வாழ்வை வசந்தமாக்க


மறைக்கல்வி அறிவுக்கான பாடமன்று, வாழ்க்கைக்கான பாடம்!
ஜெரோம் (சிறுவன்) : டேய், அருண்!  பூசை முடிந்ததும் அந்த வேதியர்கண்ணுல படாம சீக்கிரம் வந்துடு.  இல்லைன்னா மறைக்கல்வி எடுத்து நம்மள சாகடிச்சிடுவாரு!
தாய் : பிரின்சி!  நீ இப்ப கடைக்குப் போனாத்தான் உங்க Sisterகிட்ட மறைக்கல்வி Classக்கு லீவு கேட்பேன். 
தோமினிக் (இளைஞன்) :  ஏற்கனவே படிப்பு, டியூசன், கம்பியூட்டர் Classன்னு வாரம் முழுவதும் குழந்தைகள் கஷ்டப்படறாங்க . . .  இப்ப மறைக்கல்வி தேவையா?
மேற்குறிப்பிட்ட உரையாடலைக் கேட்டவர்களில் நீங்களும் ஒருவராய் இருக்கலாம்.  ‘மறைக்கல்வி’யை ஒரு அறிவுப் பாடமாகப் பார்ப்பதை விட இறை அனுபவமுள்ள ஆன்மீகப் பாடமாக பார்க்க வேண்டும்.  ஏனென்றால், டி.வி. ரிமோட் திருப்பும் கைகளுக்குத் திருவிவிலியம் திருப்ப வலிக்கிறது.  ஊர் சுற்றும் கால்களுக்குக் கோயில் வாசலை மிதிக்கக் கூசுகிறது.  திரைப்படத்தைக் தேடித் தேடி பார்க்கப் போகும் கண்களுக்கு நல்லவற்றைப் பார்க்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.  காரணம், மறைக்கல்வி என்ற இறையறிவு உங்களில் உருவாக்கப் படவில்லை என்பதே!  குடும்பமே மறைக்கல்வியின் முதல்பள்ளிக்கூடம் என்பதைப் பெற்றோர்கள் மறப்பதால்தான் பிள்ளைகள் இன்று திசைமாறி மாற்றுப் பாதையில் இறகுகளை விரிவுப்படுத்தி பறக்கிறார்கள்.  சீரழிகிறார்கள்.  என்னோடு பயணியுங்கள், மறைக்கல்வியின் அவசியத்தைச் சற்று அலசிப் பார்ப்போம்.
பொருள் அறிந்து கற்போம் :
மறைக்கல்வியைப் பொருள்பட கற்க வேண்டும்.  முற்றிலும் உண்மை தான்.  ஆனால் இந்தத் தலைப்புக்கு அர்த்தம் அதுவல்ல.  மறைக்கல்வியின் பொருள் என்ன? என்பதை முதலில் அறிந்து கொண்டு, பிறகு மறைக்கல்வியைக் கற்க வேண்டும்.  ஞானஉபதேசம் என்று அழைக்கப்பட்டு, அக்காலத்தில் கற்றுத் தரப்படும் பாடம் இன்று மறைக்கல்வி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.  Catechism என்னும் இச்சொல் Catechesis என்ற கிரேக்கச் சொல்லில்  இருந்து பிறந்தது.  இதற்கு ஒலி எழுப்புதல், எதிரொலித்தல், முழக்கம் செய்தல் என்பது பொருளாகும்.  கிறிஸ்து என்ன செய்தாரோ அதையே மறைக்கல்வி ஆசிரியரும் செய்கின்றார்.  ஆகவே மறைக்கல்வியைக் கற்போம்;  அதுவே நம் வாழ்வை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் பாதை.   
மறைக்கல்வியில் திருச்சபை :
“திருச்சபை” அது என்ன என நம்மில் பலரும் கேட்கும் கேள்வி.  திருச்சபையைப் பற்றியும் அதன் பாரம்பரியம் பற்றியும் நாம் அறியும் சிறப்பான இடம் மறைக்கல்வி.  அன்று தொட்டு இன்றுவரை திருச்சபையில் மறைக்கல்வி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.  எனவே மறைக்கல்வியைக் கற்று மறைப் பொருளை அறிந்திடுவோம்.
 மறைக்கல்வியில் விவிலியம் :
இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு இவற்றையயல்லாம் ஒன்றிணைத்து ஒரு பகுதியாக திருவிவிலியத்தில் வாசிக்கும் போதும், அதனைப் பிறருக்கு எடுத்துரைக்கும் போதும் அது இறை அறிவிப்பாகக் கருதப்படும்.  புனித பேதுரு இறை போதனை அளித்திருக்கிறார் என்பதை நமது மறைநூல் சுட்டிக் காட்டுகிறது (திப 2:14-40).  அதுமட்டுமல்லாமல் முதல் மறைச்சாட்சியான புனித ஸ்தேவான் யூதர்களுக்கு இறை போதனையைப் பறைச்சாற்றி இருக்கிறார் (திப 7:1-53).  மேலும் அந்தியோக்கியாவில் பவுல் போதித்தும் உள்ளார் (திப 13:16-33).  இப்போதனைகள் மீண்டும் மீண்டுமாக புதிய விளக்கங்களோடு சிந்திக்கப்பட்டு வாழ்வோடு இணையும் கல்வியாக மாற்றப்படும்போது இறைவார்த்தையின் ஒளியில் மறைக்கல்வி சிறப்புமிக்க வாழ்வுப் பாதையாக மாறுகிறது.  ஆகவே விவிலியத்தை மையப் படுத்துவோம்;  இறைவார்த்தையைக் கற்று மறைக்கல்வியில் மறுபிறப்பெடுப்போம்.  
வாழ்வை வசந்தமாக்க :
திருச்சபையின் சொல் அறிந்து, விவிலித்தின் வழிநின்று கற்பதைவிட நம் வாழ்க்கையை வசந்த காலமாக மாற்றுவதென்பது நாம் செய்யக்கூடிய செயலில்தான் உள்ளது.  மறைக்கல்வி எதற்கு என்று ஓட்டு வீட்டில் உறங்குபவரும். எதுக்குடா இதெல்லாம் என்று சொல்லி ஏ.சி. அறையில் மகிழ்வோரும் புரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம்.
நாம் கொண்டுள்ள விசுவாசம் உறுதிப்பட விவிலிய அறிவும், செபத்தின் உட்பொருளை உணருதலும் தேவை.  அதுமட்டுமல்லாமல் கடவுளைக் கண்டறிய வேண்டிய வழிகளும் நமக்கு அவசிய மானது ஒன்று.  இதெல்லாம் சிறுவர், சிறுமியருக்குத்தானே என்று மட்டும் நினைத்தோமென்றால் நாம் நிறை வளர்ச்சி காண முடியாது.  குழந்தைக்குத் தேவை, இளையோருக்குத் தேவை, முதிர் வயதினருக்குத் தேவை.
வாழ்வை வசந்தமாக்கிட வழிகள் பல உண்டு.  ஆனால், ஆண்டவரின் அருள் பெற்று, உண்மையான புரிதல் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்க உதவும் பச்சை நிற விளக்குத்தான் மறைக்கல்வி.
வருங்காலம் வசந்தமாகிட மறைக்கல்வியைப் படிப்போம்!  மற்றவருக்கு மறைக்கல்வியைப் பயிற்றுவிப்போம்! 

சகோ. மாணிக்கம்
திருச்சி மறைமாவட்டம்  

0 comments:

Post a Comment