தேவ நற்கருணை

இப்பொய்மை உலகில் கடவுளர்கள் ஏராளம். கல்லெல்லாம் கடவுள் அல்ல! வாழும் கடவுளே கடவுள்! அக்கடவுள் தேவ நற்கருணையில் வாழ்கிறார் என்றால் அவரை உணர "நல் விசுவாசம்' வேண்டும். ஏனெனில், ஆண்டவர் சொல்கிறார், ""நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு. இதை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.'' அப்ப இரச வடிவிலே ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாமல் வாழ்கிறார் என்பது ஆண்டவரைச் சுவைத்துப் பார்த்தவர்களுக்குப் புரிந்த ஒன்று.

நற்கருணை மகிமை நன்மையின் மகிமை. அன்றைய காலக்கட்டங்களில் நற்கருணை நாதரில் இருந்த விசுவாசம் இக்காலக்கட்டங்களில் குறைந்து போனதோ? எனச் சிந்திக்கத் தோன்றுகிறது. ""எவனாவது இந்த அப்பத்தைத் தகுதி இன்றி உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறான்'' (1 கொரி 11:27). திருமண வைபவத்திற்குச் செல்பவர்கள் திருமண விருந்தில் உண்பதும், திருப்பலியில் கலந்துகொள்பவர்கள் திருவிருந்தில் பங்கேற்பதும் ஒன்றாகிவிடாது.

"அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்'' (யோவா 6:27) என்னும் திருவசனத்திலிருந்து மண்ணக - விண்ணக உணவின் வேற்றுமை தெளிவாகும். நற்கருணையை இடது கையில் பெற்று எடுத்து உண்பது ஏற்புடையதா? என்பது புரியவில்லை. சில சமயங்களில் சிற்றாலயங்களிலிருந்து நற்கருணைப் பேழையை எடுத்து வரும்போது எந்தவித பக்தி முயற்சியும் இன்றி சாதாரணமாக வருவது காலத்தின் கோலம் போலும்! நற்கருணை தவறி கீழே விழுந்தால் அதை மீள எடுத்துப் பேழையில் வைக்கின்ற செயல் அக்காலக் குருக்களின் செயலுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இன்று உள்ளது.

திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், அன்னை தெரேசா மற்றும் ஆயர் புல்ட்டன் Uன் போன்றோர் வெளிப்படுத்திய நற்கருணைப் பக்தி போற்றுதற்குரியது. அதனால்தான் அவர்கள் காலத்தை வென்றவர்களாக இன்றும் திகழ்கிறார்கள்.

எந்த நிலையிலும் "தேவ நற்கருணை'யில் "இறைவன்' ஜீவிக்கிறார் என்பதை விசுவசித்து திருவிருந்தில் பங்கேற்றால், ஆராதனை செய்தால் வீடும் நாடும் "அமைதி'யில் நிலைக்கும். நற்கருணை ஆராதனை உலகெங்கும் கொண்டாடப் பட்டாலும் அது சடங்கா இல்லை "சரண்டரா' என்பது அவரவர் உள்ளத்திற்குத் தான் தெரியும். நற்கருணை ஆண்டவர் நம்மில் தங்க "விசுவாசம்' வேண்டி வரம் கேட்போம்.

ச. செல்வராஜ்,
தலைமையாசிரியர், இயேசு இல்லம், விழுப்புரம்

0 comments:

Post a Comment