மறைக்(கப்பட்ட)கல்வி


நமது தமிழக ஆயர் பேரவை இந்த ஆண்டை (2011-2012) மறைக்கல்வி ஆண்டாகக் கொண்டாட அழைப்பு விடுத்திருக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஏதாவதொரு கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, திருச்சபை சிறப்பு சிந்தனை தருகிறது.  இளையோர் ஆண்டு, குருக்கள் ஆண்டு, பொதுநிலையினர் ஆண்டு, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் 40ஆம் ஆண்டு என்றவாறு இந்த ஆண்டு மறைக்கல்வி ஆண்டு.  காலங்கடந்த சிந்தனை ஆனால் நல்ல சிந்தனை.
மறைக்கல்வி இப்போது மறைக்கப்படும் கல்வியாக, மறைந்த கல்வியாகக் காணப்படுகிறது.  நமது பங்குகளில், நம் பள்ளிகளில், நம் பிள்ளைகளுக்கென்று மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறும்.  ஆனால் வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மறைக்கல்வி வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடும்.  இந்தக் குறையைப் போக்க, நம் பங்குகளில் மறைக்கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  தமிழகத்தில் உள்ள அநேக பங்குகளில் பல பங்குகளில் மறைக்கல்வி கற்பித்தல் நடைபெறுவது ஆச்சர்யம்.  ஆனால் அக்கல்வியின் உண்மையான நிலை மற்றும் பணிகளை நோக்கும்போது அக்கல்விதான் ஒரு சராசரி மனிதனின் உலகுசார் அறிவுக்கும், வாழ்க்கைக்கும், ஆன்மீக வாழ்வுக்கும் அடித்தட்டாக அமையும்.  அந்தக் காலத்தில் மணப்பாடு வந்திறங்கிய சவேரியாரும், மறவநாட்டு அருளானந்தரும், கொச்சைத்தமிழில் மறைக்கல்வி போதித்து உபதேசியார்களைப் பயிற்றுவித்து, அந்த உள்ளூர் வாசிகளே மறைபரப்புப்பணியைச் செய்திருக்கிறார்கள்.  அந்த உபதேசியார்கள் வசீகரம் இல்லா திருப்பலி தொடங்கி, அடக்கச் சடங்குவரை, உள்ளூர் மக்களோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து வாழ்ந்து காண்பித்தவர்கள்.
ஆனால் தற்போது, பங்குப்பணியாளர்கள் தங்கள் பங்கில் மறைக்கல்வி நடத்தப்படுவது போல ஒரு பிரமையையும், பெருமையையும் பெற்றிட மறைக்கல்வி வகுப்புகள் நடத்துகிறார்கள்.  பலரின் ஒத்துழைப்பும் போதாமல் உள்ளது. 
V.B.S. எனும் கோடைகால வேதாகமப் பள்ளியும் 10 நாட்கள்தான்.  அதுவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே.  எனவே இன்னும் நிறைய ஆர்வமும் முன்னெடுப்பும் குருக்கள், துறவிகள், பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மத்தியில் தேவைப்படுகின்றன.
மறைக்கல்வியின் பயன்கள் பல.  கத்தோலிக்கக் கிறிஸ்தவனுக்குப் பிறப்பு முதல் இறப்பு வரை திருவருட்சாதனங்கள் உண்டு.  பிஞ்சு உள்ளங்களில் கதைகள் வாயிலாக பாடல்கள், விளையாட்டுக்கள் வாயிலாக இயேசுவின் மதிப்பீடுகளைச் சொல்லித்தருவது எத்துணை இனிமையானது.  பல புனிதர்களைப் புனிதர்களாக்கியது அவர்களின் அன்னையின் அரவணைப்பில், அவர்கள் கேட்ட புனிதர்களின் வாழ்க்கை முறைகள்தான்.  பல அருட்பணியாளர்கள், அவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்த காலத்தில் சந்தித்த குருமார்கள், அவர்களின் எளிமையான பக்தி நிறைந்த, வேறுபாடற்ற மனநிலை மூலம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.  தற்போதைய குருக்களின் வாழ்க்கை முறைகளை முன்னிறுத்தி குருக்களாகும் எண்ணிக்கை குறைவே.
மறைக்கல்வி என்பது தேர்வுக் கண்ணோட்டத்தில் நடத்தும் வகுப்புகள் அல்ல.  அவைகள் வாழ்வியல் கண்ணோட்டத்தில் நடத்தப்படும் பாசறைகள்.  அன்பு, தர்மம், பிறருக்கு உதவி, எளிமை, எதார்த்தம், பகிர்வு போன்ற நன்மதிப்பீடுகளைத் தரவல்ல மறைக்கல்வியை இளம் தலைமறையினருக்கு நாம் தராவிட்டால், நாம் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்கவேண்டியவர்களாவோம்.  இது குருக்களின் கடமை என்று நினைத்தால் அது மடமை.  நம் அனைவருக்கும் இந்தக் கடமையாற்ற உரிமையும் தகுதியும் உள்ளன.
பேராசிரியர் அ. குழந்தைராஜ்
காரைக்குடி

0 comments:

Post a Comment