இயேசு – ஒரு சிறந்த மறைக்கல்வியாளர்



“ஒரு மனிதனை மனிதனாக்குவது கல்வியே.
மனிதனை மட்டுமல்ல, நாட்டையும்
வளமைக்கு இட்டுச் செல்வதும் கல்வியே” 
என்று கல்வியின் மகத்துவத்தைப் பற்றி அழகாக எடுத்துரைக்கிறார் டாக்டர் ராதாகிஷ்ணன்.  கல்வி நாட்டின் தூண்களில் ஒன்றாய் இருப்பதுபோல, மறைக்கல்வி திருச்சபையின் தூண்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.
மறைக்கல்வியின் முக்கியத்துவம் :
கல்வி குழந்தையினுடைய அறிவை வளர்க்கிறது.  மறைக்கல்வி குழந்தையினுடைய ஞானத்தை வளர்க்கிறது.  ஒழுங்கை மேன்மைப்படுத்துகிறது.  இத்தகைய மறைக்கல்வியின மாண்பினைப் பிள்ளைகளும் பெற்றோரும் உணர வேண்டும்.  மறைக்கல்விக்கு முக்கியத்துவம் தருகின்றபோது நாம் நமக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
இயேசுவின் முன்னுதாரணம்:
மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு இயேசுவைத் தவிர வேறு யாரும் ஒரு சிறந்த முன்னுதாரணம் இருக்க முடியாது.  இயேசு எப்படி முன்னுதாரணமாய், சிறந்த மறைக்கல்வியாளராய் இருக்கிறார் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
குழந்தைகளை ஏற்றுக்கொள்ளல் :
சிறு பிள்ளைகளுக்கு என்ன தெரியும்?  என்று அலட்சியத்தோடு சீடர்கள் அதட்டியபோது, இயேசு“சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்” (லூக் 18:16) என்று அழைப்பு விடுத்து அவர்களை ஆசீர்வதிக்கிறார்.  சிறு பிள்ளைகளும் முக்கியமானவர்கள் என்பதைச் சீடர்களுக்கு உணர்த்தும் வகையில் அவர்களுக்குக் கதைகள் கூறி தமது நேரத்தைச் செலவிடுகிறார்.
குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொம்மைகள், ஸ்வீட்ஸ் (இனிப்பு) வாங்கிக் கொடுத்தால் மட்டும் போதும், அதுதான் குழந்தைகளை ஏற்றுக் கொள்வது, அன்பு செய்வது என்று எண்ணுகிறார்கள் பெற்றோர்கள்.  குழந்தைகளுக்குத் தேவையான ஞானத்தையும் வழங்கக்கூடிய மறைக்கல்வியும் அவசியமானது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.  ஞாயிற்றுக்கிழமை பிள்ளைகள் ஸ்பெ­ல் கிளாஸ் போகணும், அன்று மட்டும்தான் விடுமுறை அன்றும் மறைக்கல்விக்கு அனுப்புவதா? என்று பெற்றோர்கள் தடையாக இல்லாமல் மறைக்கல்விக்குப் போவதால் என்ன நன்மை என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
குழந்தைகளுக்கு மறைக்கல்வி என்பது கடவுளுடைய ஆசீர்வாதத்தைத் தனக்குக் கொணர்கிறது என்பதை உணர்ந்து அவர்களைக் கடவுளின் பிரதிநிதிகளாக ஏற்று-அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும்.
எளிமையாக வகுப்பு எடுத்தல் :
இயேசு புரியாத வகையில் ஒரு போதும் பேசியதில்லை.  மக்களுக்கு எளிமையாகப் புரிகின்ற வகையில் உப்பு, கடுகு, புளிப்புமாவு, விதை, வலை என்று உவமைகள் வழியாகப் பேசினார்.
“தனக்குத் தெரிந்ததையயல்லாம் சொல்பவன் பெரியவனல்ல.  எளிமையாக புரிகின்ற வகையில் பேசுபவனே சிறந்த பேச்சாளன், எழுதுபவனே சிறந்த எழுத்தாளன்”  என்பார் ஜான் மில்டன்.
மறைக்கல்வி ஆசிரியர்கள் புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நகைச்சுவை, கதைகள் மூலமாக குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.  நல்ல தயாரிப்போடு வருகின்றபோது எளிமையாகச் சொல்லித்தர முடியும்.  தயாரிக்காதபோதுதான் கடினமான வார்த்தைகள் நாவில் வந்து விழும்.
போதிப்பதை வாழ்வாகுத்தல் :
“போதிப்பவர் பலர்
வாழ்பவரோ சிலர்
அந்த சிலரே போற்றுதற்குரியவர்”
என்று கூறுவார் பெர்னாட்ஷா.  
இயேசு எளிமையாக வாழ்ந்தார், உண்மையை உரக்கச் சொன்னார்.  அதனால் மக்கள் கூட்டம் அலையலையாய் அவரைத் தேடி வந்தது.  போதிப்பது ஒன்று, செய்வது ஒன்றாக இருந்தால் குழந்தைகள் ஆசிரியர்களால் ஈர்க்கப்பட மாட்டார்கள்.  அடுத்த முறை மறைக்கல்விக்கு வர மாட்டார்கள்.
விவிலியமே ஆதாரம் :
மற்ற உலகச் செய்திகளைக் குழந்தைகளுக்கு வழங்குவதற்கு எத்தனையோ தளங்கள் இருக்கின்றன.  தொலைக்காட்சி, செய்தித்தாள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  இயேசு பழைப ஏற்பாட்டை மேற்கோள் காட்டி மக்களிடத்தில் பேசினார்.  அதனால் விவிலியக் கதைகள், பாடல்கள் ஆகிய வற்றைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.  ஞாயிறு வாசகங்களை விளக்கிக் கூறலாம்.  விவிலிய கதா பாத்திரங்களை விளையாட்டுகள் மூலம் எடுத்துரைக்கலாம்.
இவ்வாறு பல்வேறு வகைகளில் இயேசு சிறந்த மறைக்கல்வியாளராக நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.  ஆகவே நாமும் இயேசுவைப் பின்பற்றி, மறைக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மறைக்கல்வி ஆண்டில் இன்னும் அதிகமாக இறைவார்த்தைகளைப் படித்து அதன்படி வாழ்வோம்.  பலரையும் உருவாக்குவோம்.

J. புஷ்பா 
ஆசிரியை, சிவகங்கை

0 comments:

Post a Comment