில்லை.  மனசு போராடிய போராட்டத்தை அடக்க முடியவில்லை.  வலிக்குக்கூட வாய்விட்டு அழாதவன் அன்று தன் வசந்தாவின் பிரிவிற்காக அழுதான்.  ஆறுதல் படுத்த முடியவில்லை அவன் பெற்றோரால்.  அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் வினயமாய், விவரமாய், விளக்கமாய் பதில் அளிக்கும் அவர்கள் அன்று அவன் கேட்ட “ஏம்மா என்னை சாமி இப்படி படைச்சிட்டாரு?” என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அழுகிறார்கள்.  யார் இவர்கள்
கண்ணீரைத் துடைப்பது?  ராஜாவின் கேள்விக்கு யார் விளக்கமளிப்பது?
சாந்தி ராபர்ட்ஸ்
உதகை

புனித பெர்க்மான்ஸ் - பீடச்சிறுவர்களின் பாதுகாவலர்

சில ஆண்டுகளுக்கு முன்பு மெயின்ஸ் நகரத்தில் நடந்த பேரவையில் (Synod of Mainz) ஒவ்வொரு குருவும் திருப்பலி நிறை வேற்றும்போது அவருக்கு உதவ பீடப் பணியாளர் அருகிலிருப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.  இதன் அடிப்படையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பீடப்பணி யாளர்கள் செய்யும் செயல்களைச் சிறுவர்கள் செய்யத் தொடங்கினர்.11 மற்றும் 12 வயது நிரம்பியவர்களையே பீடப்பணியாளர்களாகத் தேர்வு செய்தனர்.  இவர்களுக்கென தனிப்பட்ட உடையும் தேவை எனவும், அவர்கள் நற்பண்பு, அறிவு, விசுவாசம், பணியில் ஆர்வமுள்ளவர் களாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  அது முதல் திருச்சபையில் இப்பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

பீடச்சிறுவர்களாகிய பீடப்பூக்களுக்கு பாதுகாவலர் புனித பெர்க்மான்ஸ் அருளப்பர்.  இவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டிபெஸ்ட் என்னும் சிற்றூரில் கி.பி. 1599- ஆம் ஆண்டு பிறந்தார்.  இவர் தந்தை தனது மனைவியின் மறைவுக்குப் பின் குருவானார்.  பெர்க்மான்ஸ் இளம் வயதிலேயே இறைவனுக்குத் தொண்டாற்ற ஆர்வம் கொண்டிருந்தார்.  இவர் அடிக்கடி “இந்த வயதில் நான் புனிதராகா விட்டால், எப்பொழுதும் புனிதனாக முடியாது” என்று சொல்லுவார்.  குருமடத்தில் சேர இவரது வீட்டில் பெற்றோரும் உற்றாரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  அதே சமயம் இறைவன் அவரின் மனக்கதவைத் தட்டி அழைப்பதையும் உணர்ந்தார்.  இந்த நிலையில் புனிதர் பேசிய வார்த்தைகள் இதுதான், “இங்கே என் பெற்றோரும் உற்றார் உறவினரும் ஒரு பக்கம்.  மற்றொரு பக்கம் இறைவனும், ஆண்டவரின் அன்னையும் வீற்றிருக்கின்றனர்.  என் பெற்றோர்கள் என்னிடம் “நாங்கள் உனக்காக உன் இளமை முதல் எடுத்துக் கொண்ட அயராத உழைப்பு, முயற்சிகளை முன்னிட்டு எங்களைவிட்டு பிரியாதே!” என்கிறார்கள்.  அதே நேரம் இயேசுவோ, என்னைப் பின் செல்.  உனக்காக பிறந்தேன் சிலுவையைச் சுமந்தேன்.  அடித்து நொறுக்கப்பட்டேன்.  இதோ எனது ஐந்து காயங்களைப் பார்.  உனது ஆன்மா உயிர் பெறவும், ஊட்டம் பெறவும், எனது தசையையும் இரத்தத் தையும் தந்தேனே?  உனது நன்றிகெட்டத் தனம் உன்னை நாணத்துக்குள்ளாக்காதா?” என்கிறார்.

பிறகு புனிதர் தன் பெற்றோரிடம் “என் அன்புப் பெற்றோரே!  நான் இறையன்பை நினைக்கும்பொழுது என் உள்ளம் பற்றி எரிகிறது.  சில நேரங்களில் இந்த நொடியே துறவறத்தில் சேர்ந்து விடலாமா? என்ற விருப்பம் வருகிறது.  நான் அன்பு செய்யும் இயேசுவை அடையும் வரை அமைதி இழந்தவனாய் இருக்கின்றேன்” என்றாராம்.  இறுதியில் இறைவனுக்கே நான் சொந்தம் என்று கூறி தமது 17வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார்.  மேற்படிப்புக்காக உரோமை அனுப்பப்பட்ட போது அங்கு பிளேக் நோயினால் அவதியுற்று கி.பி. 1621-ஆம் ஆண்டு குருமாணவராக இருந்தபோதே இறைவனடி சேர்ந்தார்.
சில இடங்களில் நம் பங்குகளில் சிறுவர்கள் ஆர்வமுடனும், மகிழ்வுடனும் திருப்பலியில் குருக்களுக்கு உதவ முன் வருகிறார்கள்.  அவர்களைப் பாராட்டுவோம். அவர்களது முயற்சியை இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.

“இறைப்பணி கடவுளின் வழியில் செய்யப் படும்போது அதை யாரும் தடுக்க முடியாது”  - ஹட்சன்
Sr. Theresita FSM

உயர் மறைமாவட்ட பீடப்பணியாளர் இயக்கம்

சென்னை - மயிலை உயர்மறைமாவட்ட இறையழைத்தல் பணிக்குழுவின் ஓர் அங்கம்

பீடச்சிறுவர், சிறுமியரை கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், இறையழைத்தல் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் எம் உயர் மறைமாவட்டத்தில் செயலாக்கம் பெற்று வருகின்றன. அவற்றுள் சில பின்வருமாறு.
1. பங்கு அளவில்: ஒவ்வொரு பங்கிலும் பீடப்பணியாளர்களின் பணியும், வாழ்வும் சீராக ஒருங்கிணைக்கப்பட வேண்டு மென்றால், அந்தந்த பங்கு பீடப்பணியாளர் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களின் நிலையும், பணியும், பங்கேற்பும் முறையாக வரிசைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு பங்கிலும், பீடப்பணி யாளர் இயக்கத்தில் சிறுவர், சிறுமியர்க் குள்ளாகவே 1. தலைவர், 2. துணைத் தலைவர், 3. செயலாளர் மற்றும் 4. பொருளாளர் என பங்குத் தந்தையின் கண்காணிப்பிலும், பரிந்துரையின் அடிப்படையிலும், கோயில் காரியங்களில் ஆர்வமுள்ள பீடப்பணியாளர்கள் மேற்கண்ட பொறுப்புகளை வகிக்க தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். பங்கு அளவில் இயங்குகின்ற இந்த பீடப்பணியாளர் இயக்கத்திற்கு, பொறுப்பிலுள்ள பீடச்சிறுவர், சிறுமியரைத் தவிர்த்து, அங்கு களப்பணியாற்றுகின்ற சகோதரரோ, வார இறுதியில் பங்குப் பணிக்காக வருகின்ற இறையியல் சகோதரரோ, பங்கிலுள்ள வேதியரோ அல்லது பங்குப் பணிகளிலும் வழிபாடுகளிலும் ஆர்வமுடன் பங்கேற்கும் பங்கிலுள்ள பெரியவரோ வழிகாட்டியாகச் செயல்படலாம். இயக்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் உடனிருந்து நிறைவேற்ற பங்குத் தந்தை ஆன்ம குருவாக இருப்பார்.
பங்கு அளவில் பீடப்பணியாளர்கள் கூட்டம் நடத்தும் வழிமுறைகள் :

  1. தொடக்க செபம்
  2. வரவேற்புரை
  3. விவிலிய வாசகம்
  4. நற்செய்தியை ஒட்டிய கதை அல்லது குறு நாடகம்
  5. பாடல்
  6. கடந்த கூட்ட அறிக்கை வாசித்தல்
  7. பொருளாளர் அறிக்கை வாசித்தல் மற்றும் சந்தா வசூல் செய்தல் (வாரம் தோறும் 5 ரூபாய்)
  8. வருகைப் பதிவு எடுத்தல்
  9. சொற்பொழிவு (ஆன்ம குரு அல்லது வழிகாட்டி)
  10. கருத்துப் பகிர்வு
  11. பங்குத்தந்தையின் அறிவிப்புகள்
  12. அடுத்த வாரம் செய்ய வேண்டிய வேலையைப் பகிர்ந்து அளித்தல்
  13. பீடப்பணித்தலைவர் உரை
  14. பீடப்பணியாளருக்கான செபம்
  15. பங்குத் தந்தையின் ஆசீர்
  16. இறுதிப் பாடல்

ஒவ்வொரு கூட்டத்திற்குப் பிறகும் பீடப்பணியாளர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். திருப்பலியிலும் பல்வேறு வழிபாடுகளிலும் பயன்படுத்துகின்ற கருவிகளின் பெயர்கள், அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்த பயிற்சிகளும் வழங்கப்படும். ‘பீடப்பணியாளர் ஆன்மீகம் பத்து’ அட்டையை மையப்படுத்தி பகிர்வு நடை பெறும். பங்குத் தந்தையின் ஆர்வத்தைப் பொறுத்து பீடப்பணியாளர்களுக்கு தியானமும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
2. மறைவட்ட அளவில்: மறைவட்ட அளவில் பீடப்பணியாளர்களை ஒருங்கிணைத்து வழிநடத்த இளம் அருட்தந்தை ஒருவரை மறைவட்ட இறையழைத்தல் ஊக்குநர் என்று நியமித்து அந்தந்த மறை வட்டத்தைச் சார்ந்த பங்கிகளிலுள்ள பீடப்பணியாளர்கள் இறையழைத்தலில் வளரச் செய்ய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மறைவட்ட இறையழைத்தல் ஊக்குநர் தத்தம் கிறிஸ்தவ பள்ளிகளை அணுகி, அங்கு பயிலும் மாணவர்களுக்கு இறையழைத்தலைக் குறித்து எடுத்துக் கூறுகிறார். மறைவட்ட அளவில் ஆண்டுக்கொருமுறை ‘பீடப்பணியாளர் பேரணி’ என்ற பெயரில் சிறுவர், சிறுமியரை ஒன்றுதிரட்டி திருச்சபை மற்றும் திருவிவிலியம் சார்ந்த குழுவிளையாட்டுக்களும், சொற்பொழிவு மற்றும் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு பீடப்பணியாளரிடையே இறையழைத்தல் ஆர்வம் வளர்க்கப்படுகிறது.
3. மறைமாவட்ட அளவில்: ஒவ்வோராண்டும் உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறுக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை இறையழைத்தல் ஞாயிறாக எம் உயர் மறைமாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. எம் உயர்மறைமாவட்ட திருத்தொண்டர் களுக்கு குருத்துவ அருட்பொழிவு விழாவும் அன்று நடைபெறுகிறது. ஒரு மாதத்திற்கு முன்னதாகவே உயர்மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளுக்கும், தத்தம் பங்கு களிலிருந்து சிறந்த பீடப்பணியாளரது பெயரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும்படி ஒரு சில விதிமுறைகளடங்கிய விண்ணப்பப் படிவும் அனுப்பப்படும். மேற்சொன்னபடி, குருத்துவ அருட்பொழிவு திருப்பலியின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பீடப்பணியாளர்களுக்குத் தங்கப்பதக்கமும் (முலாம்) சான்றிதழும் பரிசும் வழங்கப்படுகின்றன. அன்று இறையழைத்தல் ஞாயிறாக இருப்பதால், எம் உயர்மறைமாவட்டத்தில் இளநிலை பயிற்சிக் குருமடத்தில் பயிலுவோர் முதல் திருத்தொண்டராக அருட்பொழிவு பெற்ற சகோதரர் வரை அனைவரது புகைப்படமும் திரையயான்றில் அச்சடிக்கப்பட்டு பார்க்கும் வண்ணம் வைக்கப்படுகிறது.
மேலும் உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறைத் தொடர்ந்த அந்த வாரத்தில் மறைமாவட்ட இறையழைத்தல் முகாமும் நடத்தப்படுகிறது. இதனால் முகாமில் பங்கெடுக்கும் அனைவரும் குருத்துவ அருட்பொழிவு விழாவில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்படுகின்றனர். மேலும் மேற்கண்ட நிகழ்வுகளை அவர்களும் பார்த்து இறையழைத்தல் ஆர்வம் பெருகும் சிறந்ததொரு வாய்ப்பு கிடைக்கிறது.
4. பீடப்பணியாளர் தினம்: எம் உயர் மறைமாவட்டத்தில் வருடத்திற்கு ஒரு முறை பீடப்பணியாளர் தினம் வெகுவிமரி சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அது மறைவட்ட அளவிலோ அல்லது மறைமாவட்ட அளவிலோ சிறப்பிப்பது அந்தந்த இறையழைத்தல் ஊக்குநரின் விருப்பம். ஒவ்வோராண்டும் மறைவட்ட அளவில் ‘பீடப்பணியாளர் பேரணி’ என்று சிறப்பிக்கப்பட்ட இந்தப் பீடப்பணியாளர் தினம் இவ்வாண்டு சற்று வித்தியாசமாக ‘பீடப்பணியாளர் மாநாடு 2010’ என்ற பெயரில் மிக ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டது. ஆடல், பாடல், குழுவிளையாட்டு, கலக்கப்போவது நானு, மாயாஜாலம் மற்றும் பேரணி ஆகியவை இம்மாநாட்டின் சிறப்பு அம்சங்கள். உயர்மறை மாவட்டத்தின் 70 பங்குகளிலிருந்து பங்கேற்ற 1180 பீடப்பணியாளர்கள் இவ்வினிய நாளுக்கு அழகும், பெருகும் சேர்த்தனர். பீடப்பணியாற்றும் சிறுவர் சிறுமியருக்கு “பீடப்பணியாளர் ஆன்மீகம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வழியாக, பீடப்பணியாளர்கள் நிறைவாழ்வு வாழ்வதற்குப் பத்து ஆன்மீகப் படி நிலைகள் அடங்கிய கைப்பிரதி வெளியிடப் பட்டது.
5. நடமாடும் கண்காட்சி: உயர் மறைமாவட்டத்தின் சில பிரபல துறவற சபைகளிலிருந்து அருட்சகோதரிகள் வந்திருந்து அவர்களது பணி வாழ்வை எண்பித்துக்காட்டும் கண்காட்சியை அமைத்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்ற சிறுவர் சிறுமியரோடு உறவாடி, அவர்களில் இறையழைத்தலை ஊக்கப்படுத்தினர். “புனிதத்தில் ஆனந்தம்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றப்பட்டது. சிறுவர் சிறுமியரில் புனித வாழ்வின் முக்கியத் துவத்தை ஆழப்படுத்த, பீடப்பணியாளரின் பாதுகாவலர் தூய ஜான் பெர்க்மான்ஸ், சிறுமியர் மற்றும் தூயவாழ்வின் வழி காட்டி தூய மரிய கொரற்றி, இளைஞர் மற்றும் குருமாணவர்களின் பாதுகாவலர் தூய கொன்சாகா ஞானப்பிரகாசியார், இளைஞர் மற்றும் பீடப்பணியாளரின் முன்மாதிரி தூய தோமினிக் சாவியோ ஆகியோரின் திருப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு, அவர்களது வாழ்க்கை வரலாறு விளக்கப்பட்டது. பேரணியின் போது பீடப்பணியாளரைக் குறித்துக் காட்ட சிவப்பு மற்றும் வெண்மை நிறங்கள் கொண்ட கொடிகள் அறிமுகப்படுத்தப் பட்டன. நிறைவாக, உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு A. M. சின்னப்பா, துணை ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ், தமிழக இறையழைத்தல் இயக்குநர் அருட்திரு. சகாய ஜான் மற்றும் பல குருக்கள் தோழமையில் ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
6. பீடப்பணியாளருக்கான படிநிலைகள்: பீடப்பணியாளராகப் பணியாற்ற முன்வரவும், இதன் வழியாக ‘இறையழைத்தல்’ என்ற கொடையைப் பெற்றுக்கொள்ளவும் எம் சிறுவர் சிறுமியரை உற்சாகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பங்கிலும் பீடப்பணியாளர் இயக்க அங்கத்தினர்களாக உள்ளவர்கள் கீழ்க்காணும் நான்கு படிநிலைகளின்படி பிரிக்கப்பட்டுள்ளனர்.

  1. படிநிலை 1 : (பயிற்சி பெறுவோர்) புதுநன்மை இன்னும் பெறாத பிள்ளைகள் இந்த முதலாம் படிநிலையில் உள்ளனர். இவர்கள் தொடக்கநிலைப் பயிற்சியில் உள்ளவர்கள். கூர்ந்து கவனித்து, பீடப்பணியாற்றும் முறைகளைக் கற்றுக் கொள்வதே இவர்களின் தலையாயப் பணியாகும். இவர்கள் புதிதாக பீடப்பணியாளராகப் பணி செய்ய முன்வருவதால் தங்களது முதல் அர்ப்பணத்தை இறைவனுக்கு வழங்குகிறார்கள்.
  2. படிநிலை 2 : (மென்துகில் அணிபவர்கள்) புதுநன்மை பெற்று, பீடப்பணிக்குரிய பயிற்சிகளை முறையாக நிறைவுசெய்த பிள்ளைகள் மென்துகில் அணியும் தகுதி பெறுகிறார்கள். இந்த மென்துகில் அணியும் சடங்கினை மறைமாவட்ட ஆயரோ, மறைவட்ட அளவில் நடைபெறும் நிகழ்வாயின் மறைவட்ட முதன்மைக் குருவோ அல்லது அந்தந்த பங்குகளில் ஞாயிறு திருப்பலியின்போது வழங்குவதாக இருப்பின் பங்குத் தந்தையோ இந்த வழிபாட்டைச் சிறப்பிக்கலாம்.
  3. படிநிலை 3 : (நீலக்கயிறு கொண்ட சிலுவையை அணிபவர்கள்) புதுநன்மை பெற்று தக்க பயிற்சியுடன் இரண்டு ஆண்டு பீடப்பணியை நிறைவு செய்தோர் நீலக் கயிறு கொண்ட சிலுவையை அணிகின்றனர்.
  4. படிநிலை 4 : (சிவப்பு கயிறு கொண்ட சிலுவை அணிபவர்கள்) புதுநன்மை பெற்று தக்க பயிற்சியுடன் மூன்றாண்டு மற்றும் அதற்கு மேலாக பீடப் பணியாற்றுவோர் சிவப்புக்கயிறு கொண்ட சிலுவையை அணியும் தகுதி பெறுகின்றனர்.

பீடப்பணியாளருக்கென வடிவமைக்கப்பட்டு,  சென்னை - மயிலை உயர்மறைமாவட்ட பேராயரால் அங்கீகரிக்கப்பட்ட அர்ச்சிப்பு சடங்குமுறைப்படி மேற்சொன்ன் சடங்குகளனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. இந்த நீலம் மற்றும் சிவப்புக் கயிறு பொருந்திய சிலுவைகளை ஞாயிறு திருப்பலியில் பீடப்பணியாளர்கள் அணிந்துகொண்டு பீடப்பணி செய்த பிறகு அந்த சிலுவைகளை மீண்டும் ஆலயத்திலேயே விட்டுச் செல்வர்.
குறிப்பு : இந்த நவீன உலகில் அனைவரும் பொருளீட்டுதல் தொடர்பாக கல்வியிலும், கலை மற்றும் தொழில்நுட்ப அறிவிலும் ஆர்வம் காட்டுவதால் விசுவாசம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடும் ஒத்துழைப்பும் நம் சிறுவர் சிறுவரிடையே வெகுவாகக் குறைந்து வருகிறது. இச்சூழலில் இறையழைத்தலை நம் சிறுவர் சிறுமியரிடையே அதிகப்படுத்த புதுமையான, அனைவரையும் இணைத்து, ஒருங்கிணைத்து ஆக்கப்பூர்வ யுக்திகளை மேற்கொள்ளும்போது நம் தலத் திருச்சபைகளும், இறைமக்களும் நிறைந்த நன்மையடைவர்.

பீடப்பணியாளர்களுக்கான ஆன்மீகம் - பத்து
  1. 1. கிறிஸ்துவ வாழ்வில் : என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என் வாழ்வின் வழிகாட்டி யாகவும், நண்பராகவும் ஏற்று என் வாழ்வில் அவரின் மதிப்பீடுகளைப் பிரதிப்பலிப்பேன்.
  2. 2. நற்கருணையின் நிறைவில் : ஒவ்வொரு நாளும் (என்னால் முடிந்தவரை) திருப்பலியில் கலந்து கொண்டு குடும்ப செபத்தை ஊக்குவிப்பேன்.
  3. 3. இறைவார்த்தையின் ஒளியில் : தினந்தோறும் விவிலியம் (புதிய ஏற்பாடு தொடங்கி) வாசித்து, தியானித்து வாழ்வாக்க முயற்சி செய்வேன்.
  4. 4. புனிதர்களின் தோழமையில் : ஆண்டவர் இயேசுவோடு உடன் நடந்த அன்னை மரியாள் மற்றும் என்னைப் போல் வாழ்ந்து, தூய்மையிலும் இறைப்பற்றிலும் மேலோங்கிய புனிதர்களின் பாதையைப் பின்பற்றி வாழ்வேன்.
  5. 5. வழிகாட்டிகளின் துணையில் : என் பெற்றோர், பெரியோர், ஆன்ம வழிகாட்டிகள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் காட்டுகிற நேரிய பாதையில் சீரிய முறையில் நடப்பேன்.
  6. 6. ஒழுக்க நெறியில் : என் உடல் இறைவனின் ஆலயம் என்பதை உணர்ந்து, என் வாக்கினில் உண்மையையும், என் வாழ்வில் நேர்ç கத்தோலிக்கர்களின் விசுவாசம் அவர்களின் தினசரி வாழ்வில் காணக் கூடியதாக இருக்க வேண்டும் என அழைப்பு ழிஉவிடுத்துள்ளார். இலண்டனின் வெஸ்ட் மினிஸ்டர் பேராயர் வின்சென்ட் நிக்கோலஸ். விசுவாசத்தின் முதற் கனியாகிய செபத்திற்கு நம் வாழ்வில் அதற்குரிய இடத்தைக் கொடுக்க வேண்டும். திருத்தந்தை தன் திருப் பயணத்தின் போது விண்ணப்பித்தது போல் கத்தோலிக்கர்கள் அனைவரும் தங்கள் பொது வாழ்வில் சாட்சிகளாக விளங்க வேண்டும். துன்ப துயரத்தில் இருப்போருக்கு நம் செபங்களை வழங்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டுமெனவும் பேராயர் கேட்டுக் கொண்டார்.
  7. 7. உழைப்பின் உயர்வில் : தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற கடின முயற்சிகளை மேற்கொண்டு, சிலுவையையும் ஏற்கத் தயங்காத இயேசுவைப் போல், எனது வாழ்வில் கடின உழைப்பை முதலீடாகக் கொண்டு என் படிப்பில் ஆர்வத்தையும், அறிவில் தெய்வீகத்தையும் வளர்த்துக் கொள்ள கடினமாக உழைப்பேன்.
  8. 8. கிறிஸ்துவ அழைப்பில் : நான் பெற்றிருக்கும் கிறிஸ்தவ அழைப்பு சிறப்பாக பீடப்பணியாளராக இருப்பது ஒரு மாபெரும் கொடை என்பதை உணர்ந்து, சவால் நிறைந்த மாணவ சமூகத்தில் கிறிஸ்துவின் சாட்சியாக வாழ்ந்து, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை முன்னிலைப் படுத்துவேன்.
  9. 9. தூய்மையான வாழ்வில் : என் தூய்மையான வாழ்விற்கு இடையூறாக இருக்கும் தேவையற்ற பொழுதுபோக்கில் மனதைச் செலுத்தாமல், நல்ல நண்பர்கள், தரமான புத்தகங்கள், ஆரோக்கியமான உறவுகள் மற்றும் என் தனித்திறமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவேன்.
  10. 10. பணி வாழ்வில் : எனக்குக் குறிக்கப்பட்ட நாட்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பரிசுத்த நாட்களிலும் தவறாது நேரத்தோடும், ஆன்ம தயாரிப்போடும் பீடப்பணி செய்வேன்.
அருட்பணி. ரெய்மண்ட்
செயலர், இறையழைத்தல் பணிக்குழு, சென்னை

Hello Dear Altar Boys

A boy or man who acts as server, especially at Holy Mass, but who has not been officially appointed or delegated to ministry of acolyte.    A boy who is an altar server.  A boy serving as an acolyte.  An attendant to an officiating cleric in the performance of a liturgical service; an acolyte.
An altar server is a lay assistant to a member of the clergy during a religious service.  An altar server attends to supporting tasks at the altar such as fetching and carrying, ringing the altar bell, etc.
Roles and Responsibilities of Altar Boys :
¯ VERY IMPORTANT : Arrive at church at least 10 minutes before Mass and put on your alb or the altar boy’s dress.
¯ Before each Mass, they fix the “Cross/Book” Server and “Candle” Servers.
¯ Usually, the “Cross/Book” Server is the tallest server or the server in the highest grade at school.  If all Altar Servers are about the same height and in the same grade, decide among yourselves before Mass who will be “Cross/Book” Server and “Candle” Servers.
¯ When there are only two Altar Servers, there will be no candles in the opening and closing procession.  The candles are used at the Gospel reading.  The “Cross/Book” Server will perform all duties for Server # 3.
¯ Five minutes before Mass, the Candle servers will light all the altar candles.
¯ They must see that the altar is prepared and set ready for the celebration of the Holy Mass.
Setting the Altar
¯ Sacramentary (Big Book) and Wooden Stand.
¯ Priest’s Chalice, Corporal, Paten, Purificator.
¯ Chalices and Purificators for the Eucharistic Ministers.
¯ Ciborium filled with hosts.
Entrance procession and beginning of the mass
¯ Altar boys walk between the two candle holders during the entrance procession.
¯ The “Cross Book” Server will stand at the back of the church followed by the two “Candle” Servers.
¯ The “Candle” Servers will be side-by-side about three feet behind the “Cross/Book” Server.
Offertory
¯ They work as a team to set the altar (bringing the cups, bowls, purificator cloths, etc.)
Communion
¯ While communion is being distributed, they work as a team to remove all items from the altar EXCEPT the Corporal (square cloth with red cross on the altar),  bring the lids from the credence table and stack them neatly on the altar.
¯ During Communion along with the other servers partially clears the Altar - Removes Chalice, Paten & Purificator from the Altar.
¯ After Communion along with the other servers finishes cleaning the altar - Removes empty Ciborium & lids.
Clearing the Altar during Communion
¯ Remove the Sacramentary (Big Book) and Wooden Stand.
¯ Remove the Priest’s Chalice, Paten and Purificator.
¯ Leave the Corporal and Put Ciborium Lids on the Altar.
Clearing the Altar after Communion
¯ Remove empty Ciborium & Lids.
¯ Remove Corporal.
End of Mass
¯ They walk between the two candle holders during the procession to the sanctuary.
REMEMBER: YOU ARE A TEAM! MOVE AND WORK AS A TEAM!
¯ When it is time to begin Mass, the song leader will announce the entrance hymn.  The entrance procession begins when signaled by the Deacon or Priest.
¯ The “Cross/Book” Server, carrying the cross, slowly leads the procession up the center aisle.  The two “Candle” Servers carry the candles about one pew behind the cross.
¯ When you reach the front of the church, the “Cross/Book” Server stops with the “Candle” Servers on either side.  Pause briefly, and then put the candles in the candle stand and the cross in the cross stand.
¯ Return to the front of the altar and join the Priest, Deacon and others.  One “Candle” Server goes to the left side, the other to the right side with the “Cross/Book” Server.
¯ Wait for the Priest to bow, and then proceed TOGETHER AS A TEAM to the altar servers’ chairs.  Stand straight with hands folded above the waist.
Patron saints for altar boys
¯ St. Dominic Savio
¯ St. Aloysius Gonsaga
¯ St. Rose of Viterbo
Few Biblical references
¯ Levites are supposed to assist the priest of Aaron tribe.  (Num 3:6).
¯ Samuel was ministering before the Lord, a boy wearing a linen ephod. (I sam 2:18) v
Fr. A. Jeyaraj
Rector,
St. Augustine’s Seminary, Trichy

மேன்மை பொருந்திய


அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை உற்றுக் கவனித்துக் கொண்டி ருந்தேன்.  அந்தக் குழந்தைக்கு இரண்டு அல்லது மூன்று வயதிருக்கும்.
அது தன் கையில் ஒரு குச்சியை வைத்திருந்தது.  அந்தக் குச்சியை ஆட்டி ஆட்டி அது அங்கேயிருந்த தன் பொம்மையை நோக்கி, “சொன்ன பேச்சை கேட்கலை அடி கொடுத்திடுவேன்!  ஒழுங்கா இங்கேயே இருக்கணும்” என ஒரு பெரிய மனுசி தோரணையில் மிரட்டிக் கொண்டிருந்தது.
நான் யோசித்தேன், “மனித வாழ்க்கையில் எந்த நிலையிலும் நமக்குள் இந்த பெரியமனுசத் தோரணை வந்து ஒட்டிக் கொள்கிறதே அது ஏன்?” என எனக்குள் கேள்வி எழுந்தது.
மனிதர் ஒவ்வொருவரும் தான் இருக்கும் நிலையை முழுமையாய் புரிந்து, அதை அனுபவித்து வாழ முயற்சிக் கின்றோமோ இல்லையோ ஆனால் அதற்குள் அடுத்தக் கட்ட நிலைக்கு குறிப்பாக பெரிய மனுசத் தோரணைக்குப் போய் அதை வாழ்ந்துவிட துடிக்கின்றோம்.
நேரிடையாய் முடியாவிட்டாலும் கற்பனையிலாவது அதை எட்டிப் பிடிக்க துடிக்கின்றோம்.
குழந்தையாய்த் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும்போதே பள்ளிக்குப் போகும் பருவத்திற்காக மனம் ஏங்குகிறது.
பள்ளிக்கு போய்க் கொண்டிருக்கும் பருவத்திலேயே வேலைக்குப் போகும் அடுத்த நிலையை எட்டிப்பிடிக்க விருப்பம் கொள்கிறோம்.
வேலைக்குச் சென்ற அடுத்த மாதத் திலேயே ஒரு குடும்பத் தலைவனாக எப்படி யயல்லாம் வாழ்க்கை நடத்துவது என மனம் கற்பனையில் மிதக்கிறது.
இப்படியாக ஒவ்வொரு கட்டத் திலே¼யும் மனிதன் இருக்கும் நிலையை உணர்ந்து, புரிந்து நடந்து கொள்வதற்குப் பதிலாக அடுத்த நிலைக்காக ஏங்குவதிலும் அல்லது கற்பனையில் காலத்தைக் கழிப்பதிலும் கவனமாய் இருக்கிறான்.
மனிதனின் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் போன்ற எந்த வாழ்க்கை நிலையிலும் அவனின் மனம் இதே நிலையில்தான் ஏங்கிக் கிடக்கிறது.
இப்படி எந்த நிலையிலிருந்தாலும் அடுத்த நிலைக்காக ஏங்கும் அல்லது கற்பனை செய்திடும் இந்த மனமே ஒருவனுக்குள் உந்து சக்தியாக இருந்து அவனை இயக்குகிறது;  அவனை வாழ வைக்கிறது என்கிற உளவியலரின் கூற்றுப்படி இந்த மனநிலையை நாம் பாராட்டத்தான் வேண்டும்.
ஆனால் இருக்கும் நிலையை உணர்ந்து, புரிந்து அதை அனுபவித்து; வாழாமல் அல்லது வாழ முயற்சிக்காமல் எப்போதுமே அடுத்த நிலைக்காகவே ஏங்குவது சரியா?  முறையா? அது நன்மையைத் தருமா . . . ?  கேள்விகள் கிளர்ந்தெழுகின்றன . . .
இப்படியாக இருக்கும் நிலையை உணர்ந்து, புரிந்து கொள்ளாத போது  பெரிய மனுசன் தோரணையையே எப்போதும் மனம் நாடும்போது அதனால் எப்பொழுதும் நமக்கும் கீழ் நாலு பேரையாவது சின்னஞ்சிறியவர்களாய் நினைத்து நடத்திடும் போக்கும் நமக்குள் வந்து விடுகிறது.
அதனால்தான் அந்த 3 வயதுக் குழந்தை தன் பொம்மையைத் தனக்கும் கீழ் உள்ள சின்னஞ்சிறுசாய் நினைத்து பெரிய மனுசித் தோரணையில் மிரட்டிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
இந்த மனநிலை எந்த நிலையி லிருந்தாலும் எந்த வயதிலிருந்தாலும் ஒருவனுக்குள் குடியிருப்பதை நாம் பார்க்கலாம்.
நமது வாழ்க்கையிலும் நாமும் எப்பொழுதுமே நமக்கும் கீழ் எப்படி யாவது ஒரு நாலு பேரையாவது நிறுத்தி சிறியவர்களாக்கி ஆதிக்கம் செலுத்திடவே துடிக்கிறோம்.
என்னதான் நாம் நம்பும் மதங்களோ அல்லது நாம் வழிபடும் தலைவர்களோ “மனிதர்கள் அனைவரும் சமம்” என்று நமக்கு உரத்துச் சொன்னாலும் அதை நம்பி ஏற்றுக்கொள்ளும் நம் மனம் நமக்குக் கீழ் நாலுபேரைச் சின்னஞ்ளசிறியவர் களாக்கி விடவே துடிக்கிறது.
அதற்காகவே முட்டி மோதி பட்டம், பதவி, பணம் போன்றவற்றைத் தேடி, ஓடிப் பெற மனம் அலைபாய்கிறது.  எதுவுமே முடியாவிட்டால் ஜாதி, நிறம், இனம் போன்ற சொத்தைக் காரணங் களைக் காட்டி நம்மை உயர்த்திக் கொள்ளவே மனம் துடிக்கிறது.
கிறிஸ்து இயேசுவுக்குள் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் ...  சமமான வர்கள் என்று விசுவாசத்தோடு காலை, மாலை திருப்பலி மற்றும் செபங்கள் வழியாக எவ்வளவுதான் சொல்லி வந்தாலும் அல்லது கேட்டு நின்றாலும் அடுத்தக் கனமே நமக்கும் கீழ் நாலு பேரையாவது சின்னஞ்சிறியவர் களாக்கி ஆதிக்கம் செலுத்தும் சின்னப் புத்தியில்தான் நாம் சிக்குண்டு கிடக்கிறோம்.
ஆதிக்க மனதோடு அடுத்தவரை அடிமைப்படுத்துவதில் சுகம் கண்டு பழகிப் போய்விட்ட நம்முள் நற்செய்தியும் அது தந்த விழுமியமும்கூட தோற்றுப் போய்க் கிடக்கிறது.
அதனால்தான் மதர், மதர் ஜென்ரல், சுப்பீரியர் (அப்படின்னா மற்றவர்கள் எல்லாம் இன்பீரியர் என்று அர்த்த மாகுதே) சுப்பீரியர் ஜென்ரல், பாதர், ரெக்டர், பி­ப், ஆயர் போன்ற நாம் பயன்படுத்தும் சொல்லாடல்களைத் திருச்சபையில்  இன்றும் நம்மால் விட்டுவிட முடிய வில்லை.  இந்த நிலையில் இது போதா தென்று மூச்சுக்கு மூச்சு ரெவெரன்ட் போட்டே விளிக்க வேண்டுமென்றும் மனம் விரும்பி நிற்கிறது.
இப்படியாக எப்படியாவது பிறரை விட நம்மை மேம்படுத்திக் காட்டியோ அல்லது பிறரை நம்மைவிட கீழ்ப் படுத்தியோ சிறியவர்களாக்கிவிட துடிக்கும் இந்த மனநிலையைப் பார்த்துதான் இறைமகன் இயேசு ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்கின்றார்.
அது வெறும் எச்சரிக்கை ஒலி அல்ல ...  குரல் அல்ல ...மாறாக இந்த மன நிலையில் மாட்டித் தவிக்கும் நமக்கு அவர் கொடுக்கும் ஒரு பொறுப்பு, கடமை அது.
எப்படியாவது எவரையாவது ஆதிக்கம் செய்ய  பெரிய மனுசன் தோரணை காட்டிட ஆளாய் பறக்கும் மனிதனே  மனசே ...
நீ அப்படி ஆக விரும்பும் போதெல்லாம் இந்தப் பொறுப்பையும் கடமையையும் நீ உன் கூடவே ஏற்றுக் கொள்!  என்று நமக்குப் புதிய கட்டளை கொடுக்கின்றார்.
“இச்சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாய் இருப்பவன் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி . . .” என்கிற இறைமகன் இயேசுவின் இந்தக் கூற்றில் அந்தப் பொறுப்பு, கடமை நமக்கு உணர்த்தப் படுகிறது.
ஓ மனிதனே!  மனசே!  நீ யாரை வேண்டுமானாலும் உன்னைவிட சின்னஞ்சிறியவனாய் ஆக்கிக் கொள் ... அவர்களைவிட பெரியவனாய் உன்னைக் கருதிக் கொள்.
ஆனால் அப்படி செய்கிற நீ உன்னால் ஆக்கப்பட்ட அந்தச் சின்னஞ் சிறியவர்களுக்கு இடறலாய் இல்லாமல் நல்ல முன்மாதிரியாய் இருக்கவும் உறுதி கொள் என புதிய பொறுப்பைக் கொடுக்கிறார்.
அப்படி இல்லாதபொழுது “உன் கழுத்தில் எந்திரக் கல்லை கட்டி ஆழ் கடலில் உன்னைத் தள்ள நேரிடும்” என மிக அதிகப்பட்சமான தண்டனையை அறிவிக்கிறார்.
மன்னிக்கும் தேவன், மனிதனுக்கு மன்னிக்கச் சொல்லித் தந்த அந்த இறை மகன் வாயிலிருந்து வந்த மிக மிக அதிகப்பட்ச தண்டனையைக் கவனித்தால் அவர் நமக்கு வழங்கும் அந்தப் பொறுப்பின் மகிமை புரியும்.
எனவே எப்பொழுதெல்லாம் நாம் பிறரைச் சின்னஞ்சிறியவராக்கி மேலான வர்களாய் நம்மை ஆக்கிக் கொள்ள விரும்புகிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் அந்த சின்னஞ்சிறியவர்களுக்கு இடறலாய் இல்லாமல் “சரியான முன்மாதிரியாய்” இருக்கும் மிகப்பெரிய பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? என சிந்திப்போம்.  அந்த பொறுப்பு உணர்வு தரும் செயல்பாடுதான் உண்மையான மேன்மையை நமக்குத் தரும்.  
அப்படி பொறுப்பாக நடந்து கொள்ள நம்மால் முடியாது, நமக்கு கஷ்டம் என உணர்ந்தால் நாம் மேலானவர்களாக  மேன்மை பொருந்திவர்களாக ஆக ஆசைப்படுவதை நிறுத்துவோம்.  ஏனெனில் கழுத்தில் பாறாங்கல்லுடன் ஆழ்கடலில் தள்ளப்படுவதைவிட இருக்கும் இடத்தை உணர்ந்து புரிந்து நடந்து கொள்வதே நலம்!


எஸ். எரோணிமுஸ்

புனித பிரிஜிட் என்ற புனிதை

திருச்சபைப் புனிதர்களின் வரிசையில் இருக்கிறார்கள்.  வாலிப வயதை அடைந்தபோது கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த விசுவாசத் தின் நிமித்தம் தன் கன்னிமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார்கள்.
செல்வக் குடும்பத்தில் பிறந்து உயர்ந்த மதிப்பில் வாழ்ந்த அவரின் தந்தை பிரிஜிட்டின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  மேலும் பிரிஜிட் இயற்கையிலேயே அழகான முகத்தையும் கொண்டிருந்தார்கள்.  எனவே அநேக வாலிபர்கள் அவர்களைத் திருமணம் செய்ய விரும்பினார்கள்.
பிரிஜிட் இயேசுவிடத்தில் ஜெபித்தார்கள்.  இயேசுவை மட்டுமே ஒப்பற்ற செல்வமாய்க் கொள்ளவும், ஈடு இணையற்ற இறைவனாய் கொள்ளவும் விரும்பினார்கள்.  தன் முக அழகு பாதிக்கப்பட வேண்டுமென இறைவன் இயேசுவிடம் ஜெபித்தார்கள்.
ஒரு நாள் அவர்களின் கண்ணில் புண் ஒன்று தோன்றியது.  அதன் விளைவாய் முக அழகு மறைந்தது.  அவரின் தந்தையும் கன்னியர் மடம் செல்ல அனுமதித்தார்கள்.  கன்னியர் மடம் நுழைந்தவுடன் புண் மறைந்தது.  முக அழகு திரும்பவும் வந்தது.  குறிப்பாக அவர்கள் வார்த்தைபாடு கொடுத்த நாளில் தெய்வீக ஒளி அவர்களின் முகம் முழுவதும் பரவி இருந்ததை அநேகர் கண்டார்கள்.
புனித பவுல் தன் இறை அனுபவத்தை இவ்வாறு எழுதுகிறார்: “ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவை அறிதலாகிய ஒப்பற்ற செல்வத்தின் பொருட்டு உலகைச் சார்ந்த அனைத்தையும் குப்பை எனக் கருதுகிறேன்” என்கிறார் (பிலி 3:8).
லூக் 5:1-11; 27-32 வரை வாசிக்கும் பொழுது முதல் நான்கு அப்போஸ்தலர்களைப் பற்றியும், லேவி என்ற மத்தேயுவின் அழைப்பைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம்.


ஆண்டவர் இயேசு அதிகாலைப் பொழுதில் கெனெசரேத்து ஏரிக்கரைக்குச் சென்று நின்று கொண்டிருக்கிறார்.  இளம் சூரியனின் பொன் கதிர்கள் கடல் முழுவதும் பரவி இருக்கிறது.  செம்படவர்களாகிய பேதுருவும் சீமோனும் இரவு முழுவதும் பாடுபட்டு மீன்கள் கிடைக்காத நிலையில் இயேசுவின் சொல்லை நம்பி மீண்டும் வலைகளைப் போடும் போது ஏராளமான மீன்களைப் பிடிக்கிறார்கள்.  அவர்களின் வலையை இழுக்க யோவானும் யாகப்பரும் வருகிறார்கள்.
இயேசுவின் மகிமை வாழ்வை உணருகிறார்கள்.  அவர்கள் நால்வரையும் இறைப்பணிக்காக அழைத்தபோது அவர்கள் “யாவற்றையும் துறந்து அவரைப் பின்தொடர்ந்தார்கள்” (லூக் 5:11) எனக் காண்கிறோம்.
லேவி என்ற சுங்கத் துறையின் அதிகாரியாய் மத்தேயு இருக்கிறார்.  மிகுந்த செல்வந்தர், உயர்குடிப் பிறப்பைச் சார்ந்தவர், மற்றவர்களின் மதிப்பில் உயர்ந்தவராய் இருந்தார்.  இயேசு அவரை இறைப் பணிக்காக அழைத்த போது அவரும் “அனைத்தையும் விட்டு விட்டு அவரைப் பின் சென்றார்” (லூக் 5:23) எனக் காண்கிறோம்.
இயேசுவை நாம் ஒப்பற்ற செல்வ மாகவும், மகிழ்வாகவும், வாழ்வின் அனைத்து நிறைவாகவும் கருதி நம் இதயத்தை இறைவன் இயேசுவுக்கு அர்ப்பணமாக்கும்போது இயேசுவே நமக்குப் போதுமானவராய் இருக்கிறார் என்பதை உணருவோம்.
புனித அசிசி பிரான்சிஸ் (1181-1226) வாலிப வயதில் உலக இன்பத்தில், செல்வச் செழிப்பில் மூழ்கியவராய் வாழ்ந்தவர்தான்.  ஆனால் குற்றமற்ற இவர் அவரது ஊரில் ஏற்பட்ட கலவரத்தால் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  சிறை அனுபவம் வாழ்வின் வெறுமையை, நிலையற்ற உலக இன்ப வாழ்வையும் உணர்த்தியது.  சிறைவாழ்வை விட்டு வெளியே வந்தவர் சில மாதங்கள் நோயின் கொடுமையில் வாடினார்.  நோயின் அனுபவம் நிலையற்ற செல்வச் செழிப்பையும், மறையும் உடல் இன்பத்தையும் உணர்த்தியது.
அனைத்தையும் துறந்தார்.  வெறுமை வாழ்வை மேற்கொண்டார்.  தரித்திரராய் தன் 27ஆம் வயதில் வாழ்ந்தார்.  அவரின் தவ வாழ்வும், ஒடுக்க உபவாச ஜெபமும் இயேசுவின் அன்பால் அவரை நிறைத்தன.  வெறுமையில் ஒரு மகிழ்வைக் கண்டார்.  வறுமை வாழ்வில் நிறைவைக் கண்டார்.
அவரின் துறவு வாழ்வால் கவரப்பட்டு பெர்னார்ட் என்ற அசிசி நகர் செல்வந்தரும் பிரான்சிஸின் தரித்திர வாழ்வைப் பின்பற்ற விரும்பினார்.  பிரான்சிஸ் அவரிடம் “ஆலயம் செல்வோம்;  வேதாகமத்தைத் திறப்போம்; அதன்படியே வாழ்வோம்” என முடிவாகக் கூறினார்.
ஆலயம் செல்லும் வழியில் பீட்டர் கத்தானி என்பவரும் பிரான்சிஸின் வாழ்வைப் பின்பற்ற நினைத்து ஆலயத்திற்கு அவர்களுடன் சென்றார்.
ஆலயம் நுழைந்து பீடத்திலிருந்து வேதாகமத்தைத் திறந்தபோது முதலில் அவர்களுக்குத் தென்பட்ட வசனம் மத் 19:21.
“நீ நிறைவு பெற விரும்பினால், போய் உன் உடைமைகளை விற்று ஏழை களுக்குக் கொடு.  வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும்.  பின்னர் வந்து என்னைப் பின்செல்” என்பதுதான்.
இரண்டாவதாக வேதாகமத்தை மூடியபின் திறக்கும் பொழுது அவர்களுக்கு எதிர்பட்ட வசனம் இதுதான் லூக் 9:23 தான்.  “என்னைப் பின் செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும்” என்ற இயேசுவின் சொற்கள்தான்.
மூன்றாம் முறையாக வேதாகமத்தைத் திறந்து வாசித்தபோது அவர்களின் கண்களில் எதிர்பட்ட வசனம் லூக் 9:3.  “வழிப்பயணத்திற்குக் கோலோ, வில்லோ, உணவோ, பணமோ ஒன்றும் எடுத்துச் செல்லாதீர்கள்” என்ற இயேசுவின் வசனங்கள்தான்.  மூவரும் அனைத்தையும் விற்றுவிட்டு ஏழை களாய் மாறினார்கள்
இவர்கள்தான்புனித பிரான்சிஸ் தொடங்கிய துறவு சபையின் முதல் அப்போஸ்தலர்களாய் மாறினார்கள்.  கப்புச்சின் சபையும் பிறந்தது ஆமென்.


Fr. ச. ஜெகநாதன், கொடைக்கானல்