மறைக்கல்வி ஏன் அவசியம் ?


தமிழக ஆயர் பேரவை இவ்வருடத்தை மறைக்கல்வி ஆண்டாக கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது.  மறைக்கல்வி ஆண்டின் விருதுவாக்காக பேரவை நம்முன் வைப்பது “எல்லாருக்கும் மறைக்கல்வி”. ஆக குழந்தைகள், இளையோர், பெரியோர், முதியோர், குடும்பங்கள், அன்பியம், பக்தசபைகள் மற்ற இயக்கங்கள் உள்ள அனைவருக்கும் தகுந்த மறைக்கல்வி பாசறைகளை உருவாக்குவது பங்குத் தளங்களின் தலையான பணியாகும்.

மறைக்கல்வி ஏன் அவசியம்?

முதன் முதலாக செபிப்பது எப்படி என்பதைத் தெரிந்துக்கொள்கிறோம்.  விவிலியத்தைப் பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ள முடியும்.  திருச்சபை கற்பனைகளை நாம் இந்த வகுப்பில் அறிந்துக்கொள்ள முடியும்.  நல்ல விசுவாச வாழ்க்கை வாழ இந்த மறைக்கல்வி அவசியம்.  இறைவன், இறைவனைப் பற்றிய அறிவு அனைத்தும் குறைந்துவரும் இக்காலக்கட்டத்திலே இப்படிப்பட்ட பயிற்சி தேவை. தல திருச்சபை வரை இந்த மறைக்கல்வி வகுப்புகள் மிக மிக அவசியம். தேவ அழைத்தல் உருவாக, வளர மறைக்கல்வி அடிப்படையான ஒன்று.

மறைக்கல்வியின் நிலைமை - அன்று

சில வருடங்களுக்கு முன் வரையிலும் தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய எல்லாப் பங்குகளிலுமே ஞாயிறு திருப்பலி முடிந்தவுடன் மறைக்கல்வி வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெற்றன.  பங்குக்குரு, உதவி பங்குக்குரு, அருட்சகோதரிகள், பெற்றோர்கள் அனைவரும் மறைக்கல்வியில் ஆர்வம் காட்டி சிறப்பாக செயல்பட ஆவண செய்தார்கள்.  மேலும் பங்கு அளவிலும், மறை மாநில அளவிலும் மறைக்கல்வித் தேர்வுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. குடும்பங்களிலும், நண்பர்கள் வட்டாரத்திலும் மறைக்கல்வியைப் பெரிதும் பாராட்டி ஆர்வம் காட்டப்பட்டு வந்தது.  சிறியோர், இளையோர் செபங்கள் சொல்வதிலும்,கோயில் விசயங்களில் அதிகம் ஆர்வம் காட்டினார்கள்.  இவை எல்லாவற்றின் காரணமாக தேவ அழைத்தலும் வளர்ந்து இருந்தது.

மறைக்கல்வியின் நிலைமை - இன்று

தமிழக திருச்சபையில் சில பங்குகளில் மறைக்கல்வி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றன. சில பங்குகளில் வகுப்புகள் நடைபெறுவதே (பல காரணங்கள்) இல்லை.  நடைபெறும் சில வகுப்புகளும் பெயரளவில் மட்டும் உள்ளன.  இதிலே சிலர் ஆர்வத்துடன் பங்கெடுக்கிறார்கள்.  ஒரு சிலரோ, ஏதோ கடமைக்காக வந்து போகிறார்கள்.  பொதுவாக சொல்லப்போனால், மறைக்கல்வியின் நிலைமை இன்று மிகவும் பின்தங்கி இருக்கிறது ஒரு கவலையைக் கொடுக்கக்கூடிய விசயம்.

பங்குத்தளங்களின் கடமைகள் :
  1. பங்குத்தந்தையும், அருட்சகோதரிகளும் மறைக்கல்வியில் ஆர்வம் உள்ளவர்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் மறைக்கல்வி வகுப்பு நடைபெற ஏற்பாடு செய்தல்.
  2. வகுப்புகள் நடைபெறும்போது பங்குத்தந்தை பார்வையிடுதல் அவசியம்.
  3. பங்குத்தந்தை/அருட்சகோதரிகள் குடும்பங்களைச் சந்திக்கும்போது மாணவ/மாணவிகளை மறைக்கல்விக்கு வர உற்சாகப்படுத்துதல்.
  4. மறைக்கல்வி போதிப்பவர் முதன் முதலில் இதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.  இவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
  5. மறைக்கல்வி போதிப்பவர் தகுந்த தயாரிப்புடன் வகுப்பிற்குச் செல்ல வேண்டும்.
  6. மறைக்கல்வி போதிப்பவர் தனக்கு நேரம் கிடைக்கும்போது வீடுகளைச் சந்திப்பது நல்லது.  வகுப்பிற்கு வராத பிள்ளைகளின் வீடுகளையும் சந்திப்பது மிகவும் நல்லது.
  7. பங்கு அளவில் மறைக்கல்வி பயிலும் அனைவருக்கும் ஒரு விழா நடத்துவது நன்று.

பெற்றோர்களின் கடமைகள்
  1. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஞாயிறு திருப்பலிக்கு வந்து, பிறகு அவர்களை மறைக்கல்வி வகுப்பிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  2. “கூடி செபிக்கும் குடும்பம், கூடி வாழும்” என்பது; போல, இரவு குடும்ப செபத்தில் பிள்ளைகளை விவிலியம் வாசிக்க, செபிக்கத் தூண்டுதல்.
  3. மறைக்கல்வி வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்களைக் கேட்டு, அவர்களை உற்சாகப்படுத்துதல்.

ஆலோசனை

மறைக்கல்வி போதிக்க ஆசிரியர்களைவிட பெற்றோர்களுக்கு (ஆர்வம் உள்ளவர்கள்) அழைப்பு விடுப்பது நல்லது.  இதன் மூலம் இவர்களும் விசுவாத்தில் வாழ உறுதுணையாக இருக்கும்.  மேலை நாடுகளில் இவ்வாறு பெற்றோர்கள் மறைக்கல்வி வகுப்புகள் நடத்துகின்றார்கள்.

ஆயர்களின் பரிந்துரை :

மறைக்கல்வி வாழ்நாளெல்லாம் தொடர்ந்து நடைபெற்று, நமது நம்பிக்கை வாழ்வில் வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் அளிக்க வேண்டும்.  இது இளை யோருக்கோ, சிறார்களுக்கோ மட்டுமே உரியது என்ற எண்ணம் தவறானது.  அதாவது, மறைக்கல்வி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை தொடர வேண்டிய முயற்சியும் பயிற்சியுமாகும்.  

என் முடிவுரை

எந்தப் பங்குத்தளங்களில் மறைக்கல்வி வகுப்புகள் சிறந்த முறையில் செயல்படுகின்றதோ அந்த பங்கில் நிச்சயமாக அன்பியங்கள் நன்கு செயல்படும்;  அதிகமான அளவில் தேவை அழைத்தல் உருவாகும்.  மறைக்கல்வி ஒரு பங்கின் உயிர்த்துடிப்பு.


அருள்சகோதரி கிறிஸ்டி ME
பாப்பநல்லூர்
செங்கை

0 comments:

Post a Comment