“பொருட்களில் அல்ல மக்களிடம் பற்று வைத்தவர்”




ஜப்பானில் ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்த அந்த ஜப்பானிய முதலாளிக்கு ‘சென்’ துறவிகள் ஒருவரை யாவது சந்திக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.  ‘சென்’ துறவிகளுக்கென்று பிரத்யோகமான தனி உடைகளோ, அடையாளங்களோ இல்லாதக் காரணத்தால் அது அவ்வளவு எளிதான காரியமாகப் படவில்லை அவருக்கு,  எனினும் அந்த ஆசை மட்டும் அவருக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.  அன்றும் அதே ஆசையுடன் தன் ஹோட்டலுக்கு வருவோரையும் போவோரையும் கவனித்துக் கொண்டிருந்தார் அவர்.  அப்பொழுது அங்கே தேநீர் அருந்திக் கொண்டிருந்த ஒருவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிந்தார் அவருக்கு.  அவரைக் கூர்ந்து கவனித்தார்.  பரபரப்பாய் வந்து அவசரமாய் காரியம் முடித்து விருட்டென ஓடுவோர் பலரின் மத்தியில், மிகவும் பொறுமையாக எவ்வித பரபரப்பும் இன்றி, நிதானமாய் ‘இஞ்ச் பை இஞ்ச்’சாக உறிஞ்சி சுவைத்து தேநீரை அமைதியாக அருந்திக் கொண்டிருந்தார் அவர்.  செய்யும் வேலையிலே  தன்னையே முழுமையாய்க் கையளித்து முழுமனதுடன் அதனில் ஒன்றித்திருந்த அந்த நபரின் செயல் அந்த முதலாளிக்கு வித்தியாசமாய்ப் பட்டது.  மெல்ல அவரிடம் சென்று பேச்சு கொடுத்தார்.  அவர் ஒரு ‘சென்’ துறவி என இறுதியில் கண்டு கொண்டார்.  அவர்களின் உரையாடலும் நட்பும் தொடர்ந்தது.  இன்று அந்த ஹோட்டல் முதலாளியும் ஒரு ‘சென்’ துறவியாய் இருக்கிறார்.





சுவாமி சுகபோகானந்தா எழுதிய “மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ்” புத்தகத்தில் உள்ள ஒரு கதை இது.  குருக்கள், துறவிகளுக் கென்றே தனியே ஆடைகள், அடையாளங்கள் என்று தனியே பல அலங்காரங்களைக் கொண்டு காட்சி தந்தாலும், அவர்களில் உண்மைத் துறவிகளை, குருக்களைத் தேட வேண்டிய இன்றைய நிலையில் இந்தக் கதை எமக்கு வித்தியாசமாகப் பட்டது.  துறவிகள், குருக்கள் என்று தனியே காட்டும் ஆடைகள், அடையாளங்களைத் தூக்கி எறிந்த பலரும் கூட அவர்களிடமுள்ள அதிகாரங்கள், ஆணவங்களைத் தூக்கி எறிய மறந்த காரணத்தினால் அந்த அதிகாரமும் அது தந்த ஆணவமும் துருத்திக் கொண்டு வெளியே தனியே தெரிவதனால் உண்மையான துறவிகளை இங்கும் மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆணவத்தை ஒழித்து அதிகாரத்தை மக்களிடம் வழங்கி, (குறிப்பாக திருச்சபையில் ஓரங்கட்டப்பட்ட மக்களாகிய பொதுநிலையினர் என்றழைக்கப்படும் பாமரர்களிடம் அதிகாரத்தை வழங்கி) பணி செய்யும் குருக்கள், துறவிகள் உண்டா என ஏங்கி தேடிக் கொண்டிருந்த வேளையில் பொது நிலையினரைத் தலைவர்களாக உருவாக்கு வதிலும் திருச்சபையை மக்களிடமே திருப்பி கொடுப்பதிலும்  தன் முழுக்கவனத்தையும் செலுத்தி உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு குருவை பொதுநிலையினர் பலர் மனதிலும் இடம் பெற்ற ஒரு குருவை இம்மாதம் யாமறிந்த குருக்கள் வரிசையிலே அறிமுகப்படுத்திட ஆசிக்கின்றேன்.
அந்தக் குருவானரைச் சந்தித்து கட்டுரையின் நோக்கம் பற்றி விளக்கி பேட்டியை ஆரம்பிக்க முயன்ற அந்த கணமே அவர் வைத்த முதல் வேண்டுகோள் . . .  எனது பெயரையோ, முகவரியையோ குறிப்பிட்டு என்னை அடையாளப் படுத்த வேண்டாம் என்பதுதான்.  ஏன்? என்றேன்.  என் பெயர் அடையாளங்களைவிட நான் நம்பும் இறைவனின் பெயரும், அவர் வாழும் இடமான பாமரர்களின் (பொதுநிலையினரின்) முகவரியுமே முக்கியமாக வெளிப்பட வேண்டுமென்பதால் என் பெயருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்றார்.
“குரு” என்கிற அதிகாரத்தை, கூடவே அதனை ஒட்டிப் பிறக்கும் ஆணவத்தைத் துறந்தும், அடையாளங்களை இழந்தும் நிற்க முயல்வதால் மக்கள் பலரின் மனதில் சிறந்த குருவாக இடம் பெற்றுள்ள இவரின் இந்த வேண்டுகோளே எனக்கு மேலே உள்ள சென் துறவியின் கதையை ஞாபகப் படுத்தியது.  அவரின் வேண்டுகோளுக் கேற்ப நான் அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லப் போவதில்லை.  ஆனாலும் அவர் யார்? என நீங்கள் கண்டு கொண்டால் அது அவரது செயலின் அடிப்படையில் அடையாளம் கண்டதே அன்றி என்னுடைய தவறல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.  இனி பேட்டிக்குள் போவோம்.
நான் :  தந்தையே உங்கள் தேவ அழைத்தல் பற்றியும் அதற்கான காரணிகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
தந்தை : கும்பகோணம் மறைமாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண வேதியர் குடும்பத்தில் பிறந்தேன்.  எனது தேவ அழைப்புக்குக் காரணமான முதல் குருக்கள் என் பெற்றோர்களே.  என் அப்பாவிடமிருந்து நீதியுணர்வையும் என் அம்மாவிடமிருந்து தாராள மனதையும் நான் பெற்றேன்.  எனது கிராமத்தில் பணி செய்த திருச்சி புனித அன்னாள் சபையின் அன்றைய கன்னியர்களும், பங்குக் குருக்களுமே “நான் குரு ஆகனும்” என்கிற வித்தை என்னுள் விதைத்தார்கள்.    
குருமடத்தில் பயிற்சியாளர்களாய் இருந்த அன்றைய மிசனரி குருக்கள் தங்களின் எடுத்துக்காட்டான எளிமையான பற்றற்ற வாழ்வால் என்னை ஒரு நல்ல குருவாக உரமிட்டு வளர்த்தனர்.  இப்படியாக எனது பணி வாழ்வில் இவையயல்லாம் எனக்கு ஆதாயமாகவே இருந்தன.
குருவான பின்பு பாண்டி மறை மாவட்டத்தில் ஒரு போர்டிங்கில் மாணவர் களைக் கண்காணிக்கும் பணி என்னிடம் கொடுக்கப்பட்டது.  எனது குடும்பத்தில் எனது தாய் தந்தையர் பட்ட கஷ்டங்களை அறிந்திருந்த காரணத்தால் அங்கு படிக்கும் மாணவர்கள், அவர்கள் பெற்றோர் படும் கஷ்டங்கள் இவைகளை அறிந்து நடந்து கொள்ள என்னால் முடிந்தது.
பின்பு நான் கடலூரில் பணி செய்த போது அங்கிருந்த பங்குத் தந்தை (மலையாள நாட்டைச் சேர்ந்தவர்) கொடுத்த பணிச் சுதந்தரம், ஒத்துழைப்பு என்னை வெகுவாய்ப் பக்குவப்படுத்தின.  நிறைய குருக்கள் துறவிகளுடன் எனக்கு நல்ல தொடர்பும் நட்பும் இருந்ததால், எனது குருத்துவ வாழ்வு பொறுத்தமுள்ள வகையில் நகர்ந்து கொண்டிருந்தபொழுது மைசூர் - அஞ்சலி ஆசிரம நிறுவனர் தந்தை அமலோற்பவதாஸ் அவர்களின் பயிற்சிக்கு அனுப்பப்பட்டேன்.  
அவரது 4 மாத கால பயிற்சி எனது ஏழு ஆண்டு கால செமினெரி வாழ்க்கையை வகுத்து தொகுத்து வழங்கியதால் எனது குருத்துவ வாழ்வைப் பகுத்துப்பார்த்து அதில் உறுதிப்படுத்த உதவியது.  எனது எளிமையான வாழ்வுக்கு அதுவே அச்சாணியாய் விளங்கியது.  அதன்பின்பு அவருடன் கொண்டிருந்த தொடர்பும் தேடலும் என்னை செழுமைப்படுத்தின. 
நான் :  உங்களது அருட்பணி வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக எதைக் கருதுகிறீர்கள்?
தந்தை : பாண்டி மறைமாவட்டத்தின் புண்ணிய பூமியான கோணாங்குப்பம், மூன்று மாவட்டங்களின் வால் பகுதியான அணிலாடி போன்ற பங்குத் தளங்களில் 13 ஆண்டுகளும் 1993 முதல் தந்தை அமலோற்பவதாஸுக்குப் பின்பு மைசூர் அஞ்சலி ஆசிரமத்தின் பொறுப்பாளராய் பணியேற்றி வரும் இந்நாட்களிலும் எவ்வித நிதி கையாளும் வேலைகளிலும் என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டதே இல்லை (காசை நான் தொட்டதுமில்லை, வாங்கியதுமில்லை) என்பதைப் பெருமையாக கருதுகிறேன்.  பங்கிலுள்ள பொதுநிலை யினரே அக்காரியங்களைக் கவனிக்க வழிவிட்டே நான் செயல் பட்டுள்ளேன்.  வெளிநாட்டு ப்ராஜெக்ட் ஒன்று கூட நான் வாங்கி செயல்படுத்த முனைய வில்லை.  இந்தச் செயல்பாடே ஒரு துறவிக்குரிய குறைந்தளவு தேவைகளை மட்டுமே எனக்குள் கொண்டு பணத்தின் மீது பற்றில்லாமல் எளிய வாழ்க்கை வாழ எனக்கு துணை செய்கின்றது.  அதுவே ஒரு குருவானவர் Masterஆக இருக்கும் காலச் சூழ்நிலைகளை குறைந்து Pastorஆக வாழ எனக்கு வழி செய்தது.  ஆனாலும் அணிலாடி போன்ற பங்கில் பணியாற்றிய போது அங்கிருந்த இயேசு சபை குருக்களோடு இணைந்து அப்பங்கிலிருந்து பூர்வீக குடிகளின் ஆதிக்க செயல்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஏழை எளிய தலித் மக்களும் கோவில் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் கிராம குழு (Village Committee) அமைத்தும், கல்வி நிலை உயரவும் முயற்சிகள் செய்தேன்.  அதுவும் எனக்கு நிறைவை தந்த பணிகள்தான். 
நான் :  தங்களின் தற்போயை பணி குறித்து ...
தந்தை : தந்தை அமலோர் அவர்களின் திடீர் மறைவுக்குப் பிறகு அஞ்சலி ஆசிரம நிர்வாகிகளின் அழைப்பின் பேரிலும், மைசூர் ஆயர் அவர்களின் வேண்டுகோளின் படியும் 1993 முதல் ஆசிரம பொறுப்பாளராய் எனது பணியை செய்து வருகிறேன்.
இந்த ஆசிரமத்திற்கு வரும் பல்வேறு மறைமாவட்ட குருக்கள், துறவிகள், பொதுமக்கள் எல்லோருக்கும் ஆறுதலும் தேறுதலும் வழங்கி பக்குவப் படுத்தும் மையமாக,பண்படுத்தும் இடமாக அஞ்சலி ஆசிரமத்தினை தந்தை அமலோற் அடிகளார் காட்டிய வழியில் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
இதன் மூலம் என் குடும்பம், என் பங்கு, என் மறைமாவட்டம், எனது மாநிலம், எனது நாடு என அனைவரையும் இணைத்து இறையாட்சியை நோக்கி அழைத்தும் செல்லும் கடமை எனக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன்.  தந்தை அமலோற் அவர்கள் பெரிதும் விரும்பி தொடர்ந்து உழைத்த “பொது நிலையினரைக் கட்டி எழுப்பிட” அவரால் உருவாக்கப்பட்ட இந்திய கிறித்தவர் மறுமலர்ச்சி இயக்கத்தினை தொடர்ந்து வழிநடத்துவதில் தனிப்பட்ட ஆர்வத்தையும் அக்கறையையும் செலுத்தி வருகிறேன்.  அந்த வகையில், அடுத்த மாநிலத்திலுள்ள மைசூர் அஞ்சலி ஆசிரமத்திற்கு சாதாரண, பாமர மக்கள் வருவது கடினமானது, காஸ்ட்லியானது என்பதால், தமிழகத்தின் நடுநாயகமான திருச்சி அளுந்தூரில் ஒரு மையத்தை அமைத்து பொதுநிலையினர், துறவிகள், குருக்கள் போன்றோரை இவ்வியக்கத்தின் வழியாக கட்டி எழுப்பி வருகின்றோம்.
குருக்கள் ஆண்டை முன்னிட்டு கடந்த நவம்பர் 30, டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் தமிழக திரு அவையின் சங்மத்தைக் கூட்டி அதில் தமிழக திருச்சபை கொண்டுள்ள விசுவாத்தின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய தீர்மானங்களை அடையாளம் காண ஏற்பாடு செய்தோம்.  இதில் பொதுநிலையினர். குருக்கள். துறவிகள். ஆயர் என பலரும் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கைப் பயணத்தை உரசிப் பார்த்து, உரமேற்றிட உறுதி எடுத்தனர்.  இதற்கான ஏற்பாடுகள், செலவுகள் எல்லாவற்றையும் பொதுநிலையினரே முன்னெடுத்து செல்ல வழிகாட்டி வாய்ப்பு கொடுத்தபோது அது சிறப்பாக் நடைபெற்றதும் எனக்கு நிறைவையும் புது தெம்பையும் கொடுத்தது. 
இப்படியாக தம் பணிகளை விவரித்துக் கொண்டிருந்த தந்தை அவர்களை வாழ்த்தினேன். பங்குப் பேரவை போன்ற அமைப்புகளில் வெறும் ஆலோசனை கூறும் ஆட்களாக மட்டும் பொதுநிலையினர் அமர்த்தப் படுவதற்குப் பதிலாக முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக பங்குப் பேரவை, மறைமாவட்டப் பேரவை போன்ற அவர்களின் அமைப்புகள் ஆக்கப்பட வேண்டும் என்கின்ற அவர்களின் உரிமைக் குரலின் நீதியைப் புரிந்து ஏற்றுக் கொண்டு வழிகாட்டும் நாயகனாய் மட்டுமல்லாது தம்மோடு நல்லுறவில் இருக்கும் ஆயர்கள், குருக்கள், துறவிகள் போன்ற அதிகாரம் படைத்தவர்களிடம் மக்களின் உரிமைக் குரலை பக்குவமாய் எடுத்து வைத்து புரிந்து கொள்ள உதவியும் செய்யும் தந்தை அவர்களின் பணி மகத்தான பணியாக பல பொதுமக்களாலும் ஏற்று கொள்ளப்பட்டு நிற்கிறது.  
எங்கோ இருக்கும் உழைக்கும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதைக் காட்டிலும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இவர்தம் பணி போற்றி பாராட்டப்பட வேண்டியது மட்டுமல்ல பல பணியாளர்களும் தம் வாழ்வில் பழக்கப்படுத்தப்பட வேண்டியது. வெள்ளையர்களிடமிருந்து இந்தியர்கள் சுதந்திரம் பெற உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸில் பல இந்திய தலைவர்கள் இணைந்து பங்களிப்பு செய்ததைக் காட்டிலும் அதில் அண்ணி பெசன்ட் என்கிற வெள்ளைக்காரப் பெண்மணி தன்னை இணைத்துக் கொண்டு பங்களிப்பு செய்ததே மிகச் சிறப்பான பணி.  அதைப் போலவே பொதுநிலையினரின் உரிமைக்காக குரல் கொடுப்பதில் ஒரு குருவே முனைப்பாக செயல்படுவது முகாந்திரமான பணியே.  அதிலும், குரலில் மட்டுமல்ல செயலிலும் அதனை காட்டி பலருக்கும் முன்மாதிரியாய் காசைத் தொடாத குருவாய் அதனால் கசடுகள் சூழ முடியாத துறவியாய் தொடர்ந்து நடைபோடும் அவரை வணங்கி விடைபெற்றோம்.  பொருட்களின் மீது பற்றற்று புது இலக்கணம் தந்த அந்த காவிக்காரருக்கு கணக்கோடி வாழ்த்துக்கள்.
எஸ். எரோணிமுஸ், “ஊற்றுக்கண்” ஆசிரியர், திருச்சி 

நீ மாறினால்...

நண்பர் ஒருவர் தான் வாங்கி யிருந்த புதிய காரினை அடுத்த நாள் எடுக்க வீட்டிலிருந்து வெளியே வந்தார். அப்போது அவரது ஆறு வயது மகன் கம்பியை வைத்து காரினைக் கீறிக் கொண்டிருந்தான். இதைக் கண்டவுடன் அதிர்ச்சியுற்ற தந்தை எதுவும் யோசிக்காமல் அவனைக் கீழே தள்ளி அந்தக் கம்பியினைக் கொண்டு கை வீங்கும் அளவிற்கு அடித்து விட்டார். பின்னர், அமைதி யடைந்து அவனை மருத்துவ மனையில் அனுமதித்தார். மருத்துவர்கள் அவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததைக் கண்டனர். உடைந்த எலும்பு களுக்கு அறுவை சிகிச்சை செய்து வீடு திரும்பினான் அவன்.
அந்தச் சிறுவன் வீட்டிற்கு வந்தவுடன் அவன் தந்தையை நோக்கி தான் செய்த தவறினை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டபின் “அப்பா, எப்போது என்னுடைய கை சரியாகி விரல்கள் சக நிலைக்கு வரும்?” என்று கேட்டான். இதைக் கேட்ட தந்தை மனம் நொந்து வீட்டிற்குள் சென்று தன் தவறுக்காக அழுது கொண்டிருந்தார்.
எனது குட்டீஸுக்கும், அவர் களுடைய பெற்றோருக்கும் இந்நிகழ்ச்சியிலிருந்து ஓர் அறிவுரை.
இப்படி தீர யோசிக்காமல், மூர்க்கத்தனமாய் நடந்து கொண்ட அந்தத் தந்தையின் அனுபவம் இருக்கிறதா? சிறிய செயல்களுக் கெல்லாம் கோபப்படுவது, சண்டைபோடுவது, என்ன செய்கின்றோம், அதனால் வரவிருக்கின்ற விளைவு என்ன என்று யோசிப்பது இல்லையே. நம்முடைய சொல்லோ, செயலோ எதைச் செய்தாலும் நிதானம் தேவை. ஓரளவிற்கு விளைவுகளை யோசிக்கின்ற நிலை ஏற்பட வேண்டும். நமது அவசரத்தினால் நமது வீட்டில், நமது நிர்வாகத்தில், அலுவலகத்தில் இவ்வாறு நடந்து கொள்வதில், பிறருக்கு எவ்வாறு மன உளைச்சல் பாதிப்பு விளைவித்திருப்போம்? நடந்தது நமக்குத் தெரிகிறது. போட்ட பந்து திரும்பி வருவது போல் உடனுக்குடன் பதில் நிலை தெரிவிக்காமல் சிந்தித்துச் செயல்படுகின்ற செயல் வீரர்களாக வாழ முற்படுவோம்.
டியர் குட்டீஸ்
இச்சிறுவனைப் போல நாமும் பல நேரங்களில் பொருட்களின், செயல்களின், நிகழ்வுகளின் மதிப்பு தெரியாமல் அவற்றிற்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறோம். சற்றும் யோசிக்காமல் நாம் நமது விருப்பபடி செய்யும் போது இப்படி அடுத்தவர் கோபத்திற்கு ஆளாகிறோம். கேட்டால், சும்மா விளையாட்டுக்குச் செய்தேன், தெரியாமல் செய்தேன் . . . அவசரப்பட்டு விட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. இப்படி சொல்வதால் பாதிக்கப்பட்டவர் நிலை மாறிவிடுமா? இதனால் பலருக்கு நம்மால் சங்கடம் தானே. இளம் வயதிலேயே நாம் அடங்காப் பிள்ளைகள், அடங்காத ராட்சசன்கள், தவறான பிள்ளைகள், மோசமானவர்கள் என்று அவப் பெயர் பெற்று வாழும் நிலை ஏற்படும். செய்வதைச் சிந்தித்து, வேண்டாததை ஒதுக்கி வாழ முற்படுவோம். நன்று மீண்டும் சந்திப்போம்.

விவிலியப்பகுதி :
நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல ஆகாவிட்டால் விண்ணரசில் புக மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.  - மத்தேயு 18:3
பணி. ராக்ஸி, K.G. கண்டிகை

இறையழைத்தல் ஞாயிறு

ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்ற “இறையழைத்தல் வாரம்” இவ்வாண்டு ஏப்ரல் 19-25 முடிய உள்ள வாரத்தில் கொண்டாடப்படுவதை அறிந்து மகிழ்கிறோம்.  பல்வேறு மறைமாவட்டங்களில், துறவற சபைகளிலும் மும்முரமாக புதிய நபர்களைப் பயிற்சிக்குச் சேர்ப்பதற்காக முகாம்கள் மற்றும் நேரடி சந்திப்புகள் நிகழ்த்தும் காலம் இது.  இவ்வாரத்தைச் சிறப்பாக கொண்டாட உதவியாக வழி காட்டிக் குறிப்புகள் ஏற்கெனவே (மறைமாவட்ட இறையழைத்தல் பணிக்குழு வழியாக) பங்குகளுக்கும் (நேரடியாக)  இறை யழைத்தல் இயக்குனர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.  இவற்றைப் பயன்படுத்தி இவ்வாரத்தை சிறப்பாகக் கொண்டாட அன்போடு அழைக்கிறேன், வாழ்த்துகிறேன்.  குறிப்பாக பங்குப்பணியாளர் களும், துறவற குழுமமும் இணைந்த திட்டமிட்டு தத்தம் பங்குகளில் கொண்டாடி பெற்றோர், இளையோர், சிறியோர் இறையழைத்தல் பற்றித் தெரிந்திட உதவிடுங்கள்.
பொதுவாகவே “இறை யழைத்தலுக்குச் செவிமடுப்போர்” குறைந்துள்ளனர் என்கிற கருத்து தமிழக திருச்சபையில் நிலவு கிறது.  பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.  அவற்றுள் முக்கிய மானவைகளையும் அவற்றைச் சரி செய்வதற்கான மனநிலைகள், செயல்பாடுகளையும் இனம் காண “இறையழைத்தல் வாரம்” பயன்படுகிறது.
இன்றைய பெற்றோர்கள் கனவுகளை நிறைய சுமப்பவர்கள்.  தங்களைப் பற்றி அல்ல . . . தமக் கென்று  உள்ள ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளைப்பற்றித் தான் அக்கனவுகள்.  ஆங்கில வழிக் கல்வி கற்று நிறைய மதிப் பெண் களுடன் வெற்றி பெற்று பெரிய நிறுவனங்களில் வேலை செய்து வெளிநாடுகளுக்கும் சென்று சம்பாதித்து கைநிறைய பணத் துடன், எல்லா வசதிகளுடனும் வாழ வேண்டும் என எண்ணி பிள்ளைகளை வளர்க்கிறார்கள்.  இதற்காக பல்வேறு தியாகங் களையும், துன்பங்களையும்கூட தாங்கிக் கொள்கின்றனர்.  இவர்களைத் தாண்டிய நிறைவின் எண்ணத்தை அவர்கள் மறந் திருக்கலாம்.  தம் பிள்ளைகள் இச்சமூகத்திற்கென்று, திருச்சபைக்கென்று என்ன செய்யக் காத்திருக்கிறார்கள்?  தம் பிள்ளைகள் வளர்ந்துவிட்ட பின் இவர்கள் யாரை வளர்த்துவிடப் போகிறார்கள்?  தமக்கு மட்டுமே இவ்வாழ்வை வைத்துக் கொள்ளப் போகிறார்களா?  இல்லை பிறருக்காய் உழைக்கும் மன நிலையில் வளரப் போகிறார்களா?  “பிறர் வாழ” என்ற எண்ணத்தைப் பெறாத பிள்ளைகள்தான் பிற்காலத்தில் சமூகத்தையும், திருச்சபையையும் மட்டுமல்ல தம்மை வளர்த்தெடுத்த பெற்றோ ரையோ, உடன்பிறப்புக் களையோ கண்டு கொள்ளாமல் அவர்களையே “பிறராக” -‘அயலாராக’க் கருதி “நான் என்ன அவர்களுக்குக் காவலாளியா?” என்று கூறிவிடுகின்றனர்.  பெற்றோர்கள் இச்சிந்தனையைப் பெரிதென நினைத்துப் பார்க்காமல் மறந்துவிட்டால் நிச்சயம் தம் பிள்ளைகளைப் பிறர் நல கண்ணோட்டத்திலோ இறையழைத்தல் சிந்தனையிலோ வளர்க்க முடியாது.  குடும்பங்கள் இறையழைத்தல் விதையைத் தூவும் முதல் கருவியாய் அமைய பெற்றோர் உழைக்க வேண்டும்.
இளையோர்கள்,
நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பினும் விருப்பத்தையயல்லாம் முறியடிக்கிற  காரணங்கள், தீமைகள் பலவற்றில் சிக்கித் தவிப் பவர்களாய் மாறிவிடுகின்றனர்.  தொடர்ந்து உயரிய இலட்சியப் போக்கு உருவாக்குவதைத் தடுக்கும் பல காரணிகள் அவர்களைச் சுற்றி வந்து வீழ்த்துகின்றன.  தம் உயரிய வாழ்வு பற்றிய கனவு ஒருபுறம் இருப்பினும் அதுவும் சுயநலத்தோடு மட்டும், தன் உயர்வு என்பதோடு மட்டும் நின்றுவிடுகிற நிலை பலரிடம் உள்ளது.  “நான் பிறருக்காய் என்ன செய்ய வேண்டும்?” என்ற சிந்தனையோடு இன்றைய இளைஞர்கள் வளரவேண்டும் என்பதும் அதனால் வருகிற சவால்களைத் தாங்கிடவேண்டும் என்பதும் நம் வாழ்த்தாய் உள்ளது.  இன்று பிறருக்காய்ப் பணி செய்வோரைவிட நான் சிறப்பாக உழைக்கத் தயார் என்று தம்மை ஒப்படைக்கிறவர்கள் எழுந்து வரவேண்டும் என வாழ்த்துகிறோம்.  இப்படி நல்லன செய்ய தம்மை ஒப்படைக்கும்போது என் நண்பர் என்னை எப்படி பார்ப்பார்களோ என்ற பய உணர்வையும் தாண்டி நிற்கும் நிலை தேவை.
இறையழைத்தலை மேன்மைப்படுத்தும் பல குருக்கள், துறவிகள் பல சமயங்களில் அங்கலாய்ப்பது உண்டு.  “எந்தப் பையனும் பொண்ணும் இன்று துறவற வாழ்வுக்கு வரத் தயாராக இல்லையே . . . !  நாம சொல்லி கேட்க மாட்டேங்குறாங்க” என்ற சோகமான ஏமாற்றம். குருக்களின் ஆண்டில் கொண்டாடப்படுகிறது 47வது இறையழைத்தல் வாரத்திற்கென்று நம் திருத் தந்தை தந்துள்ள செய்தி நினைவு கூரப்பட வேண்டிய ஒன்று.  “Witness arises Vocation”  என்கிற மையப் பொருளில் அவர் தருகிற செய்தி இன்றைய குருக்கள், துறவறத்தார், இறையழைத்தல் ஊக்குனர்களைச் சவாலுக்கு உட்படுத்துகிறது.  “சாட்சிய வாழ்வு” என்பதையே இச்சமூகம் நம்மிடமிருந்து எதிர்பார்க் கின்றது.  இன்றைய இறைப்பணி ஏற்றுள்ள பல குருக்கள், துறவிகள் தம்முடைய அழைத்தல் தமக்கு வழிகாட்டிய துறவறத் தாரின் வாழ்வைப் பார்த்ததால் தான் ஏற்பட்டது என்று கூறுவது உண்டு.  நம்முடைய அழைத் தலுக்கு இப்படி ஒரு காரணம் உள்ளது என்றால் அதே நிலை வாழ்வை, சாட்சியத்தை ஏன் நாம் நமக்குப் பின்வருபவர் களுக்குத் தர மறந்து விடுகிறோம்.  வார்த்தைகளின் பொருட்டல்ல செயல்களைப் பார்த்து வாழ்வின் நிலை உணர்ந்து துறவற, குருத்துவத்திற்கு பதில் தர நினைப்பவரே அதிகம்.  இன்றைய இறைப் பணியாளர்கள் வாழ்வு நிலை மாறவேண்டும் என்பதும், அவ்வாழ்வுதான் இளையோரைத் துறவு  வாழ்வுக்குக் கொணரும் என்பதும் இந்த இறையழைத்தல் வாரத்தில் குருக்கள், துறவிகள் சிந்திக்க வேண்டிய ஒன்று.  பிறர் நலம் நாடாது, முழு அர்ப்பணிப்பு இல்லாத, பழி, பகை உணர்வுகள் நிறைந்த வாழ்வுக்கு இன்று யாரும் தம்மை ஒப்படைக்கத் தயாராயில்லை.  சாதிக்க வேண்டியதும் பிறருக்காய் வாழ வேண்டியதும் நிறைய உள்ளன.  சொற்கள் கடந்த சிந்தனை, தன்னலம் தாண்டிய வாழ்வு, சான்று பகரும் உண்மை இவையே பிறர் நம்மை நோக்கி வரச் செய்யும்.
கடமை  உணர்ந்து பெற்றோரும் தம்மை அர்ப்பணித்து, இளை யோரும் உண்மையில் வாழ்ந்து, குருக்களும் துறவிகளும் இணைந்து இறையழைத்தலை உன்னதமாக்குவோம்.  தாம் விரும்பி அழைப்பவர்களை அவரே கூட்டிச் சேர்ப்பார்.
சே. சகாய ஜாண்

The Prodigal Son - in the Key of F

Feeling footloose and frisky, a feather- brained fellow forced his father to fork over his farthings.  Fast the flew to foreign fields and frittered his family’s fortune, feasting fabulously with floozies and faithless friends.  Flooded with flattery he financed a full-fledged fling of “funny foam” and fast food.
Fleeced by his fellows in folly, facing famine and feeling faintly fuzzy, he found himself a feed-flinger in a filthy foreign farmyard.  Feeling frail and fairly famished, he fain would have filled his frame with foraged food from the fodder fragments.  
“Fooey,” he figured, “My father’s flunkies fare far fancier,” the frazzled fugitive fumed feverishly, facing the facts.  Finally, frustrated from failure and filled with foreboding (but following his feelings) he fled from the filthy foreign farmyard.  
Faraway, the father focused on the fretful familiar form in the field and flew to him and fondly flung his forearms around the fatigued fugitive.  Falling at his father’s feet, the fugitive floundered forlornly, “Father, I have flunked and fruitlessly forfeited family favor.”  
Finally, the faithful Father, forbidding and forestalling further flinching, frantically flagged the flunkies to fetch forth the finest fatling and fix a feast.
Faithfully, the father’s first-born was in a fertile field fixing fences while father and fugitive were feeling festive.  The foremen felt fantastic as he flashed the fortunate news of a familiar family face that had forsaken fatal foolishness.  Forty-four feet from the farmhouse the first-born found a farmhand fixing a fatling.
Frowning and finding fault, he found father and fumed, “Floozies and foam from frittered family funds and you fix a feast following the fugitive’s folderol?”  The first-born’s fury flashed, but fussing was futile.  The frugal first-born felt it was fitting to feel “favored” for his faithfulness and fidelity to family, father, and farm.  In foolhardy fashion, he faulted the father for failing to furnish a fatling and feast for his friends.  His folly was not in feeling fit for feast and fatling for friends; rather his flaw was in his feeling about the fairness of the festival for the found fugitive.  His fundamental fallacy was a fixation on favoritism, not forgiveness.  Any focus on feeling “favored” will fester and friction will force the faded facade to fall.  Frankly, the father felt the frigid first-born’s frugality of forgiveness was formidable and frightful.  But the father’s former faithful fortitude and fearless forbearance to forgive both fugitive and first-born flourishes.
The farsighted father figured, “such fidelity is fine, but what forbids fervent festivity for the fugitive that is found?  Unfurl the flags and finery, let fun and frolic freely flow.  Former failure is forgotten, folly is forsaken.  Forgiveness forms the foundation for future fortune.”
Four facets of the father’s fathomless fondness for faltering fugitives are : 1. Forgiveness,  2. Forever faithful friendship, 3. Fadeless love, and 4. A facility for forgetting flaws.
Timothy E. Fulop, Assistant Dean of Faculty, Columbia Theological Seminary

அல்லேலூயா !!!

சிலுவை கொடியவர்களுக்கான
அவமானச் சின்னம்
தூயவரான ஆண்டவர்
இழிச்சிலுவையை ஏற்றதேன்?
சிலுவையின் நேர்ச்சட்டம்
தந்தை வழிநடப்பது
குறுக்குச் சட்டம்
உலக வழி நடப்பது
இரண்டும் உரசுகின்ற போது
போராட்டங்கள் பாடுகள்
அவமானங்கள்
நேர்க்கோட்டை குறுக்குக் கோடுகள்
கோணலாக்குகின்றன
அதனால் வாழ்வு கசக்கிறது
வசந்தம் போய் சாவு வருகிறது
பாவங்கள் சாபங்கள் நோய்கள்
பசாசின் கட்டுக்கள் நீங்கிட
சிலுவை நாயகன் ‘இயேசுவே வழி’!
அவமானச் சின்னம்
அற்புதச் சின்னமாய் மாறியது
மகிமை நாதரால்!
உயிர்த்த ‘அவரில்’நம்பிக்கைக் கொண்டு
குறுக்குச் சட்டங்களைத் தகர்ப்போம்!
விடுதலை அடைந்து ‘நித்திய வாழ்வு’
பெறுவோம்!
நிறைமகிழ்ச்சியை சொந்தமாக்குவோம் !!
அல்லேலூயா !!!
ச. செல்வராஜ், விழுப்புரம் 

இயேசுவின் உயிர்ப்பு வெறும் கட்டுக்கதையா?

சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார்.  வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்” (எபி 2:14)
 கதை : 1 இயேசு தம் சீடர்களிடம் நான் சிலுவையில் அறையப்படுவேன்பிறகு இறந்தவனைப்போல் பாவனை செய்வேன்நான் மரணம் அடைந்துவிட்டதாக எண்ணிப் படைவீரர்கள் எனது கால்களை முறிக்காமல் போய்விடுவார்கள்உடனே நீங்கள் என்னைச் சிலுவையிலே இருந்து இறக்கி எனது உடலை ஒளித்து வைத்து விடுங்கள்தப்பிவிடலாம்!என்று ஏற்பாடு ஒன்று கமுக்கமாக இருந்தது.  அவர் உயிர் பெற்று எழுந்து விண்ணகம் சென்றுவிட்டார் என்று பரப்பிவிட்டால் யாரும் உடலைத் தேடமாட்டார்கள் என்று கதை!  பரிசேயர்கள், யூதகுல மூப்பர்கள் மூளையில் உதித்த கதை; இயேசு ரத்தமும் சதையுமுள்ளவராக உயிருடன் எழுப்பப்பட்டதை மறைக்கப் புனைவு செய்த கதை!  
கதை : 2 சித்திரவதை செய்து கொல்லப் பட்ட மனிதன் மீண்டும் உயிர்பெற்று எழுந்தார் என்று கூறிப் பரப்புவது போன்ற காதில் பூ சுற்றும் கலைக்கு நிகர் வேறில்லை.  எவன் நம்புவான்என்ன ஆதாரம்எங்காவது இறந்தவன் உயிர்பெற்று எழுவதுண்டாஇது ஆதிக்கதை உச்சம் - இயேசுவைப் பற்றி முழுமையாய் அறிந்திறாத எல்லோர் மனத்திலும் நுனிப்புல் மேய்ந்த பசுப்போன்றவர் மனத்துளும் எழும் கேள்விகளது வாழ்வுக்கதை இது!  ஆனால் . . .  ஹார்வர்ட் பல்கலைக் கழகச் சட்டப் பேராசிரியரும் இங்கிலாந்து நாட்டின் நோட்டிங் ஹாம் என்கிற இடத்திலுள்ள தூயயோவான் கல்லூரி முதல்வருமான முனைவர் மைக்கல் கிரீன் லீப் உலக புகழ்மிக்க சட்ட சாட்சியர் தொகுதி” (Observation of History and evidence of the resurrection of Jesus) என்னும் நூலாசிரியர் இயேசு உயிர்த்ததற் கான சாட்சியம் பற்றிய ஆய்வில் ஈடுபடுகையில் மேற்குறிப்பிட்டவாறு இயேசுவின் உயிர்ப்பு வெறும் கட்டுக்கதை என்று கருதினார்.  ஆனால் திருவிவிலியத்தை ஆழமாகப் படித்து, நுனித்து, ஆராய்ந்து, தோய்ந்து. ஆழ்ந்து சிந்தித்தபின் திருவிவிலிய எழுத்தாளர்கள் நால்வரும், தூய பவுலடியாரும் எழுதிய பதிவுகளில் மறுக்க முடியாத ஆதாரமுள்ள உயிருள்ள சாட்சிகள் உண்டு என்று கண்டறிந்தார்.  உயிர்ப்பு குறித்த ஐயத்திலிருந்து உண்மை அவரை விடுதலை செய்தது.  ஆக்சுபோர்டு பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் அவரைப் போலவே மறுத்துவந்து பின் உண்மை ஆதாரங்களை அறிந்து உணர்ந்து மனம் மாறினர் - முனைவர் மைக்கல் கிரீன் எழுதினார்:
இயேசு உயிர்க்கவில்லை என்றால் அவருடன் வாழ்ந்த சீடர்கள் ஓர் உண்மையை உறுதிப்படுத்தியிருக்க முடியாது! ஏனென்றால் அந்த உண்மையை உலகறியச் சாட்சியம் கூறியதற்காக அவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள்மறுத்துக் கூறுமாறு சிறையில் அடைக்கப் பட்டார்கள்உண்மைக்குச் சான்று பகர உயிரையும் கொடுத்தார்கள்” - உயிர்ப்புக்கு உயிருள்ள சாட்சிகள் அவர்களே என்கிறார். 
இயேசு ஓர் போலி மெசியாதந்தை யாவேயைப் பழித்துப் பேசியவர்அவரது பெயரால் உருவான கிறிஸ்தவத்தை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும்!என்று முழுமூச்சுடன் செயல்பட்டவர் சவுல்.  உரோமர்களிடமிருந்து கிறிஸ்தவர்கள் யார்கிறிஸ்தவம் பரப்புவோர் யார்என்ற ஆவண விவரங்களுடன் அவர்களைச் சிறைப்பிடித்துக் கொல்ல வேண்டும் என்று தமஸ்கு நோக்கிப் பயணம் செய்த சவுல் உயிர்த்த இயேசுவினால் தடுத்தாளப் பட்டார் கி.பி. 67இல்.  அவர் வாழ்வே உயிர்த்த இயேசுவுக்கு ஆதாரமான சாட்சியம்! என்று எழுதி முனைவர் மைக்கல் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார்.  இயேசு அனைத்து மக்களுக்கும் அல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்து கொண்டவர்களுக்கு மட்டும் அவர் காட்சி அளித்தார்’ (திருத்தூதர் 10:41).
இங்கிலாந்து நாட்டுத் தலைமை நீதி அரசர் மேமிகு லார்ட் டார்லிங் கூறுகிறார் : ஏற்கெனவே காணக்கிடைத்துள்ள அளவுக்கு அதிகமான சாட்சியங்கள் பலப்பல.  உடன்பாடான சாட்சியங்கள், சூழ்நிலைச் சாட்சியங்கள், உண்மைச் சாட்சியங்கள் போன்றவற்றின் அடிப்படையில் உலகின் அறிவாற்றல்மிக்க எந்த நீதியரசரும் இயேசு உயிர்த்த செய்தி மெய்யே என்று தீர்ப்பு வழங்கத் தவறமாட்டார்”.
ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைத்தலைவர் பேராசிரியர் தாமஸ் ஆர்னால்டு உரோமானியர் வரலாறுஎன்னும் ஆராய்ச்சி நூலை ஆக்கியவர்.  வரலாற்று விழிகளையே மூடிவிட்டால்தான் இயேசு உயிர்ப்பை மறுக்க முயலமுடியும் என்று எழுதினார்.  வரலாறு குறித்த நோக்குகளும் இயேசு உயிர்த்ததற்கான சான்றுகளும்என்னும் ஆய்வு நூலை வரலாற்று ஆதாரங்களுடன் வெளியிட்டார் (A Treatise on the law of Evidence)).  திருவிவிலியத்தை முழுமையாக வாசித்த எவராலும் இயேசுவின் உயிர்ப்பு ஓர் கட்டுக்கதை என்று கற்பிதம் செய்யவே முடியாது ஏன்?
திருவிவிலிய உயிர்ப்புப் பதிவுகள்
பிறப்பு உண்டெனில் இறப்பும் உண்டு.  பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்ட இருத்தல்தான் மனித வாழ்க்கை.  இதுதான் இயற்கை விதிஇயற்கை நியதி.  இறைமகன் இயேசுவும் இயல்பான மரணம் அடையாமல் கொலை செய்யப்பட்டு இறந்தார்.  தமது உயிரையே விலையாகக் கொடுத்து இறுதித் துளி குருதிவரை பூமியில் சிந்தி மானிடரை மீட்ட மீட்பர் அவர்.  கிறித்தவ அடிப்படை நம்பிக்கையின்படி ஆதாம் ஏவாள் இருவரும் இறைவனது கட்டளையை மீறி குற்றம் - ‘பாவம்செய்தனர்.  அதற்குத் தண்டனையாகச் சாகாமைநிலையை இழந்தனர்மரணம் அடைந்தனர்.  பாவம் மரணம் என்கிற விளைவை ஏற்படுத்தியது.  தந்தையாம் இறைவன் இறந்த இயேசுவின் உடலைப் பிற மானிடர்களது உடல்போல மண்ணுடன் மக்கி அழியுமாறு விட்டுவிடவில்லைமூன்றாம் நாள் அவரை உயிர்பெற்று எழச் செய்தார்.  பாவத்தை ஒழிக்க ஒரே ஒரு முறை இறந்தார்இப்போது அவர் வாழ்கிறார்என்கிறார் பவுல் அடியார் (உரோ 6:11).
உலக மதங்களை நிறுவிய எந்த ஞானியும் உயிர்பெற்று எழுந்ததாக வரலாறு இல்லை!  உலக மதங்கள் பலவும் மறுபிறவி, மறுமரணம் என்று பல்வேறு பிறப்புகள் மனிதரின் நல்வினை - தீவினைகளுக்கு ஏற்ப உண்டு என்று கோட்பாடு கொண்டுள்ளனர்ஆனால் உயிர்ப்புஎன்கிற கோட்பாட்டு உண்மை கிறிஸ்தவத்தில் அடித்தளமாக உள்ளது.  இயேசுவின் உயிர்ப்பு வழியாக எல்லோரும் உயிர்பெற்று எழச்செய்து, அவரில் நம்பிக்கை கொண்டோர் கடவுளுக்கு ஏற்புடையராகி, நிலைவாழ்வு பெறச் செய்கிறது;   கடவுளாகிய அவரது அருளாட்சி! (உரோ 5:21) அவர் உயிர்த் தெழுந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம் (உரோ 6:5). திருவிவிலியம் ஒன்பது பேர் உயிர்பெற்று எழுப்பப்பட்ட நிகழ்வைப் பதிவு செய்துள்ளது.  அந்தப் பதிவுகள் வருமாறு :
1.  உயிர்பெறச் செய்த எலியா :  சிலை வழிபாடு, கடவுளுக்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றிலிருந்து மக்களைத் தடுத்த இறைவாக்கினர் எலியா எலியர் சரிபாத்துநகருக்குப் போனார்; அங்கே இறைவழி நடத்துதலின்படி அவருக்கு உணவளித் தவள் ஓர் கைம்பெண்.  அவளுடைய மகன் நோயுற்று இறந்தான்.  கைம்பெண் கதறிய கலக்கம் கண்டு, மாடி அறையில் தனது படுக்கையின்மீது கொண்டுசென்று கிடத்தினார்ஆண்டவரை நோக்கி மன்றாடினார்எலியாவின் குரலைக் கேட்டுச் சிறுவனுக்கு உயிர் திரும்பி வந்ததுஅவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார் (1 அரசர் 17:17-23).
2.  எலியாவின் பதிலாளான இறைவாக்கினர் உயிர்பெறச் செய்த சூனேம் பெண்ணின் மகன் :  மகப்¼று இல்லாத சூனேம் பெண் விருந்தோம்பல் செய்தமைக்குக் கைம்மாறாக வயதான கணவருடன் வாழ்ந்த அவளுக்கு இறைவன் அருளால் குழந்தை பாக்கியம் பெறச் செய்தார்.  அந்தக் குழந்தை சில காலத்தில் இறந்தபோது எலிசா ஆண்டவரை வேண்டி உயிர் மீண்டும் வரச் செய்து தாயிடம் தந்தார்.
3. எலிசா இறந்தபின் அடக்கம் செய்த கல்லறையில் அவரது எலும்புகள் மீது உரசிய சடலம் உயிர் பெற்றது அந்த ஆள் உயிர்பெற்று எழுந்து நின்றான்” (2 அர 13:21).
4.  இயேசு உயிர்பெறச் செய்த இலாசர் : பெத்தானியாவில் நோயுற்று இறந்தார் இலாசர்.  இயேசுவின் நண்பர்.  நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்என்று சீடரிடம் இயேசு கூறினார்.  இலாசரைக் கல்லறையில் வைத்த இடத்திற்குச் சென்று உடன்வந்த மார்த்தாவிடம், “உன் சகோதரன் உயிர்த்து எழுவான்” “இறுதிநாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த் தெழுவான் என்பது எனக்குத் தெரியும்என்று சொல்லாடலில் இறங்குகிறார் அவர்.  இயேசு, “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே!என்கிறார்.  உயிர்த்து எழப் போகிறவர் இயேசு.  அவர்கள் கண்முன் வாழ்ந்து கொண்டிருப்பவரும் இயேசு என்று உணரச் செய்கிறார்.  சாகாமைக்கு வழி எது? என்றும் மனிதர் சாகாமையுடன் வாழும் நிலைப் பற்றியும் முன்னுணர்த்தி விடுகிறார்:  என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.  உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்” (யோவா 11:23-26) என்கிறார்.  இதற்கு என்ன பொருள்தந்தை மாட்சியை எல்லோரும் கண்ணால் காணுமாறு இறந்த இலாசரை உயிரோடு எழச் செய்கிறார்.  உயிர்பெற்று மனிதர் எழப்போவது உண்மை என்பதைத் தாம் வாழ்ந்த உலகில் மனிதனாக வாழ்ந்த நாளிலேயே உயிர்த்தல் சாட்சியமாகக் காணச் செய்தார்.  இறைஇயேசுவை நம்புகிறவர்கள் எல்லோரையுமே மீண்டும் உயிர்பெற்று எழச்செய்து சாகாமையில் நிலைபெறச் செய்யவேண்டும் என்பதே தந்தை விருப்பம் என்று மனிதருக்குக் காட்டிய முன்நிகழ்வே உயிர்ப்புவல்ல செயல்
5.  இயேசு நயீன் எனனும் ஊர் வாயில் அருகே சென்றார்.  கைம்பெண்ணான தாயின் ஒரே மகன் இறந்து அவ்வூர் மக்கள் திரளானோர் சூழ அழுததால் அழாதீர்!என்கிறார்.  இறந்த இளைஞரை எழுந்திரு!என்கிறார்.  இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினான்” (லூக் 7:13-15).
6.  கெரெசனர் பகுதி தொழுகைக் கூடத் தலைவன் மகள் இறந்து போன செய்தி கேட்டு இயேசு பேசிக்கொண் டிருந்த போது வீட்டு ஆள்கள் வந்து கூறினர்.  இயேசு அவர் வீட்டுக்குச் சென்று ஏன் இந்த அமளிஏன் இந்த அழுகைசிறுமி இறக்கவில்லைஉறங்குகிறாள்என்றார்.  எழுந்திடு!என்று சிறுமி அருகில் சென்று கூறியதுமே அச்சிறுமி எழுந்து நடந்தாள்” (மத் 6:41-42).  மக்கள் பெரிதும் மலைத்து, மெய் மறந்து நிற்குமளவு அவள் உயிர்பெற்று எழுந்தாள்.
7.  நன்மை, இரக்கம் ஆகிய பணிகளில் சிறந்த யோப்பா நகரின் தபித்தா என்கிற தொற்கா உடல் நலம் குன்றி இறந்துவிடுகிறாள்.  பேதுருவை அங்கே அழைத்து வருகிறார்கள் கைம்பெண்கள்பேதுரு இறைவனிடம் வேண்டி தபிப்தா, எழுந்திடுஎன்றார்.  உடனேஅவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு எழுந்து உட்கார்ந்தார்.  இறைமக்களையும் கைம் பெண்களையும் கூப்பிட்டு அவர்கள் முன் அவரை உயிருடன் நிறுத்தினார்.  இயேசுவின் உயிர்ப்புக்குப்பின் அவருடைய தலைமைச் சீடர் பேதுரு செய்த உயிரளிப்பு இது (திருத்தூதர் 9:40-41).
8.  தூய பவுல் துரோவா என்னுமிடத்தில் மேல்மாடியில் நள்ளிரவு வரை உரை யாற்றினார்.  மூன்றாம் மாடி விளிம்பில் அமர்ந்து கேட்டுக்கொண்டே உறங்கி விட்டார்  யூத்திரு என்கிற இளைஞர்.  கீழே விழுந்து பிணமானார்.  அழுகை அமளியை அவர் நிறுத்தினார்.  இவர் உயிரோடுதான் இருக்கிறார்என்றார் பவுல்.  உயிர்பெற்ற இளைஞரை அவர்கள் அழைத்துச் சென்று ஆறுதல் அடைந்தார்கள்” (திருத்தூதர் 20:10). “உறங்குவது   போலும்  சாக்காடு;   உறங்கி  விழிப்பது    போலும்   பிறப்பு என்கிறார் திருவள்ளுவர்.  தந்தை இறைவனுக்கு உயிர் கொடுத்து எழுப்புதல் அரிதன்று என்பதற்கான முந்தைய சாட்சியங்கள்; சான்றுகள் இவை.
9.  மனித உருவற்றுச் சித்திரவதை சிலுவைக் கொலைப்பட்ட இயேசு உடலைக் கல்லறையில் இருந்து யாவே இறைவன் எடுத்துக் கொண்டார்.  மேலும் சாவை வென்று தாமாக அவர் உயிர்த்து எழச் செய்தார்.  எல்லா மனிதரும் மீண்டும் உயிர்த்து எழுப்பப்படுவார்கள் என்பது இயேசு அருள்வாக்கு.
உயிர்த்தெழல் பற்றி இயேசுவின் அருள் வாக்கு :  நீங்கள் சாட்சிகள். தன் தந்தைக்கும் தனக்கும் இடையிலான உறவு பற்றி விளக்கமாக இயேசு மொழிந்தவற்றை யோவான் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்: தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழவைப்பதுபோல மகனும் தாம் விரும்பிய வர்களை வாழவைக்கிறார்” (யோவா 5:21) நிலைவாழ்வு உயிர்ப்புக்குப்பின் யாருக்குக் கிட்டும்?  “என் வார்த்தையைக்  கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர்” (யாவே) நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்  (யோவா 5:24)
காலம் வருகிறதுஅப்போது கல்லறை களில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியேவருவர்.  நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த் தெழுவர்தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்பு பெற உயிர்த்தெழுவர் ” (யோவா 5:29).
இயேசு உயிர்த்தெழுந்த உண்மைக்கு 500க்கு மேற்பட்ட சாட்சியங்கள்உயிருள்ளோர் மகதல மரியா முதற்சாட்சி.  கதவைப் பூட்டி உள்ளே அஞ்சி நடுங்கிய சீடர்கள் 11 பேர், எட்டு நாள் பின்னர் தோமா உள்ளிட்ட சீடர்கள், பின்பு திபேரியக் கடல் அருகே பேதுரு, திதிம்தோமா, கான நத்தனியேல், செபதேயு மக்கள், மீண்டும் எம்மாவுஸ் சீடர் இருவர்.  பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார்.  கடைசியில் எனக்கும் தோன்றினார் என்கிறார் பவுல் அடியார்.
உறந்தை குருசில்
முனைவர் அ. அந்தோணி குரூஸ்

துவக்கக்கால திருச்சபையில் குருத்துவம்

குருத்துவப் பணிகளின் வளர்ச்சி நிலைகளைப் பல்வேறு கோணங்களில் விளக்கலாம்.  வரலாற்று நோக்கில் எவ்வாறெல்லாம் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்தப் பணிகள் செதுக்கப்பட்டன என்று காண்பவர்கள் உண்டு.  ஆன்மீக நோக்கில் எப்படியயல்லாம் இந்த வாழ்க்கை முறை வளர்ந்தது என்று நோக்கியவர்கள் உண்டு.  மானிடவியல் நோக்கில், இத்தகைய வாழ்க்கை முறை சமுதாய வளர்ச்சிக்குத் தேவைதானா?  என்று சிந்திப்பவர்கள் உண்டு.
‘இறையழைத்தல்’ என்ற நோக்கில் இந்தப் பணி எவ்வாறு ஆவியின் உந்துதலுக்கு ஏற்ப இறை வெளிச்சமாக இந்தச் சமுதாயத்தில் பட்டுச் சிதறிப் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்று நோக்க விரும்புகிறேன்.  இறையழைத்தல் குருத்துவத்திற்கு எப்படியயல்லாம் இளைஞர் களைத் தூண்டுகிறது என்பதைக் கால வளர்ச்சியில் கண்ணோக்கியது சுவையான சிந்தனை.
1. பங்குத் தந்தையர்கள் : திருச்சபை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் அரிய பாதிப்புக்களை ஏற்படுத்திய காலகட்டத்தில் அமைப்பு சார்ந்த குருத்துவம் தேவைப் பட்டது.  பங்கு என்ற அமைப்பின் கீழ் பல்வேறு வகைப்பட்ட மக்களை ஒன்றிணைக்கத் திறன் மிக்க  பணியாளர்களை இறைவன் அழைத்தார்.  ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கி, மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டு, எல்லா நிகழ்வுகளிலும் உள்ள இறை வெளிப்பாட்டைச் சுட்டிக்காட்டும் அற்புதமான பணியிது.  இன்றும் இது எத்தனையோ இளநெஞ்சங்களை ஈர்த்து இழுக்கிறது.  வளர்ந்துவிட்ட நாடான அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெருமளவான இளைஞர்களின் கவனம் இந்தப் பணிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.  மறைமாவட்டக் குருக்களாகி, பங்குத் தளங்களில் மக்களோடு இணைந்து பணியாற்றவே இந்த இளைஞர்கள் விரும்புகின்றனர்.
மக்கள் இன்று விரும்புவது தங்களோடு உடன் இருந்து, தங்களின் இன்ப  துன்பங்களில் பங்கு கொண்டு தங்களை இறைவனோடு தொடர்பு படுத்தும் குருத்துவத்தை ஒரு காலத்தில் பங்குத் தந்தையர்களின் பணியை வெறும் சடங்குக் குருத்துவமாக, படிப்பறிவு இல்லாத பாமரக் குருத்துவமாகப் பார்த்த நிலை இருந்தது.  கட்டடங்கள் கட்டுவதும், ஆலயங்களை நிர்வாகம் செய்வதும் அவர்களின் சேவைகளாகவே கருதப் பட்டன.  இன்று அந்த நிலையே மாறி விட்டது.  பங்கு நிர்வாகத்தைப் பார்ப்ப தற்குப் பொதுநிலையினர் மிக ஆர்வமாக முன்வரத் துவங்கிவிட்டனர்.  அவர்களது பணிகளை ஒருங்கிணைத்துச் செல்ல இறையாற்றல் மிக்க நபர்களே இன்று தேவை.  இறைவன் பங்குப் பணியாளர்களைச் சிறப்பாக அழைப்பது இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் உணரப்படுகின்றது.  மக்களோடு மக்களுக்காக வாமும் குருக்கள் உள்ளார்ந்த திருப்தியும், உன்னதமான ஆன்மீகமும், உண்மையான மகிழ்ச்சியும் மிக்கவராக இருந்து வருகின்றனர்.
2.ஆன்மீக வழிகாட்டுதல்
குருக்களின் அழைப்பு பல்வேறு கால கட்டங்களில் ‘பங்குத் தந்தை’ பணியிலிருந்து வேறுபட்டும் இருந்திருக்கின்றது.   மக்களின் ஆன்மீக வாழ்க்கையில் பங்கேற்று சிறப்பாக வழிநடத்தும் அருட்பணியாளர்களாக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.  துறவற குருக்களுக்கு இந்த அழைப்பு மிகப் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.
மக்கள் ஆன்மீக வழிகாட்டுதல் தேடி மடாலயங்களுக்கும் சென்றிருக்கின்றனர்.  மக்களின் ஆன்மீக தேவைகளுக்காக அவர்களுக்கு அருளுரைகள் வழங்குவது,  தனியாகச் சந்தித்து வாழ்க்கைச் சிக்கல் களில் வழிகாட்டுவது, ஆற்றுப்படுத்துவது, அருளடையாளங்களை அவர்களின் வாழ்க்கைச் சூழலில் வழங்குவது போன்ற பணிகளைக் குருக்கள் செய்து கொண்டே வருகின்றனர்.
எத்தனையோ பேர் இந்தப் பணிகளைச் செய்தாலும், குருக்களில் இந்தப் பணிகள் தனிப்பெரும் வலிமை பெறுவதாக மக்கள் காலங்காலமாக உணர்ந்து வருகின்றனர்.
எத்தனையோ துறவற சபைக் குருக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இறையாவியின் உந்துதலின் அடிப்படையில் இந்தப் பணிகளைத் தொடர்கின்றனர்.  இயேசு சபையாரின் இஞ்ஞாசியார் ஆன்மீகம், பிரான் சிஸ்கன் ஆன்மீகம், பெனடிக்ட் வழி ஆன்மீகம், தோமினிக்கன் ஆன்மீகம், சலேசியன் ஆன்மீகம் என்று வழிமுறைகள் நீண்டுகொண்டே செல்கின்றன.  இவை குருக்களுக்கு என்ற தனிமுத்திரையைப் பதிக்கும் பணிகளாக இருந்துவருவது கண்கூடு.  
3. மேய்ப்புப் பணியாளர்கள்
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழிகாட்டுதலில் ‘மேய்ப்புப் பணி’ என்ற வார்த்தை தனித்துவம் பெற்றது.  இயேசு நல்லாயனாக இருந்து மக்களை வழி நடத்தியது போன்று மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களோடு சேர்ந்து வழிநடக்கும் அருட்பணி அழைப்பை இந்தக் காலகட்டத்தில் குருக்கள் மிக ஆழமாக உணர்ந்தனர்.
‘பங்குத் தந்தை’ என்ற அமைப்புப் பணிகள் மற்றொரு வளர்ச்சிப் பரிணாம மாக இந்தப் பணிகள் உணரப்பட்டன.  ‘மக்களைத் தேடிச் சென்று’ என்ற வார்த்தை இதன் பண்பை உணர்த்துகிறது.  மக்களுக்கு ‘ஆன்மீக வழிகாட்டுதல்’ என்ற நிலையிலிருந்து ஒரு படி மேலே சென்று மக்களின் வாழ்க்கையில் ‘உடன் செல்லுதல்’ என்பது இதன் தனித்தன்மை யாக உணரப்படுகின்றது.  இளைஞர்கள் குழுக்களில் தோன்றி அவர்களோடு பயணித்த தொன்போஸ்கோ போன்றவர்கள் இந்த அழைப்பின் முன்னோடிகளாக அமைகின்றனர்.  சிறைச் சாலையில் உள்ளவர்கள், மருத்துவமனை களில் உள்ளவர்கள், இராணுவத்தில் உள்ளவர்கள், தொழிலாளர் போன்ற பல்வேறு அமைப்பினரிடையே ஊடுருவி ஒளி காட்டும் இந்தப் பணி ‘குருக்களின் சிறப்பு அழைப்பாக’ இன்றும் உணரப்படுகிறது.
4. விடுதலைப் பணிகள்
மேய்ப்புப் பணியின் வளர்ச்சியாக விடுதலைப் பணியை நாம் இனம் காணவும் மக்களின் வாழ்க்கையில் ஈடுபட்டு உழைத்த குருக்கள், அநீதியான அமைப்பு முறைகளைச் சமுதாயத்தில் கண்டனர்.  சாதாரண மக்கள் பல்வேறு அமைப்புமுறை வன்முறைகளுக்கு உள்ளாவது அவர்களின் கவனத்தை ஈர்த்தது.  பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக சில நிலைப்பாடுகளை எடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.  ஒடுக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து அவர்களின் வாழ்வுக்காக அரசியல் ரீதியாகப் போராடுவது இறை அழைப்பாக அவர்களின் வாழ்க்கையில் தோன்றியது.  இயேசுவைப் புரட்சியாளராக, பாதிக்கப்பட்ட மக்களுக்காக உயிரைத் தந்த உன்னதராகக் கண்ட நேரத்தில் இவர்களின் விடுதலைத் தாகம் வீறு கொண்டு எழுந்தது.  தென் அமெரிக்க நாடுகளில் துவங்கிய இந்த விடுதலை வேள்வி உலகமெங்கும் பரவியது.
விடுதலைக்காக இன்னுயிரையும் இழக்கும் நபர் குருவாகத்தான் இருக்க முடியும் என்ற உறுதிப்பாடு அவர்களின் ஆன்மீகத்தில் வெளிப்பட்டது.  இன்றும் இந்தப் பணிகளுக்காக அழைக்கப்படும் குருக்களின் எண்ணிக்கை அதிகம்.  இவர்களைப் புரட்சியாளர்கள் என்று திருச்சபை முத்திரை குத்த நினைத்த நேரங்களில்கூட, இந்த அழைப்புக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் திருச்சபையில் நின்று நிலைத்தன.  சாதிய அமைப்புக்கள், பன்னாட்டு பொருளாதார அமைப்புக்கள், மேல்தட்டு அரசியல் அமைப்புக்கள் போன்று மேலாதிக்கம் செய்யும் பல்வேறு அமைப்புக்களுக்கு இறைவாக்கினர் பாணியில் சவாலாக இருக்கும் இத்தகைய குருக்கள் திருச்சபைக்குக் கிடைத்திருப்பது இறைவனின் அருங் கொடையே.
5. அனுபூதி அனுபவத்தினர்
விடுதலைப் பணியில் கண்ட அனுபவங்கள் குருத்துவத்தில் புதிய வடிவம் தந்தன.  போராட்ட உணர்வுகள் சில சமயங்களில் வெறுப்புக்கள், வேதனைகள், பிளவுகள் என்று உருமாறிவிடுகின்றன.  உண்மையான போராட்ட உணர்வு இயேசு காட்டிய சிலுவை வழியில் அமைய வேண்டும் என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொள்ளத் துவங்கியது குருத்துவம்.
தீமைகளை எதிர்க்கும் நேரத்தில் தீயவர்களை மன்னிக்கவும் கற்றுக் கொடுத்தது இயேசுவின் வாழ்வு.  பாதிக்கப் பட்டோரை ஒருங்கிணைக்கும் நேரத்தில் முழுமையான சமுதாய விடுதலையையும் முன்நிறுத்திக் கற்றுக் கொடுத்தது இயேசுவின் நம்பிக்கை.  விடுதலை என்பது தவமிருந்து பெற வேண்டிய ‘இறுதிக்கால நிலை’ என்பது கால வெள்ளத்தில் புரிந்தது.  புதிய வானம், புதிய பூமி நோக்கி கிறிஸ்தவ நம்பிக்கைகள் வழிநடத்திய நேரத்தில் உருவான புதிய நிலைதான் அனுபூதி அனுபவ நிலைகள்.  அக விடுதலையையும் புற விடுதலையையும் இணைக்கும் இந்தச் செயல்பாட்டு ஆன்மீகம் குருத்துவத்திற்குப் புதிய முத்திரை தருகின்றது.
வெறுப்புக்களைக் கடந்த, தீர்க் கமான எதிர்காலத்தை நோக்கிய ஆற்றல் மிக்க மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளை முன்நிறுத்தும் வாழ்க்கைமுறை குருத்துவத்தை புதிய ஆற்றலோடு செயல்பட வைக்கிறது.  மக்களை இறைவனோடு இணைத்து வைத்து உயிர்த்த இயேசுவைப் போன்று மறுமையை இம்மையில் படிப்படியாகக் கொணரும் பக்குவமிக்க பணிமுறையில் இறை குருக்கள் அடியயடுத்து வைக்கிறார்கள்.  இவை அழைத்தலின் புதிய பரிணாமம்.    (தொடரும்)
அருள்பணி. வலன்டின் 

தேவன் உயிர்த்தெழுந்தார்



சேசு  தேவன்  உயிர்த்தெழுந்தார் -  நாமும்
     சேசைப்  போல்   உயிர்த்தெழுவோம்
மாசு   இன்றி   உயிர்த்தார்  -  மகிமை
     பாபத்   தோடு   உயிர்பெற்றார்
நீசர்    வாழும்    உலகுதான்  -  இதனை
     எண்ணி    தூயர்   ஆகுவோம்
நாசர்   வாழும்   உலகிற்கு  -  செல்லாது
     நம்மை  நாமே   திருத்துவோம்!
சேசைப்   போன்று   வாழுவோம்  -  இந்த
     செகத்தை  வென்று  நற்கதியில்
ஆசை   யோடு   நுழைந்திடுவோம்  -  வாழும்
     ஆசில்லா   வாழ்விற்குப்    பரிசுதான்
நேசத்    தோடு   சேசுவை   -  பின்பற்றி
     நேர்த்தியாய்   என்றும்    வாழுவோம்
நீசத்   தனங்கள்   விட்டொழித்து  -  என்றும்
     நிறைந்த   புனிதர்   ஆகுவோம்
தூயத்   தோடு உயிர்த்தெழுந்தால் - நமக்கு
     உன்னத   மோட்சம்   கிடைத்துவிடும்
தீய   பாபத்துடன்   உயிர்த்தால்  -  என்றும்
     தீயில்   வெந்து   கருகனும்
மாய   மான  உலகினது  -  இன்பத்தில்
     வாழ்ந்து   மடிந்து   உயிர்பெற்றால்
ஞாய  மான  வழிதவறி  -  வாழின்
     நரகில்  தீயில்   வேகணும்!
பாப  வாழ்க்கை  ஒதுக்கணும்  -  என்றும்
     பரிசுத்த வாழ்வில்  வாழணும்
தீமை  களைந்து  புண்ணியம் - பெற்று
     திறம்பட  வாழ்ந்து  மோட்சத்தில்
சாபம்   நீங்கி   நுழைந்திடுவோம் - தூயர்
     அணியில் இடம்பிடித்து  மகிழ்வோம்
தீபச் சுடராய் ஒளிவிடுவோம்  -  என்றும்
     நிரந்தர  இடத்தைப்  பெற்றிடுவோம்! 
கவிஞர் பெஸ்கிதாசன்

உயிர்ப்பு

கருமையான மை இருட்டு.  இரவில் அந்தக் கல்லறையை அவன் காவல் காத்துக் கொண்டிருக்கிறான்.  அவனோடு காவலுக்கு இருந்த இரண்டு காவலர் களும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நன்றாக வயிறு முட்ட குடித்துவிட்டு அரைத் தூக்கத்தில் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கின்றனர்.  அவர்களில் ஒருவனுக்கு அன்று கல்லறையில் புதைக்கப்பட்ட மனிதனின் உடை யாருக்கு என்று சீட்டுப் போட்டுக் குலுக்கியதில் அவனுக்கு விழவில்லையாம்.  தன் வருத்தத்தை மற்றவனிடம் சொல்லி பெரியதாக குறைபட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால் இவர்களோடு காவலுக்கு இருந்த அந்தக் காவலனுக்கு ஏனோ பசியும், தாகமும் கொஞ்சம்கூட எடுக்க ல்லை, சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் அநியாயமாக சிலுவையில் இறந்த அந்த மனிதனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.  பாவம் இந்த மனிதன் எல்லா மக்களுக்கும் நல்லதையே செய்தவர்.  குருடர்களுக்குப் பார்வையைத் தந்தவர், வாய் பேச முடியாத ஊனமகளை பேசவைத்தார்.  நோயாளிகளை குணமாக்கினார்.  விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் கல்லால் அடிக்கவிருந்தவர்களிடமிருந்து காப்பாற்றி அவளை மனம் மாறச்செய்தார்.
இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக, கடுமையான காய்ச்சலில் சாகக்கிடந்த தன் ஒரே மகனை ஒரே வார்த்தையால் குணமாக்கிய குணவானாயிற்றே . . .  இவரைப் போய் சிலுவையில் அறைந்து கொன்று விட்டனரே . . .  அன்று இவரைப் பிடித்துக் கொண்டு போகும்போதுகூட இந்த மனிதன் எவ்வித மறுப்பும் காட்டாமல் உடன் சென்றாரே . . .  இவர் நினைத்திருந் தால் அவர்கள் பிடியில் இருந்து தப்பித்துச் சென்றிருக்க முடியும்.  ஆனால் இவர் நல்ல மனிதராக இருந்ததால்தான் ஒரு கொலை யாளியாக பலியாகப் போகும் செம்மறி ஆடாக அவர்களின் பின்னால் சென்றார்.
பிலாத்து இவரை வேண்டி வேண்டி கேட்கும்போதுகூட வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூட பேசவில்லையே . . .  இந்த மனிதன், இவர் பேசிய ஒரு சில வார்த்தை கள் கூட யாருக்கும் புரியாமல்தானே இருந்தன.  என்ன சொன்னார் நீ யூதர்களின் அரசனா?  என்று கேட்டதற்கு, நீர்தான் அதைச் சொல்கின்றீர் . . . என்றார்.  நீர் எந்த நாட்டின் அரசன் எனக் கேட்டதற்கு என் அரசு இவ்வுலகைச் சார்ந்தது அன்று என்றாரே ... அப்படியானால் வேறு எந்த உலகத்திற்கு இவர் அரசன் . . . ?
இந்த மனிதனைக் கொஞ்சம்கூட புரிந்துகொள்ள முடியவில்லையே!  புரியாத புதிராக அல்லவா இருக்கிறார் . . . ! கடவுளாக இவர் இருந்திருந்தால் உரோமை வீரர் களிடம் மாட்டிக்கொள்ளாமல் வானதூதராய் வானில் பறந்து போய் இருக்கலாமே!  அப்படி செய்யாமல் எத்தனை சாட்டை அடிகள் அவர் உடம்பைப் பதம் பார்த்தன.  எப்படிப்பட்ட அவமான வார்த்தைகள் அவர் மீது அம்புகளாய் வந்து பாய்ந்தன!  சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடந்தாரே, அந்தச் சிலுவையின் கனம் தான் என்ன ... ?  எல்லா வேதனை களையும், அவமானங்களையும் காரித் துப்பிய எச்சிலையும் உடம்பில் தாங்கிக் கொண்டு திட மனதுடன், ஒரு இலட்சிய வீரனாய், கருணையான பார்வையோடு, கரடு முரடான கல்வாரிப் பாதையில் கடமையே கண்ணாக நடந்து வந்தாரே . . . என்ன ஒரு மனத் தெளிவு, என்ன ஒரு திட நம்பிக்கை, எடுத்த காரியத்தை முடிக்கத் துடிக்கும் கடமை உணர்வு . . . என்று திகைத்த அவன் . . .
இத்தகைய இலட்சிய வீரனைப் போய் சிலுவையில் அறைந்தனரே, அய்யகோ, சிலுவையை சுமக்க முடியாமல் தடுமாறி விழுந்த அவரைக் காலால் எட்டி உதைத்து சாட்டையால் அடித்து எழுந்து நடக்கச் சொல்லி மிரட்டி மிருகமாய் நடந்து கொண்டேனே . . . ஆனால் அந்த நல்ல மனிதன் கோபப்படாமல் என்னை ஒரு பார்வை பார்த்தாரே . . . என்ன ஒரு தீர்க்கமான பார்வை . . .  அப்பப்பா . . . அந்தப் பார்வையின் பொருள் இன்றுவரை எனக்கு விளங்கவே இல்லையே.  
கொடுமையிலும் கொடுமையான செயல் ஒன்றை அந்த நல்ல மனிதருக்குச் செய்தேனே . . .  ச்சீ . . . என்ன ஒரு ஈனச் செயல், அந்த மனிதனைச் சிலுவையில் மரமோடு மரமாக கிடத்தி உள்ளங்கையில் ஆணியை அடித்த கொலைகாரன் அல்லவா நான் . . . என்று அந்த கல்வாரித் தோட்டத்தில் காவலுக்கு இருந்த அவன் கைகளைத் தரையின் மீது ஓங்கி ஓங்கி அடித்துக் கொள்கிறான்.
அந்த முகத்தை நினைக்கும்போது, அவன் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவதைப் போல் அவன் உணர்கிறான்.  நல்லதையே நினைத்து நன்மைகளையே செய்த நல்லவனை தன் ஒரே மகனை சாவின் பிடியில் இருந்து காத்த தியாக சீலனை நானும் கூட இருந்து கொன்று விட்டேனே என்று அவன் மனம் கல்லும் உருகும் வண்ணம் கல்லறையில் இருக்கும் இயேசுவிற்காய்க் கழிவிரக்கப் பட்டது.  கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது.
பைத்தியக்காரனைப்போல் அவன் இங்கும் அங்கும் ஓடி அந்தக் கல்லறைத் தோட்டத்தில் மன நிம்மதி இன்றித் தவிக்கின்றான்.  ஒரே ஒரு முறை அந்த உத்தமனின் முகத்தைப் பார்க்க இவன் மனம் ஏங்கியது.  அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தவித்தது.  அவரைப் பார்த்து விட்டால் போதும், இந்த உலகத்தையே கொடுத்தாலும் தூசு என தூக்கி எறிந்து விடலாம்.  ஆனால் கொடுமையிலும் கொடுமையாய் கொலை செய்யப்பட்டு கல்லறையில் புதைக்கப்பட்ட அவரைப் பார்க்க முடியாதே . . . என்று அவன் மனம் ஆற்றா மையால் அழுதுகொண்டிருக்கும் போது
அவனுக்குள்ளே ஒளிக்கீற்றாய் ஒரு நம்பிக்கை மின்னல் தோன்றி மறைகிறது.  இன்று இரவுதானே அந்த இயேசு உயிருடன் கல்லறையைவிட்டு வருவார் என்று சொன்னார்கள்.  அதை நம்பாத உரோமை அதிகாரிகள் அவரைச் சேர்ந்த வர்கள் அவரைத் தூக்கிச் சென்றுவிடு வார்கள் என்பதற்காகத்தானே நம்மைக் காவலுக்கு அனுப்பினார்கள், அப்படி யானால் நிச்சயமாக அந்த இயேசு இன்று இரவு உயிருடன் எழுந்து வருவார் . . .  அப்படி வரும்போது அவர் முகத்தைக் கண்குளிர பார்த்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்கிறான்.
இரவு நீண்டுகொண்டே போனது, விழிப்புடனே அவன் அந்தக் கல்லறையைப் பார்த்துக் கொண்டி ருக்கிறான்.  மயான அமைதியோடு இறுக்கமாக இருந்த அந்த இடத்தில் சில்லென்று குளிர்காற்று வீசுகிறது.  வாசமிக்க நறுமணம் அந்த இடத்தில் பரவுகிறது.  இதை உணர்வதற்குள் திடீரென்று ஒரு மின்னல் பளிச்சென அடித்து அந்த இடமே இரண்டாக பிளந்ததைப் போல் பயங்கர வெடிச் சத்தத்துடன் நிலம் நடுக்கமடைகிறது, அப்போது . . .
மூடிய கல்லறையின் பெரிய பாராங்கல் தானாகத் திறந்து சிதறி ஓடுகிறது.  அந்தக் கல்லறையில் இருந்து இயேசு சூரிய ஒளி பிரகாசமாய் ஆயிர வெண்ணிலவு அழகுப் பொலிவுடன், சாந்தமான பார்வையோடு போர் களத்தில் வெற்றிபெற்ற வீரனாய், வானோர்கள் எக்காளம் முழங்கி, சிலுவையை வெற்றிச் சின்னமாகக் கையில் ஏந்தி வெளியே வருகிறார்.  அங்கு பிரமிப்போடு தன்னையே இமைக்காமல் பக்தியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த காவலனுக்கு அருளாசீர் வழங்கி, கொல்கொத்தா மலையின் கொலை களத்தில் பார்த்த அதே பார்வையைப் பார்த்து புன்னகையுடன் சாவுக்குச் சாவுள மணியடித்து சாவை வென்ற சீலனாய் வெளியே வருகிறார்.  அவனுக்கு மன்னிப்பு வழங்குகிறார், மன்னிக்கும் அந்தப் பார்வையின் பொருளை அவன் அன்றுதான் உணர்கிறான்.
நடந்தவைகளைப் பயத்துடன் பார்த்த இரு காவலர்களும் மிரண்டு பயத்தால் வெடவெடத்து மயங்கி விழுகின்றனர்.  திறந்த மனதுடன் இயேசுவின் திருமுகத்தைப் பார்க்கத் துடித்து, பின்னர் மன்னிப்புப் பெற்று பேருவகைக் கொண்ட அந்தக் காவலன் அன்றலர்ந்த மலராகப் புது மனிதனாய் புனிதன் காட்டிய பாதையில் வாழ அந்தக் கல்லறைத் தோட்டத்திற்கு மனதால் நன்றி சொல்லி வெளியேறு கிறான்.  ஆம் மரணமும் மரணத்தோடு இணைந்த கல்லறையும் வாழும் மனிதருக்குப் புது வழிகாட்டும் புதிய பாதைகள், அதுதான் சுயநலத்தையும், பேராசைகளையும் குழிதோண்டிப் புதைத்து மன்னிப்பு என்ற மாபெரும் மருந்தை வழங்கி மனித நேயத்தை வளரச் செய்யும் புனிதன் காட்டிய புரட்சிப் பாதை!
தங்க. ஆரோக்கியதாசன், ஆவடி

இறைப்பணி ஓர் அழியா காவியம்

வேதாகமத்தில் “நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையிலுள்ளன.  வேதனை எதுவும் அவர்களைத் தீண்டாது.  கடவுளின் வருகை காலத்தில் அவர்கள் சுடரொளி வீசுவார்கள்.  நாணற் காட்டில் தீப்பொறிகள் எரிவதுபோல் ஒளிர்வார்கள்” (சாஞா 3:1-7) என நாம் வாசிக்கிறோம்.
குருக்கள் ஆண்டாகிய இந்த ஆண்டில் மதுரை உயர் மறைமாவட்ட குருவனவர்கள் அனைவரும் 31.01.2010 முதல் 06.02.2010 வரை கோவா திருப் பயணம் சென்று புனித சவேரியாரின் திருவுடல் வைக்கப்பட்டிருக்கும் புனித இடத்தில் திருப்பலி நிறைவேற்றி ஜெபித்தோம்.
 என் இதயத்தில் எத்துனை சிந்தனைகள் புனிதரின் திருவுடல் இடத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது எழுந்தன.  புனித சவேரியார் (1506 ‡ 1552) இவ்வுலகில் 46 ஆண்டுகள்தான் வாழ்ந்திருக்கிறார்.  1537ல் குருப்பட்டம் பெற்று 1542 முதல் இந்தியாவிலிருந்து தன் தீவிர இறைப் பணியைத் தொடங்கி இருக்கிறார்.
சரியாக 10 ஆண்டுகளே இயேசுவின் மறைப்பணியைச் செய்திருக்கிறார்.  இக்குறுகிய ஆண்டுகளுக்குள் இந்தியா, மலாக்கா, அம்பாய்னாத்தீவு, டொனேத், மோரே தீவுகளிலும், இலங்கையிலும், ஜப்பானின் தென் பகுதியிலும் இறைத் தூதுப்பணி செய்தார்.  1552ல் சீன நாட்டிற்கு இறைப்பணி செய்ய திட்டமிட்டபொழுதுதான் மிகுந்த நோய்வாய்ப்பட்டு கான்சியன் தீவில் மரணமடைந்தார்.  ஏறக்குறைய 50 நாடுகளில் அவர் திருப்பணி செய்திருப்ப தாகக் கருதப்படுகிறது.
“உலகின் எந்த மூலையிலெல்லாம் இயேசு கிறிஸ்து அறிவிக்கப் படவில்லையோ அங்கெல்லாம் நான் செல்வதற்குத் தயாராய் இருக்கிறேன்” எனக் கூறி தீவிர மறைப்பணி செய்தார்.  1552 டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை மரித்தார்.  சீன முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார்.  மூன்று மாதங்களுக்குப்பின் அவரின் எலும்புகளையாவது எடுத்து கோவா விற்குக் கொண்டு செல்ல கல்லறையைத் தோண்டியபோது அவரின் சரீரம் அழியாமல் இருப்பது கண்டு வியப்படைந்தனர்.  450 ஆண்டுகளாய் அச்சரீரம் இன்றும் மக்களின் வணக்கத்திற்கு வைக்கப் பட்டிருக்கிறது எத்துணை அதிசயம்!
தன் வாழ்வில் உத்தமமாய் பணி செய்த இறை ஊழியருக்கு ஆண்டவர் இயேசு கொடுக்கும் மிகப் பெரிய பரிசு அவர்களின் உடல் அழியாமல் காப்பதே.
நான்கு நற்செய்தியாளர்கள் மத்தேயு, மாற்கு, லூக்காஸ், யோவான் ஆகியவர் களில் புனித யோவானுக்குத்தான் “கழுகு”  ஓர் அடையாளச் சின்னமாய் தரப் பட்டிருக்கிறது.
கழுகைப்போல் அவரின் இறையியல் உயர்ந்து காணப்படுகிறது.  அன்பின் வெளிப்பாடுகளும், உயரிய இறை அறிவுச் சிந்தனையும் நம்மை வியக்க வைக்கின்றன.  இதற்குக் காரணமே புனித யோவான் இறுதி இராவுணவின் போது மட்டும் இயேசுவின் நெஞ்சில் சாய்ந்திருக்க வில்லை.  மாறாக வாழ்வு முழுவதிலுமே இயேசுவின் இதயத்துடன் தலைசாய்ந்து இருந்ததால் இதயத்தின் இரகசியங்கள் அவருக்கு மட்டும் அதிகமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
தன் நற்செய்திப் பணியை நிறை வேற்றிய குறுகிய காலத்திலேயே பத்மோஸ் தீவுக்கு “தொமிசியன்” என்ற மன்னனால் நாடு கடத்தப்பட்டார்.  பத்மோஸ் தீவில் இறைபணியாற்ற மக்கள் இல்லையே என வருந்தியபோது ஆண்டவர் இயேசுவின் தரிசனம் அவருக்கு அதிகமாய்த் தோன்றி திடப்படுத்தியது.
(பரம தந்தை அவரை வெளிப்பாடு களால் நிரப்ப ஆரம்பித்தார்.  “இந்நாள்வரை உலகம் கண்டிராத காட்சிகளையும் மோட்சத்தின் மகிமைப் பிரகாசத்தையும் உனக்குக் காண்பிப்போம்.  நீ அவைகளை ஒன்றும் விடாமல் எழுதுவாய்.)  அதற்காகவே பத்மோஸ் தீவிற்கு உன்னை அழைத்து வந்தோம்” என்றார்.
புனித யோவான் இயல்பிலேயே மிகவும் பரிசுத்தமானவர்.  இறை அன்பு நிறைந்தவர்.  தாழ்ச்சியான உள்ளம் நிறைந்தவர்.  இயேசுவின் சிலுவையடி யிலும் நின்று தம் இறையன்பை நிரூபித்தார்.  எனவேதான் நற்செய்தியாளர் நால்வரில் புனித யோவான் நற்செய்தியில் மட்டும் இறையியல் நிறைவாய்க் காணப்படுகிறது.  அவரின் நற்செய்தி நம்மை விண்ணகத்திற்கு இட்டுச் செல்கிறது என்பது வெளிப்படை.
புனித சவேரியார் “புனிதமும் இறையன்பும் தீவிர வேட்கையும் உடைய இறைப்பணியாளர்கள் மட்டும் இருந்து விட்டால் உலகம் முழுவதிலுமே இயேசுவின் அன்பைக் கொண்டு செல்வது மிக எளிது” என்கிறார்.
இன்று இறைப்பணியாளர்களிடம் இவர்களின் அர்ப்பண உணர்வும், இறை மகிமை தாகமும், விண்ணக வாழ்வின் பேரின்ப உணர்வும் இருந்துவிட்டால் நம் இறைப்பணிக்கும் இறைவன் இயேசு அழியாத முத்திரையைப் பதிப்பார் என்பது உண்மை.   சிந்திப்போமா!         (மலரும்)
Fr. ச. ஜெகநாதன், அருப்புக்கோட்டை