இறையழைத்தலின் சிறப்பு

நான் கடவுளிடம் வலிமை கேட்டேன்; அதன் மூலம் நான் சாதிக்க முடியும் என்பதற்காக. ஆனால் நான் பலவீனமாகக் படைக்கப்பட்டேன்; பணிவோடு கீழ்ப்படியக் கற்றுக்கொள்வதற்காக. நான் ஆரோக்கியத்தைக் கேட்டேன்; மாபெரும் காரியங்களை ஆற்றுவதற்காக. ஆனால் எனக்குப் பலவீனம் அளிக்கப்பட்டது; சிறப்பான பணிகள் செய்ய வேண்டும் என்பதற்காக. நான் சக்தி கேட்டேன்; மக்கள் என்னைப் புகழ வேண்டும் என்பதற்காக. ஆனால் சக்தி இல்லாதவனாகப் படைக்கப்பட்டேன்; கடவுளின் தேவையை உணர வேண்டும் என்பதற்காக. எனக்கு எல்லாம் வேண்டுமென்று கேட்டேன்; வாழ்க்கையை அனுபவிப்பதற்காக. ஆனால் எனக்கு வாழ்க்கை கொடுக்கப்பட்டது; இயேசுவின் பணிவாழ்வு  யோர்தான் நதியில் திருமுழுக்கில் தொடங்கியது போல் நம் வாழ்வில் திருமுழுக்கின் வழியாக அழைப்பைப் பெறுகிறோம். காரணம், மனிதர்களிடையே மிகவும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நம்பிக்கையுள்ள மனிதர்கள்தான் இறைவனின் அழைப்பின் ஆசீர்வாதம் பெற முடியும். ஆம், “ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க, சிறைப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பினார்” (லூக் 4:18-19) என்று அழைப்பின் தன்மையும் சிறப்பும் உறுதி செய்யப்படுகின்றன.

செப வாழ்வில், நல்ல மதிப்பீடுகளில் தாங்கள் மட்டும் வளராது மற்ற மக்களையும் வளர வைத்தால்தான் அழைப்பின் மேன்மையைப் பெற முடியும். மேற்கூறிய நற்செய்தியின்படி வாழ்ந்தால் ஏழை எளிய மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடியும். நாம் செய்யும் பல பணிகளில் அர்ப்பண உணர்வும் அன்புச் சேவையும் இணைந்து விடுதலை உணர்வுகளைக் கொடுத்தால் அழைப்பின் சிறப்பைப் பெற முடியும்.

நாம் சாதி, மதம் கடந்து மனிதர்கள் ஒற்றுமையுடன், அமைதியுடன் வாழ அனைத்து சமுதாய இணைப்பு, பல்சமயக் கூட்டமைப்பு மற்றும் மன்றங்கள் மூலம் மக்கள் மனித நேயத்துடன் வாழப் பயிற்சி அளித்து வரும்போது, நம் அழைப்பு சிறப்புத்தன்மை அடையும். எங்கள் மகிழ்ச்சிக்கும் எங்கள் உயர்வுக்கும் நல்வாழ்விற்கும் காரணமாக இருப்பவர்கள் துறவிகள், எங்கள் இல்லத்தின் ஒளியேற்றும் விளக்கு என்றும் பிறர் கூறும்போது நாம் பெற்ற அழைப்பு உயர்வு அடைகிறது. நாம் பார்வையாளராக இருக்கக்கூடாது. மக்கள் சமூகத்தின் பிரச்சனைகளில் பங்கேற்பாளராக இருக்க வேண்டும். அப்போது நாமே நற்செய்தி. நாம்தான் பிறருக்காக உடைக்கப்படும் அப்பம். நாம் நல்ல மதிப்பீடுகளில் வாழ்ந்து, அவற்றைப் பிறரோடு பகிர வேண்டும். அப்போதுதான் அழைப்பின் மேன்மை சிறக்கும்.

மேலும், அல்லும் பகலும் அயராது உழைத்தாலும், வாழ்வின் அடிப்படைத் தேவைகள் இன்றித் தாழ்வுறும் சமுதாயம் ஏற்றம் பெற ஆர்வமும் ஆக்கமும் கொண்டு உழைத்து உதவுவதே அழைப்பின் சிறப்பாகும். மூலையில் முடங்கிக் கிடக்கின்ற எண்ணற்ற மக்கள் இனத்தைத் தட்டி எழுப்பி, எழுச்சி பெற்று, ஏற்றங்கள் பல பெற்று நாளும் மகிழ்வுடன் வாழச் செய்ய உதவுவதே அழைப்பின் சிறப்பாகும்.

அனைவருக்கும் அன்பு காட்டும் ஆண்டவனின் அன்புப் பிள்ளைகளாய்ப் பிறந்தும், சாதி, மதம், இனம், மொழி வேற்றுமையால் வாடும் சகோதர, சகோதரிகள் நல்வாழ்வின் உயர்வு காண உதவுவதே அழைப்பின் சிறப்பாகும். நாம் வாழும் பகுதியில் உள்ள இளையோரை இனம்கண்டு, இறையழைத்தலை ஊக்குவிப்போம்.

நந்தவன நாதம் வாசகர் பெருமக்களுக்கு எனது உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்! 

இறையழைத்தல் ஏன்? எதற்கு?

இறையழைத்தல் என்கிற தலைப்பில் என்ன எழுதுவது எனச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எழுதுவதற்காக அமர்ந்த நாள் பெரிய வியாழன். அன்றுதான் குருத்துவத்தை ஏற்படுத்திய நாள் என்றும் சொன்னார்கள். பொருத்தமாகத்தான் இருந்தது.

ஏன் இறையழைத்தல்?இறை அழைத்தல் எதற்காக என்கிற கேள்விக்குப் பெரிய வியாழனே பதிலாய் அமைந்தது. பெரிய வியாழன் அன்று பாதம் கழுவுதல், நற்கருணையை ஏற்படுத் துதல், குருத்துவத்தை உருவாக்குதல் என்கிற மூன்று முக்கிய சடங் குகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அவையே இறை அழைத் தலுக்கான இலக்காக எனக்குப்பட்டன.

பாதம் கழுவுதல்அடிமைகள் தங்கள் எஜமானருடைய கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்துவதை வழக்கமாகக் கொண்ட யூத சமூகத்தில் பிறந்த இறைமகன் இயேசு, தன்னை ஓர் அடிமை போன்று ஆக்கி, தம்மால் படைக்கப்பட்ட மனிதர்களை எஜமானர்களாக உயர்த்தி அவர்தம் பாதங்களைக் கழுவுகின்றார். தான் இறைமகனாக இருந்தாலும், தம் நிலை மறுத்து, தாழ்ந்து அடிமையாகிறார். தம் மக்களின் பாதங்களைக் கழுவித் துடைத்து முத்தமிடுகிறார். தாம் அடிமையாகி தாழ்ந்து போவதன் வழியாகவே தம்மால் படைத்து நேசிக்கப்பட்ட மனிதர்கள் பாவத்திலிருந்து விடுபட்டு உயர முடியும் என முடிவெடுக்கிறார். அவர்களின் பாவங்கள் கழுவப்பட வேண்டுமாயின், தாம் அவர்களின் பாதங்களைக் கழுவி முத்தமிட வேண்டும் என விரும்புகிறார்.

இந்த மனநிலையே இறைவனின் அழைப்பைப் பெற முதலில் தேவைப்படுகிறது. இறை அழைத்தல் முகாமிலேயே ஒருவரைத் தேவ அழைத்தல் பெற்றவராய்த் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும் முதல் நிலை யிலேயே அவருக்கு இத்தகைய தாழ்நிலை மனது - தன்னையே இழக்கும் மனநிலை இருக்கிறதா என்பதைத்தான் கண்டறிய வேண்டும்.

அவர் +2 முடித் தவரா, அறிவாளியா, உடல் பலசாலியா, திறமையானவரா போன்ற பிற தகுதிகளைத் தேடிக் கொண்டிருப் பதைக் காட்டிலும், ‘தன்னையே மறுப்பது’ என்கிற  மனநிலை பெற்றவர்களைத் தேடுவதே இறை அழைத்தலுக்கு அடிப்படைத் தகுதியாகவும் நீதியாகவும் உள்ளது.

சில சூழ்நிலைகளை இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ (கற்பனையாகவோ) கொடுத்து, “இந்தச் சூழலில் நீ இருந்தால் என்ன செய்வாய்” எனச் சிந்திக்கச் செய்து அவரது சிந்தனை வெளிப்படுவதைப் பொறுத்து அவர் எப்படிப்பட்ட மனநிலை உடையவராய் இருக்கிறார் என்பதை எளிதில் கண்டறியலாம். அதன் மூலம் இறையழைத்தலுக்கு அடிப்படையான தன்னை இழத்தல் - ம(ஒ)றுத்தல் - தாழ்த்துதல் என்கிற மனநிலை உடைய வர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த அடிப்படைத் தகுதியைக் கண்டுகொள்ளாமல், வேறு எதையயதையோ தகுதிகளாகக் கருதிச் செயல்பட்டுத் தேர்வு செய்வதால்தான் இன்று பல குப்பைகள் குருத்துவத்திற்குள்ளும் துறவு வாழ்விலும் குவிந்து விட்டன. ‘தேவ அழைத்தல்’ என்கிற சொல்லாடலே அர்த்தமற்றுப் போய் விடுமோ என்கிற அளவுக்கு ஆகிவிட்டது.

நற்கருணையை ஏற்படுத்துதல்பெரிய வியாழனின் இரண்டாவது சடங்கு நற்கருணையை ஏற்படுத்துவது.
நற்கருணையை நல்ல கருணை என்று பிரிக்க முடிகிறது. கருணை என்பதே நன்மையான ஒரு செயல்தான். அதுவே நல்ல கருணையாக மீண்டும் ஒரு நன்மைத்தனத்தைத் தனக்குள் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இரண்டிலும் சிறு வித்தியாசம் உண்டு.

கருணை என்பது நம்மிடம் உள்ளதில் சிலவற்றைப் பிறர் மேல் இரக்கம் கொண்டு கொடுப்பது அல்லது அளிப்பது என்பதைக் குறிக்கும். ஆனால் நல்ல கருணை (நற்கருணை) என்பது நம்மையே (சிலவற்றை அல்ல மாறாக முழுவதும்) பிறருக்குக் கொடுப்பது. அந்த வகையில் இறைமகன் இயேசு மனிதத்தன்மை பூண்டு தன்னை முழுவதும் மனுக்குலத்திற்காகக் கையளித்தார். பகிர்ந்து கொடுத்தார். எனவேதான் அதன் அடையாளமாக அவர் ஏற்படுத்தியதை நற்கருணை என அழகாய் அழைக்கின்றோம்.

ஆக, தேவ அழைத்தல் பெற்றவர்களின் வேலை என்னவென்றால், தன்னையே முழுவதுமாய்க் கையளிப்பது - தன்னையே பகிர்ந்து கொடுப்பது என்பதுதான் என இந்த நற்கருணைச் சடங்கு நமக்கு உணர்த்துகிறது.

தனக்கென்று வங்கிக் கணக்கு, இடம், வீடு, கார், கம்யூட்டர், லேப்டாப், இன்னும் பிற எனப் பல பொருள்களைச் சேர்த்து வைப்பது தேவ அழைத்தலின் வேலை அல்ல. பொருள்களின் மீது மோகமும் நுகர்வு வெறியும் உடையவர்கள் தேவ அழைத்தலைப் பெற்றவர்களாக ஒருக்காலும் இருக்க முடியாது.  பொருள்களின் மீது வெறியும், பண மோகமும் கொண்ட தனிமனிதர்களைத் தேவ அழைத்தலுக்குரியவர்கள் அல்ல எனும்போது, புதிது புதிதாய் இடங்களை வாங்குவது, கட்டிடங்கள் கல்லூரிகள் கட்டி சொத்து சேர்ப்பது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு, ஏன் பிறருடன், பிற சபைகளுடன் போட்டி போட்டுக்கொண்டு செயல்படும் துறவற இல்லங்களும், துறவற சபைகளும், மறைமாவட்டங்களும் ‘தேவ அழைத்தல்’ என்கிற பதத்தினைப் பயன்படுத்தவே அருகதை அற்றவர்கள்.

நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும், சொத்தும் நமக்காக, நமது வசதிக்காக, நமது சபைக்காக / சபையின் வசதிக்காக என்பதைக் காட்டிலும், நல்ல கருணையின் (நற்கருணையின்) அடிப்படையில் பிறருக்காக, பிறர்தம் வாழ்வுக்காக என்பதை மையப்படுத்தி அமைந்தால் மட்டுமே அது தேவ அழைத்தல் பணி. அந்தப் பிறர் என்பவர்கூட சமூகத்தில் கடைநிலை மக்களுக்காக, ஏழைகளுக்காக, கைம்பெண்களுக்காக என்பதாகவே இருக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் சில சொத்தை வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நாங்கள் உங்களிடமிருந்து வந்தவர்கள்தானே! உங்களை மாதிரி ஆசா பாசம், தேவைகள் எங்களுக்கும் இருக்கும் தானே! எங்களை மட்டும் ஏன் ஏஞ்சல் மாதிரி எதிர்பார்க்கிறீர்கள்? நாங்களும் மனிதர்கள் தானே! - என இந்த வாதங்கள் வைக்கப்படுகின்றன.

தேவ அழைத்தல் பெற்று சிறப்புப் பயிற்சி முடித்து ‘சிறப்பு நிலை’யை அனுபவித்து வருபவர்கள் ‘மீண்டும் உங்களை மாதிரிதானே நாங்களும்’ என்று சொன்னால், அந்தச் சிறப்பு நிலை மீது வெறுப்பு நிலைதான் ஏற்படும். அப்படி யயன்றால் தாங்கள் பெற்றது தேவ அழைத்தலா அல்லது பாவ அழைத்தலா எனக் கேள்விகள் எழும்.

அங்ஙனமே ஓரிடத்தில் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் வழியாக நல்லா சம்பாதிப்போம்; இன்னொரு கிராமத்தில் ஏழைகளுக்குப் பணி செய்து அதனை சமன் செய்துகொள்வோம் என்கிற புதிய சித்தாந்தம் தற்போது தேவ அழைப்பு பெற்றவர்களிடம் பரவி வருகிறது.

இது முதலாளித்துவ சிந்தனை. இன்றைய கார்ப்பரேட் கம்பெனிகள்கூட எப்படியயப்படியோ இலாபம் சம்பாதித்து அதில் ஒரு பகுதியைக் ‘கிராமங்களைத் தத்தெடுத்தல்’ என்கிற வழியில் செலவு செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஒரு நாளும் தங்களை இறை அழைத்தல் பெற்ற கம்பெனிகள் என்று முழங்குவதில்லை. ஆக, பெரிய வியாழன் நமக்கு வழி காட்டுவது போல, தன்னை இழக்கும் மனநிலையும், தன்னைக் கையளிப்பது - பகிர்ந்தளிப்பது என்கிற செயல்பாடும் மேற்கொண்டவர்களே குருத்துவம் பெறத் தகுதியுடையவர்கள், வார்த்தைப்பாடு பெற்றவர்கள்.  இவற்றைப் புரிந்துணர்ந்து சிறிதளவாவது ஒருவரை அடையாளம் காண முயல்வதே தேவ அழைத்தல் முகாம்களின் வேலை.

அடையாளம் கண்டவர்களை அழைத்து அதில் ஆழப்படுத்தி  வேரூன்றச் செய்வதே பயிற்சி இல்லங்களின் வேலை.  அதில் தொடர்ந்து செல்பவர்களே தேவ அழைத்தல் பெற்றவர்கள்... சிறப்பு நிலைக்கு உரியவர்கள்...

இல்லையயனில் நாம் தேவ அழைத்தல் என்கிற பெயரில் நமது நிறுவனங்களைக் கட்டிக் காக்க, வளர்க்க சில முழுநேரப் பணியாளர்களை மேனேஜர்களாக, நிர்வாகிகளாக மட்டுமே பெற்றிட முடியும். அதற்குத் தேவ அழைத்தல் என்கிற பதம் வேண்டாம்.

ஆசிரியர் பக்கம்

உயிர்ப்புப் பெருவிழா கொண்டாடி வாரங்கள் கடந்தாலும் தொடர்ந்து பாஸ்கா கொண்டாட்ட காலத்தில் இருக்கும் உங்களுக்கு கிறிஸ்துவின் வெற்றி விழா வாழ்த்துக்கள்!

‘வெற்றி’ என்பதைப் பலவற்றில் எதிர்நோக்கியுள்ள நாட்கள் இவை :

2011-இல் சட்ட மன்றத் தேர்தல் வெற்றி (ஒருவேளை இச்செய்தியை வாசிக்குமுன் தேர்தல் முடிவுகள் அறிந் திருப்பீர்கள்) +2 மற்றும் 10-ஆம் நிலைப் பிள்ளைகள் எதிர்நோக்கியிருக்கும் தேர்வுகளின் வெற்றி கடந்த ஆண்டு முழுவதுமாக அல்லது சில மாதங்களாக கடினப்பட்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று இறையழைத்தலுக்காக உழைத்து இறுதியாக இறை யழைத்தல் முகாம்கள் வெற்றி யோடு நடத்தியும் தொடர் செயல்கள் வெற்றியும் அடைய விரும்பும் நிலை  அனைத்தும் இறைவன் விரும்பும் வெற்றியாய் அமைந்திட வாழ்த்துக்கள்!

பல்வேறு இறையழைத்தல் முகாம்களுக்குச் சென்று வந்தேன். அனைவருடைய கடின உழைப்பையும் பார்க்க முடிந்தது. சவால்கள் அதிகரித்துள்ள பணியில் இறை உறுதிப்பாடு நிறைந்திருந்த நிலை காண முடிந்தது. எத்தனை பேர் வருவோர்களோ என்ற அங்கலாய்ப்போடே பல முகாம்கள் தொடங்கப்பட்டாலும், தொடர்ந்து ஏற்பட்ட மனநிறைவில் எத்தனை பேர் என்கிற எண்ணிக்கையை விட, உறுதிப்பட்ட மனநிலையோடு உள்ள வர்களை (குறைந்த எண்ணிக்கையிலும்) இனம் காணும் பணியே தலைசிறந்து இருப்பதைக் காண முடிந்தது. இருப்பினும் அந்த அங்கலாய்ப்பு, புது உள்ளங்களைத் தேர்ந்தெடுத்து முடியும் வரை தொடர்ந்தே இருக்கும். எல்லாம் நல்லதாய் நடக்கும் என்ற உறுதிப்பாட்டோடு வாழ்த்துச் சொல்வோம்.

சில நினைவுறுத்தல்கள் : சில சபைகள் / மறைமாவட்டங்களில் நல்ல எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் முகாம்களில் கலந்து கொண்டதாகச் செய்தி. ஒருவேளை உங்களது தேர்ந்தெடுப்புக்குப் பின் நீங்களே இன்னும் சிலரை ஆர்வ முள்ள நல்லவர்களாகக் கண்டால் பிற சகோதர சகோதரிகளிடம் கூறி வழிநடத்தி விடலாம். ஏற்கெனவே நமது கருத்தரங்குகளில் பேசியவற்றை நினைவுபடுத்திக்கொள்வோம். நமது பணிகளில் ஒருவருக்கொருவர் உதவியும் ஊக்கப்படுத்தலும் தேவை. யாரும் மனந்தளர்ந்து போகாதபடி உறுதிப்படட்டும். கடவுள் தாம் விரும்பியதை நம் மூலம் செயல்படுத்துவார். அவரின் கருவிகளாவோம்.

சில நாட்களுக்கு முன், வயதில் மூத்த சகோதரி அவர்கள் என் பணி பற்றி விசாரித்த பின், “நிறைய பேரைப் பிடிச்சுப் போடுங்க சாமி, கூட்டம் நல்லா கூடட்டும். நிறைய சாமிமார்கள், சிஸ்டர்ஸ் தேவை” என்றார்கள். வயதில் முதிர்ந்தவர்களிடம் நிறைய விளக்கங்களைச் சொல்ல முடியாமல் சிரித்துக்கொண்டேன்.
எப்படிப்பட்டவர்களைப் ‘பிடித்துப் போடப்போகிறோம்?’ ‘கூட்டம் காட்டுவது நமது குறிக்கோள் இல்லை’ என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அதே வேளையில் எல்லா ஆன்மீகமும், பண்புகளும், திறமைகளும் நிறைந்தே உள்ள நபர்கள்தான் கிடைப்பார்கள்... அவர்களையே தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்றல்ல. பண்புகளும் திறமைகளும் ஆன்மீகமும் வளர்ப்பதற்காகவே பயிற்சிக் காலம் உண்டு. என்றாலும் இளைய வயதில் உள்ளோரிடம் ஊன்றப்பட வேண்டிய சில அடிப்படைப் பண்புகள் அமைந்தே இருக்க வேண்டும் என விழைகிறோம்.
தேர்ந்தெடுக்கும்போது தேவையான சில மனநிலைகள் :  
  • ஆன்மீக ஆர்வம் உள்ள மனநிலை. கத்தோலிக்கக் குடும்பங்களில் வளர்ந்து, சில ஆன்மீகப் பயிற்சியும் அறிவும் பெற்றிருத்தல் நலம். கடவுளைத் தேடும் ஆர்வம் அடிப்படையில் இருத்தல் தேவையே.
  • மனித பண்புகள் (Human Qualities) உள்ள மனநிலை. இளையோருக் கென்று தனிப்பட்ட சில பண்புகள் இருந்தாலும், நல்ல மனித நிலையில் பிறரை மதித்து உறவோடு வாழும் மனப்பக்குவம், நல்ல பழக்க வழக்கங்களோடு உள்ள உறுதி நிலை முக்கியமானதே.
  • இறைப்பணிக்கான ஆர்வம் கொண்ட மனநிலை. இறையழைத்தலைக் கட்டாயத்தினால் அல்ல, மாறாக பிறருடைய வழிநடத்துதலில் தாமே விரும்பி ஏற்று வருகிற நபராக இருத்தல் மிகத் தேவை.  ‘ஏதோ படிப்போம், பிறகு பார்ப்போம்’ என்ற மனநிலையில் உள்ளோரைவிட ‘போகிறேன்... கடவுள் விரும்புவது போல் ஆகட்டும்’ என்னும் அடிப்படை உறுதிப்பாடு தேவை.
  • சமுக ஈடுபாடுள்ள மனநிலை தேவை. எல்லோரையும் ஏற்பதும், கடவுளின் சமூகமாக உலகை மாற்றுவதும், அதற்காக உழைப்பதும் என் பணி என்ற உயர் சிந்தனை தேவை. இறையழைத்தலால் நாம் பத்திர மான, சவாலற்ற உலகத்திற்குள் போகிறேன் என்ற சூழலும் மன நிலையும் பொருந்தாதவையே.
தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் மேற்கூறிய சில அடிப்படை மனநிலைகள் தாங்கியவர்களாக இருத்தலே நலம். இளைய மனந்தினருக்கென்று குறிக்கோள் உண்டு. அது உயரியதாய், சிறப்பானதாய் அமைவதே நல்லது. இவ்வடிப்படைகள் இருந்தால் மட்டுமே பயிற்சியும், பயிற்சி பெற்றுக்கொள்ளும் மனநிலையும் வளர்ச்சி பெறும்.

நலமான புது உள்ளங்களை இனம் காணும் பணியில் நலம்பெற  மீண்டும் வாழ்த்துக்கள்!
- சே. சகாய ஜாண்

திருநங்கை

கல்லூரி தொடங்கிய சில நாட்களிலேயே முதலாமாண்டு வகுப்பறைகள் சிலவற்றில் கலகம் எனக் கேள்விப்பட்டு, கல்லூரி முதல்வர் பூர்ணிமா கலங்கிப் போனார். அவர் பொறுப்பேற்ற இத்தனை ஆண்டுகளில் இப்படி மாணவர்கள் எதற்கும் வெகுண்டெழுந்தது இல்லை. கலாட்டா செய்ததும் இல்லை. எந்தப் பிரச்சனை என்றாலும் பேச்சுவார்த்தை மூலமே, அகிம்சை முறையிலேயே தீர்க்கப்படும். கல்லூரியில் அதற்கென்றே ஒரு குழுவும் இருந்தது. யாருடைய பிரச்சனை, எதுவாக இருந்தாலும் அவர்களிடம் முறையிட்டால் போதும். விசாரணை நடந்து சில நாட்களிலேயே நல்ல முடிவு, எல்லோருக்கும் சாதகமான முடிவு வழங்கப்பட்டு சமாதானம் நிலவும்.
நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே அப்படி ஓர் அருமையான புரிந்துணர்வு இருந்து வந்தது. ஊருக்கு மட்டுமல்ல, கல்லூரி வரலாற்றி லேயே அது ஒரு வித்தியானச மான கல்லூரியாக இருந்தது. ஒரு பெண் நிர்வகிப்பதால் இவ்வளவு புதுமையான முறையா என்று புரியவில்லை. பல வார்த்தைகள் சொல்ல முடியாத விளக்கங்களை, ஒரு சின்ன முன்மாதிரிகையான செயல் எப்படி சாதித்துக் காட்டுமோ, அப்படி ஒரு வித்தியாசத்தை அக்கல்லூரியில் காண முடியும்.
நவநாகரீக உடைகள் இல்லாமல், முதன்மை ஆசிரியர் முதல் கடைநிலை ஊழியர் வரை நமது பாரம்பரியம் மாறாத ஆடை அலங்காரத்தில் இருப்பார்கள். மாணவிகளும் தங்கள் ஆசிரியைகளையே முன்மாதிரிகையாகக் கொண்டு அழகழகான பாவாடை தாவணிகளில், மடிப்பு மாறா புடவைகளில், அழுந்த வாரிப் பின்னிய கூந்தலில், மலர்ச்சரங்களில், வளை குலுங்க, தமிழகத்தின் பாரம்பரியம் குறையாமல் வந்து சென்றார்கள். மாணவர்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. அவர்களே சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நாகரிகமாக ஆடை அணிந்து வருவார்கள். படிப்பிலோ, வேறு எந்தத் துறையிலுமோ அவர்கள் சோடை போகவில்லை. அந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோரும் போட்டி போடும் அளவுக்குக் கல்லூரி முன்னிலையில் நின்றது; முன்மாதிரி கையாக இருந்தது.
சக ஆசிரியர் குழுவுடன் முதலாமாண்டு வகுப்புகள் இருக்கும் பகுதிக்கு விரைந்தார் முதல்வர். அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்கள் இரத்தத்தையே உறைய வைப்பதைப் போலிருந்தது. கண்கள் சட்டெனக் கலங்கின. அரசின் ஆணைக்கு உட்பட்டு இவ்வாண்டு அவர்கள் கல்லூரியின் நான்கைந்து மூன்றாம் பாலின மாணவர்களைச் சேர்த்திருந்தார்கள். அவர்களை ஓரங்கட்டி, அவமானப்படுத்தி, தங்களுடன் சேர்த்துப் படிக்க வைக்கக்கூடாது என்று கூறித்தான் மாணவர்கள் கலவரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களோ கண் கலங்கி அவமானத்தால் குறுகிப்போய் நின்றுகொண்டிருந்தார்கள். தங்கள் முதல்வர் நிச்சயம் தங்களுக்குத் தான் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களும், தங்களுக்கு ஆதரவு காட்ட மாட்டார்கள் என்ற ஏக்கத்தில் இவர்களும் இருந்தார்கள்.
சில நிமிடங்கள் ஆழச் சிந்தித்த கல்லூரி முதல்வர், மாணவர்களிடமே காகிதம், பேனா வாங்கி எதையோ எழுதினார்கள். பின் அங்குக் கூடியிருந்த மாணவச் செல்வங்களை நோக்கிப் பேச ஆரம்பித்தார். “மாணவ, மாணவிகளே, என்னுடைய பிள்ளைகளே, நீங்கள் இவ்வளவு கல்நெஞ்சக்காரர்களாக இருப்பீர்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் உங்களுடனான வாழ்வு அவர்களுக்கு இரண்டு அல்லது மூன்றாண்டுகள்தான். அவர்கள் உங்கள் நண்பர்களாக ஏற்கும் தைரியம் ஏன் உங்களுக்கு இல்லாமல் போனது? நீங்கள் எல்லோரும் உடல் அளவில் ஆரோக்கிய மானவர்கள். அவ்வளவுதானே? அவர்களால் உங்களுக்கு என்ன தீங்கு வரும் என நினைக்கிறீர்கள்? உங்களின் மன ஊனத்தைப் பார்க்கிலும் அவர்களின் ஊனம் பெரிதல்ல. உங்களைப் போன்ற மன ஊனர்களின் முதல்வராய் நான் இருப்பதைவிட, இவர்களைப் போன்றவர்களுக்குத் தொண்டாற்றும் ஒரு சேவகியாக இருக்கவே நான் விருப்பப்படுகிறேன். அவர்கள் வலி எனக்குப் புரியும். இதோ என் ராஜினாமா கடிதம். விடைபெறுகிறேன். விடைகொடுங்கள்.”
அந்த இளம் திருநங்கைகளை அழைத்துக்கொண்டு வீரமாய் வெளியேறும் அவர்களின் மனிதாபிமானம் எல்லோரையும் மனம் மாற வைத்தது. ஒரே நிமிடத்தில் ஓடிச் சென்றவர்கள் அவர்களை முற்றுகையிட்டு வெளியே விட மறுத்தனர். அன்பு எனும் ஈர அலைகளால்தான் அகிலம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது நன்கு விளங்கிற்று. முதல்வர் மிடுக்கோடு தன் அறைக்குச் செல்ல, தங்கள் நண்பர்களான அவர்களுடன் மாணவர்கள் வகுப்பிற்குச் சென்றனர். நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே!!!
- சாந்தி ராபர்ட்ஸ், உதகை