புதிய வழித்தடம் நாமே


பல்வேறு இடர்ப்பாடான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இப்புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது.  ‘முழு மனித உருவாக்கம்’ பற்றிய சிந்தனைகளோடு நிறை கல்வி தருதல் தேவை என்பதை மையப்படுத்தி கடந்த இதழின் சிந்தனைகள் பகிரப்பட்டன. அத்தகைய உயர்கல்விச் சிந்தனையும் செயல்பாடும் நம் பள்ளிகளில் தொடர வேண்டும் என விழைகிறோம். இந்த உயரிய குறிக்கோளில் எல்லாத் தரப்பு மாணாக்கரும் இணைக்கப்படுகின்றனர். ஆனாலும் நம் தமிழகத் திருச்சபையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘மறைக்கல்வி ஆண்டில்’ நமது கத்தோலிக்க (கிறிஸ்தவ) மாணாக்கரை மட்டுமே முன்னிலைப்படுத்தி, அவர்களை இன்னும் விசுவாசத்தில் உயர்வுபடுத்தும் பணிக்காக அழைக்கப்படுகிறோம். நமது நிறுவனங்களிலும் பங்குகளிலும் உள்ள வாய்ப்புகள், வசதிகள் மற்றும் உரிமைகளைப் பயன்படுத்தி கிறித்தவ வாழ்வின் உறுதிப்பாட்டை நம் தலைமுறையினருக்குத் தர விழைகின்றோம்.  இதன் மூலம் நல்ல இறை யழைப்புக்கான பாதையும் வகுக்கப்படும் என ஆசிக்கிறோம்.
பொதுவாகவே, நமது தலைமுறை பற்றிய ஒரு குறைபாடு மேலோங்கி யுள்ளது. விசுவாசம் குறைந்து, ஆலயங்களுக்கு வருவதில்கூட ஆர்வம் காட்டாமல் உள்ளனர். ஜெப வாழ்வும் குறைகிறது என்பதே அக்குறைபாடு. இரண்டு காரணங்களை முன்னிலைப்படுத்த வேண்டும். ஒன்று, ‘கட்டாயப் படுத்துதல் கூடாது’ என்ற  பின்னணியில் இன்று பிள்ளைகளின் விருப்பத்திற்கே முற்றிலும் இணங்கிச் செல்கிற பெற்றோரின் மனநிலை. பொதுவாகவே ஆன்மீகம், மதம், கடவுள் என்பவையயல்லாம் தேவையற்றவையாக அல்லது கடமைக்காக என்று எண்ணுகிற வயதில் பிள்ளைகளுக்குப் பெற்றோரின் இம்மனநிலை வசதியாகவே அமைந்துவிடுகிறது. இது ஆன்மீகத்தைப் பின்னுக்குத் தள்ளுகிற சூழல்
மற்றொன்று, இறைவார்த்தை அடிப்படையில் உருவாக்கப்படும் சிந்தனை : “தாங்கள் கேள்விப்படாத ஒருவர் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறு வார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?” (உரோ 10:14-15). பெற்றோரும், திருச்சபையை வழிநடத்துபவர்களும் தம் வார்த்தை யாலும் வாழ்க்கையாலும் எடுத்துக்கூறி இளையோரின் ஆன்மீகப் பயணத்தில் துணை நிற்பது தேவைப்படுகிறது என்பதே மேற்சொன்ன இறைவாக்கு உரைக்கும் உண்மை. சிறார், இளையோர் பின்பற்ற வேண்டிய ஆன்மீகம் பற்றி எடுத்துக் கூறுவோர் எண்ணிக்கை குறைந்து போனதோ என்ற எண்ணம் மேலோங்குகிறது.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், நற்செய்தி அறிவிப்புப் பற்றிக் கூறும்போதெல்லாம், இன்றைய சமூகத்தில் “இரண்டாம் நற்செய்தி அறிவிப்பு” தேவைப்படுகிறது எனக் கூறுவார். திருமுழுக்குப் பெற்றோரும், இயேசுவை அறிவுப்பூர்வமாக அறிந்தோரும், ஆன்மீகத்தில் வளர முடியாமல், விசுவாசத்தில் உறுதிப்பட முடியாமல் இருக்கும்போது மீண்டும் அவர்களுக்கு இறைச்சிந்தனை உருவாக்கும் அறிவிப்பே இரண்டாம் நற்செய்திப் பணி. இப்பணி இன்று மறைக்கல்வி மற்றும் அது சார்ந்த போதனைகள் மூலம் செய்யப்பட வேண்டும். அதற்கான நபர்கள் இன்று அதிகம் தேவைப்படுகிறார்கள். இந்த மறைக்கல்வி அறிவிப்பாளர்களை இனம் கண்டு அவர்களை இந்த மறைக்கல்வி ஆண்டு ஊக்கப்படுத்தும் என விரும்புகிறோம்.
மற்றொரு அங்கலாய்ப்பும் பெற்றோர் பெரியோரிடையே நிலவுவதை உணர முடிகிறது. “நாம் சொல்லி எந்தப் பிள்ளை கேட்கிறது” என்பதே அந்த அங்கலாய்ப்பு. பெற்றோரின் வார்த்தையைவிட வலுவுள்ளதாய், திருச்சபை கையாளுகிற போதனை முறைகளைவிட சிறப்பானதாய் இன்றைய கலாச்சாரத்தின் வார்த்தைகளும் செயல்பாட்டு முறைகளும் இருக்கின்றன. எனவேதான் நமது அறிவிப்பு பலன் தராமல் போகின்றது. இன்றைய மாணாக்கர்கள் மற்றும் இளையோரை வலுவான முறையில் கவர்ந்திழுத்து உண்மையை உணரச் செய்யும் புதிய வழித்தடங்கள் தேவைப்படுகின்றன. இப்புதிய வழித்தடங்கள் இளையோர் பயன்படுத்தும் நவின கலாச்சாரப் பொருட்களில் மட்டுமல்ல, அவற்றோடு அவற்றிற்கும் மேலான சாட்சிய - உண்மையான - உயர்வான - குறிக்கோளுள்ள - கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து காட்டுவதில் அடங்கியுள்ளது. சொற்களைவிட செயல்பாட்டினால் போதிக்கப்படும் உண்மைகள் - ஆன்மீக வழிமுறைகள் இளையோரைப் பக்குவப்படுத்த, ஆன்மீக வளர்ச்சிப்படுத்த உதவும் என்பதை உணர்வோம். பெற்றோரும், சிறப்பு அழைப்புப் பெற்றோரும் செயல்படுபவர்களாய் மாறுவோம். ஆன்மீக வளர்ச்சிப் பாதை வளருகிற தலைமுறைக்குப் பகிரப்படும்.
மறைக்கல்வி ஆண்டு செயல்பாடுகள் பற்றிய ஆயர்களின் சுற்றறிக்கையும் பிற எழுத்தாளர்களின் மறைக்கல்வி பற்றிய சிந்தனைகளும் இவ்விதழில் தரப்பட்டுள்ளன. சிந்தனைக்கு உட்படுத்திக்கொள்வோம்.
- பணி. சகாய ஜான்

0 comments:

Post a Comment