மறைக்கல்வி – ஏன்? எதற்கு? எப்படி?


எந்தவொரு செயலுக்கும் ஒரு காரண காரியம் உண்டு.  பொருள் உண்டு.  அப்படி பொருள் உணர்ந்து செய்யும்போது தான் அதற்கான பலனும் முழுமை பெற வாய்ப்புண்டு.
அந்த வகையில் மறைக்கல்வி ஏன்? எதற்கு கற்றுத்தரப்படுகிறது? என ஆராய்ந்து பொருள் உணர்ந்தால் அதற்கான பலனை நாம் நூறு சதவீதம் பெற முடியும்.  
மறைக்கல்வி ஏன்?
நமது குழந்தைகள் கிறித்துவின் மனநிலையைப் பெற்றிடச் செய்வதே மறைக்கல்வி சொல்லித்தரப்படுவதன் முழுமையான நோக்கம் என ஒற்றை வரியில் நாம் இதற்கு விடை அளிக்கலாம்.  எனினும், கிறித்துவின் மனநிலை என்றால் என்ன?  மனிதனின் மன நிலைக்கும் கிறித்துவின் மனநிலைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?  என்பன போன்ற வினாக்களுக்கும் நாம் விடை கண்டால்தான் மறைக்கல்வி ஏன்? என்பதற்கு இன்னும் அதிகமான ஆழமான பொருளை நாம் உணரலாம்.
மனிதரின் மனநிலையும் (மனிதமும்) கிறித்துவின் மனநிலையும் (கிறித்தவமும்) மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒன்றாய் இருப்பதுபோல் தோன்றி னாலும் அவற்றுக்குள் சிறிது வேறுபாடு உண்டு.  மனிதனின் மனநிலையைவிட ஒரு படி உயர்ந்தே இருப்பதுதான் கிறித்துவ மனநிலை. 
இப்படியாக மனித மனநிலையைவிட எப்போதும் ஒரு படி உயர்ந்து ஒரு சிறு வித்தியாசத்துடன் சிறந்து விளங்குவது தான் கிறித்துவின் மனநிலை.
மனிதனின் மனநிலையை அடைய உதவி செய்வது கல்வியின் நோக்கம்.  கிறித்துவின் மனநிலையை அடையச் செய்வது மறைக்கல்வியின் நோக்கம்.
எனவேதான் திருச்சபை போன்ற அமைப்புகள் மனிதரின் மனநிலையைக் குழந்தைகளுக்குள் வளர்க்க கல்வியைக் கையிலெடுத்தது.  அத்துடன் கிறித்துவின் மனநிலையைத் தம் குழந்தைகள் பெற மறைக்கல்வியைச் சொல்லிக் கொடுக்கிறது.
கற்றுத்தராத கல்வி : மேற்சொன்ன இரண்டும் சொல்லித்தரப்பட்டும் சொல்லித் தரப்படாத இன்னொரு மனநிலை இன்று பரவி படர்ந்து கிடப்பதையும் நாம் மறக்க முடியாது.  பேராசை, பிறர் பொருள் மேல் ஆசை, வஞ்சகம், சூது, பொறாமை, பொய்மை, போதை என்கிற சாத்தானின் மனநிலை யாரும் சொல்லித்தராமலேயே எங்கும் நிரவி கிடக்கிறது.
சுருங்கச் சொல்லின் 
1. எனக்குரியது எனக்கு;  உனக்குரியது உனக்கு - மனித மனநிலை,  
2. எனக்குரியதும் உனக்கே - கிறித்துவின் மனநிலை,  
3. உனக்குரியதும் எனக்கே - சாத்தானின் மனநிலை -
என்கிற இந்த மூன்று மனநிலைகளில் முதல் இரண்டும் சொல்லித்தரப்பட்டும் சொல்லியே தரப்படாத மூன்றாவது மனநிலையான சாத்தானின் மனநிலையே இன்று நீக்கமற எங்கும் நிறைந்து கிடக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் மனிதனின் மனநிலையை வளர்க்க முயற்சிக்கும் கல்வியும், அங்குள்ள ஆசிரியரும், கிறித்துவின் மனநிலையை வளர்க்க வந்த கிறித்தவ மதமும், அதன் போதகர்களும், தோற்றுபோய் விட்டார்களோ என்று நினைக்கும் அளவிற்கு இன்று சாத்தானின் மனநிலை மலிந்து கிடக்கின்றது.  இது எதனால்?  என ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்.  
காரணங்கள் இரண்டு : மறைக்கல்வியோ, மனிதக் கல்வியோ அதன் உள்ளடக்கங்கள் முதலில் அதற்கான நோக்கத்தை நோக்கி அமைக்கப்படாம லிருப்பதே முதல் காரணம்.  இவைகளே இன்னும் தம் நோக்கத்தில் தெளிவு பெறாமல்-ஆழப்படாமல் இருப்பதே இதற்கான முதன்மை காரணம்.  ஆழ உழுவதே சிறந்தது என அறிந்திருந்தும் நாம் கல்வி என்கிற பெயரில் அகலமாய் உழவே அல்லாடிக் கொண்டிருக்கிறோம்.  
மேலும் இந்த இரண்டு கல்வியுமே கற்பது எதற்கு என்றால் கற்றுக் கொடுப்பதற்கு என்கிற அர்த்தத்திலேயே அரங்கேறி வருகிறது.  இதுவே இவைகள் தோற்றதற்கான இரண்டாவது பெரிய காரணம்.
மறைக்கல்வியோ, மனிதக் கல்வியோ கற்பது எதற்கு என்றால் அதனைப் பிறருக்குக் கற்பிப்பதற்கு அல்ல;  மாறாக கடைப்பிடிப்பதற்கு என்கிற புரிதல் ஏற்பட வேண்டும்.
கற்பதைக் கற்றுக்கொடுப்பது எளிது ஆனால் கடைப்பிடிப்பது கடினம்.  எனவேதான் எல்லோரும் கற்றுக் கொடுக்கவே முயற்சிக்கிறார்கள்.  பல வேளைகளில் கிறித்துவின் மனநிலையை வளர்க்க மறைக்கல்வியைச் சொல்லிக் கொடுப்பவர்கள்கூட கடைப்பிடிப்பது சாத்தானின் மனநிலையைத்தான்.  “படிப்பது-படிப்பிப்பது பகவத் கீதையை, இடிப்பதோ பொருமாள் கோயிலை” என்கிற ரீதியில் செயல்பாடுகள் இருப்பதால்தான் அதை காண்போர் அவ்வழியையே பின்பற்றுகின்றனர்.  இதனால் சாத்தானின் மனநிலையால் உலகம் எளிதாகவே நிரம்பி தழும்பி நிற்கிறது. வாய்வழியாய் சொல்லித்தரப்படாத நிலையில் செயல்வழி கற்றல் மூலமாக சாத்தானின் மனநிலை சட்டெனத் தொற்றிக் கொள்கிறது.  சொல்லித்தரப்படும் மறைக்கல்வியோ, மனிதம் வளர்க்கும் கல்வியோ தோற்றுப் போய்விடுகிறது. இங்கு ஆசிரியர்களுக்கும் போதகர்களுக்கும் பஞ்சமில்லை.  ஆனால் கற்றுக் கொண்டதை அப்படியே தம் வாழ்வில் கடைப்பிடித்து அதன் வழி பிறர்கற்றுக்கொள்ளச் செய்யும் ஆசான்களாலும், சீடர்களாலும்தான் இதை வளர்க்க முடியும்.
மேலும் மறைக்கல்வி என்பது திருச்சபை என்றால் என்ன?  ஞானஸ் நானம் என்றால் என்ன?  என்பது போன்ற பல தகவல்களைச் சொல்லித்தரும் கல்வியாகவும்  பின்பு தேர்வு என்கிற பெயரில் மனனம் செய்த தகவல்களைத் திரும்பி சொல்ல வைக்க முயற்சிப்பதாகவும் கூடிய சாதாரண நிலையில் இருக்கக் கூடாது.  மறைக்கல்வி மூலம் கிறித்தவ மனநிலையைப் பெறச் செய்வதே நமது நோக்கமாக இருக்கிற காரணத்தால் கற்பவருக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைக்கப்பட வேண்டும்.  ஒரு மனிதனின் மனநிலையில் தாக்கம் ஏற்பட வேண்டுமாயின் குறிப்பிட்ட சூழ்நிலையில் அவனை நிறுத்தி அவனது வினா அல்லது விடை என்ன என அடிக்கடி சிந்திக்கத் தூண்டிட வேண்டும்.  அதன்படி செயலாற்ற வழிகாட்டிட வேண்டும்.
சரியாய் சிந்தித்து முறையாய் செயல் படுபவரே முதன்மைக்குரியவராய் முன்னிலைப் படுத்தி பாராட்டிட வேண்டும்.
பகைவரையும் அன்பு செய்வதே கிறித்துவின் மன நிலை என்று மறைக்கல்வியில் அறிந்து கொண்ட ஒருவன் அதன்படி தன் பகைவனிடம் அன்பு செலுத்திட முயற்சிப் பானாகில் அவனே மறைக்கல்வியில் முதன்மை பெறத் தகுதியுடையவன்.  சுருங்கச் சொல்லின் மறைக்கல்வியின் மதிப்பெண்ணைத் தேர்வுத்தாளில் முடக்கிவிடக் கூடாது.  மாறாக கற்பவரின் வாழ்க்கைத் தளத்தில் மதிப்பீடு செய்திட வேண்டும்.  
இவ்வாறாக மறைக்கல்வியின் நோக்கம் சரியாய் உணரப்படவும், உணர்த்தப்படவும் அதனை எடுத்துச் செல்ல “கடைப்பிடிப்போம்; அதன் வழி கற்பிப்போம்” என்கிற யுக்தியைப் பயன் படுத்திடவும், மறைக்கல்வியின் மதிப்பீடு வாழ்க்கைத் தளத்தில் அறியப்படவும் இந்த மறைக்கல்வி ஆண்டில் அனுகூலம் ஆக்குவோம்.  அதற்கு உரிய வினையை ஆற்ற ஆண்டவனை பிரார்த்திப்போம்.

திரு. எரோணிமுஸ்
‘ஊற்றுக்கண்’ ஆசிரியர்
திருச்சி

0 comments:

Post a Comment