Snow Ball

சாலையில் நடந்து செல்கையில் ஒரு சின்ன நாய்க்குட்டியை இரண்டு பெரிய நாய்கள் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.  அதன் ஈனக் குரல் மிகவும் பரிதாபமாக இருந்தது.  மனம் பாதித்த சத்யன் ஓடோடிச் சென்று அந்தப் பெரிய நாயை விரட்டி விட்டு குட்டியைக் கையில் ஏந்திக் கொண்டான்.  அருகிலிருந்த கால்நடை மருத்துவ மனைக்கு அதனை அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தான்.  டீக்கடையில் ஒரு டம்ளர் பாலும் பிஸ்கட்டுகளும் வாங்கி குட்டிக்கு உண்ணக்கொடுத்தான்.  அருகிலிருந்த ஒரு கடையில் ஒரு அட்டை டப்பா வாங்கி குட்டியை அதில் போட்டு சாலையோரமாக வைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டான் சத்யன்.  பாதி நாள் வரையில் வேலையில் மனம் செல்லவில்லை.  சே!  அந்தக் குட்டியை நாம் அங்கேயே விட்டு வந்தது தப்போ.  மீண்டும் அந்தப் பெரிய நாய்கள் வந்திருந்தால் அதன் நிலை என்ன?  போக்குவரத்து மிகுந்த சாலையாயிற்றே.  ஏதாவது வண்டியில்  அடிபட்டு விட்டால் என்ன செய்வது?  மனம் அலை பாய்ந்தது.  மதிய உணவுகூட தேவைப்படாத அளவிற்கு மனம் சஞ்சலப்பட்டது.  மதியத்திற்கு மேல் மனம் எப்படியோ வேலையில் நிலைத்தது.  சத்யன் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான்.
 
மாலை ஆனதும் மனசு மீண்டும் குட்டி நாயைச் சுற்றி வந்தது.  தலைவலிக்கு ஒரு காப்பி அருந்தலாம்  என நினைத்தவன் சட்டென அந்த  எண்ணத்தைக் கைவிட்ட வாறு குட்டி நாய் இருந்த இடம் தேடி வேக வேகமாய் ஓடினான்.  அங்கே பெட்டி மட்டும் இருந்ததே ஒழிய குட்டி இருக்கவில்லை.  மனம் கலங்கியது சத்யனுக்கு.  தப்பு செய்து விட்டோமோ.  ஒரு சின்ன ஜீவனைக் காக்க தவறிவிட்டோமோ என மனசாட்சி குத்தியது.  கலங்கிய மனதைத் தேற்ற முடியாமல், கண்ணில் கசியும் நீரை துடைக்கத் தோன்றாமல் நடந்து கொண்டிருந்தவன் காலில் இரண்டொரு முறை எதுவோ தடுக்கியது போலிருந்தது.  சட்டெனக் குனிந்து பார்த்த சத்யனின் முகம் முழுமையாய் மலர்ந்தது.  காரணம் அந்தக் குட்டி ஜீவன், தன் சின்ன வாலை ஆட்டியவாறு, பிஞ்சுக் கால்களால் அவனுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தது.  அதை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டான் சத்யன்.  பாசமாய்த் தடவிக்கொடுத்தான்.  அந்த நாய்க்குட்டியும் தான் சொல்ல நினைத்த வி­யங்களை எல்லாம் அவனுடன் தன் வாலாட்டலில் பரிமாறியது.  தன் நன்றியை அவன் முகத்தையும் கரங்களையும் நக்கி நக்கித் தெரிவித்தது.  நாயின் மொழி அதன் வாலில் என்பதை  சத்யன் நன்கு புரிந்து கொண்டான்.

வீட்டிற்குச் சென்ற சத்யன் குட்டி நாயை நன்கு குளிப்பாட்டி, மருந்திட்டு, உணவிட்டு,        “Snow Ball” என்று பெயரிட்டு அதனைச் செல்லமாக வளர்க்க ஆரம்பித்தான்.  அன்று முதல் Snow Ball சத்யனின் உற்ற தோழனாய், உறவுப் பாலமாய் ஆகிவிட்டது.  எங்கு ஒரு ஆதரவற்ற மிருகத்தைக் கண்டாலும் அதை ஆதரித்து, அழைத்து வந்து பாதுகாப்பது சத்யனின் வேலையாயிற்று.  வீட்டிலும் வெளியிலும் சத்யனின் உற்ற தோழன், உறவினன் snow Ball என்றாகி விட்டது.
இப்படியயல்லாம்கூட நட்பு பிறக்குமா?  வளருமா? எனப் பார்ப்போர் ஆச்சரியம் அடையுமளவிற்கு அவர்கள் அன்பும் பாசமும் பின்னிப் பிணைந்து இருந்தன.  ஒரு நாள் இருவரும் வெளியே சென்றிருந்த வேளையில் கட்டுப்பாடு இழந்து வந்த ஒரு வாகனம் சத்யனை மோத வருகையில் snow Ball சட்டென அவன் மீது பாய்ந்து, அவனை நிலைக் குலையச் செய்து வேறு திசையில் விழ வைத்தது.  ஆனால் அதற்கு ஆழமாக அடிபட்டு விட்டது.  துடித்தான் சத்யன்.  துவண்டான்.  ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றான்.  அவனோடு ஓடியாடிய snow Ball-ன் இரண்டு கால்கள் சேதப்பட்டதால் அகற்றப்பட்டன.  ஆனாலும் அதன்மேல் கொண்ட அன்பு சிறிதும் குறையவில்லை சத்யனுக்கு.

சின்ன வயதில் தன்னைக் காப்பாற்றி, உயிர்கொடுத்து, பாதுகாப்புக்கொடுத்து வளர்த்த சத்யனுக்கு அவன் தனக்குத் தந்த நட்பிற்குப் பதில் நன்றியைத் தெரிவித்து விட்டது Snow Ball.  நட்பிற்கு நீ என்றால் நன்றிக்கு நான் என நிரூபித்து விட்டது.  சத்யனுக்கு Snow Ball -ன் மேல் பிரியம் இன்னும் அதிகமாயிற்று.  தொண்டு நிறுவனங்கள் + யயிற்e ளீrலிவிவி உதவியுடன் snow Ball-ற்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன.  சத்யனுடனான snow Ball-ன் வாழ்க்கைப் பயணம் தொடரலாயிற்று.  தனக்கு அன்பு காட்டிய மனிதனுக்குப் பதில் அன்பு காட்டிவிட்ட தெம்பில் செயற்கைக் கால்களுடன், சத்யனுடன் தினம் தெருக்களில் நடை செல்கிறது.  தன்னுயிரைக் காத்த Snow Ball-இடம் கொண்ட நன்றிக் கடனுக்காக ஊனமுற்ற மிருகங்களைப் பாதுகாத்து, பணி செய்யும் அமைப்பை நடத்த ஆரம்பித்தான் சத்யன்.  snow Ball விலங்குகள் காப்பகம் என்னும் பெயரில் அக்காப்பகம் சிறந்த தொண்டு நிறுவனமாக நடக்கிறது.  யாருக்கு நன்றியுணர்வு அதிகம்?  மனிதனுக்கா, மிருகத்திற்கா?  இருவருக்குமா? 

சாந்தி ராபர்ட்ஸ், உதகை

0 comments:

Post a Comment