துவக்கக்கால திருச்சபையில் குருத்துவம்

குருத்துவப் பணிகளின் வளர்ச்சி நிலைகளைப் பல்வேறு கோணங்களில் விளக்கலாம்.  வரலாற்று நோக்கில் எவ்வாறெல்லாம் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்தப் பணிகள் செதுக்கப்பட்டன என்று காண்பவர்கள் உண்டு.  ஆன்மீக நோக்கில் எப்படியயல்லாம் இந்த வாழ்க்கை முறை வளர்ந்தது என்று நோக்கியவர்கள் உண்டு.  மானிடவியல் நோக்கில், இத்தகைய வாழ்க்கை முறை சமுதாய வளர்ச்சிக்குத் தேவைதானா?  என்று சிந்திப்பவர்கள் உண்டு.
‘இறையழைத்தல்’ என்ற நோக்கில் இந்தப் பணி எவ்வாறு ஆவியின் உந்துதலுக்கு ஏற்ப இறை வெளிச்சமாக இந்தச் சமுதாயத்தில் பட்டுச் சிதறிப் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்று நோக்க விரும்புகிறேன்.  இறையழைத்தல் குருத்துவத்திற்கு எப்படியயல்லாம் இளைஞர் களைத் தூண்டுகிறது என்பதைக் கால வளர்ச்சியில் கண்ணோக்கியது சுவையான சிந்தனை.
1. பங்குத் தந்தையர்கள் : திருச்சபை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் அரிய பாதிப்புக்களை ஏற்படுத்திய காலகட்டத்தில் அமைப்பு சார்ந்த குருத்துவம் தேவைப் பட்டது.  பங்கு என்ற அமைப்பின் கீழ் பல்வேறு வகைப்பட்ட மக்களை ஒன்றிணைக்கத் திறன் மிக்க  பணியாளர்களை இறைவன் அழைத்தார்.  ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கி, மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டு, எல்லா நிகழ்வுகளிலும் உள்ள இறை வெளிப்பாட்டைச் சுட்டிக்காட்டும் அற்புதமான பணியிது.  இன்றும் இது எத்தனையோ இளநெஞ்சங்களை ஈர்த்து இழுக்கிறது.  வளர்ந்துவிட்ட நாடான அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெருமளவான இளைஞர்களின் கவனம் இந்தப் பணிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.  மறைமாவட்டக் குருக்களாகி, பங்குத் தளங்களில் மக்களோடு இணைந்து பணியாற்றவே இந்த இளைஞர்கள் விரும்புகின்றனர்.
மக்கள் இன்று விரும்புவது தங்களோடு உடன் இருந்து, தங்களின் இன்ப  துன்பங்களில் பங்கு கொண்டு தங்களை இறைவனோடு தொடர்பு படுத்தும் குருத்துவத்தை ஒரு காலத்தில் பங்குத் தந்தையர்களின் பணியை வெறும் சடங்குக் குருத்துவமாக, படிப்பறிவு இல்லாத பாமரக் குருத்துவமாகப் பார்த்த நிலை இருந்தது.  கட்டடங்கள் கட்டுவதும், ஆலயங்களை நிர்வாகம் செய்வதும் அவர்களின் சேவைகளாகவே கருதப் பட்டன.  இன்று அந்த நிலையே மாறி விட்டது.  பங்கு நிர்வாகத்தைப் பார்ப்ப தற்குப் பொதுநிலையினர் மிக ஆர்வமாக முன்வரத் துவங்கிவிட்டனர்.  அவர்களது பணிகளை ஒருங்கிணைத்துச் செல்ல இறையாற்றல் மிக்க நபர்களே இன்று தேவை.  இறைவன் பங்குப் பணியாளர்களைச் சிறப்பாக அழைப்பது இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் உணரப்படுகின்றது.  மக்களோடு மக்களுக்காக வாமும் குருக்கள் உள்ளார்ந்த திருப்தியும், உன்னதமான ஆன்மீகமும், உண்மையான மகிழ்ச்சியும் மிக்கவராக இருந்து வருகின்றனர்.
2.ஆன்மீக வழிகாட்டுதல்
குருக்களின் அழைப்பு பல்வேறு கால கட்டங்களில் ‘பங்குத் தந்தை’ பணியிலிருந்து வேறுபட்டும் இருந்திருக்கின்றது.   மக்களின் ஆன்மீக வாழ்க்கையில் பங்கேற்று சிறப்பாக வழிநடத்தும் அருட்பணியாளர்களாக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.  துறவற குருக்களுக்கு இந்த அழைப்பு மிகப் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.
மக்கள் ஆன்மீக வழிகாட்டுதல் தேடி மடாலயங்களுக்கும் சென்றிருக்கின்றனர்.  மக்களின் ஆன்மீக தேவைகளுக்காக அவர்களுக்கு அருளுரைகள் வழங்குவது,  தனியாகச் சந்தித்து வாழ்க்கைச் சிக்கல் களில் வழிகாட்டுவது, ஆற்றுப்படுத்துவது, அருளடையாளங்களை அவர்களின் வாழ்க்கைச் சூழலில் வழங்குவது போன்ற பணிகளைக் குருக்கள் செய்து கொண்டே வருகின்றனர்.
எத்தனையோ பேர் இந்தப் பணிகளைச் செய்தாலும், குருக்களில் இந்தப் பணிகள் தனிப்பெரும் வலிமை பெறுவதாக மக்கள் காலங்காலமாக உணர்ந்து வருகின்றனர்.
எத்தனையோ துறவற சபைக் குருக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இறையாவியின் உந்துதலின் அடிப்படையில் இந்தப் பணிகளைத் தொடர்கின்றனர்.  இயேசு சபையாரின் இஞ்ஞாசியார் ஆன்மீகம், பிரான் சிஸ்கன் ஆன்மீகம், பெனடிக்ட் வழி ஆன்மீகம், தோமினிக்கன் ஆன்மீகம், சலேசியன் ஆன்மீகம் என்று வழிமுறைகள் நீண்டுகொண்டே செல்கின்றன.  இவை குருக்களுக்கு என்ற தனிமுத்திரையைப் பதிக்கும் பணிகளாக இருந்துவருவது கண்கூடு.  
3. மேய்ப்புப் பணியாளர்கள்
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழிகாட்டுதலில் ‘மேய்ப்புப் பணி’ என்ற வார்த்தை தனித்துவம் பெற்றது.  இயேசு நல்லாயனாக இருந்து மக்களை வழி நடத்தியது போன்று மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களோடு சேர்ந்து வழிநடக்கும் அருட்பணி அழைப்பை இந்தக் காலகட்டத்தில் குருக்கள் மிக ஆழமாக உணர்ந்தனர்.
‘பங்குத் தந்தை’ என்ற அமைப்புப் பணிகள் மற்றொரு வளர்ச்சிப் பரிணாம மாக இந்தப் பணிகள் உணரப்பட்டன.  ‘மக்களைத் தேடிச் சென்று’ என்ற வார்த்தை இதன் பண்பை உணர்த்துகிறது.  மக்களுக்கு ‘ஆன்மீக வழிகாட்டுதல்’ என்ற நிலையிலிருந்து ஒரு படி மேலே சென்று மக்களின் வாழ்க்கையில் ‘உடன் செல்லுதல்’ என்பது இதன் தனித்தன்மை யாக உணரப்படுகின்றது.  இளைஞர்கள் குழுக்களில் தோன்றி அவர்களோடு பயணித்த தொன்போஸ்கோ போன்றவர்கள் இந்த அழைப்பின் முன்னோடிகளாக அமைகின்றனர்.  சிறைச் சாலையில் உள்ளவர்கள், மருத்துவமனை களில் உள்ளவர்கள், இராணுவத்தில் உள்ளவர்கள், தொழிலாளர் போன்ற பல்வேறு அமைப்பினரிடையே ஊடுருவி ஒளி காட்டும் இந்தப் பணி ‘குருக்களின் சிறப்பு அழைப்பாக’ இன்றும் உணரப்படுகிறது.
4. விடுதலைப் பணிகள்
மேய்ப்புப் பணியின் வளர்ச்சியாக விடுதலைப் பணியை நாம் இனம் காணவும் மக்களின் வாழ்க்கையில் ஈடுபட்டு உழைத்த குருக்கள், அநீதியான அமைப்பு முறைகளைச் சமுதாயத்தில் கண்டனர்.  சாதாரண மக்கள் பல்வேறு அமைப்புமுறை வன்முறைகளுக்கு உள்ளாவது அவர்களின் கவனத்தை ஈர்த்தது.  பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக சில நிலைப்பாடுகளை எடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.  ஒடுக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து அவர்களின் வாழ்வுக்காக அரசியல் ரீதியாகப் போராடுவது இறை அழைப்பாக அவர்களின் வாழ்க்கையில் தோன்றியது.  இயேசுவைப் புரட்சியாளராக, பாதிக்கப்பட்ட மக்களுக்காக உயிரைத் தந்த உன்னதராகக் கண்ட நேரத்தில் இவர்களின் விடுதலைத் தாகம் வீறு கொண்டு எழுந்தது.  தென் அமெரிக்க நாடுகளில் துவங்கிய இந்த விடுதலை வேள்வி உலகமெங்கும் பரவியது.
விடுதலைக்காக இன்னுயிரையும் இழக்கும் நபர் குருவாகத்தான் இருக்க முடியும் என்ற உறுதிப்பாடு அவர்களின் ஆன்மீகத்தில் வெளிப்பட்டது.  இன்றும் இந்தப் பணிகளுக்காக அழைக்கப்படும் குருக்களின் எண்ணிக்கை அதிகம்.  இவர்களைப் புரட்சியாளர்கள் என்று திருச்சபை முத்திரை குத்த நினைத்த நேரங்களில்கூட, இந்த அழைப்புக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் திருச்சபையில் நின்று நிலைத்தன.  சாதிய அமைப்புக்கள், பன்னாட்டு பொருளாதார அமைப்புக்கள், மேல்தட்டு அரசியல் அமைப்புக்கள் போன்று மேலாதிக்கம் செய்யும் பல்வேறு அமைப்புக்களுக்கு இறைவாக்கினர் பாணியில் சவாலாக இருக்கும் இத்தகைய குருக்கள் திருச்சபைக்குக் கிடைத்திருப்பது இறைவனின் அருங் கொடையே.
5. அனுபூதி அனுபவத்தினர்
விடுதலைப் பணியில் கண்ட அனுபவங்கள் குருத்துவத்தில் புதிய வடிவம் தந்தன.  போராட்ட உணர்வுகள் சில சமயங்களில் வெறுப்புக்கள், வேதனைகள், பிளவுகள் என்று உருமாறிவிடுகின்றன.  உண்மையான போராட்ட உணர்வு இயேசு காட்டிய சிலுவை வழியில் அமைய வேண்டும் என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொள்ளத் துவங்கியது குருத்துவம்.
தீமைகளை எதிர்க்கும் நேரத்தில் தீயவர்களை மன்னிக்கவும் கற்றுக் கொடுத்தது இயேசுவின் வாழ்வு.  பாதிக்கப் பட்டோரை ஒருங்கிணைக்கும் நேரத்தில் முழுமையான சமுதாய விடுதலையையும் முன்நிறுத்திக் கற்றுக் கொடுத்தது இயேசுவின் நம்பிக்கை.  விடுதலை என்பது தவமிருந்து பெற வேண்டிய ‘இறுதிக்கால நிலை’ என்பது கால வெள்ளத்தில் புரிந்தது.  புதிய வானம், புதிய பூமி நோக்கி கிறிஸ்தவ நம்பிக்கைகள் வழிநடத்திய நேரத்தில் உருவான புதிய நிலைதான் அனுபூதி அனுபவ நிலைகள்.  அக விடுதலையையும் புற விடுதலையையும் இணைக்கும் இந்தச் செயல்பாட்டு ஆன்மீகம் குருத்துவத்திற்குப் புதிய முத்திரை தருகின்றது.
வெறுப்புக்களைக் கடந்த, தீர்க் கமான எதிர்காலத்தை நோக்கிய ஆற்றல் மிக்க மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளை முன்நிறுத்தும் வாழ்க்கைமுறை குருத்துவத்தை புதிய ஆற்றலோடு செயல்பட வைக்கிறது.  மக்களை இறைவனோடு இணைத்து வைத்து உயிர்த்த இயேசுவைப் போன்று மறுமையை இம்மையில் படிப்படியாகக் கொணரும் பக்குவமிக்க பணிமுறையில் இறை குருக்கள் அடியயடுத்து வைக்கிறார்கள்.  இவை அழைத்தலின் புதிய பரிணாமம்.    (தொடரும்)
அருள்பணி. வலன்டின் 

0 comments:

Post a Comment