புத்தாண்டு 2011-ன் நல்வாழ்த்துக்கள்!

இவ்விதழ் உங்களை வந்தடையும் வேளையில் தமிழர் திருவிழா களைகட்டி நிற்கும் சூழல்.
பொங்கல் திருவிழா நல்வாழ்த்துக் களையும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் புதிய நம்பிக்கையிலும், புதிய செயல் பாடுகளை உள்ளடக்கிய நல்திட்டங் களிலும் நிறைந்துள்ளது. ஆண்டின் இறுதி நாட்களின் நினைவுகள், அந்த ஆண்டில் பெற்ற நன்மைகள், வெற்றிகள், மனநிறைவான உறவுகள், வளர்ச்சிகள் இவற்றோடு கூடவே தோல்விகள், ஏமாற்றங்கள், நிறை வடையாத திட்டங்கள், முறிந்த நிலை உறவுகள் என்ற கலவைகளாக இருப்பினும் ஓர் ஆண்டின் தொடக்கம் மட்டும் புத்துணர்வு தரும் நம்பிக்கையிலும், நேர்மறைத் திட்டங் களிலும் மட்டும்தான் புலர்கிறது. இதுதான் நாம் தொடர்ந்து வாழ தெம்பும் தருகிறது. புதிய மன எழுச்சியுடன் குடும்பங்களுக்கும் துறவறத்தாருக்கும் வாழ்த்துக்களை மீண்டும் படைக்கிறேன்.
2011-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நம் பணிக்குழுவின் செயல்பாடு ஒன்றை நிலைப்படுத்த விழைகிறேன். 2010-ஆம் ஆண்டின் கூட்டங்களிலிருந்து பிறக்கும் சிந்தனை இது.
‘இணைந்து செயல்படும்’ நோக்கம் கொண்ட திட்டமே இன்று முறையாய் வலியுறுத்தப்படுகிறது  இறையழைத்தல் பணி இன்றைய காலக்கட்டத்தில் சவாலான பணியே. ஏதோ அழைப்பை ஏற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பது மட்டுமல்ல, மேலாக, துறவறத்தின் மேன்மைப் பாட்டைப் பல கேள்விகளுக்கு உட்படுத்துகிற மனநிலைகள் பலரிடமும் உள்ளன. இத்தகைய சூழலில் பிள்ளைகள், பெற்றோர், ஏன் துறவற நிலையில் உள்ளோர்கூட இறையழைத்தல் பற்றி எதிர்மறைச் சிந்தனையே கொண்டுள்ளனர். இத்தகைய சிந்தனைகளும் சூழல் களும்தான் இறையழைத்தல் பணி செய்வோருக்கான பெரும் சவால். “நிறைய பிள்ளைகள்தான் அழைத் தலுக்கு வருவதில்லையே... பின் ஏன் இறையழைத்தல் பணியாளர்கள் தேவை?” என ஓர் அருட்சகோதரி கேட்டார். தவறான புரிதலோடு உள்ள இக்கேள்விக்கு என்ன பதில் தருவது? குறைகிறதால்தான் நிறைய உழைக்க வேண்டியுள்ளது என்ற நினைப்பு இல்லையே! யாரோ ஒருவர் அல்லது இருவருக்குச் சபை / மறைமாவட்டம் இப்பணியைத் தந்துள்ளது. எனவே இந்தப் பணி அவர்களின் தலையயழுத்து என்று ஒதுங்கிக்கொள்வது தவறான சிந்தனைதானே!
இணைந்து செயல்படும் போக்கே இன்று தேவைப்படுகின்றது. இச்செயல் பாட்டை இரு நிலைகளில் பார்க்கிறேன்.

  • துறவு நிலையில் உள்ள எல்லோருமே இணைந்து செயல்படுதல் முதல் நிலை. குருக்கள், துறவிகள் தாம் வாழுகிற, பணி செய்கிற இடங்களில் தகுதியான பலர் உள்ளங்களைத் தேர்ந்து தெளிவது கடமையே. ஒருசிலர் மட்டும் இப்பணிப் பொறுப்பைப் பெற்றிருந்தாலும், அனைவருமே இணைந்து செயல்படாவிடில் இப்பணி முழுமை பெறாது.
  • துறவு நிலையில் உள்ளோரும் பொதுநிலையினரும் இணைந்து செயல்படுதல் இரண்டாவது நிலை.

தொடக்கத் திருச்சபையில் ‘துறவறம்’,  ‘பொதுநிலை’ என்ற  பாகுபாடு இல்லாத நிலையில் எல்லோருமே இறையரசுப் பணிக்காக இணைந்து உழைத்ததால் சபை வளர்ச்சி கண்டது. இன்று இப்பணிக்கான செயல்பாட்டில் அனைவரும் இணைந்து செயல்படாமல் ஒதுங்குவதும், ஒதுக்கி வைப்பதும் வளர்ச்சியைத் தடை செய்யும் இடர்ப்பாடே.
இறையழைத்தல் பணியில் உள்ளோர் பொதுநிலையினரை, பெற்றோரை, இளையோரை இப்பணியில் தம்மோடு இணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களும் பயிற்சி பெற்று நம்மோடு இணைந்து செயல்பட்டால் இன்னும் அதிக வளர்ச்சிக்கான பாதை தெரியும். ஒவ்வொரு மறைமாவட்டமும், துறவற சபையும் தம் இறையழைத்தல் பணிக்குழுவில் சில பொதுநிலை யினரை இணைத்து, திட்டமிட்டுச் செயல்பட்டால் அதிக வளர்ச்சிக்கு வழி பிறக்கும்; நல்ல அர்ப்பண உள்ளங் களை இனம்காண முடியும்.
இப்புதிய ஆண்டில் ‘இணைந்த செயல்பாட்டிற்கான’ திட்டமிடுவோம். பணியில் ஏற்படும் தளர்ச்சியை விடுத்து, வளர்ச்சி நோக்கிய பயணத்தில் பலரை இணைப்போம். கடவுளின் ஆவியால் வழிநடத்தப்படுவோம்.
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சே. சகாய ஜாண்

0 comments:

Post a Comment