திறக்கட்டும் கற்பனைக் கதவுகள்-2


நம் எண்ணத் திரைகளில் வண்ணப் படங்களாக உருவெடுத்து காவியம் படைக்க அமையும் அடித்தளமே கற்பனைகள்.  கற்பனைகளுக்கு எல்லைக் கோடு கிழித்து சிறு வட்டத்துக்குள் சிறைப்பிடித்தவர் யாருமே இல்லை.  எங்கும் எப்போதும் எல்லோருக்கும் கற்பனைகள் பொதுவானவையே!
‘கற்பனைகள் என்பது தனி உலகம்’ என்று பேசுவோரும் உண்டு.  நிஜ உலகைக் கடந்து கற்பனை வானில் சிறகு விரித்து வலம் வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி உண்டு.  வாழ்க்கையில் உயர்ந்து வெற்றிக் கனி பறிக்க நாம் தீட்டும் திட்டங்கள் எல்லாம் முதலில் நமது கற்பனையில் தான் படிவமாக அமைகின்றன.
“நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு மருத்துவரைப் போல நோயாளிகளுக்கு ஊசிப் போடுவேன்.  நான் தனியாக இருக்கும்போது அடிக்கடி அதைக் கற்பனை செய்து பார்ப்பேன்.  நாளடைவில் நான் ஒரு மருத்துவர் என்ற நினைவு என் ஆழ்மனதில் ஆழமாக பதிந்து விட்டது.  எப்படியும் நான் ஒரு மருத்துவர் நிலைக்கு உயர்ந்திட வேண்டும் என்று கடினப்பட்டு படித்தேன்.  இன்று அது நிஜமாகிவிட்டது” என்று எனது நண்பர் ஒருவர் என்னோடு பகிர்ந்து கொண்டார்.
ஒரு சில தினங்களுக்கு முன்பாக எனது நண்பர் குருவின் இல்லத்தைச் சந்தித்தேன்.  நண்பரின் தாயார் மட்டும் வீட்டில் இருந்தார்.  அப்போது வீட்டின் அலங்கார கண்ணாடி பேழைக் குள்ளிருந்து ஒரு அழகுப் பொருளை எடுத்து என்னிடம் காட்டினார்.  அது குருவானவர் திருப்பலியின்போது அணியும் திருவழிபாட்டு மேலுடை.  மிகமிகச் சிறியதாக, அழகாக வெட்டப்பட்டு ஊசி நூலினால் அழகுற தைக்கப்பட்டிருந்தது.  வியப்போடு பார்த்த என்னிடம் “எனது மகன் நான்காம் வகுப்புப் படிக்கும்போது, அவனே தைத்தது” என்றார்.  நண்பரின் தாயார் சிறு வயதிலே ஏற்பட்ட இந்தக் கற்பனை விருப்பமாக மாறி இன்றைக்குச் சிறந்த அருள்பணியாராக நண்பர் பணிசெய்து கொண்டிருக்கிறார்.
நமது உருவாக்கத்திற்கு கற்பனைகள் எப்படி அடித்தளமாக அமைகிறது என்பதற்கு மேற்கண்ட நிகழ்வுகள் சிறந்த உதாரணங்கள்.  வாழ்க்கையில் மெல்ல மெல்ல உயர்ந்து வரலாற்றின் பக்கங்களில் இடம் பிடித்த எண்ணற்ற அறிவியல் மேதைகள் நாட்டுத் தவைர்கள் எல்லோரும் “மனிதனால் கற்பனை செய்யக்கூடிய எதையும் மனிதனால் உருவாக்க முடியும்” என்பதற்குச் சான்றுகள்.
நேர்மறைச் சிந்தனைகளுடன் நமது கற்பனைச் சிறகுகளை விரித்திடுவோம்.  முழுவேகத்தில் நமது மனவெளிவிட்டு வான்வெளியில் தினம்தினம் வலம் வருவோம்.  உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றியடைந்தே தீரவேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் மூர்க்கமாக விளையாடி இந்திய அணியை வழி நடத்திய டோனியைப் போல கற்பனைக்கு உயிர்கொடுத்து உருகொடுக்க உழைத்திடுவோம்!  

0 comments:

Post a Comment