இதயம் பேசுகிறது

“எல்லோருக்கும் பணிவான வணக்கமுங்க.  நிச்சயம் நீங்க எல்லாரும் என்னை மறந்திருக்க மாட்டீங்க என்ற நம்புகிறேன்.  நான்தாங்க உங்க வீட்டுப் பிள்ளை இதயேந்திரனின் இதயம் பேசறேங்க.  போன வரு­ம் செப்டம்பர் 20-ம் தேதி உங்கள எல்லாம் விட்டு பிரிந்தேனே ஞாபகம் இருக்கா?  அந்தப் பிரிவு பலருக்கும் வலியைத் தந்தாலும் இந்த தமிழ் நாட்டின் ஒவ்வொரு குடும்பத் திற்கும் நான் செல்லப்பிள்ளை ஆயிட்டேன் தானே!  அது எவ்வளவு சந்தோ­ம் உயிரோடு இருந்திருந்தா உங்க யாவருடைய அன்பையும் பாசத்தையும் உணராமல் இருந்திருப்பேனே”.
“சந்தோ­த்தை தவிர எதையுமே அறியாத பருவம்.  மனம் முழுக்க உற்சாகம்.  கண் நிறைய கனவுகள்.  வண்டியில் அமர்ந்தாலோ சிறகை விரித்து பறக்கும் உணர்வு.  நண்பர்கள மத்தியில் பேசப்படுபவனாய், நாட்டின் நல்ல குடிமகனாய், பெற்றோர்க்கு நல்ல பிள்ளையாய். பள்ளிக்கு நல்ல மாணவனாய். அன்பு தம்பிக்கு பாசமுள்ள அண்ணனாய் இப்படி எத்தனை முகங்கள் எனக்கு.  ஆனா எல்லா முகங்களும் மறைந்து இதயேந்திரன் என்ற முகம் மட்டுமே நிலைத்து விட்டது.  என் பெற்றோர்க்கு மட்டுமல்ல. நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு செல்லப் பிள்ளையானேன்”.
“ஒரே தம்பி.  வெளி உலகிற்கு தெரியாத சீண்டல்கள்.  சண்டைகள் போட்டா போட்டிகள்.  ஆனா எதிர்பாராம நான் இப்பவும் துடித்துக் கொண்டிருக்கும் பார்வதி என்னும் சின்னத்தங்கையின் உறவு.  எந்தப் பிறவியின் புண்ணிய பலன் இது.  மரிக்கும் மனிதனால்கூட பலபேரை வாழ வைக்க முடியும் என்னும் அதிசயம்.  என் கண்களால் பார்க்கிறேன்.  உடன் உறுப்புகளால் வாழுகிறேன்.  இதயத்தால் துடிக்கிறேன்.  ஒருவனாய் பிறந்து எட்டு பேராய் வாழ்கிறேன்”.
“புதுப்புது உறவுகள்.  ரத்த பந்தமே இல்லாத சொந்தங்கள் மருத்து உலகின் சவாலாய் வாழ்ந்து வருகிறேன்.  என் பெற்றோர்க்கு ஈடுசெய்ய முடியா இழப்புதான்.  ஆனால் என்னால் எத்தனை மனிதர்கள் இன்று உயிருடன்.  அந்த வகையில் நான் படைத்தவனா?  காத்தவனா?  புரியவில்லை என்னைத் தொடர்ந்து எத்தனைப் பேர்  தங்கள் உறவுகளின் பிரிவை பெரிதாய் எண்ணாமல், மூளைச்சாவு அடைந்த வர்களின் உடலை தானம் செய்து அதன் மூலம் பலபேரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  எங்குப் பார்த்தாலும் அண்ணன் எனக்கு பாசமுள்ள பள்ளி மாணவ மாணவியரின் அஞ்சலிகள்.  என் படத்தைப் பார்த்தாலே கண்கலங்கும் நல்ல இதயங்கள்!”.
“நான் வசித்த உடம்பு இன்று இல்லாவிட்டாலும் இதயமுள்ள மனிதர் உள்ளவரை நானும் இவ்வுலகில் வாழ்வேன்.  எவ்வளவு இனிய பிறவி இந்த மானிடப் பிறவி!  பந்த பாசங்களால் இணைந்த வாழ்வு.  அனுதினமும் இனிமை தரும் சம்பவங்கள், கனவுகளும் கற்பனைகளும் எங்கோ ஒரு உலகில் நம்மை வாழ வைத்தாலும் யாருமே மரணம் என்பதை எண்ணிப் பார்ப்ப தில்லை.  காரணம் இறைவன் தந்த இந்த வாழ்வு மகிழ்ச்சியாய் வாழத்தான்.  என் பெற்றோரும் சாதாரண உணர்வுகளுக்கு இடமளித்திருந்தால் இன்று நான் உங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்க மாட்டேன்”.
“வாலிப பிள்ளைகளே, சகோதர சகோதரிகளே வாலிபம் என்பது ஆண்டவன் அருளிய ஆசீர்வாதம்.  அந்த வாலிப வயதில் மிகுந்த ஜாக்கிரதையாக வாழ வேண்டும்.  உடலால் மிகுந்த நிதானம் மிகுந்தவர்களாகவும் மனதால் நன்மை தீமை ஆய்ந்தறிந்து நடப்பவர் களாகவும் இருக்க வேண்டும்.  பெற்றோர்க்கு கடமை ஆற்றும் பிள்ளைகளாக வாழ வேண்டும்.  கல்விக் கடனாக நன்மை செய்ய வேண்டும்.  நம்மை வாழவைத்த தாய் நாட்டிற்கு, நமது சமுதாயத்திற்கு நாமும் நம்மாலான நன்மையை திருப்பி தரவேண்டும்.  இறைவன் தந்த உடலையும் உயிரையும் பத்திரமாக அவரிடமே ஒப்படைக்க  வேண்டும்”.
“எல்லாவற்றிற்கும் மேலாக (இயற்கையாலன்றி செயற்கை ஊனங்களை தவிர்க்க வேண்டும்.)  உடலால் ஊனப்பட்டவர்கள் மனதால் ஊனப்பட்டவர்கள் படும் கஷ்டங்களை நினைத்துப் பார்த்து (இறைவன் அளித்த ஊனமற்ற உடலை உயர் பொக்கி­மாக போற்றி பாதுகாக்க வேண்டும்).  கிடைத்த நல்ல நல்ல வாய்ப்புக்களை முறையாய் பயன்படுத்தினால் இப்பிறவிப் பலனை அடைவோம்.  அர்த்தமுள்ள வாழ்வு ஆயிரம் நன்மைகள் செய்யும்”.
“நீங்க எல்லாரும் இவ்வுலகில் சந்தோ­மா, சமாதானமா வாழனும்.  உங்களுக்கு கிடைத்த வாழ்வை எவ்விதத்திலும் பயனுள்ளதா வாழனும்.  அப்பத்தான் என் ஆத்துமாவுக்கும் சந்தோ­ம் இருக்கும்.  எங்க அம்மா அப்பாவுக்கு கடமை செய்ய முடியாத மகனாய், அவங்களை நிராதரவா விட்டுச் சென்ற சோகம் இருந்தாலும், நீங்க எல்லாம் அவங்களுக்கு பக்க பலமா, உறவா இருப்பதில் ஆறுதல்.  என் இதயம் உங்கள் அன்பில் என்றும் இளைப்பாறும்.  உங்களுக்காக இறைவனிடம் என்றும் மன்றாடும்”.
இப்படிக்கு
இதயேந்திரனின் இதயம்
- சாந்தி ராபர்ட்ஸ், உதகை

மறைமாவட்ட வழிக்காட்டும் குழு - இன்றைய குருத்துவம்


குருகுலத்தாரிடம் மக்கள் எதிர்பார்ப்பதற்கும் குருக்களின் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க குருக்கள் ஆண்டில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எவை? என்கிற கேள்விக்கான விடையைத் தேடியபொழுது குருக்கள் முதலில் தாங்கள் இருக்கும் நிலையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு அதற்காக வருந்துவதே மாற்றத்திற்கான முதல் படியாக அமைய முடியும் எனச் சென்ற இதழில் சுட்டியிருந்தோம்.  இது தனிப்பட்ட அளவில் ஒவ்வொரு குருவானவரிடமும் ஒரு சுய தேடலாகவோ, தியானங்கள் வழியாகவோ நடைபெற வேண்டும்.  நடைபெறுவதற்கான வாய்ப்பு களை அதிக அளவில் இவ்வாண்டில் மறைமாவட்ட நிர்வாகமோ அல்லது குருக்கள் பேரவையோ ஏற்படுத்தித்தர வேண்டும்.  அதுவே குருக்கள் ஆண்டில் அர்த்தமுள்ள பணியாக அமையும்.
அடுத்ததாக, ஒரு குருவின் தனிப் பட்ட வாழ்விலோ அல்லது பணிப் பொறுப்பிலோ பிரச்சனைகள் உருவாகும் பொழுது அப்பிரச்சனை பத்திரிக்கை களிலோ அல்லது ஊடகங்களிலோ வந்து சந்தி சிரிக்கும்வரை  அதைப்பற்றிச் சிறிதும் அக்கறை செலுத்தாமல் ஒவ்வொருவரும் நமக்கென்ன? எனக் கண்டு கொள்ளாமல் இருக்கும் இன்றைய நிலையை மாற்றிட வேண்டும். மாறாக அப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே அரசல்புரசலாக அறியவரும் காலத்திலேயே அது குறித்து விபரம் திரட்டி விசாரணை செய்து வழிகாட்டிட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.   இதனால் பிரச்சனைக் குள்ளாகும் குருக்கள் மற்றும் மக்கள் மன வேதனையுற்று  விரக்தியின் விளிம்பிற்கே செல்லும் வினோதங்கள் விடைபெறும்.  திருச்சபையை விட்டே வெளியேறும் மக்களும் பணிவாழ்விலிருந்து விடைபெறும் குருக்களும் இதனால் இல்லாமல் போவர்.
எனவே குருக்களின் பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்யவும், வழி காட்டவும் மறைமாவட்ட வழிகாட்டும் குழு  மறை மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும்.
குருக்களின் பணி வாழ்வில் பிரச்சனைகள், சச்சரவுகள், சங்கடங்கள் ஏற்படும்பொழுதெல்லாம் இக்குழு தலத்திற்குச் சென்று ஆய்வு செய்து உண்மை நிலையைக் கண்டறிந்து தம் ஆய்வறிக்கையை ஆயரிடம் சமர்ப்பித்து ஆயருக்கு உதவிடவும், ஆலோசனை நல்கிடவும் வேண்டும்.  அதற்கு அனைவரும் உட்பட்டு நடந்திடவும் வேண்டும்.
மேலும் குருக்கள் தம் பணிகளை முறையாகச் செய்திடவும் இக்குழு வழிகாட்டிட வேண்டும்.  உதாரணமாக ஒரு குரு தம் பங்கில் பங்குப் பேரவை, பங்கு நிதிக்குழு போன்ற மக்களின் அமைப்புகளை பெயர ளவிலோ அல்லது அதற்குரிய வகையிலோ அமைத்துக் கொள்ளாது உண்மையான, நேரிய சிந்தனையில் அமைத்து தம் பங்குப் பணியினைத் தல மக்களுக்கும் பகிர்ந்து கொடுத்து சீரிய வழியில் செயல்படுகிறாரா? என்பதைக் கண்டறிவது, அப்படியில்லாத பொழுது அதற்குரிய கால அவகாசம் கொடுத்து செயல்படுத்திட தூண்டுவது போன்ற ஆக்கப்பூர்வ மக்கள் நல செயல்பாடுகளில் இக்குழு வழிகாட்டிட வேண்டும்.
சுருங்கக் கூறின் ஒரு குருவான வரால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு பணியும், செயல்பாடும் மக்களுக்காக, மக்களின் நலத்தை மையப்படுத்தியே இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் இக்குழு முணைப்பாகச் செயல்பட வேண்டும்.  தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளைவிட மக்கள் நலம் ஒன்றே பெரிதாகக் கருதப்பட வேண்டும்.
இக்குழு வழக்கம் போல் குருக்களின் பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட குழுவாக அமையாமல், திருச்சபையின் வளர்ச்சியில் அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட ஆன்மீக தேடல் உள்ள, படித்த அல்லது விபரமறிந்த திருச்சபையின் அடிக்கல்லாக நின்று அதனைத் தாங்கிடும் பொது நிலையினர் பிரதிநிதிகளையும், துறவிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் அக்குழுவில் திருச்சபையின் அதிக விழுக்காடு எண்ணிக்கை கொண்ட பொது நிலையினர் பிரதிநிதிகள் ஆறு நபர்களும் மறைமாவட்ட குருக்கள் மற்றும் துறவிகளின் பிரதிநிதிகள் தலா மூன்று நபர்களையும் கொண்ட 12 நபர்கள் இடம்பெற்று 5 வருடக் காலத்திற்கு ஒரு முறை இக்குழு உறுப்பினர்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
இக்குழுவின் ஆலோசனையை ஏற்று திருச்சபையின் மறைமாவட்ட நிர்வாகம் முடிந்தவரை செயல்படவேண்டும்.  இக்குழுவின் ஆலோசனையை ஏற்க முடியாத சூழல் ஏற்படும்பொழுது மறை மாவட்ட ஆயர் தமது “வீட்டோ” அதிகாரத்தால் அதனை நிறுத்தி வைக்கலாம்.  ஆனால் தாம் எத்தகைய சூழலில், எதன் அடிப்படையில் இத்தகைய முடிவை எடுக்க நேரிட்டது என்பதைத் தன் மறைமாவட்ட மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் அவசியமாகத் தேவைப்படுகிறது.
சமூகப் பிராணியான மனிதன் தன் வாழ்க்கை ஓட்டத்தில் தடம் புரண்ட தருணங்களிலும், தடுமாறிய நேரங்களிலும் சமூகத்தைப் பாதிப்பிலிருந்து காப்பாற்ற விரும்பி சில நியமனங்களையும் விதிகளையும் வகுத்து வாழ்ந்து வருவதே வரலாறாக இருக்கிறது.  அதுவே தனி மனிதர்களின் தான்தோன்றித்தன நடவடிக்கைகளுக்குத் தடையை ஏற்படுத்தி சமூகத்தினை நாகரீக வழியில் நடத்தி வருகிறது.
அந்த வகையில் ஒரு சமூகத்தின் ஆன்மீக வழிகாட்டிகளான குருக்கள் அவர்தம் வாழ்வில் தடுமாற்றத்தையும், தடம்புரளுதலையும் தாராளமாய்க் காண்கின்ற நேரத்தில் தாமாகவே முன் வந்து தம்மை நெறிப்படுத்த இத்தகைய நியமனங்களையும் விதிகளையும் உருவாக்குவது, குழுக்களை அமைத்து அதற்குத் தம்மை உட்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதே தர்மம்.  இதுவே தகுதியும் நீதியுமாகும்.  மீடப்புக்குரிய செயலுமாகும்.  அதற்கு இந்தக் குருக்கள் ஆண்டு உதவி புரியட்டும்.
எஸ். எரோணிமுஸ்,

ஆன்மீகம்

புனித தொன்போஸ்கோ (1815-1888) குருத்துவ மாணவராய்ச் செல்லும் சமயத்தில் அவரின் தாயார் மார்கரேட் தன் மகன் தொன்போஸ்கோவை மண்டியிட வைத்து ஆசீர்வதித்து அனுப்பினார்கள்.
புனித தொன்போஸ்கோ மண்டியிட்டு தன் தாயின் ஆசீர் பெறும் வேளையில் அவர்கள் இவ்வாறு தன் மகனுக்கு அறிவுரை கூறினார்கள்.   “தொன்போஸ்கோ, நீ ஆண்டவர் இயேசுவின் இறைப் பணியைச் செய்யப் போகிறாய்.  இந்த இறைப்பணியின் புனிதத் தன்மைக்கு உன்னால் களங்கம் வராமல் பரிசுத்தமாய் நடந்து கொள்.  நீ அணிய இருக்கும் திருவுடை புனிதமாய் இருக்க உன் தூய்மையைக் காத்துக் கொள்.
உன் நெறி தவறிய வாழ்வினால் இக்குருத்துவத்திற்கும் களங்கம் ஏற்படுத்து வாயயனில் அதற்கு முன்பே வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடு.  வந்து விவசாயம் செய்.  நீ கெட்ட குருவானவர் எனப் பெயர் எடுப்பதை விட நல்ல விவசாயி என்று பெயர் பெறுவது நல்லது.  மாதாவின்மீது பக்தி கொண்டிரு.  மாதாவின் பக்தியை உலகில் பரவச் செய் ” என்றார்கள்.
புனித தொன்போஸ்கோ தன் தாயின் சொற்படியே நடந்தார்.  புனித குருவாய் வாழ்ந்து காண்பித்தார்.  தன் தாயைத் தனக்குப் பணி செய்கிறவராய் வைத்துக் கொண்டார்.  தன் தாயின் வாழ்வும், அவரின் பிறர் நேசமும், இறைப்பற்றும், தூய்மை வாழ்வும் இவரைப் புனிதமாய் வாழ நெறிப்படுத்தின.  கைவிடப்பட்டு, ஆதரவற்ற சிறுவர்களை அழைத்து அன்பு இல்லம் அமைத்து வாழ்வின் ஒளியாய்த் திகழ்ந்தார்:  சலேசிய சபையை உருவாக்கினார்.  அவரின் ஆன்மீக சிறுவனும், மாணவருமாய் இருந்த புனித தோமினிக் சாவியோ, திருச்சபையில் இன்னொரு புனிதராய் விளங்க புனித தொன்போஸ்கோவின் புனிதமே காரணமாய் இருந்தது.
ஆண்டவர் இயேசுவையும் கவர்ந்து மிக உயர்வாய்க் கருதப்படுபவர் ஒருவர் இருக்கிறாரென்றால் அவர் திருமுழுக்கு யோவானே.  அவரைக் குறித்து ஆண்டவர் இயேசு இவ்வாறு குறிப்பிடுகிறார்.  “இறைவாக்கினருக்கும் மேலானவர். பெண்களிடம் பிறந்தவர்களுள் யோவானுக்கு மேலானவர் யாருமில்லை”  (லூக் 7:24-25).
ஆண்டவர் இயேசுவே மிகவும் மதித்து போற்றப்படக்கூடியவராக இருந்தவர் புனித திருமுழுக்கு யோவானே.  இயேசுவின் உள்ளத்தையும் கவர்ந்த அவரின் நற்பண்புகள் என்ன?
இயேசுவின் வருகைக்கு மக்களை ஆயத்தம் செய்ய இறைவனால் முன்னோடியாக அனுப்பப்பட்டவர்தான் புனித யோவான்.  “இதோ! என் தூதரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்.  அவர் உமக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார்”  (மத் 11:10; லூக் 7:27; ஏசா 40:3-4) என்ற இறைவாக்கின்படியே தாயின் வயிற்றிலிருந்தபோதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு இயேசுவின் பிரசன்னத்தில் மகிழ்கிறவராகவே காணப்படுகிறார் (லூக் 1:41, 47).
இறைப்பணியைத் தொடங்குவதற்கு முன்பாக தம்மை ஆயத்தம் செய்ய, இறைப்பணிக்குத் தகுதியுடையவராய் மாற்றிக் கொள்ள 30 ஆண்டு காலம் தவமுனிவரைப் போல் வாழ்வு நடத்துகிறார்.
பரிசுத்த ஆவியின் வல்லமையால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டவராய் அவரிடம் வந்தவர்களுக்கு மனம் திரும்பும் இறைவார்த்தையை வல்லமையோடு அறிவிக்கிறார்.  அவரின் இறைவார்த்தையில்  இருந்த கூர்மை கேட்போரின் உள்ளங்களை ஊடுருவிப் பாய்கிறது.  அவரின் வார்த்தையால் உள்ளம் குத்துண்டவர்களாய் மனம் திரும்பி புதிய  வழ்வின் அடையாளமாய்த்  திருமுழுக்குப் பெறுகிறார்கள்.
இயேசுவுக்கே ஞானஸ்நானம் அருளும் பாக்கியத்தைப் பெற்று பரம  தந்தையின் குரலைக் கேட்கவும் பரிசுத்த ஆவி புலப்படும் வடிவெடுத்து அவர் மீது தங்குவதையும் காணும் பேறு பெறுகிறார் (மாற் 3:9-11).
ஆனால் இயேசுவுக்குமுன் தம்மையே தாழ்த்தி ஓர் அடிமையின் நிலைக்கு உட்படுத்திப் பேசுகிறார் “அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன்” என்கிறார் (லூக் 3:16).  கடைசியில் இயேசுவின் உத்தம ஊழியராய் வேதசாட்சியாகவே மரிக்கிறார் (மத் 14:3-12).
நான் பல வருடங்களுக்கு முன்பு கிராமப்புறப் பங்கில் இறைப்பணி ஆற்றிக் கொண்டிருந்தேன்.  அடுத்த பங்கில் முதிர் வயது அருட்தந்தை ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  ஜெபப்பற்றும், மனித நேயமும், பிறர் மீது அக்கறையும் கொண்டு இறைஅன்பில் நிறைந்து பணி செய்து கொண்டிருந்தார்.  பல நாட்கள் என்னை அவர் இல்லத்திற்கு அழைத்ததினால் ஒரு நாள் அவரைக் காணச் சென்றேன்.  அவர் பங்கில் நுழைவது அதுதான் முதல் தடவை.
ஊரின் கடைசியில்தான் தேவாலயமும் அவரின் அறையும் இருக்கின்றன.  பஸ்ஸை விட்டு இறங்கி நீண்ட தெருவின் வழியாகக் கடந்துதான் அவரின் இல்லம் செல்லமுடியும்.
அவ்வாறு சென்றபோது அத்தெருவில் உள்ள அனைவருமே என்னை விசாரித்து விசாரித்து அனுப்பினார்கள்.  அனைத்தையும் கடந்து அவரிடம் சென்று இதுபற்றிக் கூறியபோது அவர் கூறினார்  “சுவாமி இது நல்லது.  ஏனெனில் எந்த ஒரு பெண்ணும் நம்மைப் பார்க்க எளிதாக வந்துவிட முடியாதல்லவா?” என்றார்.  அவரின் வார்த்தை அவரின் பரிசுத்த நிலையை உணர்த்தியது.  நம் வாழ்விலும் நாம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான வாழ்வாய் வாழ்ந்து காண்பிப்போம்.  ஆமென்.

உலக தொழிலாளர்கள் தினம்

இது உழைக்கும் மக்களின் உணர்வுத் திருநாள்.  ஒவ்வொரு நாளும்  16 மணி நேரத்துக்கும் அதிகமாக ஓய்வு ஒழிச்சலின்றி நோய் நொடிக்கு ஆளாகி, கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளான தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, 8 மணி நேர தூக்கம் என்ற கோரிக்கைகளை முன் வைத்துப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.
அமெரிக்காவின் சிகாகோ நகரத் தொழிலாளர்கள் 1886ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி அன்று ஹே மார்க்கெட் சதுக்கத்தில் கூடினார்கள்.  முன்னதாக மே முதல் தேதி அன்று அமெரிக்காவின் மிகப்பெரும் தொழில் மையங்களில் மாபெரும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.  அந்த  வேலை நிறுத்தத்தின் நோக்கம், வேலை நேரம் 8 மணி நேரமாக இருக்க வேண்டும்.  வேலை நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்.
இந்த வேலை நிறுத்தம் நாடு முழுவதும் பரவியிருந்தது.  வேலை நிறுத்தத்தைத் தோல்வியுறச் செய்ய அமெரிக்க அதிகாரிகள் பலவகையான ஆத்திர மூட்டல்களில் ஈடுபட்டனர்.
மே 4‡ஆம் தேதி ஹே மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.  அதில் ஒரு குண்டு வெடித்தது.
தொழிலாளர்கள் மீதும், தொழிலாளர் தலைவர்கள் மீதும் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது.  இந்த அடக்குமுறை சிகாகோவில் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டது.
நூற்றுக்கணக்கில்  தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.   சிகாகோ கூட்ட நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய 8 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது.  அவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஹே மார்க்கெட் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படா விட்டாலும்கூட அவர்களுக்கு அமெரிக்க அரசு மரண தண்டனை விதித்தது.  ஒவ்வொருவருக்கும் 15 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.
தொழிலாளர்களை அச்சுறுத்த வேண்டும் என்பதுதான் இத்தகைய தண்டனை களின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்தத்  தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதிலும் இருந்து தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.  அமெரிக்கா உலகத் தொழிலாளர்களின் உணர்வுக்கு மதிப்புத் தரவில்லை.
இரண்டு பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.  லிங் என்பவர் சிறையிலேயே மரணம் அடைந்தார்.  பார்சன்ஸ், ஸ்பைஸ், எங்கெல், ஃபி­ர் ஆகிய நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர்.  1887 நவம்பர் 11ஆம் தேதி இந்தத் தூக்குத் தண்டனை நிறை வேற்றப்பட்டது.
ஹே மார்க்கெட்டில் அமைதியான தொழிலாளர் கூட்டத்தில் குண்டு வெடிக்கச் செய்து, போலீசார் பொய் வழக்கு ஜோடித்த இந்தச் சம்பவம் ஹே மார்க்கெட் சம்பவம் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
இதில் தண்டிக்கப்பட்டவர்கள் சிகாகோ தியாகிகள் என்ற புகழுக்கு உரியவர்களாயினர்.  இச்சம்பவம் உலகம் முழுவதும் எதிரொலித்தது.
1889ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற இரண்டாவது அகிலத்தின் முதல் மாநாட்டில், குறிப்பிட்ட ஒரே நாளில் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
1890ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மே முதல் தேதியிலும் உலகத் தொழிலாளி வர்க்கம் மே தின ஆர்ப் பாட்டங்களை, பேரணிகளை, பொதுக் கூட்டங்களை நடத்தத் தொடங்கியது.
இந்த உரிமைப் போராட்டங்கள் இன்றி, தியாகங்கள் இன்றி, இன்றைய தொழிலாளர் உரிமைகளை நினைத்துப் பார்க்கவே முடியாது.  மே தினக் கொண்டாட்டத்தின் மூலம் இழந்த உரிமைகளைப் பாதுகாக்கும் விழிப் புணர்வு மேலோங்கும்.  சாதியாய், மதமாய்ப் பிரிந்து கிடக்கும் தொழிலாளிகள் ஒரு வர்க்கமாய் ஒன்று திரள இக்கொண்டாட்டம் அவசியமாகும்.
- தமிழ்க்கவி

அர்ப்பணிப்பு - ஏன் இந்த அவலங்கள்?

குருத்துவத்தின் வரலாற்று வடிங்களை வகைப்படுத்தும் நேரத்தில், இன்று தொடர்பு ஊடகங்களால் பெரிது படுத்தப்படும் குருக்களின் பாலியல் தொடர்பான குற்றங்களை நாம் ஒதுக்கி வைத்துவிட முடியாது.  குருத்துவ அழைத்தலை இந்தத் தவறுகள் பெரிதும் பாதிக்கின்றன.  ஒட்டுமொத்தமாக அத்தனை குருக்கள் மீதும் அவதூறு பழிகள் சுமத்தப் படுகின்றன.  கத்தோலிக்கத் திருச்சபையையும் அதன் புனிதமான நிலைகளையும் மிகக் கீழ்த்தரமாக சில ‘மீடியா’க்கள் விமர்சிக்கின்றன.
இவையெல்லாம் நடக்கவில்லை என்று மறுக்கவோ அல்லது மறைக்கவோ திருச்சபை விரும்பவில்லை.  இத்தகைய தவறுகளால் எத்தனையோ உள்ளங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எத்தனையோ கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கோபமும் குற்ற உணர்வும் கொண்டு வருந்து கின்றனர்.  அவர்களையெல்லாம் கரிசனையோடு நோக்குகிறது திருச்சபை.
இவற்றிற்கு என்ன காரணம்?  எங்கே தவறு நடந்தது?  குற்றவாளிகளை எப்படி தண்டிக்கலாம்?  இத்தகைய பதர்களை அடியோடு எப்படி வேரறுப்பது?  என்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் திருச்சபைத் தலைவர்கள்  மிக வருத்தத் தோடும் சகிப்புத்தன்மையோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
என்ன காரணங்கள்?
இந்தத் தவறுகளை நாம் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட சமூக மாற்றத்தின்  அடிப்படையால்தான் நோக்க வேண்டும்.  கி.பி.1960 அல்லது 70 ஆண்டுகளில் சுதந்திரம், மனித உணர்வுகளை மதித்தல் என்ற பெயரில் பல இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறைகள் சமுதாயத்தில் வந்தன.  ஓரினத் திருமணங்களும், விவாகரத்துக்களும், கருக்கலைப்பு உத்திகளும் அரசாங்கங் களால் அங்கீகரிக்கப்படும் நிலைக்குச் சென்றன.   இவை திருச்சபை உறுப்பினர் களையும் வெகுவாகப் பாதித்தன.
கத்தோலிக்கத் திருச்சபையால் இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் ஏற்பட்ட சுதந்திர அலைகள், தனிநபர் உணர்வுகளையும் உரிமைகளையும் மதித்தல் போன்ற நல்ல பண்புகள் சிலரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டன.  தவறுகள் நடந்தபோது அவற்றைச் சுட்டிக்காட்டி, திருத்தும் தைரியம் சில திருச்சபைத் தலைவர்களுக்கு இல்லாது போனது.  தனி  நபரின் வாழ்க்கையில் தலையிட உரிமையில்லை என்ற பொதுவான விதியின் அடிப்படையில் தவறுகள் மறைக்கப்பட்டன.
1990களில் பெரிய தவறுகள் நடந்து விட்டதாக உணர்ந்து குருத்துவப் பயிற்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று  திருச்சபை ஆதங்கப்பட்டது.  குரு மாணவர்களைத் தேர்ந்தெடுத்தல், பயிற்சி தருதல், பணிக்கு அனுப்புதல் போன்றவை குறித்த ஆய்வுகள் திருச்சபையில் உள்ள அத்தனை குருமடங்களிலும் நடத்தப் பட்டு அரிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.
அழைத்தலில் பாதிப்பு இல்லை
இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குருத்துவம் குறித்த புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது.  ஏராளமான இளைஞர்கள் குருத்துவக் கல்லூரிகளுக்கு வருகின்றனர்.  நான் பணியாற்றும் மறை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒன்பது பேர் குருத்துவத் திருநிலைப்பாடு பெற்றனர்.
அவர்களிடம் குருக்கள் பற்றிய பாலியல் புகார்கள் பற்றிக் கேட்டபோது, இருபது முப்பது வருடங்களுக்கு முன் ஏற்பட்ட விபரீதம் இது.  இன்று திருச்சபையில் நிலைகள் மாறிவிட்டன.  மிக நல்ல குருக்களைத்தான் எங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறோம் என்று பதில் கூறுகின்றனர்.
வரலாறு தரும் பாடங்கள்
வரலாற்றில் இது போன்ற தவறுகளும் அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளும் பல்வேறு கால கட்டங்களில் நிகழ்ந்திருக்கின்றன.  மத்திய காலங்களில் ஒரு சில குருக்களின் முறைகேடான வாழ்க்கை திருச்சபையில் பிளவுகளும் பிணக்குகளும் ஏற்படக் காரணமாக இருந்திருக்கின்றன.  திருச்சபை விழித்தெழுந்து செயலாற்றி தவறுகளைச் சரி செய்தது.  எந்தவொரு சமுதாய அமைப்பிலும் சில தவறுகள் நிகழ்வது நடைமுறையே!  ஆனால் தவறுகளை எந்தவிதத்திலும் நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.  தவறுகளைத் தாழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு களைய முயல்வதுதான் இறைவன் காட்டும் வழி.
மனித பலவீனங்களைச் சுட்டிக் காட்டி புதிய வழிகளைக் காட்டுவது விவிலிய இறைவனின் விசித்திரமான செயல்.  திருச்சபை வரலாற்றில் இவைதான் நிகழ்ந்திருக்கின்றன.  தவறுகளுக்காகக் கூனிக்குறுகி நிற்கும் திருச்சபை, இத்தகைய தவறுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக தீவிரமான செயல்பாடுகளில் இறங்கியுள்ளது.
மணத் துறவு தேவையா?
இந்தத் தவறுகளைக் கண்டு குமுறும் சிலர், குருக்களுக்கு மணத்துறவு தேவை தானா?  என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
மணத்துறவு இறைவன் தருகின்ற சிறந்த கொடை.  ஒரு சிலர் தவறு செய்வதன் காரணமாக மணத்துறவைக் குருக்களிட மிருந்து  எடுத்துவிட வேண்டும் என்று சொல்வது சரியான வாதமல்ல.  கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலமாக, இறைவன் மணத்துறவு என்ற கொடையைக் குருக்களுக்கு வழங்கி அவர்கள் வாழ்வுக்கு ஒளியூட்டிக் கொண்டு இருக்கிறார்.
மணத்துறவில் இறையாட்சிப் பணி செய்யும் அற்புதமான இறையாற்றலைக் கத்தோலிக்கத் திருச்சபை கொடையாகப்  பெற்றுள்ளது.  எந்தச் சூழலிலும்  இந்தக் கொடையை இழப்பதற்குத் திருச்சபை தயாராக இல்லை.
மணத்துறவு என்ற இறைக் கொடையைப் பேணி வளர்ப்பதில் திருச்சபை முழுவதும் பங்கேற்க வேண்டும்.  குடும்பத்தில் பெற்றோர் இந்தக் கொடையைப் பெற்ற தங்கள் பிள்ளைகளை வழிநடத்தவேண்டும்.  திருச்சபை சமுதாயத்தில் இந்தக் கொடையைப் பெற்ற மாணவர்களையும் பணியாளர்களையும் பக்குவமாக வளர்ப்பதற்கு ஆவண செய்யவேண்டும்.  ஆயர்களும்,. சபைத் தலைவர்களும் இத்தகைய கொடைகள் பெற்றவரை மதித்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, தந்தைக்குரிய அன்போடு வழிநடத்த வேண்டும்.
இத்தகைய ‘மீடியாக்களின் அவதூறுகள்’ திருச்சபை முழுமைக்கும் ஏற்பட்டிருக்கும் சவால்கள்.  அனைவரும் இணைந்து குருத்துவ வாழ்வின் நிலையை உயர்த்த, உருமாற்ற உதவ வேண்டும் என்பதே வரலாறு நமக்கு விடுக்கும் அழைப்பு.
    (தொடரும்)
அருள்பணி. வலன்டின்

உழைப்பின் பலன்

இறையழைத்தல் பணியின் விறுவிறுப்பான நாட்களைப் பல்வேறு எதிர்பார்ப்புகளோடும், நம்பிக்கையோடும் இம்மாதத்தில் எதிர்கொண்டிருக்கிறோம்.  ஏறக்குறைய அனைத்து மறை மாவட்டங்களும், துறவற சபைகளும் இறையழைத்தல் முகாம்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்வுகளைச் செய்து கொண்டிருக்கிற காலம் இது.  முகாம்களுக்குப் பின் புதிய மாணாக்கரைக் குருத்துவ, துறவற வாழ்வுக்காகப் பயிற்சிக்கத் தேர்ந் தெடுப்பதில் கவனம் செலுத்துக்கிற நாட்கள் இவை.  எல்லாமே சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்களும் ஜெபங்களும்!
சில முகாம்களுக்கு நேரடியாக சென்று வந்தேன்;  பலரிடம் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு விசாரித்தேன்.  உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது என்ற உணர்வும், இன்னும் சற்று அதிக நபர்கள் முகாம்களில் கலந்திருந்தால் நலமாக இருந்திருக்குமே என்ற எண்ணமும் வெளிப்படுகின்றன.  முகாம்களுக்கு இத்தனை நபர்கள் வந்திருந்தாலும் +2, 10‡ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்த பின் இறுதி எண்ணிக்கை எவ்வளவாக இருக்குமோ என்ற ஏக்கமும் நமக்கு இருக்கிறது.  எப்படியாயினும் அழைத்தவர் தாம் குறித்து வைக்கிறவர்களைக் கூட்டிச் சேர்ப்பார் என்ற நம்பிக்கை உண்டு.  எண்ணிக்கை பெரிதா?  சிறிதா?  என்பதைவிட வந்து சேர்வோரின் தன்மைகளும் அர்ப்பணமுமே கவனத்தில் அதிகம் கொள்ள வேண்டி யுள்ளது.  “ஏதோ சேர்வோம் ‡ படிப்போம் ‡ முடிந்தால் இருப்போம்.  இல்லையயன்றால் வந்துவிடுவோம்” என்ற எண்ணத்தில் உள்ளோர் பெரிதாய் இருக்காமல்,  “உறுதியோடு செல்கிறேன் ‡ சவால்களைச் சந்தித்து சிறப்பாகச்  செயல்படுவேன் ‡ கடவுள் எனக்குள் செயலாற்றட்டும்” என்னும் உள் உணர்வுகளோடு வருவோரையே பெரிதாய் ஏற்போம்.
இறையழைத்தலை ஊக்குவித்த வர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்போம்.  குருக்கள், துறவிகள், பொதுநிலையினர், பெற்றோர் என்று எல்லாத் தரப்பினருமே இறையழைத்தலுக்காக உழைக்கிறார்கள். சில இடங்களில் பொதுநிலையினரும் மாணாக்கரை முகாம்களுக்கு ஊக்குவித்திருக் கிறார்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது.  நம் பணியில் குருக்கள், துறவிகள் மட்டும் கலந்து விடவில்லை.  மாறாக பொது நிலையினரும் இப்போது சிறப்பிடம்  வகிக்கிறார்கள் என்பது பெருமைக்குரியதே.
­ தமது அழைத்தல் குறித்துக் குழம்பிப்போன நிலையில் தனது வாழ்வு பற்றிய தெளிவைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு மாணவர் என்னைச் சந்தித்தார். தமது அழைத்தலைப் பற்றிப் பெற்றோரிடம் பேசும்போது சில சமயங்களில் “சரி” என்றும் வேறு சில நேரங்களில் “வேண்டாம்” என்றும் கூறும் பெற்றோரின் பதில்களால் குழம்பிப்போய் இருப்பார்.  அதோடு இறைபணி ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறவர் கூறிய வார்த்தை மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது: “நானே இங்கு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.  நீயும் வந்து துன்பப் படப் போகிறாயா?” என்றவரின் வார்த்தைகள் மேலும் குழப்பத்தை உருவாக்கியதாகப் பேசினார்.
­ இறையழைத்தல் வாரம் / ஞாயிறு கொண்டாட்டம், முகாம்கள் என்று பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து மாணாக்கரை ஊக்குவிக்கும் பணியாளர்களில் இன்னும் சிலர் தமது அழைப்பின் மேன்மையை உணர வேண்டியுள்ளது.  குருத்துவ மற்றும் துறவற வாழ்வை இனிமையான ஒன்றாகப் பார்க்காமல் சுமையாகக் கருதுவோர் தமது அழைத்தல் வாழ்வைச் சுவையான ஒன்றாகக் கருதி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அப்பொழுது மட்டுமே எல்லோரும் இறை யழைத்தலை ஊக்குவிக்க முடியும்.  ஒரு சிலர் மூலமாகவே முட்டுக் கட்டைகள் இடப்பட்டால் இதற்காக உழைக்கும் பலரின் உழைப்பு வீணாகும்.
­“என்னதான் இறையழைத்தல் பற்றி அறிவிப்பு கொடுத்தாலும், பேசினாலும், விளம்பரங்கள் தந்தாலும் இக்கால மாணாக்கர் துறவறத்துக்கு வர முன்வர வில்லையே” என்ற ஏக்கங்கள் பலடமிருந்து வெளிப்படுகின்றன.  சில நாட்களுக்கு முன்பு ஒரு துறவற இல்லத்தில் அழைப்பு பற்றிப் பேசினேன் பின்பு கலந்துரையாடல் வேளையில் ஒரு சகோதரி, “தமிழக இறையழைத்தல் பணிக்குழு தமது கூட்டங்களில் முகாம்கள் நடத்துவதற்கான பல்வேறு செயல்பாடுகள், வழிமுறைகள் சொல்லித் தருவதை விடவும், ஒவ்வொருவரும் எப்படி சாட்சிய வாழ்வு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்” எனக் கூறினார்.  மகிழ்ச்சியான செய்தி.  ஏற்கனவே இக்கருத்து பல முறைகளில், பல கூட்டங்களில் வலியுறுத்தப் பட்டுள்ளது.  ஆனால் இக்கருத்து கூறப் பட்டாலும் அது ஒவ்வொருவரின் மனச்சாட்சியோடு, தற்கை யளிப்போடு, தனிப்பட்ட சிந்தனைத் தெளிவோடு இணைந்துள்ளது.   மனநிலை மாற்றம் தேவை எனச் சொல்லலாம்;  கருத்துக்கள் பகிரப்படலாம்.  ஆனால் இறுதியான செயல்பாடு ஒவ்வொருவரின் தனிப்பட்ட உறுதிப்பாட்டைச் சார்ந்தது.  ஒவ்வொரு இறைப்பணியாளரும் நிறைமனநிலை பெற வேண்டும் என்றே விரும்புகிறோம்.  இச்சாட்சிய வாழ்வே பலரைக் கவர்ந்து, நல்லவர்களை உருவாக்கும்.  சொற்களைவிட செயல்கள் இறையழைத்தலை உருவாக்கும்.  இக்கடமை எல்லாப் பணியாளருக்கும் உரியது.
எனவே அனைவரின் நல் முயற்சியோடும், சிந்தனையோடும் வாழ்வோடும் இறையழைத்தல் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.  இறை குரலுக்குச் செவிமடுக்கும் உள்ளங்கள் பெருக ஜெபிக்கிறேன்.  அவர்களை இனம் கண்டு பணிக்கு அழைக்கும் இறையழைத்தல் ஊக்குநர்களின் உழைப்பு மேன்மைப்பட 
பாராட்டுகிறேன்.
சே. சகாய ஜாண்

கருணை நிறைந்த தலைமை - சகோதரி அன்டோனியா வாழ்க்கை

மெக்சிகோவில் உள்ள லா மெசா சிறையில் பயங்கரக் கலவரம்.  அறநூறு பேர் மட்டும் இருக்கக் கூடிய ஒரு இடத்தில் 2,500 பேர் அடைக்கப்பட்டிருந் தார்கள்.  அவர்கள் உடைந்த பாட்டில்களை ஆத்திரத்துடன் காவல்துறையினர் மீது வீசிக் கொண்டிருந்தார்கள்.  போலீசார் திருப்பி அவர்களை இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந் தார்கள்.  அப்போது திகைக்க வைக்கும் ஒரு காட்சி . . .
ஐந்தடி இரண்டங்குல உயரமே இருந்த குள்ளமான ஒரு 63 வயதுப் பெண்மணி, அமைதியை வேண்டுவது போல் தன் கைகளை விரித்துக் கொண்டு கூட்டத்திற்குள் புகுந்தார்.  துப்பாக்கிக் குண்டுகள மழையாகப் பொழிவதைப் பொருட் படுத்தாமல் ஒவ்வொருவரையும் பார்த்து சண்டையை நிறுத்தச் சொல்லிக் கேட்டார்.  என்ன ஆச்சர்யம்!  எல்லோரும் சண்டையை நிறுத்தினார்கள்.
சகோதரி அன்டோனியாவைத் தவிர உலகில் வேறு யாரும் இதைச் செய்திருக்க முடியாது.  அவர் சொன்னதை மட்டும் அவர்கள் ஏன் கேட்டார்கள்?  ஏனென்றால் பல ஆண்டுகளாக அவர் அந்த சிறைக் கைதிகளுக்குத் தன் சுய விருப்பத்தின் பேரில் சேவை செய்து வந்தார்.  தன் வாழ்நாள் முழுவதையும் கொலைக் காரர்கள், திருடர்கள், போதை மருந்து வியாபாரிகள் போன்ற கைதிகளின் நலனுக்காகத் தியாகம் புரிந்திருந்தார்.  அவர்களைத் தன் மகன்கள் போல நடத்தி வந்தார்.  24 மணி நேரமும் அவர்களது தேவை அறிந்து உதவினார்.  ஆண்டிபயாடிக் போன்ற மருந்துகள், மூக்குக் கண்ணாடிகள் போன்ற வற்றை வாங்கித் தந்தார்.  நல்லடக்கம் செய்யப்பட இருந்த உடல்களை குளிப்பாட்டி விட்டார்.  தற்கொலை எண்ணத்தில் இருந்த வர்களை அறிவுரைகள் மூலம் தடுத்து நிறுத்தினார். அந்தத் தன்னலமற்ற அன்பும் கருணையும் கைதிகளிடம் அவருக்கு மரியாதைத் தேடித் தந்திருந்தது.  தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதைச் செய்யுமளவுக்கு மரியாதையை ஏற்படுத்தி இருந்தார்.  இது மனித குலத்திற்கு எத்தனை மகத்தான செய்தி!  சிறைக்கைதிகளுக்கு நடுவே நட்ட கருணை நிறைந்த ஒரு தலைவர் இருக்கிறார்.  ஆனால் உலகில் உள்ள, குரலெழுப்பத் திராணியற்ற பல லட்சக்கணக் கான மக்குளுக்குக் கருணை நிறைந்த தலைவர்கள் வேண்டும்.

இன்றைய குருத்துவம், குருக்கள் வாழ்க! உயர்க!

டியர் குட்டீஸ்!
முனிவர் ஒருவர் ஓர் கிராமத்தின் வழியே செல்கிறார்.  மாலையாகிவிட்டது.  அயர்வும் சோர்வும் சேர கிராமத்தின் விளிம்பில் இருந்த வயல்வெளியிலேயே வரப்பின் மீது தலை சாய்த்தவராகப் படுத்து உறங்கிவிடுகிறார்.  அந்த வழியே கிராமத்தின் குளம் இருப்பதினால் தண்ணீர் மொள்ள ஐந்தாறு பெண்கள் போய்க்கொண்டிருந்தனர்.  முனிவர் உறங்குவதைப் பார்த்த அப்பெண்களில் வாயாடி ஒருவர் “இந்த சாமியார் எல்லாவற்றையும் துறந்து விட்டேன் என்று வாழ்கிறார்.  ஆனால் தலையணை வைத்து தூங்கும் வழக்கத்தை மட்டும் விட்டுடலை பாருங்களேன்” என்று போகிற போக்கில் சொல்லிக்கொண்டு போகிறார்.  இந்தப் பேச்சைக் கேட்ட சுவாமிகள் தனது நிலையை நொந்து வரப்பிலிருந்து தலையை விலக்கி வயலிலேயே சமமாகப் படுத்துவிடுகிறார்.  தண்ணீர் மொண்டு திரும்பி வருகையில் குருவில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டு இன்னொரு வாயடிக்கும் பெண் “எல்லாத்தையும் துறந்துவிட்டேன்னு சொல்லறாங்க; இந்த ஒட்டு கேட்கிற பழக்கம் மட்டும் போகலையே!” என்று சொல்ல அனைவரும் சிரித்துக் கொண்டே போய்விடுகின்றனர்.  குருவிற்குத் தர்ம சங்கடம் . . .  என்ன செய்தாலும் இவர்கள் விமர்சிக்கிறார்களே! என்று.
இப்படித்தான் இந்த உலகம்; குரு பொது வாழ்வை மேற்கொள்கிறார் என்று தெரிந்தும், இறை மனிதன் என்று தெரிந்தும் திருத்தந்தை முதல் பங்குக் குரு வரை மிகவும் விமர்சனக் கண்ணோட்டத்தோடும், வாய்க்கு வந்தபடி தரமில்லாமலும் பேசுவதும் நடைமுறை, மனதிற்கு வருத்தமா யிருந்தாலும், குருக்கள் ஆண்டாக இந்த ஆண்டைக் கொண்டாடும் தருணத்தில், எதிர்காலத்தின் சிற்பிகளாகிய நீங்கள் இந்தக் குருத்துவத்தின் மேன்மை, குருவின் மாண்பினைப் புரிந்துகொள்ள ஒரு சில குறியீடுகள்:
இந்தக் குரு யார்?
* நமக்கு நெருக்கமானவர், தனது குடும்பம், சொந்தம், தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் அனைத்தையும் விட்டுவிட்டு, நம்மோடு இருக்க வேண்டும் என நமது பங்கிலேயே, நமது மத்தியில் நாம் தூரமான கிளைப் பங்குகளில் இருந்தாலும் தூரம் பாராமல் நம்மைச் சந்திக்கும் அன்புரு சகோதரனாய் நாம் வாழும் இடங்களிலேயே நம்மோடு இருப்பவர்.
* நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்க தன்னையே இறைவனுக்கு அர்ப்பணித்தவர்.  நமக்கு தங்களது இறை அனுபவத்திலிருந்து, இறை நெருக்கத்தின் விளைவாகவும் மறைந்திருக்கும் இறையை வெளிப்படுத்தி அவரிடம் கொண்டு சேர்க்கும் மரக்கலம் இந்தக் குரு.
* இறைவன் விரும்புவதைத் தங்களது வழிபாடுகளாலும் தினசரி செபங் களினாலும் பல வருடப் படிப்பு, களப்பயிற்சி, சிறப்புத் தியானங்கள், கருத்தரங்குகள் இவற்றினாலும் இறை ஏவுதல் பெற்று சாமான்யர் களாகிய நமக்கு இறை விருப்பத்தைப் புரியவைத்து அதனைச் செயல் படுத்தும் விதத்தையும் சொல்லி பக்குவப்படுத்தும் ஆசான் இவர்.
* நமது நிலையையும், நமது வாழ்வியல் சவால்களையும் தனது ஈடுபாட்டினால் உணர்ந்து நமது குடும்ப சந்திப்பு, கிராம வழிபாடுகள், தனிப்பட்ட உரையாடல், கலந்தா லோசிப்பு, உறவாடல் மூலமாக நமது வாழ்வில் தனது ஞானம், புத்திக் கூர்மையின் மூலம் நமது வாழ்வுக்கு விசையும் திசையும் காட்டும் கலங்கரை விளக்கம் இவர்.
* எந்த சபையிலும், எந்த மதத்திலும் இல்லாத மணத்துறவின் மூலம் நம் அனைவருக்ஞம் தந்தையாக, பணியின் மூலம் உடனுறை மேய்ப்பனாக, வழிகாட்டுதல் மூலம் ஆசானாய், எதிர்காலத்தைச் சொல்லும் தீர்க்கதரிசியாய், மதிப்பீட்டு வாழ்வின் மூலம் வாழ்வியல் பாடமாய் இருக்கிற இவரை நாம் ‘தந்தை’ என்று அழைக்கிறோம்.  ஏனெனில் இந்த அர்த்தம் பொதிந்த வார்த்தையை வேறு யாரும் பெறுவது கிடையாது.  வேறுபாடு பெற்றுக் கொள்வதில் அர்த்தமும் கிடையாது.  இவருக்கு நிகர் இவரே.
இப்படி கண்களுக்குத் தெரியும் இறை மனிதத் தலைவனை அதிகமதிகமாக நாம் பாராட்டுவோம்.  முடிந்தால் நாமும் இப்படிப்பட்ட நிலைக்கு நம்மையும் ஆட்படுத்துவோம்.  ஏனெனில் குருக்கள் ஆண்டில் இதுவும் ஓர் பரிசுதானே!

உலகின் பாவமில்லா முதல் துறவிகள்

கன்னி மரியாள் கணவனை அறியாளோ?
ஆவியின் கனி இயேசுவுக்குப்பின்
சூசை மரி கூடி வாழ்ந்தார்கள்
சோதரர் நால்வர் சோதரி ஒருவர்
வேதம் சொல்கிறது
சோதரி சோதரர் எல்லாம்
உடன் இரத்தப் பிறப்பா என்ன?
கன்னி கெடா கற்பு மரி
தூதரால் உணர்த்தப்பட்ட நீதி சூசை
ஆவியால் நிரப்பப் பட்டதால்
உலகின் பாவமில்லா
முதல் துறவிகள் அன்றோ?
நித்திய குரு இயேசு வழி
வழுவா வரம் கொண்ட மணத்துறவு
இறை இயேசுவின் திருக்குடும்பத்திற்கு
ஒப்புமை உண்டோ உலகில்?
சொல் மனமே சொல்!
ச. செல்வராஜ், விழுப்புரம்