மறைக்கல்வி ஆண்டுக்கான மன்றாட்டு


வாழ்வும் வழியுமான இறைவா!
உம் மகன் இயேசு கிறிஸ்து வழியாக
நீர் வெளிப்படுத்திய மறையுண்மைகளை
ஆழமாகச் சிந்தித்து எங்களது நம்பிக்கை வாழ்வை
வளப்படுத்த நீர் அழைக்கின்றீர்.
இந்த அழைப்பை நன்கு உணர்ந்து
சிறப்பாகச் செயல்பட இந்த மறைக்கல்வி ஆண்டைத்
தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
“எல்லாருக்கும் மறைக்கல்வி” என்னும் இலக்கை
அடைய எங்களுக்கு உமது அருளைத் தாரும்.
மறைக்கல்வித் தளங்களாக விளங்கும் எங்கள் குடும்பங்கள்,
அன்பியங்கள், பங்கு, மறைமாவட்டம், நிறுவனங்களை ஆசீர்வதியும்.
மறைக்கல்விப் பணியை அர்ப்பணத்துடன் ஆற்றும்
மறைக்கல்வி ஆசிரியர்களையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளும்
அனைத்து நிலையினரையும் நீர் நிறைவாக ஆசீர்வதிப்பீராக.
காலத்தின் அறிகுறிகளை நாங்கள் நன்கு கண்டறிந்து
உமது வார்த்தையின் ஒளியில் செயல்பட மறைக்கல்வி எமக்கு உதவுவதாக.
திருச்சபையின் போதனைகளை நாங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவும்
பிறருக்கு எடுத்துரைப்பதோடு அவற்றைக் கடைப்பிடித்து
வாழவும் எமக்கு மன உறுதி தந்தருளும்.
உம் திருமகன் இயேசுவின் உளப்பாங்குடன்
வாழ்வின் எல்லாச் சூழல்களையும் எதிர்கொள்ள
உம் ஆவியாரின் ஞானத்தையும் அருள் ஆற்றலையும்
எங்களுக்கு அருளும்.
இவ்வாறு இந்த மறைக்கல்வி ஆண்டில் தமிழகத் திருச்சபை
மறுமலர்ச்சி காண எங்கள் ஆண்டவரும் சிறந்த மறைக்கல்வியாளருமான
இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.

0 comments:

Post a Comment