இது பூக்களின் காலம் . . . பேர் சொல்லும் பிள்ளை


திண்ணையில் வசித்த
அப்பா வீட்டுக்குள் வந்தார்
புகைப்படமாய் 
                            - பா. சேது மாதவன்

பின்பற்றக்கூடிய
ஒன்றும்
பின்பற்றக்கூடா
ஒன்றும்
வரலாற்றில்
ஒன்றாக இருக்கிறது.
வைப்பாட்டிக்கு
அரண்மனை கட்டித் தந்தான்
மைசூர் மகராஜா!
காதல் மனைவிக்கு
நினைவுச்
சின்னம் எழுப்பினான்
ஷாஜஹான்!
ஹரின் திலோத்தியின்
கண்ணீர்தானே
யமுனையானது!
அன்பு நாயகி
முத்தம்மாளுக்கு
சத்திரம் சாவடி
கட்டித் தந்தான்
மன்னன் சரபோஜி!
வாரிசு வாழ்க்கையில்
வந்தவர்கள்
இத்தனை கட்டியவர்கள்
பெற்றோருக்கு
என்ன கட்டினார்கள்?
யிபிள்ளை வரம் கேட்டு
அரச மரம் சுற்றினாள்
அங்கம் புரண்டாள்!
பத்தியமிருந்தாள்
பட்டினி கிடந்தாள்!
முதலில் பிள்ளை வரம்
கேட்டவர்கள் - பின்
ஆண் - பெண்ணென்று
பால் பிரித்தார்கள்
கள்ளிப்பால் கொடுத்தார்கள்!
பேர் சொல்ல
பிள்ளையயன்றார்கள்
பின்
கொள்ளிவைக்க
பிள்ளையயன்றார்கள்!
பதினெட்டு பிள்ளை
பெற்றவர்
பரதேசி ஆனதும் உண்டு!
பட்டணத்தில் வசித்தவர்
பட்டினி கிடந்து
செத்ததும் உண்டு!
இப்படி தவமிருந்து
பெற்றவர்கள்
தனிமைப்படுத்தப்பட்டார்கள்!
அனாதை இல்லத்திலும்
முதியோர் இல்லத்திலும்
இருக்கும்போது
பசி தீர்க்காத பிள்ளை
இறந்தபின் பால் ஊற்றுவதில்
என்ன பயன்?
சிந்திக்கலாமே!

ஜே. தமிழ்ச்செல்வன்

சுதந்திர காற்று வீசுகிறதா?


“என்ன வாழ்க்கையிது?
ஒன்றும் புரியாமல்
ஒரே மாதிரியாக
என்றாவது
ஒரு நாள்
ஏதாவது புரியும்” 
இப்படிப்பட்ட வாழ்க்கைதான் நம்முடைய வாழ்க்கை. ஏன், நாம் வாழும் முறை என்றே சொல்ல வார்த்தைகள் படையயடுக்கின்றன. அதைச் சரியான தொரு பாதையில், பயணிக்க வைப்பது தான் ‘சுதந்திரம்’.

சுதந்திரம் என்பது வெறுமனே நமக்கு மட்டுமே பயன்தரக்கூடிய கைப் பொருளாக இருக்கக்கூடாது. மாறாக, நமக்கும் நம்மைச் சுற்றி வாழும் அனைவருக்குமே பயனை விளைவிக்கக் கூடிய கைப்பொருளாக அமைய வேண்டும். அப்போதுதான் நாம் முழுமையான பலனை அடைய முடியும். அவ்வாறாக முயற்சித்துப் பயனைத் துய்க்கும்போதுதான் நாம் மேற்கொண்டிருக்கும் இச்சுதந்திரப் பயணம், பல மலைகள் ஏறி, ஆறுகள் கடந்து, சிகரங்கள் தாண்டி, வீர நடைபோடும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

நீங்கள் உங்கள் பயணத்தைத் தேர்ந்தெடுங்கள்; அதற்கு நீங்களே வழிகாட்டியாய் இருங்கள். அத்தகைய வழிகாட்டி மட்டுமே நல்லதொரு பாதையைக் காட்ட முடியும். பயணத்தை எளிதாய்த் துவக்கி, விரைவாய் முடிக்க முடியும். ஆகவே, நீங்கள் பயணிக்கக் கூடிய இப்பயணம் அர்த்தமுள்ளதா, நியாயமானதா, உண்மையானதா, மற்றவருக்கு ஏற்ற ஒன்றா என்ற கேள்விகளை உங்கள் மனத்தில் பதித்து, என் சுதந்திரப் பயணத்தைத் தொடர்கிறேன்; முடிந்தால் என்னைப் பின்தொடருங்கள்...

உன் சுதந்திரம் எது?
கடந்த மாதம் விடுமுறை நாளில் ஒரு நாள் நான் என் நண்பர்களுடன் பூண்டி மாதா பசிலிக்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கே பூசை பார்த்துவிட்டு, அங்குள்ள பூங்காவில் சற்று நேரம் விளையாடிவிட்டு, மீண்டும் நாங்கள் அனைவரும் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது நண்பர்கள் அனைவரும் கல்லணைக்குப் போகலாம் என்று சொன்னவுடன் நாங்கள் வரும் வழியில் கல்லணைக்குச் சென்றோம். அங்கு இறங்கியவுடன், நான் ஒரு காதல் ஜோடியைக் கண்டேன்.  அவர்கள் இருந்த நிலை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது வரும்போது என் நண்பர் ஒருவர், “ஏன் பிரதர், இவங்க இப்படி இருக்காங்க? இவங்களுக்கு அசிங்கமா இல்லையா? இவங்க ஏன் இப்படி செய்றாங்க?” என்று கேட்டார். ஆம், அந்த நண்பரின் மனத்தில் எழுந்த கேள்விகள் உங்கள் மனத்திலும் எழ வாய்ப்புகள் உண்டு. எல்லா வற்றையும் மீறி அவர்களிடம், “ஏன் இப்படி நடக்கிறீர்கள்?” என்று கேட்டால், “இது என்னுடைய சுதந்திரம்; உங்களுக்கு என்ன பாதிப்பு?” என்று நம்மை வாயடைக்கச் செய்வார்கள்.

சுதந்திரம் என்னவோ எல்லாருக்கும் ஒன்றுதான். ஆனால், அது மற்றவரையும் நம்மையும் பாதிக்காமல் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பயணத்தைத் தான் நாம் தொடங்க, தொடர வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோள் மற்றும் இலட்சியம். அத்தகைய இலட்சியத்தை அடைய முயற்சிப்போம்.
சுதந்திரத் தீ எரிகிறதா?
“நீ இருந்தபோது
முழுமை
இரவு ஒளியானது
இப்போது வெறுமை
பகலும் இருளானது” 
அல்லல்பட்டு, அனுதினமும் பாடுபட்டு, அடி உதைபட்டு, எனக்கு உயிர் தேவையில்லை, என் நாடே தேவை என்று உயிர் துறந்தவர்களால் அன்று முழுமை பெற்றோம். அப்போது இரவுகூட ஒளியானது. இப்போதைய நிலையைச் சற்று யோசித்துப் பாருங்கள். உங்கள் இதயமே சற்று இயங்காமல் நின்று, மீண்டும் இயங்க முற்படும். இதுதான் இன்றைய உண்மை நிலை.

கடந்த வாரம் ஓர் ஆங்கில வார இதழில் ஒரு கொடூரமான நிகழ்வினை வாசித்தேன். அந்நிகழ்வை இப்போது உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப் படுகிறேன். இதைப் படித்துவிட்டு நீங்களே முடிவு எடுங்கள், சுதந்திரத் தீ எரிகிறதா? அல்லது அணைந்துவிட்டதா? என்பதை.

அழகான பெண், 16 வயது, வீட்டின் வறுமையால் வேலை தேடிச் சொந்த ஊரான நேபாளத்தில் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கினாள். கடைசியாக ஒருவனிடம் அவள் வேலை வாங்கித் தாருங்கள் என்று சொன்னவுடன், அவன் அந்தப் பெண்ணை நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்து சிவப்பு விளக்குப் பகுதியில் விற்றுவிட்டான். வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றி விட்டான். அதன்பின் அவளது வாழ்க்கை தலைகீழாய்ப் போனது. தினமும் 20 பேருக்காவது விருந்தாக்கப்பட்டாள். அவளது வாழ்க்கை இருட்டானது. அது மட்டுமல்லாமல், அவளை வசியப்படுத்தி ஒரு சிறுநீரகத்தைத் திருடி 1 இலட்சத்து 9 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார்கள். அந்த விற்றக் கும்பலிலுள்ள ஒருத்தனுக்கே திருமணம் செய்து வைத்து, பணத்தையும் கொடுத்தார்கள். புதிய வாழ்க்கை மீண்டும் படையயடுக்க ஆரம்பித்தது. விபசார விடுதியின் கதவைத் தட்டியது. பிரபல பெண் கவிஞர் ஆண்டாள் பிரியதர்´னி தன்னுடைய கவிதையில் கீழ்க் கண்டவாறு ஒரு விபசாரப் பெண்ணின் நிலையைக் குறிப்பிடுகிறார் : 
“குறுகிய காலப் பத்தினி
நான்
தினசரி
அஞ்சு பேருக்காவது” 

இது கதையாக மட்டும்தான் நம் மனத்தில் தோன்றும். இந்நிகழ்வினைச் சற்று யோசித்தீர்களானால், நான் இப்பத்தியைத் துவங்கும் முன் எழுதிய கவிதைக்கு அர்த்தம் புரியும். அந்தப் பெண் வெறும் வறுமையினால் மட்டும் வாழ வில்லை. தன் உடல் வெறுமை யினாலும் வாழ்ந்தாள் என்பதுதான் உண்மை. ஆகவே, மனமுள்ள மகேசன்களே... மனமுள்ள மங்கையரே... 
இப்பேர்ப்பட்ட கொடுமையான நிகழ்வினைக் கேட்கும்போது நாம் சுதந்திரம் பெற்று விட்டோமா? என்று சிறு நெருடல் ஏற்படுவது நியாயம்தான். சுதந்திரத் தீயை ஏற்றக்கூடிய நல்ல உள்ளங்களாக மாற முற்படுவோம். இல்லையேல், காந்தி சமாதியில் மட்டும் தான் சுதந்திரத் தீ எரியும்; மற்றெங்கும் அணைந்துவிடும். 

இப்போதாவது புரிகிறதா உங்களுக்கு...? இப்போது வெறுமை மட்டுமே உள்ளது. ஆகையால் நண்பகல்கூட இருளாய் இருக்கிறது. 

சுதந்திரப் பயணத்தைத் தொடருங்கள்
“அரும்பு
பூ
பிஞ்சு
காய்
பழமாகியும்
கனிந்தும்
காம்பிடம் தவிக்கும் பழத்தைக் 
காற்று
தடவினாலும் போதும்
விழுந்து விடும்
அந்த வேலை காற்று செய்யவில்லை
அந்த வேளை பழத்திற்கு வரவில்லை” 
நம்முடைய நிலையும் இதுதான். நாமும் சுதந்திரமாய் இருப்பதில்லை. பிறரையும் சுதந்திரமாய்  வாழ விடுவதில்லை. நம்முடைய சுதந்திரம் பிறருக்குப் பாதிப்பை விளைவிக்கிறது என்றால் அங்கே சுதந்திரம் பறிபோனது என்றுதான் அர்த்தம். பின்வரும் ஒவ்வொரு கவிதையும் ஒரு தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம், நீங்களே யோசித்து முடிவெடுங்கள். அவர்களுக்குச் சுதந்திரம் உள்ளதா என்று. அதன்பின் உங்கள் சுதந்திரப் பயணத்தைத் தொடருங்கள்.

“பிடிக்கவில்லை
விடுமுறை நாட்களில்
வீடு” 
இது ஒரு மாணவனின் சுதந்திரம். இவன் பயணம் எதை நோக்கி...?
“சமையலறை தேடிச்
செல்கின்றன
என் கால்கள்
தாளிட்ட கதவுகளால்...” 
இது ஒரு பெண்ணின் சுதந்திரம். இவரின் பயணம் எதை நோக்கி...?
“எதற்காகவோ காத்திருந்து
மெளனத்தில்
கரைகிறது என் வாழ்க்கை!” 
இது மூதாட்டி ஒருவரின் சுதந்திரம். இவன் பயணம் எதை நோக்கி...?
இவர்களுக்கு இன்று வரை சுதந்திரப் பூ மணம் பரப்பவில்லை. பிறரின் சுதந்திரத்தை நாம் பறிக்காமல் இருக்கும்போது நம்முடைய சுதந்திரப் பயணம் எந்தவித தடையுமின்றி சுகமாக அமையும். ஆகவே, வாருங்கள் மனமுள்ள மனிதர்களாய் நம் சுதந்திரப் பயணத்தைத் தொடர்வோம்.

சுதந்திரக் காற்றைச் சுவாசித்து உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்களுடன்,  

சகோ. மாணிக்கம்
திருச்சி மறைமாவட்டம்

அன்னை மரியாள் நம் தாய்


அன்புச் சகோதரனே, சகோதரியே, இயேசுவின் இணையற்ற நாமத்தில் என் அன்பான வாழ்த்துக்கள். நீங்கள் நலமாக இருக்கவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக விளங்கவும் இறைவனை மன்றாடுகிறேன்.

நம் இந்தியத் திருச்சபை இருபெரும் விழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றது. அன்னையின் விண்ணேற்பு மற்றும் நம் நாடு சுதந்திரம் அடைந்த நாள் நினைவாகக் கொண்டாடுகிறது. இவ்விழா, நாம் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நினைவூட்டலே. சுதந்திர நாடு என்று சொல்லிக் கொண்டே, எதையும் செய்கின்ற போக்கு இருக்கும் வரை நமக்கு ஏது சுதந்திரம்? செய்ய வேண்டியதை மட்டுமே செய்தால், இந்த உலகம் சுதந்திரப் பறவையாய் உலா வரலாம்; விழா கொண்டாடலாம் என்று விண்ணேற்படைந்த அன்னை நமக்குத் தெரிவிக்கின்றார்.

ஆம், “அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார். நிலா அவருடைய காலடியில் இருந்தது. அவர் பன்னிரு விண்மீன்களைத் தலையில் சூடியிருந்தார்” (தி.வெ. 12:1). இந்த அருமையான வார்த்தைகள் திருச்சபையைப் பற்றியே என்றாலும், பல காலமாகப் புரிந்தோ புரியாமலோ அன்னை மரியாவுக்கென்றே பயன்படுத்துகிறார்கள். அத்துணை அற்புதமான பெண்மணி அவர்.

வானம் வளைந்து வந்து வணங்கியது. வணக்கம் கூறி உன்னதனுக்குக் கருவில் குடி கேட்டது. தந்தார், அவர் வந்து பிறந்தார். வளர்ந்து நமக்கு வாழ்வு  கொடுக்க உயிர் கொடுத்தார், உயிர்த் தெழுந்தார், விண்ணேறினார். மறுபடியும் வானம் வளைந்து வந்து அன்னை மரியாவை எடுத்துச் சென்றது.

“நான் இருக்குமிடத்தில் என் தொண்டரும் இருப்பார். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” (யோவா 12:26). பொதுத் தீர்வைக்கு முன்னரே, உலக முடிவுக்கு முன்னரே அன்னை எப்படி விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்? இது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? என்று கேட்டால், நானும் உங்களைக் கேட்பேன். கானாவூரில் திராட்சை இரசம் தீர்ந்துபோன நிகழ்வில் இயேசுவின் நேரம் இன்னும வரவில்லை என்ற நிலையில், அதை முன்கூட்டியே வரவைத்தாரே அன்னை மரியா! இது ஓவர்தானே! அன்னை மரியா என்றுமே ஓவர்தான். சீடன் குருவை மிஞ்சி... நன்கு பயிற்சி பெற்ற சீடன் குருவைப் போல இருப்பான். இப்படிப்பட்ட நிலையில் அன்னை மரியாவை ஆண்டவர் உயர்த்தி வைத்திருக்க நம்மில் சிலர் பைபிளை மட்டும் தூக்கிக்கொண்டு மரியா வேண்டாம், திருப்பலி வேண்டாம், இந்தத் திருவிழா வேண்டாம் என்று சொல்லுகின்ற போக்கு இயேசுவுக்குப் பிடித்தமானதாகுமா?

தேரில் வைத்து அழகு பார்க்கவும், தெருத்தெருவாய்ப் பவனி சென்று அன்னை மகிமையையும் அதற்குக் காரணமான ஆண்டவர் மகிமையையும் எடுத்துரைக்கும் உங்களில் பலரும் அந்த அன்னையின் விண்ணேற்பன்று திருப்பலிக்குக்கூட செல்லுவதில்லையே! இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இத்தனை ஆசீர்வாதமான அன்னை யைக் குறித்துப் பேசுபவர்கள் பலர் இறை வார்த்தையைத் தினமும் படிப்பவர்கள்கூட இல்லை. இது என்ன விதமான பக்தி, நம்பிக்கையோ எனக்குத் தெரியவில்லை. நீங்களும் நானும்கூட விண்ணேற்பு அடையும் பொருட்டு இறைவாக்கிற்குச் செவிமடுப்போம். அறிவிப்பதோடு நில்லாமல் ஆர்ப்பரிப்புடன் வாழ்ந்து காட்டுவோம். அப்போது, “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் இப்பொழுது இருப்பதைவிட ஆயிரம் மடங்கு உங்களைப் பெருகச் செய்வாராக. வாக்களித்தது போல உங்களுக்கு வாரி வழங்குவாராக” (இச 11).

மக்கள் கடவுளை விட்டுத் தடம் புரண்டபோது இறைவாக்கினர் மற்றும் தலைவர்கள் மூலம் மக்கள் மனம் மாறி இறைவனிடம் வரச் செய்தார் எனப் பழைய ஏற்பாட்டில் காண்கின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து சிலுவையடியில் மனுக் குலத்தைத் தன் தாயிடம் ஒப்படைத்தபின் அன்னையின் தாயுள்ளம் அவ்வப்போது பல இடங்களில் காட்சி கொடுத்து (வேளாங் கண்ணி, லூர்து நகர், மெக்சிகோ), “மனம் மாறுங்கள். செபம் செய்யுங்கள், செபமாலை சொல்லுங்கள்” என்று அறைகூவல் விடுகிறார் அன்னை மரி. நாமும் மரியாளைப் போல் “அவர் உங்களுக்குச் சொல்வ தெல்லாம் செய்யுங்கள்” (யோவா 2:5). நாம் நம் அன்னையின் சொற்படி நடப்போமா? அவர் வழியில் செல்வோமா? 

புhதை தேடும் பயணம்


இரண்டு வாரங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரைச் சந்தித்தேன. மிகக் குறுகிய காலத்தில் தொழிலதிபராக உயர்ந்தவர் அவர். “உங்கள் வளர்ச்சியின் இரகசியமென்ன?” என்று கேட்டதற்கு, “என் வாழ்க்கைக்குப் பாதை காட்டுபவர் கணினி உலகில் முத்திரை பதித்த பில்கேட்ஸ்; அவர்தான் என் தலைவர்; அவர் கடும் உழைப்பினால் உயர்ந்த உன்னத மனிதர்; என் இளமையிலிருந்தே அவரை முன்மாதிரியாக வைத்துச் செயல்படு கிறேன்; அவருடைய நேர்மை, மனந்தளரா உழைப்பு, நேரத்தைத் திட்டமிட்டுச் செயல்படுதல், பிறரை மதிக்கும் மனித நேயம் இவை யாவும் அவரிடம் என்னைக் கவர்ந்த மதிப்பீடுகள்” என்று நண்பர் பகிர்ந்து கொண்டார்.

இளமைக் காலத் தேடல்களில் ஒன்று தலைமைக்கான தேடல். “என்னை வழிநடத்த யாராவது இருந்தால் நன்றாக இருக்குமே” என்று எண்ணும் பருவம் அது. நடிகர்கள், அரசியல்வாதிகள், அறிவியல் மேதைகள், சமூக ஆர்வலர்கள், தேசியவாதிகள், தன்னார்வத் தொண்டர்கள்... இப்படிப் பலரால் ஈர்க்கப்படும் காலம் இளமைக் காலம். இவர்களில் “என் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலைவராக நான் யாரைத் தெரிவு செய்வது?” என்பதே அந்தத் தேடல்.

எல்லாருமே தலைவர்களாக இருக்க நினைக்க இக்காலத்தில், தன்னலம் மறந்து, பிறர்நலம் நாடும் நல்ல தலைவர்களைத் தெரிவு செய்வது சற்று கடினம்தான். குறிப்பாக, ஊடகங்களினால் தலைவர்களாக முன்னிறுத்தப்படுகின்ற ஒருசில போலிகளைக் குறித்து நாம் மிகவே கவனமாக இருக்க வேண்டும். எனவே பொது வாழ்வில் பிடிப்பு, இலக்கு நோக்கிய கவனக் குவிப்பு, கடின உழைப்பு, பிறருக்கு நல்வழி காட்டும் முனைப்பு, நம் இரத்த நாளங்களையும் சுண்டி இழுக்கும் உரை வீச்சு, தளர்ச்சியின்றி நம் வளர்ச்சிக்குப் பாதை காட்டும் விரிந்த பார்வை... இவை யாவும் நல்ல தலைவருக்கான ஒருசில அடை யாளங்கள். இத்தனை தகுதி களையும் சேர்ந்த ஒரு தலைவரை நம் வாழ்வின் முன்மாதிரி யாகத் தேர்ந்து கொள்ளும் போதுதான் நம் சாதனைகள் சாத்தியமாகும்.

நல்ல தலைவர்கள் நம் வாழ்வின் உந்து சக்தியாக அமைகிறார்கள்; இருளைக் கிழித்து, உழைப்பின் வெளிச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள். சாதனை வேட்கையை ஏற்படுத்தி, வெற்றிக் கோட்பாடுகளையும் செயல்முறை களையும் வகுத்து, சாதிக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்புகிறார்கள். சுருங்கக் கூறின், நம் வாழ்வின் உச்சிக்குச் செல்ல ஏணிப் படிகளாக இருப்பவர்கள் இவர்கள்.

இளமைக்கால கனவுகளும் கற்பனைகளும் உருப்பெற நல்ல தலைவர்கள், வழிகாட்டிகள் நமக்குப் பலமாக அமைகிறார்கள். நல்ல தலைமையால் நாம் வழிநடத்தப்படும் போது நாமே வழிகாட்டிகளாகவும் மாற முடியும். பணி. 

அந்தோணி மதலைமுத்து
நல்லாயன் குருமடம், கோவை