மறைக்கல்வி ஆண்டின் சிறப்பு செய்தி


“நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்தனை அழகாய் இருக்கின்றன” (உரோ 10:15).
“சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது” (திபா 34:10).  ஆனால் கிறிஸ்தவர்களாகி நாம் அனைவருமே குறைகள் ஏதுமின்றி நிறைவாக வாழ்கிறோமா?  என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுப் பார்த்தால் பதில் வெறுமையாக இருக்கிறது ஏன் இந்த வெறுமை?  சிறுவயதில் நாம் பெற்றுக் கொள்ளாத மறை உண்மைகள், இறைவனைப் பற்றி அறியாத தன்மை.  வாழ்வு கடவுள் அன்பினால் கட்டப் பட்டதா? அல்லது இவ்வுலகின் செல்வங்களுக்காக, இவ்வுலக ஆசீர் வாதங்களுக்காக மட்டுமே கடவுளை நாடுவதில் அமைந்துள்ளதா?
நம்மில் பெரும்பான்மையானோர் இறைவார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அவற்றின்படி நடக்காமல், இறைவார்த்தைகளை நம் வாழ்க்கையில் பயன்படுத்தாமல் நம்முடைய இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத்திற்கு மட்டுமே நாம் இறைவனைத் தேடினால் நம்மில் ஏது நிம்மதி?  கத்தோலிக்கத் திருச்சபையின் விசுவாசம், இறைவார்த்தை, ஆன்மீகம் ஆகியன பற்றி முதலில் பெற்றோர் அறிந்து இருந்தால்தான் நம் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர முடியும்.  இதுதான் மறைக்கல்வியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
வானத்தின் மழை பூமியில் பலன்தர வேண்டும் என்றால் மண் பக்குவப்பட்டு இருக்க வேண்டும்.  அப்போதுதான் மழை நீர் மண்ணில் பட்டவுடன் தேவையான பலனை அது அளிக்கும்.  அவ்வாறே இறை வார்த்தைகள் நம்மில் பலன்தர நம் மனதை நாம் பக்குவப்படுத்தி இருக்க வேண்டும்.  இதைத்தான் ஞாயிறு மறைக்கல்வியும் முக்கியத்துவப் படுத்துகிறது.  அன்புக் குழந்தைகளே 1986ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஷைனி ஆபிரகாம் பங்கேற்று மிகப் பெரிய சாதனைப் படைத்தார்.  போட்டியில் முதல் நபராக வந்து சேர்ந்தார்.  ஆனால் அந்தோ பரிதாபம் நடுவர்கள் ஷைனி ஆபிரகாமுக்கு முதல் பரிசு கொடுக்காமல் அவருக்கு அடுத்தபடியாக வந்தவருக்குப் பரிசைக் கொடுத்தனர்.  மாறாக ஷைனி ஆபிரகாமைத் தகுதி நீக்கம் செய்தனர்.  காரணம் என்ன?  அவர் வேகமாகத்தான் ஓடினார்.  எல்லாரையும் விட முதலாக இலக்கை வந்து சேர்ந்ததும் உண்மைதான்.  ஆனால் அவர் தனக்குக் குறிக்கப்பட்ட பாதையில் ஓடாமல் தவறான பாதையில் ஓடினார்.  
இதைப்போன்றுதான் கிறிஸ்தவர்கள் விரைவாக ஓடுகிறார்கள்.  எல்லாரையும் விட சிறந்த பணியைச் செய்கிறார்கள்.  ஆனால் சில தவறான பாதைகளால் பரிசு பெறத் தகுதியற்றவர்களாகிவிடுகிறோம்.  அழைக்கப்பட்ட வர்கள் என்ன நோக்கத்திற்காக அழைக்கப்பட்டார்களோ அதைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளையும் செய்கிறார்கள்,  சிந்திப்போம்.  
சுவாமி அபிஷேக்தானந்தா (கத்தோலிக்க குரு) ஒரு இந்து சந்நியாசியைச் சந்தித்தபோது அந்த சந்நியாசி உங்கள் கிறிஸ்தவ மிசனரிகள் கல்வி, மருத்துவம், சமூக நீதி போன்ற பணிகளை மக்களுக்குக் கொடுத்திருப்பது மிக்க மகிழ்ச்சிதான்.  ஆயினும் தேவையானது ஒன்றே.  மக்கள் கடவுளைக் காண பசியோடு இருக்கிறார்கள்.  இயேசு தவிர எல்லாவற்றையும் கொடுக்கிறீர்கள்.  அவர்களுக்குத் தேவை இயேசு கிறிஸ்துவே.  இதை எப்போது கொடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டாராம்.  நாம் இயேசுவைத் தவிர எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறோம் என்பது உண்மையே.   சிந்திப்போம்.
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.  இறைவார்த்தையை அறியாதவர் இறைமகன் இயேசுவையே அறியாதவராவார் என்று புனித எரோணிமுஸ் கூறியிருக்கிறார்.  உண்மையிலேயே இறைவார்த்தை நமக்குள் நம்மோடு இருக்கும் என்றால் ஒளியின் மக்களாகிய நாம் இறை வார்த்தையை நம் பிள்ளைகளுக்கு அறிவிக்கவும், பகிரக்கூடியவர்களாகவும் வாழ்வோம்.  “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் . . .  எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை . . .   மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” (மத் 5:14-16).  எனவே மறைக்கல்விக்கு நம் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக வாழ்வோம்.  நாம் பெற்ற கிறிஸ்து வாழ்வைப் பிறருக்கு கொடுப்போம். 

சகோ. பிலோ FSJ
கருமண்டபம், திருச்சி

0 comments:

Post a Comment