இறைபதமே ஞானத்தின் ஊற்று

புனித ஜான் மரிய வியான்னி (1786 - 1859) ஆர்ஸ் கிராமத்தின் பங்குத் தந்தையாக இருந்தபோது அவரிடம் பாவசங்கீர்த் தனம் செய்யவும் அவரின் மறையுரைகளில் வெளிப்படும் ஞானத்தைப் பெறவும் அநேக மக்கள் ஆர்ஸ் நகருக்குப் பெருங்கூட்டமாய் வந்தார்கள்.
சாதாரண மக்கள் மட்டுமல்ல குருவானவர்கள், ஆயர்கள், கர்தினால்கள், துறவுமடப் பெரியோர்கள் வந்து அவரிடம் மறையுரைகளில் வெளிப்பட்ட தெய்வீக ஞானத்தைக் கண்டு அதிசயமடைந்தார்கள்.  குருத்துவப் பயிற்சியின் போது ஞானம் இல்லை, அறிவு இல்லை, பேச்சுத் திறமை யில்லை, சிந்தனை ஆற்றல் இல்லை எனக் கருதி குருப்பட்டம் இவருக்குக் கொடுக்கவே தயங்கியவர்கள் இவரில் வெளிப்பட்ட ஞானத்தைக் கண்டு வியந்தார்கள்.
19ஆம் நூற்றாண்டில் மிகவும் புகழ் வாய்ந்த மறையுரையாளர், பெயர் பெற்ற ஞான வல்லுனர், குருமடப் பேராசிரியர் லக்கோர்தேர் என்பவர் புனித ஜான் மரிய வியான்னியிடம் பேசி, உரையாடி, ஆலோசனைகளைப் பெற்றபின் மிகவும் மகிழ்வுடன் திரும்பிச் சென்றார்.
அவரின் வருகையைக் குறித்து ஜான் மரிய வியான்னி குறிப்பிடும்போது “ஒரு மலை மடுவைத் தேடி வந்திருக்கிறது.  ஞானமுள்ளவர் ஞானமற்ற என்னைக் காண வந்தார்.  அறிவிற்சிறந்தவர் அறிவற்ற என்னிடம் வந்து ஆலோசனை பெற  வந்தார்” என்றார்.
ஜான் மரிய  வியான்னியிடம் அபூர்வ சிந்தனைகளும் ஞானக் கருத்துக் களும் வெளிப்பட்டன.  அவர் எந்த ஞானியிடம் போக வில்லை.  அறிவாளியை நாடவில்லை.  கருத்துக் குவியலைக் கொண்டிருக்கும் புத்தகங்களைப் படிக்கவில்லை.  அவர் ஞானத்தைத் தேடி திவ்விய நற்கருணை நாதரின் பாதத்தண்டை வந்தார்.  வேதாகமத்தை இதயத்தில் பதித்தார்.  இறைவனின் மெல்லிய ஆலோசனைகளை ஜெபத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமை யால் உய்த்து உணர்ந்தார்.  அங்கு பெற்ற ஞானத்தையே மக்களுக்குப் போதித்தார்.
வேதாகமத்தில் “உங்களில் எவருக் காவது ஞானம் குறைவாயிருந்தால் அவர் கடவுளிடம் கேட்கட்டும்.  அவருக்குக் கொடுக்கப்படும்.  முகம் கோணாமல் தாராளமாய்க் கொடுப்பவர் அவர்” என்கிறார் புனித யாக்கோபு (1:5).
பாலன் இயேசுவைத் தேடி கீழ்த்திசை ஞானிகள் ஒட்டகத்தின்மீது ஏறி பாலைவனப் பயணம் செய்து எருசலேம் நகர் வருகிறார்கள்.  அவர்கள் ஞானத்தைக் கொண்டிருப் பவரும் அதிசய ஆலோசனையின் கர்த்தராகிய தேவ பாலன் இயேசுவை ஆராதனை செய்ய அதிசய விண்மீனைப் பின்பற்றி எருசலேம் நகர் வருகிறார்கள்.
விண்மீன் மறைவினால் யூதாவின் சிற்றரசன் ஏரோதிடம் “யூதாவின் அரசர் பிறந்திருக்கிறாரே அவர் எங்கே?  அவருடைய விண்மீன் எழுதலைக் கண்டு அவரை வணங்க வந்தோம்” என்கிறார்கள்.
மூன்று ஞானிகள் கீழ்த்திசை நாடுகளில் ஒன்றான அசிரியா, பாபிலோன் அல்லது பெர்சியா நாடுகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.  மெடஸ் (னிedeவி) என்ற குருகுலத்தைச் சேர்ந்தவர்.  சொராஸ்டர் மதக் கொள்கை உடையவர்கள்.  அரசியலிலும் மக்கள் மதிப்பிலும் உயர்ந்து காணப்பட்டவர்கள்.  நாட்டின் ஆளுமையில் பங்கு பெற்ற அறிஞர்கள்.
மேலும் அவர்கள் வானசாஸ்திரி களாய் இருந்தார்கள்.  வானத்தின் நட்சத்திரங் களையும் ஆராயும் ஞானத்தைக் கொண்ட வர்களாயும் இருந்தார்கள்.  ஆராய்ச்சியின் வல்லுனர்களாய் இருந்ததால் அதிசய விண்மீனின் வெளிப்பாட்டை  அறிந்து ஞானத்தின் கர்த்தரை வணங்கக் கீழ்த்திசை நாட்டிலிருந்து பல மாதங்கள் பாலை வனத்தில் பயணம் செய்து பாலன் இயேசுவை மாட்டுக் கொட்டத்தில் கண்டு நெடுஞ்சான்கிடையாக விழுந்து ஆராதிக்கிறார்கள்.
உலக ஞானத்தில் சிறந்தவர்கள் ஞானத்தின் கர்த்தரைத் தேடி மாட்டுக் கொட்டிலில் கிடத்தப் பட்டிருக்கும் பாலன் இயேசுவை ஆராதிக்கிறார்கள்.  தெண்டனிடுகிறார்கள்.  மூன்று காணிக்கைகளை அர்ப்பணித்து இயேசுவை இரட்சகராகவும் குருவாகவும் அரசராகவும் ஏற்றுக் கொள்கிறார்கள்.  ஞானத்தில் சிறந்தவரும், மறை வல்லுனரும், நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதி இறை ஞானத்தை வெளிப்படுத்திய வருமான பேராயர் புல்டன் சீன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“நான் எவ்விடத்தில் இருப்பினும், என் அறைக்கு அடுத்த அறை திவ்விய நற்ளகருணை ஸ்தாபகம் உள்ள சிற்றாலயமாகத்தான் இருக்கும்.  குறைந்தது ஒரு மணி நேர திவ்விய நற்கருணை சந்திப்பில் பெற்ற ஞானக் கருத்துக்கள்தான் என்னிடமிருந்து வெளிப்பட்டன” என்கிறார்.
இன்று நாம் ஞானமுள்ளவர்களாய் வாழ, நடந்து கொள்ள இயேசுவின் பாதப் படியில் மணிக்கணக்காய் அமர்வோம்.  அவரின் ஆலோசனைக்குச் செவிமடுப்போம். ஆமென்.
Fr. ச. ஜெகநாதன், அருப்புக்கோட்டை

இது பூக்களின் காலம் . . . இயல்பே நிரந்தரம்

தம்பதி ஒன்று
தவம் கிடக்கிறது குழந்தைக்கு
பனிக்குடம் உடைய
பத்தியம் இருக்கிறது
ஒரு குடும்பம்


கண்டதைத் தின்று
வாந்தி எடுப்பதாகிப் போனது
இன்றைய கல்வி!
பொதி சுமக்கிறது
சீருடை அணிந்த
ஒரு கும்பல்


மம்மி என்று சொல்லும்
தாய் மொழி மறந்த குழந்தைக்கு
ஐந்து முத்தம் கொடுக்கிறாள்
அம்மா!


சீட்டெடுக்கும்
கிளியைப் பார்த்து
சிரிக்கிறது குழந்தை
அது சிறகு இழந்திருப்பது
அறியாமல்
சொன்னதைச் சொல்லும்
கிளிப்பிள்ளை என்கிறார்கள்
அது தாய்மொழி
மறந்த தென்கிறேன்
நான்


குழந்தையும் தெய்வமும்
ஒன்றென்கிறார்கள்


தவம் கிடந்து பெற்றாலும்
சில பொழுதில்
சனியனே என்று -  குழந்தை
திட்டத்தான் வேண்டியிருக்கிறது
என்கிறாள் தாய்


பொய் சொல்லாது
குழந்தையயன்கிறான்
ஞானி


குழந்தையாய் இரு
என்கிறான்
துறவி


குழந்தை குழந்தையாய்
இருப்பது
அதன் உரிமை
குற்றம் சொல்லாமல்
இருப்பது
நம் கடமை.

அரிய வாழ்க்கை

குருத்துவ ஆண்டு நிறைவடையும் காலக் கட்டமிது.  குருத்துவத்திற்கு எத்தகைய வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கிறது என்பதை நடந்து முடிந்த கொண்டாட்டங்கள் அத்தனையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.  இறை மக்கள் சமுதாயத்தில் மட்டுமல்ல, பொதுவான மக்கள் சமுதாயத்திலும் குருக்கள் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்.  குருக்கள் சிலரை விமரிசிக்கின்ற மக்கள்கூட குருத்துவத்தைப் பற்றி உயர்வான எண்ணங்களைத்தான் கொண்டிருக்கின்றனர்.  இத்தகைய வாழ்க்கை முறை முழுமையாக வாழப்படவில்லையே என்ற ஆதங்கம் தான் விமரிசனமாக வெளிப்படுகிறது.


இந்த வாழ்க்கை முறையை நடை முறைப்படுத்துவதில் எழக்கூடிய சிக்கல்கள் ஏராளம்.  பணி வாழ்க்கையை மிகச் சிறப்பாகத் துவங்கிய குருக்கள் சில ஆண்டுகளில் தளர்ந்து போய் விடுவதைக் காணமுடிகிறது.  காரணங்கள் பலவகை.  முதல் காரணமாக நான் சொல்ல விழைவது ‘இறை மக்கள் சமுதாயத்தில் அவர்களுக்கு ஏற்படுகின்ற உறவுச் சிக்கல்கள்’.  மறுகிறிஸ்துவாக மதித்து ஏற்றுக்கொண்ட இறைமக்கள் கிறிஸ்துவுக்குத் தந்த அதே சிலுவைத் துன்பங்களைக் குருக்களுக்குத் தருகின்றனர்.  தாங்கள் எத்தகைய வாழ்க்கையையும் வாழலாம், ஆனால் தங்களுடைய குருக்கள் சம்மனசுக்களைப்போல் வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது;  அவர்களின் மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைச் சமுதாய வாழ்விலிருந்து ஒதுக்கிவைப்பது;  அவர்கள் புரியும் சிறு தவறுகளையும் பெரிதுபடுத்தி தங்களின் வாழ்க்கைக்கு நியாயங்கள் கற்பிப்பது போன்றவை 
இன்றைய நடைமுறை யதார்த்தங்கள்.


இரண்டாவது சிக்கலாக நான் கருதுவது ‘சாதியம்’;  குரு என்பவர் குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தவர்தான்.  இந்திய கலாச்சாரப் பின்னணியில் பார்க்கின்ற நேரத்தில், குறிப்பிட்ட சாதியால் உருவானவர்தான்.  அவரது குருத்துவத் திருநிலைப்பாடு அவரை சாதியத்திலிருந்து பிரித்துக் காட்டுகிறது.  இறைமக்கள் அனைவருக்கும் பொதுவானவராக அவர் அபிஷேகம் செய்யப்படுகிறார்.  அதன் பின்னும் அவரைக் குறிப்பிட்ட சாதியைச் சாரந்தவராகப் பார்ப்பது மிகப் பெரிய குற்றமாகும்.  தூய ஆவிக்கு எதிராகச் சிந்திக்கின்ற நிலையாகும்.  குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவராகவே அவரைப் பார்த்து அவரின் அத்தனை அருங்கொடை களையும் முடக்கிப் போடுவது இன்று குருத்துவத்திற்கு நாம் இழைக்கும் பெரிய களங்கம்.


மூன்றாவது சிக்கலாக நான் கருதுவது ‘பொருளாதாரப் புதைமணல்’. சாதாரண வாழ்க்கையில் பொருளாதாரம் மிக அவசியமான ஒன்று.  அதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், ஈடுபடும் கடினமான உழைப்பு போன்றவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.  ஆனால்; குருத்துவ வாழ்க்கையில் இத்தகைய பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் தேவையற்றவை;  அர்த்தமற்றவை. குருக்களை இத்தகைய பொருளாதார முனைப்புகளில் சிக்கவைத்து அவர்களின் அருள்வாழ்வைப் பாழடிக்கும் முயற்சிகள் ஏராளமாக நடக்கின்றன.  பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், வெளிநாட்டு முதலீடுகள் போன்ற பல்வேறு சக்திகள் குருக்களைச் சிதறடிக்கின்றன.  இவற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்ற திருச்சபை முன் வருவது மிகக் குறைவாகவே உள்ளது.  குருக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து அவர்களின் அருள் வாழ்வு சிறக்க வழிவகைகள் செய்வதை விட்டுவிட்டு, பணம் கொடுக்கின்ற குருக்கள், வசதி வாய்ப்பு செய்து கொடுக்கின்ற குருக்கள், சமூக நிலையை உயர்த்தப் பயன்படுகின்ற  குருக்கள் என்று பொருளாதார நோக்கில் குருக்களை அணுகுகின்ற நிலைகள் உள்ளன.  இவை மாறுகின்ற நேரத்தில் தான் குருத்துவம் தழைக்க முடியும்.


சரித்திரம் படைக்க


இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு இன்று எத்தனையோ குருக்கள் அரிய முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  பொது மக்களுக்குப் பணிபுரியும் பணியாளராகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களின் நன்மதிப்பு பெறுகின்ற நிலையை தியாகம்  செய்யும் குருக்கள் உண்டு.  யாரையும் சார்ந்து வாழாமல், யாருக்கும் அடிபணிந்து வாழாமல், யாருடைய பாராட்டிற்கும் பலியாகாமல் தெளிந்த நீரோடையைப் போல பணியாற்றிக் கொண்டே செல்லும் குருக்கள் பலர் உண்டு.  இவர்களின் ஆழமான பற்றுறுதி இவர்களுக்கு இந்த சக்தியைத் தருகின்றது.  சிலுவை என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை இவர்கள் தெளிவாக உணர்ந்து சிலுவை வழியாக உயிர்ப்பைத் தேடுகின்றனர்.
பாராட்டு, புகழ், சமூக மதிப்பு என்ற சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்ளாமல் இறைமகனின் சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடக்கும் இத்தகைய குருக்கள் பலருக்குத் தெரியாமல் போகலாம்.  பணியே வாழ்வு என்ற அவர்களின் உறுதிப்பாடு குருத்துவத்தை குன்றின் மேல் இட்ட தீபமாக உயர்த்திக் கொண்டிருக்கிறது.


சாதியம் கடக்க


சாதியச் சக்திகளை வெல்ல இவர்கள் எடுக்கும் முதல் ஆயுதம் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையால் தங்களை இணைத்துக் கொள்வதுதான். சாதிய உணர்வுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று அனுபவிக்கும் உணர்வுப் பூர்வமான ஊனங்கள் ஆயிரமாயிரம்.  இந்த ஊனங்களிலிருந்து மக்களை விடுவிக்க முழுத் திருச்சபையையும் ஒன்றித்துச் செயல்பட அழைப்பது குருக்களின் கடமை.  அதில் பல சமயங்களில் தோல்வியையே தழுவுகின்றனர் குருக்கள்,  சொந்த குடும்பங்களைச் சார்ந்தவர்களே அவர்களுக்கு எதிரிகளாக மாறும் நிலையும் ஏற்படுகிறது.  எனினும் சாதியத்தால் காயப்பட்ட மக்களுக்கு புரிந்து கொள்ளும் நபர்களாக, தோழமையின் துணையாளர்களாக மாறி வரும் குருக்களைப் பார்த்து உண்மையில் கைகூப்பி நிற்கிறோம்.


பொருளாதாரப் புதைமணல்


இன்று குருத்துவ வாழ்க்கையை நன்கு புரிந்து கொண்ட இறைமக்கள் குருக்களுக்குப் பல்வேறு பொருளாதார உதவிகள் செய்து அவர்களின் அருள் வாழ்வு மங்கிவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.  குருக்களின் ஆடம்பர வாழ்வுக்கு எந்தவொரு கிறிஸ்தவரும் உடன்போக மாட்டார் என்பது நடை முறையில் காணும் உண்மை.  அதே சமயத்தில், குருக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னரே இறைமக்கள் தங்களது தேவைகளை நிறைவுசெய்து கொள்கிறார்கள் என்பது வரலாறு தரும் பாடம்.  ஒரு சிறு ரொட்டித் துண்டு மட்டுமே கையில் இருக்கும் ஒரு பஞ்ச சூழலில்கூட, பாதித்துண்டைக் குருக்களுக்குத் தந்துவிட்டு மீதியைச் சாப்பிடுவதுதான் கத்தோலிக்க கிறிஸ்த வர்களின் இயல்பு.
பொருளாதாரப் புதைமணலில் சிக்கிக் கொள்ளாமல் குருக்களைக் காக்க வேண்டிய பொறுப்பைத் திருச்சபை மிக நன்கு உணர்ந்து செயல்படுவதற்கு இந்தக் குருக்கள் ஆண்டு திட்டமிடும் என்பது எனது நம்பிக்கை.


அரிய வாழ்வு


குருத்துவம் என்பது அரிய வாழ்வு.  உலகில் மிகச் சிலருக்கே ஆண்டவன் தருகின்ற மகத்துவமிக்க கொடை.  இந்த அரிய வாழ்வின் அத்தனை நிமிடங்களும் ஆண்டவன் அருள்தரும் நேரங்கள்.  ஒவ்வொரு நிமிடமும் பணி வாழ்வின் நேரமே!
மிகப் பெரிய முத்தைக் கண்டு கொண்டவன் தனக்குள்ளதெல்லாம் விற்று அந்த முத்தைத் தன்னகப்படுத்திக் கொள்வது போன்று குருத்துவத்தைப் பெற்றவர்கள் அதனை அருள் வாழ்வின் ஊற்றாக, அணையாத விளக்காக, அருட் செல்வமாகக் காப்பாற்றி வளர்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இதைக் காப்பாற்ற இறைமகன் இயேசு தந்த மிகப் பெரிய உத்தி ‘தன்னையே வெறுமையாக்குதல்’ ஒன்றே.  எந்தவொரு சூழலிலும் குரு தன்னையே வெறுமையாக்கி இறையருள் தன்னில் தங்க இடமளிக்கின்றார்.  தான் மறைந்து தன்னை ஆட்கொண்ட இறைவனின் ஒளி தன்னில் பிரகாசிக்கச் செய்கின்றார்.
அத்தகைய அருள்நிலையில் அவர் அடையும் ஆனந்தம் அலாதியானது, அதிசயமானது.  விண்ணரசின் வெளிச்சங்களை இந்த பூமியில் கண்டு மகிழும் அதிசய வாழ்வு குருத்துவம்.  மண்ணகத்தை விண்ணகத்தோடு இணைக்கும் மாட்சிமையின் வாழ்வு குருத்துவம்.  என்றும் இந்த உலகத்தின் உண்மையான தேவைகளை எடுத்துச் சொல்லி, வழிகளை வாழ்ந்துகாட்டி, வண்ணமயமான வாழ்வுக்கு இந்த பிரபஞ்சத்தை அழைத்துச் செல்லும் விண்மீன் குருத்துவம்.
    (தொடரும்)    - அருள்பணி. க. வலன்டின் ஜோசப்

தேவை - மதிப்பீடுகளை மையப்படுத்தும் கல்வி

கடவுளது படைப்புகளிலேயே மனிதப்பண்பு தனித்தன்மை மிக்க அறிவார்ந்த உயிரியாகும்.  மனிதன் குழந்தையாகப் பிறக்கும் போதே பிறரைச் சார்ந்த நிலையில் உள்ளான்.  பின்னர் கல்வியின் மூலம் அறிவு, செயல்திறன்கள், பழக்கவழக்கங்கள், பண்பு நலன்களை வளர்த்துக் கொண்டு முழு மனிதன் ஆகிறான்.  தான் வாழும் சமுதாயத்தின் நெறிமுறை களைக் கற்றறிந்து சிறந்த குடிமகனாக உருவாகிறான்.  நுண்ணறிவும், கற்கும் ஆற்றலும் மிகுந்து இருப்பதால் அவனால் எதையும் விரிவாகக் கற்றுக் கொள்ள முடிகிறது.
கல்வியின் காரணமாக மனிதன் தனது புறச்சூழல், சமூகச்சூழல் மற்றும் ஆன்மீகச் சூழலுக்கு ஏற்ற இணக்கமான நடத்தையைப் பெறுகிறான்.  “குழந்தை மற்றும் மனிதர்களின் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றின் சிறப்பானவற்றை எல்லாம் முழுமையாக வெளியாக்குவதே கல்வி” என்கிறார் மகாத்மா காந்தியடிகள்.    ‘செடிகள் வளர நிலத்தைப் பண்படுத்துவது போல மனிதர்களைப் பண்படுத்த பயன்படுவதே கல்வி’ என்கிறார் ஜான் லாக்(John Lock).  ஆக கல்விதான் மனிதனைக் கடவுளின்; உயர்படைப்பு என்பதற்குத் தகுதி உள்ளவனாக ஆக்குகிறது.
இத்தகைய உன்னதமான கல்வியின் இன்றைய நிலை நல் உள்ளம் கொண்டோரை வேதனையில் ஆழ்த்துகிறது.  இந்நாட்களில் மாறிவரும் சமூகப் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப, கல்வி தனது அணுகுமுறைகளிலும் நடைமுறையிலும் பெருத்த மாற்றங் களை அடைந்து வருகிறது.
கல்வியை ‘உயர்த்துதல்’ ‘மேன்மை யாக்கல்’ என்ற நிலையில் அரசு பல வளர்ச்சி நிலைகளை அறிமுகப்படுத்துகிறது.  எனினும் சமூகத்தில் பல சுயநல சக்திகள் கல்வியை வியாபாரமாக்கி வருவது நாமறிந்த உண்மை.
ஒரு காலத்தில்சேவைமனம் கொண்டு மனிதனை உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு கற்றவர்கள் தாம் பெற்ற அறிவைப் பிறரோடு பகிர்ந்து கொண்டார்கள்.  “ஆயிரம் அன்ன சத்திரங்கள் கட்டுவதை விட ஓர் ஏழைக்கு எழுத்தறிவு கற்பித்தலே மிகச் சிறந்தது” என்பதை உணர்ந்த வசதி படைத்தோர் கல்விக் கூடங்களை நிறுவி மாணவர்கள் கல்வி கற்க உதவினர்.
ஆனால் இன்று பணம் படைத்தோர் கல்விக் கூடங்களைப் பணத்தைப் பெருக்க உதவும் வணிக நிறுவனங்க ளாகவே மாற்றி விட்டனர்.  எண்ணற்ற தொழில் நிறுவனங்களைப்போல கல்வி நிறுவனங்களையும் வணிக மயமாக்கி விட்டனர்.  பணத்தைப் பெருக்குவதே நோக்கமாக இருப்பதால் குறைந்த ஊதியத்திற்கு, தகுதியில்லாத ஆசிரியர் களைக் கொண்டு பல கல்வி நிறுவனங் களை நடத்துகின்றனர்.
கல்வி பெறுகின்ற மாணவர்களின் எண்ண ஓட்டமும்கூட வேதனை தரக் கூடியதாக இருக்கின்றது.  அதிக மதிப் பெண் பெறுவதே தமது இலட்சியமாகக் கொண்டு புரிகிறதோ இல்லையோ அனைத்தையும் மனப்பாடம் செய்து விடைத்தாள்களில் அப்படியே கொட்டிவிட முனைகிறார்கள்.  வாழ்க்கைக்குத் தேவையான மதிப்பீடுகள், நல்லொழுக்கம், சேர்ந்து வாழ்தல், நல்ல பழக்க வழக்கங் களை வளர்த்தல் போன்றவற்றில் கோட்டை விடுகிறார்கள்.
பெற்றோர்களோ, பணத்தைக் கொட்டி இறைத்து, பிள்ளைகளை விடுதிகளில் சேர்த்தும், காலை, மாலை “டியூசன்” வகுப்புகளுக்கு அனுப்பியும், அவர்களின் குழந்தைப் பருவ விளையாட்டுகளை, மகிழ்ச்சியை அழித்து விட்டு, எப்படியாவது தம் பிள்ளைகள் மிக அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என நினைக்கின்றனர்.
இத்தகைய சூழலில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் வித்தியாசமான நிறுவனங்களாக செயல்பட வேண்டும்.  மனிதனின் மாண்பை உயர்த்த வந்தார் இயேசு.  அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றும் நாம், அவரின் மதிப்பீடுகளை உள்வாங்கி வாழும் நாம், சமூக பொருளாதார, கலாச்சார நிலையில் பின்தங்கி வாழும் மாணவர்களிடம் புதைந்து கிடைக்கும் ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்கொண்டு வர முயலவேண்டும்.
குறிப்பிட்ட விளையாட்டில் சிலருக்கு ஈடுபாடு இருந்தால், அவர்களை அந்தத் துறையில் அதிகம் ஈடுபடுத்தலாமே.  மேடைப்பேச்சு, ஓவியம் வரைதல் போன்ற துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்து அந்தத் துறைகளில் வளரச்செய்யலாமே.
பலதரப்பட்ட குணநலன்கள் கொண்ட வகுப்பறை மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்கின்றபோது, சமூகத்தில் சேர்ந்து வாழ்தலின் நன்மைகளையும் அவசியத்தையும் உணரச் செய்து எதிர்கால வாழ்வுக்கு தயார்படுத்தலாமே.
தலைமைப் பண்பை வளர்த் தெடுத்தல், குழுவில் இணைந்து செயல் படுதல், ஒருவர் ஒருவருக்கு உதவி செய்தல், சாதி மத வேறுபாடுகளைக் களைந்து ஒரே சமூகமாக இணைந்து வாழ்தல் போன்ற நற்பண்புகளை எல்லாம் நாம் கற்றுத்தர முடியுமே.
மதிப்பெண்கள் தருகின்ற கல்வி ஒரு வேளை நல்ல வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரலாம், நல்ல மனிதனாக மாற்றாது.  ஆனால் மதிப்பீடுகள் தருகின்ற கல்வியோ நிச்சயம் நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.
மனிதத்தைப் புனிதமாக்க வந்த இயேசுவைப் பின்பற்றும் நாம் நல்ல மதிப் பெண்கள் பெற உழைப்பதைவிட மேலாக நல்ல மதிப்பீடுகளை மையப்படுத்த உழைக்கலாமே.
Fr. A.S. ஜெயக்குமார், பொன்மலைப்பட்டி