இது பூக்களின் காலம் . . .பயணங்கள் முடிவதில்லை


நீ இருக்கும்
திசைக்கு முகம் காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது
தொட்டிப்பூ
பூப்பூத்தல் அதன் இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்
- கல்யாண்ஜி
சுருட்டு குடித்துக் கொண்டிருந்த
இளைஞனை
ஒரு சைக்கிள் பயணம்தான்
கியூபாவில் புரட்சிக்காரனாக்கியது.
ஆபிரகாம் லிங்கனின்
அஞ்சல் பயணம்தான்
அமெரிக்க சரித்திரத்தில்
ஜனாதிபதியாக்கியது.
கார்ல் மார்க்ஸின்
பட்டினிப் பயணம்
‘மூலதனமானது’
லண்டனில் உள்ள
ஒரு நூலகத்தில்
8 மில்லியன் நூல்கள் உள்ளதைப்
பயணங்கள்தானே பதிவு செய்தன?
பயணம்தான் நம்மைப்
பகுத்தறிவாளியாக்கியது.
கண்ணகியின்
மதுரைப் பயணம்தான்
‘சிலப்பதிகாரமும் மணிமேகலையும்’
ஜோசப் பெஸ்கியின்
இந்தியப் பயணம்தான்
‘தேம்பாவணி’
இங்கிலாந்துக்காரனின் கண்களைக்
கறிக்கச் செய்தது
காந்தியின்
தண்டி யாத்திரைதானே!
பாரெங்கும்
புத்தரின் தாக்கம் ஏற்பட்டதற்கும்
பயணம்தானே காரணமானது!
தன்னை நிலைநிறுத்திக்கொள்ள
பூமிகூட சுற்றிக்கொண்டே
இருக்கிறது
இயற்கை
தொட்டிச் செடியில் இல்லை
தொட்டுவிடும் தூரத்தில்தானிருக்கிறது
பயணங்கள் முடிவதில்லை
கோடையை வசந்தமாக்குங்கள்
பயணங்கள்
உங்களைப் பண்படுத்தலாம். 

- ஜே. தமிழ்ச்செல்வன்

இறையழைத்தல் பணியகம்

இறைமக்கள் அருள்பணியாளரை மையப்படுத்திய ‘இறையழைத்தல் முகாம் 2011’ இறையழைத்தல் பணியகத்தால் ஏப்ரல் 12 முதல் 16 வரை நடத்தப்பட்டது. புதிய முயற்சியாக மாணவர்கள் முகாமிற்கு வந்த அடுத்த நாள், மாணவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மூன்று பங்குகளுக்கு, ஒவ்வொரு குழுவுக்கும் இரண்டு இறையியல் குருமாணவர்கள் வீதம் ஒருங்கிணைப்பாளராக மாணவர் களோடு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
அணுகுமுறை :
  • மக்களால் போற்றப்பட்டு முன் உதாரணமாகக் கருதப்படும் குருக்களைத் தேர்வு செய்தோம்.
  • முகாமிற்கான புதிய அணுகுமுறை குருக்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டு அவர்களது இசைவு பெறப்பட்டது.
  • ஆயரிடம் இந்த முகாமிற்கான புதிய அணுகுமுறை முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
  • இசைவு தந்த குருக்களால் முகாமை நடத்த இருந்த இறையியல் குருமாணவர்களுடன் சேர்ந்து முகாமிற்கான கால அட்டவணையும் நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டன.
 
புதிய அணுகுமுறையின் எதிர்பார்ப்பு :
  1. இறையழைத்தலில் ஆர்வம் கொண்டு முகாமிற்கு வந்திருந்த மாணவர்களுக்கு ஒரு நேரடி அனுபவம் பெற்றிட இது உதவியாக அமையும் என்கிற எதிர்பார்ப்பு. இந்த அனுபவம் குருத்துவத்தின் ஒரு முன்னோட்டமாக, ஒரு முன்சுவை அனுபவமாக அமையும் என்கிற நம்பிக்கை.
  2. குருவானவர் யார்? அவருடைய அருள்பணிகள் என்ன? இறைமக்களோடு அவர் உறவுகொள்ளும் போது இருக்க வேண்டிய பண்புகள் என்ன? என்பதைக் கண்கூடாகக் கண்டு அனுபவிக்க.
  3. இறைமக்களின் விசுவாசத்தை ஆய்ந்தறிய, அவர்கள் குருக்களிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள், ஒரு நல்ல குரு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள இந்த அனுபவம்.
  4. பங்கு நிர்வாகம் மற்றும் பக்த சபைகளின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள.
  5. உணர்வு சார்ந்த மற்றும் உள்ளத்தைத் தொடும் அனுபவத்தைப் பெற்றிட, மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சாகும் தருவாயில் இருப்போருக்கான இல்லங்களைச் சந்தித்து மனிதநேய பண்புகளையும், ஒரு மனிதனை மனிதனாக வாழ உதவும் உணர்வுகளையும் வெளிக் கொணர உதவும் என்ற நம்பிக்கை.
  6. நான் ஒரு குருவானால் எப்படிப்பட்ட பண்புகளோடு வாழ்ந்தால் நல்ல குருவாக இருப்பேன் என்பதை நேரடியாக மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு.
 மாணவர்களின் பங்கு       அனுபவப் பகிர்வு :
  • நாங்கள் சந்தித்த குருக்களிடம் பொதுவாகக் காணப்பட்ட குணாதிசயங்கள் : செபிக்கும் குருக்களாக, காலைக் கட்டளை ஜெபத்தை ஜெபிப்பவர்களாகவும், திருப்பலியில் நிறைவு காண்பவர்களாகவும், அன்றைய தினத்தின் செயல்பாடுகளுக்கான சக்தியையும், உள்ஆற்றலையும், ஆன்மீக வளத்தையும் நற்கருணையிலிருந்து பெற்றுக்கொள்பவர்களாகவும் காணப்பட்டனர்.
  • ஒரு குருவானவர் வழிபாடு நேரத்தில் மட்டுமல்லாது பங்கில் இருக்கும் எல்லா நேரமும் அங்கியில் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகவும், மாணவர்களின் உள்ளத்தை ஈர்ப்பதாகவும் அமைந்தது.
  • ஒரு குருவானவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை அந்தப் பங்கு அனுபவத்தி லிருந்தும் பங்குத் தந்தையிட மிருந்தும் கற்றுக் கொண்டார்கள்.
  • பங்கு மக்களின் இல்லங்களை இருவர் இருவராகச் சந்தித்தபோது, நாங்கள் எப்படிப்பட்ட குருவாக இருக்க வேண்டும் என்ற அவர்களிடம் வினவியபோது, ஒருவர் விடாமல் எல்லாரும் சொன்ன கருத்து, “எங்கள் பங்குத் தந்தையைப் போல இருக்க வேண்டும்” என்பதே.
  • வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் பாராட்டாதவர்களாக, எல்லாரிடமும் சமமாகப் பழகுபவர்களாகக் காணப்பட்டனர்.
  • ஏழைகளுக்கும் உதவி தேவைப்படுபவர்களுக்கும் தாராள உள்ளத்தோடு வாரி வழங்குபவர்களாகக் காணப்பட்டார்கள்.
  • எந்த நேரம் சென்றாலும் மக்களால் அணுகக்கூடியவர்களாகக் கருதப்பட்டார்கள்.
இல்ல சந்திப்பு       அனுபவம் :
  • உணர்வு சார்ந்த மற்றும் உள்ளத்தைத் தொடும் அனுபவத்தைப் பெற்றிட மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சாகும் தருவாயில் இருப்போருக்கான இல்லங்களைச் சந்தித்ததின் பயனாக வாழ்வு இறைவன் கொடை என்பதையும், அதன் மகத்துவத்தையும் மேன்மையையும், மனித உயிருக்கு நலம் தரக்கூடிய மதிப்பையும் மகத்துவத்தையும் நன்கு அறிந்துகொண்டதாய்க் கூறினர்.
  • தங்களையும் தங்கள் குடும்பம் சார்ந்த செயல்களையும் மட்டுமே முன்வைத்து சிந்தித்திருந்த மாணவர்கள் பிறருடைய குடும்பப் பிரச்சனைகளையும் சவால்களையும் கேட்டறிந்து, தங்களுடைய பார்வைகளையும் சிந்தனைகளையும் விசாலப்படுத்தும் வாய்ப்பாக அமைந்தது.
  • மக்களோடு உரையாடி அவர்களின் குடும்ப சவால்களைக் கேட்டறிந்து அவர்களோடு ஜெபித்ததில் எங்களின் ஜெப ஆர்வம் இரட்டிப்பானது.
  • குருவானவராகும் ஆர்வத்தைக் காட்டும் எங்களுக்கு அவர்கள் காட்டிய வரவேற்பும் மதிப்பும் மரியாதையும் குருத்துவத்தின் மேன்மையை உணரச் செய்தன. எங்களின் ஆர்வத்தை இன்னும் அதிகமாகத் தூண்டியுள்ளன.
  • அருள்சகோதரர்களும் அருள்சகோதரிகளும் கைவிடப்பட்டவர்களுக்கும் நோயுற்றோருக்கும் கொடுத்த பராமரிப்பும் இரக்கமும் எங்களின் அழைப்பு விதை வேரோட்டம் காண உதவின.
 V. ஒருங்கிணைப்பாளர்களின் கருத்துகள் :
  1. குருக்கள் மிகுந்த ஆர்வத்தோடு இந்தப் புதிய அணுகுமுறையை வரவேற்று முன் கூறப்பட்டிருக்கின்ற மாணவர்களின் அனுபவங்களை ஏற்றுக்கொள் கின்றனர்.
  2. சிறு குழுக்களாகப் பங்குகளுக்குப் பிரிந்து சென்றதால், மாணவர்களைச் சிறப்பாக ஒருங்கிணைத்தும், நெறிப்படுத்தி கண்காணிக்கவும் முடிந்ததாக சகோதரர்கள் பகிர்ந்து கொண்டனர்.
  3. பங்கின் பொதுநிலையினர் பலரும் தங்களின் பங்களிப்பையும் பகிர் வையும் திறமைகளையும் வெளிக் கொணர்ந்து இறையழைத்தலை ஊக்குவிப்பது இறைமக்களின் கடமை என்பதை உறுதி செய்தனர்.
  4. வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த போதிலும் மனநிறை வோடும் மகிழ்வோடும் பணி செய்த குருக்களின் அணுகுமுறை மாணவர்களின் இதயத்தில் அழைத்தல் ஆர்வத்தை இன்னும் மிகுதியாக்கியது.
  5. மூத்த குடிமக்கள் வாழும் இல்லத்தைச் சந்தித்ததில் ‘மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்’ என்ற ஆத்திச்சூடி அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.
அனுபவமே சிறந்த ஆசான்; அனுபவமே சிறந்த பாடம். எனவே மாணவர்கள் தங்களின் அனுபவத்தின் வாயிலாக இறையழைத்தலை உணரவும், சுதந்திரமாக முடிவெடுக்கவும் உதவி செய்வதற்காகவே இந்தப் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் பயனும் கிட்டியது. இம்முயற்சியைப் பின்பற்று வோம்; இறையழைத்தலை அதிகப்படுத்துவோம்; இறைப்பணியை செம்மையாக்குவோம்.
 
அருள்பணி. ரேமண்ட், 
இறையழைத்தல் இயக்குநர், 
சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்

புனித நார்பெர்ட் - ஆயர் (கி.பி. 1080 - 1134)

புனித நார்பெர்ட் அரச குலத்தில் தோன்றியவர். அரிதான புத்தித் திறமையுடையவர். ஆழ்ந்த தெய்வ பக்தியின் காரணமாகக் குருத்துவத்தை விரும்பினார். ஆனால் அரண்மனையில் பிரபுக்கள் போன்ற உயர்ந்த குலத்தாரோடு சேர்ந்து உலக இன்பங்களை நாடியதால் அநேக குற்றங்களுக்குள்ளாகிப் பிறருக்குத் துர்மாதிரிகையானார். ஒரு சமயம் இவர் விநோதப் பிரியத்தினால் குதிரையின் மீது ஏறி வேறு ஊருக்குச் செல்லுகையில் திடீரெனப் புயல் காற்று அடித்து இடி மின்னல் உண்டானது. இவருக்கு முன் இடி விழவே குதிரை மிரண்டு அவரைக் கீழே தள்ளியது. அதன்பின் புனித பவுலைப் போல் மனந்திரும்பினார். கடும்தவம் புரிந்து தினமும் ஒரு முறை மட்டும் சாப்பிட்டு பெரும் புனிதராய் வாழ்ந்தார். தேவ ஏவுதலால் ஒரு புது சந்நியாச சபையை நிறுவினார்.
 
இவர் மாக்டபர்க் நகரின் பேராயராக நியமனம் பெற்றார். அங்கே தோன்றியிருந்த பல ஊழல்களை நீக்கி ஜெர்மன் நாட்டு அரசனான லோத்தேர் என்பவருக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். பொஹீமியா நாட்டினர் இவரைத் தங்கள் நாட்டின் பாதுகாவலாகத் தெரிந்து கொண்டுள்ளனர். இவர் ஏற்படுத்திய துறவற சபை ‘நார்பெர்டைன்’ என்று அழைக்கப்படுகிறது. இவர்களின் தனிப்பெரும் பக்தி திவ்விய நற்கருணை நாதருக்கு உரியது. இப்பக்தியை இத்துறவற சபையை நிறுவிய புனிதரே கற்றுத் தந்துள்ளார்.

இறைவனின் அழைப்பு :

மூன்று உண்மைகள் வாயிலாக அழைப்பு
  1. திண்டுக்கல் மாவட்டம்: ஒரு கத்தோலிக்க வீட்டைச் சந்தித்தேன். வீட்டின் தலைவர் உறுப்பினர் அனைவரையும் அறிமுகப்படுத்தினார். ஒரு பையனை மட்டும் தயக்கத்துடன் அறிமுகப்படுத்தினார். காரணம், படிக்காதவன், ஊர்சுற்றி, அடங்காதவன். “இவனை உங்களை மாதிரி சாமியாருக்குப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.
  2. வேலூர் மாவட்டம் : அருமையான கிறிஸ்தவ குடும்பம். உள்ளே சென்றேன். பையன் +2 எழுதியிருந்தான். அவன், “நான் சாமியாருக்குச் சேர்ந்து நிறைய படிக்க வேண்டும். என் வீட்டில் படிக்க வைக்க முடியாத சூழ்நிலை. குருமடத்தில் சேர்ந்தால் எல்லா வசதிகளும் கிடைத்துவிடும்” என்றான்.
  3. செஞ்சி மாவட்டம் : அதிக பக்தியுள்ள குடும்பம். தாய் புலம்பலுடன் கூறியது : “என் வீட்டில் அன்றாட கஞ்சிக்கு வழி இல்லை. என் பிள்ளையாவது சிஸ்டர் ஆகி படித்து எங்களுக்கு அவ்வப் போது உதவினால் போதும்.”
எல்லா இளைஞர், இளம்பெண்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. நோக்கம் சற்று வித்தியாசமாக இருக்கிறது.

விவிலியத்தில் அழைத்தல்பழைய ஏற்பாட்டில் கடவுள் பல இறைவாக்கினரைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். அவர்கள் படித்தவர்களா, பட்டம் பெற்றவர்களா என்று பாராமல் ஆபிரகாம், மோசே, எசாயா, எரேமியா, ஆமோஸ் எனப் பாமரர்களைத்தான் அழைத்தார். புதிய ஏற்பாட்டில் இயேசு தேர்ந்தெடுத்த யாருமே பெரிய பட்டமோ பதவியோ பெற்றவர் களல்லர்.
 
இறையரசின் கருவிகளாக அழைப்புஇந்த அழைப்பு நம் முயற்சி யினாலோ, பெற்றோரின் முயற்சி யினாலோ, நம் நற்செயல்களினாலோ வருவது அல்ல. மாறாக கடவுளிட மிருந்து வரும் அழைப்பாகும். இது மாபெரும் கொடையாகும். நம்மையும் மக்களையும் அருள்வாழ்வுக்கு இட்டுச் செல்லுகின்ற அழைப்பு.  “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்” (எரே 1:5) என்றும், “நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” என்றும் அழைப்பின் தன்மை வெளிப்படுத்தப்படுகிறது. ஆம், தகுதி இல்லாத நம்மை அழைத்து தகுதியைக் கொடுத்து பலம் இல்லாதவர்களுக்குப் பலத்தைக் கொடுத்து அவரது மதிப்பீடுகளின்படி வாழ நம்மை உருமாற்றுகிறார்.
 
குடும்ப சந்திப்புகுடும்பம் ஒரு கோவில், ஒரு பல்கலைக் கழகம் என்பார்கள். ஒரு கல் வீடாகாது, ஒரு மரம் தோப்பாகாது, ஒரு கை தட்டினால் ஓசை எழும்பாது. அதுபோல் திருச்சபைக்கு அடித்தளமாகவும் ஆணிவேராகவும் விளங்குவது குடும்பங்கள். அதனால்தான் குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை என்றழைக்கப்படுகிறது. செபிக்காத குடும்பம் செத்த குடும்பம் என்பர். ஏனெனில் குடும்பத்தில் தான் நல்ல பண்புகள் அனைத்தும் கற்றுத் தரப்படுகின்றன. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுபோல நாம் நம் குடும்பங்களில் பெற்ற நற்பண்புகளை கடைசி வரை கடைப்பிடிக்கின்றோம்.
 
நாம் மக்களைச் சந்திக்கும்போது, அவர்களோடு கூடி செபித்து, அவர்களுக்கும் நமக்குமிடையேயுள்ள நல்லதொரு நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பாக உள்ளது. மேலும் நம் உடனிருப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. கப்பலுக்கு  நங்கூரம் போல, யானைக்குத் தும்பிக்கை போல, வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் நம்பிக்கை, விசுவாசம் இவைகளை நாம் விதைக் கின்றபோது அழைத்தல் என்னும் கனியை 30 மடங்கு, 60 மடங்கு, 100 மடங்காகப் பெறுவோம் (மத் 13:8). மேலும் அவர்களோடு நெருங்கிப் பழகுகின்றபோது நம்மிடம் திறந்த மனதோடு தம் இன்ப துன்பங்களை அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள். அவர்களது குடும்பச் சூழ்நிலையை நாம் நன்கு தெரிந்து, அதன்படி அவர்களை மாற்றுவதற்கு நமக்கு எளிமையாக இருக்கும். நாம் வீடு சந்திப்பில் வேறுபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இயேசு சக்கேயு வீட்டிற்குச் சென்று “இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” என்று சொன்னவுடனே சக்கேயு மனம் மாறினார். இயேசுவின் வருகையும் பிரசன்னமும் சக்கேயுவை முழுமையாக மாற்றின. அதுபோல வீடுகளுக்குக் குருக்களும், கன்னியர்களும் வரும் போது அதை மக்கள் ஆசீர்வாதமாகக் கருதுவார்கள். அதைவிட மேலாக இறைவனே தங்கள் வீட்டிற்கு வந்தது போல உணர்வார்கள்.
 
இன்றைய இளைஞரின் நிலை‘கண் போன போக்கிலே கால் போகலாமா...’ என்று வரும் திரைப்பாடல் வரிகள் சற்று சிந்திக்க தூண்டுகின்றன. இளைஞர்கள் தம் கடமைகளை மறந்து அவர்கள் தம் மனம் போன போக்கில் செல்கிறார்கள். இவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இருந்தால் இவர்களின் சிகரம் தொடும் திறமைகள் வெளிப்படும். இதுவே நமது பணி. இவர்கள் எழுந்து நடக்க நாம் உதவ வேண்டும். ‘என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்’ (ஏசா 43:4) என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
 
‘வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை’ என்று வாழ அவர்கள் வழிகாட்டப்பட வேண்டும். இந்தப் பிறப்பிலே வரலாறு படைக்க ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அன்று இயேசுவிடம் அறிஞன் ஒருவன் வந்து ‘நான் நிலைவாழ்வு பெற என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டதற்கு, “உனக்கு ஒன்று குறைவாக இருக்கிறது. உனக்குள்ளதை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு என்னைப் பின்செல்” என்று இயேசு கூறினார். அதே மெல்லிய குரல் இளைஞர்கள் நெஞ்சில் தினமும் ஒலிக்க வேண்டும். “அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு” (மத் 19:37). இறையரசுப் பணியைக் கட்டியயழுப்ப இன்றைய இளைஞர்கள் அதிகமாக வர தினமும் செபிப்போம். அவர்களில் அழைத்தல் என்னும் விதையை விதைத்து வெற்றி என்னும் கனியைப் பறிப்போம்.
 
குருக்கள், கன்னியர்களின் வாழ்வுமுறை‘மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்’ என்பது போல், நாம் மக்களைச் சந்திக்கச் செல்லும்போது மக்கள் நம்மை அன்போடும் பாசத்தோடும் இன்முகத்தோடும் வரவேற்க வேண்டும். அந்தளவுக்கு நம்முடைய வாழ்வு முறை மாற வேண்டும்.
காட்சிக்கு   எளியன்   கடுஞ்சொல்லன்      அல்லன்
மீட்கூறும்    மன்னன்   நிலம் (குறள்)
என்னும் குறளுக்கு ஏற்ப நாம் பார்ப்பதற்கு எளிமையாகவும், சினம்கொள்ளத் தாமதிப்பவராகவும், தெளிந்த மனம் உடையவராகவும், பரந்த சிந்தனை உடையவராகவும், நீரற்ற ஓடைகளில் அருவி ஓடச்செய்பவராகவும், எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்காகத் தம்மையே தியாகம் செய்யத் துணிந் தவராகவும், நடுநிலையோடு நின்று செயல்படக் கூடியவராகவும் நாம் இருக்க வேண்டும். இதைவிட மேலாக, நம் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் இயேசுவைப் பிரதிபலிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.
 
முடிவுரை‘தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்’ என்பதை நாம் உணர்ந்து வாழ முயற்சி எடுப்போம். இறைப் பராமரிப்பில் தொடர்ந்து நம்பிக்கை வைத்து, நமது பணியை முனைந்து தொடர முயற்சிக்கும் போது, இறைவன் தானே நம் சார்பில் செயலாற்றுவதை நாம் காண முடியும். “நீங்கள் போய் என் சீடராக்குங்கள்...” (மத் 28:19-20).

துன்பங்கள் வழியே செல்வோம்

புனித அந்தோனியாரின் பக்திமிகு மறையுரைகளைக் கேட்டு மனம் திரும்பினார் ஒரு கொள்ளைக்காரர். மனம் திரும்பியதோடு மட்டுமல்லாமல், புனித அந்தோனியாரிடம் பாவ அறிக்கையும் செய்தார். புனித அந்தோனியார் பாவத்திற்குப் பரிகாரமாய் உரோமையிலுள்ள புனித இராயப்பர் கல்லறையை 12 முறை தரிசித்து ஜெபிக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.
 
பன்னிரெண்டு முறை கால்நடையாய் சென்றுவர அநேக ஆண்டுகள் எடுத்தது. முதிர்வயதை அடைந்த நிலையில், 12-வது முறை கல்லறையைத் தரிசித்து கால்நடையாய் திரும்பி வரும்போது கல்லறை அருகில் முதியவர் ஒருவரையும் கண்டு அவரிடம் தான் கல்லறை தரிசிப்பதன் நோக்கத்தைக் குறிப்பிட்டார். முதியவரோ ஆச்சரியமடைந்து நானும் இப்போது தான் 12-வது முறையை முடித்திருக் கிறேன் என்றார்.
 
பாவத்திற்குரிப் பரிகாரமாக சில ஜெபங்களை மட்டும் சொல்லச் சொல்வது, புனித அந்தோனியாரின் வழக்கமல்ல. மாறாக, உடல் ஒறுத்தல், பரித்தியாகம், சிலுவைப்பாடுகளில் சேர்ந்துகொள்ளும் சில தியாகங்களையே பாவத்திற்குப் பரிகாரமாகக் கொடுத்து வந்தார்.
 
நம்மையே அடிமையாக்கி பாவத்தின் சிறைக் கைதியாய் வைத்திருக்கும் சாத்தானின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்க கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளில் பங்கு பெற வேண்டும்.
 
புனித பவுல் தன் இறைப்பணி அனுபவ வாழ்வைக் குறித்துச் சொல்லும் பொழுது, “உங்களுக்காக நான் படும் வேதனைகளில் மகிழ்ச்சிகொள்கிறேன். கிறிஸ்து பட வேண்டிய வேதனைகளில் இன்னும் குறைவாய் இருப்பதை என் உடலில் நிறைவாக்குகிறேன்” (கொலோ 1:24) என்கிறார்.
 
புனித லூக்கா நற்செய்தியில் புனித திருமுழுக்கு யோவானைக் குறித்துச் சொல்லும்பொழுது, “அவர் ஆண்டவர் முன்னிலையில் மேலானவராய் இருப்பார். திராட்சை ரசமோ மதுவோ குடிக்க மாட்டார்” (லூக் 1:15) என்று கபிரியேல் வானதூதர் கூறுவதைக் குறிப்பிடுகிறார்.
 
மத்தேயு 3-ஆம் அதிகாரத்தில் இறைப்பணிக்குச் செல்லும் முன் 30 ஆண்டுகள் புனித திருமுழுக்கு யோவான் காடுகளில் தவ முனிவராய் வாழும் நிலையைக் காண்கிறோம். காட்டுத்  தேனையும் வெட்டுக்கிளியையும் உணவாகக் கொண்டும், ஒட்டக மயிராடையை உடையாகக் கொண்டும் தவ வாழ்வு வாழும் புனித அருளப்பரைப் பற்றி வாசிக்கிறோம். புனித யோவான் தம்மையே நெறிப்படுத்துவதற்காகவே இத்தவ வாழ்வை மேற்கொள்கிறார். “அவர் தாய் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப் பெறுவார். எலியாசை ஆட்கொண்டிருந்த தேவ ஆவியும் வல்லமையும் உடையவராய் அவர் ஆண்டவருக்கு முன்பே செல்வார்” எனக் கூறுகிறார் லூக்கா (1:15-17).
 
இத்தகைய நிலையில் இருப்பினும், தம்மையே ஒடுக்கி பரிசுத்த வாழ்வில் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து இயேசுவுக்கு முன்னோடியாய் இறைப்பணி செய்ய வருகிறார்.
 
“இரத்தம் சிந்துதல் அன்றி மீட்பு இல்லை” எனக் கூறும் வேதாகம வசனத்தின்படி நாம் நம்மையே நெறிப்படுத்தவும், பரிசுத்த வாழ்வில் கடந்து செல்லவும், நம்மை அடிமையாக்கும் பாவ உணர்விலிருந்து விடுபடவும் நம்மையே ஒறுத்துக்கொள்வது அவசியம். உபவாச வாழ்விலும், நோன்பு நிலையிலும் கடந்து செல்வது கட்டாயம். புனித பவுல் தன் வாழ்வைக் குறித்து சொல்லும் பொழுது, “பிறருக்கு நற்செய்தி அறிவித்த பின் நானே தகுதியற்றவன் என நீக்கப் படாதவாறு என் உடலை ஒறுத்து அடிமையாக்குகிறேன்” (1 கொரி 9:27) என்கிறார்.
 
ஸ்காட்லாந்து நாட்டின் புனிதை புனித மார்க்ரேட் (1045 - 1093) மால்கோம் என்ற அரசரைத் திருமணம் செய்தார்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மால்கோம் இழந்த தம் கோட்டையைப் பிடிப்பதற்காக நார்மண்டி நாட்டினரோடு போராடத் தொடங்கினார்.
 
அச்சமயத்தில் மார்க்ரேட் மரணப் படுக்கையில் இருந்தார்கள். அவரின் கணவரும், ஒரு மகனும் போரில் அகால மரணமடைந்தார்கள். இச்செய்தியோடு தன் தாயாரைப் பார்க்க ஓடி வந்தார் இன்னொரு மகன். அவரது முகக் கலவரத்தைப் பார்த்தே தன் கணவரும் மகனும் மரித்து விட்டார்கள் என்பதை அறிந்து ஆற்ற முடியா துயரில் ஆழ்ந்தார்கள் புனித மார்க்ரேட்.  இருப்பினும் இவ்வாறு இறைவனிடம் ஜெபித்தார்கள் : “இறைவா, உமக்கு நன்றி. இனியும் என் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பிறர் பாவங்களுக்காகவும் இக்கொடிய சிலுவைப்பாடுகளை எனக்குத் தருவதற்காக மிகவும் நன்றி” எனக் கூறி உயிர் துறந்தார்கள்.
 
தன் வாழ்வு முழுவதும் கடவுளுக்குப் பிரியமாய், மனிதர்களிடம் நேசமாய், குற்றமில்லா உள்ளத்துடனும் இறைப் பணியாற்றிய குருவானவர் ஒருவரை அறிவேன்.
 
அவர் முதிர் வயதில் மரணப் படுக்கையில் இருந்தார். புற்றுநோயின் கொடுமையில் வாடினார். மிகுதியான துன்பத்திற்கும் உள்ளானார். அவரின் பங்குப் பிள்ளைகளும், அவரால் உயர்த்தப்பட்ட வர்களும் அவரிடம் வந்து அவரின் துன்பம் கண்டு கண்ணீர் வடித்தார்கள்.
அவரோ அவர்களிடம், “நாம் மரணம் அடைவதற்கு இறைவன் ஏதாவது ஒரு வியாதியை நமக்குத் தர வேண்டும். எனக்கு இந்த வியாதி. அதனாலென்ன? உத்தரிக்கும் ஸ்தல வேதனையை இவ்வுலகிலேயே அனுபவிப்பது பாக்கியமல்லவா?” என்றார்.
 
நாமும் நம் வாழ்வில் நம்மைக் கடவுளின் பிள்ளைகளாய் வாழ துன்பங்கள் வழியே செல்வோம். ஆமென்.

-Fr.  ச. ஜெகநாதன், 
அய்யம்பாளையம், 
திண்டுக்கல்

தமத்திருத்துவம்

மனிதன் உடல் உள்ளம் ஆன்மா
இணைந்த இறைப்படைப்பு
உடல் தந்தை
உள்ளம் மகன்
ஆன்மா தூய ஆவி
உடலில் படைப்பின் ஜீவன்
உள்ளத்தில் வாழ்வின் நல்வாக்கு
ஆன்மாவில் உண்மையின் தேற்றரவாளர்
மனிதன் இறைவனின் சாயல்
முப்பரிமாண கடவுள் தந்தை
செயலில் மூவர் எனினும்
வடிவில் ‘ஒருவரே’
மனிதப் படைப்பு உணர்த்துவது இதுவே!
அவரே திரிஏக தேவன்!
தந்தையின் தூய ஆவிப் பிறப்பு
மகனாம் இயேசு மரியிடம்
இரத்தம் கலந்திட்ட மிருகம்
ஒழியும் வேளை
மாயை விலகும்
உண்மை விளங்கும்
அப்போது!

-ச. செல்வராஜ், விழுப்புரம்

தேவ அழைப்பை ஏற்பீரே

தேவ அழைப்பை ஏற்பீரே - ஏற்றால்
தெய்வ வல்லமை பிறக்குமே!
பாவ மின்றி பணிசெய்தால் - இந்தப்
பாரை மாற்றிக் காட்டலாம்!!
மாசு மருவு இல்லாத - மரியை
வழித்துணையாகக்கொள்ளுவீர்!
சேசு செய்த புதுமைகள் - நாமும்
நேர்த்தியாகச் செய்யலாம்!!
தேவன் அழைப்பே அழைப்பாகும் - பிறரால்
நேர்தல் வெறும் கண்துடைப்பு!
சாவை வெல்ல முடியுமே - நாமும்
சாத்தான் ஓடச் செய்யலாம்!!
அழைத்த உடனே சேசுவைத் - தொடர்ந்த
அப்பாவிகளைப் பின்பற்றுவோம்
பிழைப்பைத் தேடி வருவதல்ல  - துறவு
இறைவன் வாக்கை அறிவித்தலே
உற்றார் உறவோர் பற்றினை - விட்டு
உலக ஆசா பாசங்கள்
முற்றும் வெறுத்தல் தேவஅழைப்பு - என்பதை
உண்மை அழைத்தலை நிறைவுசெய்யுமே
தன்னை ஏற்ற தந்தையாம் - இறைவனை
தலைமை கொண்டு பணிசெய்தல்
என்றும் துறவை நிலைநாட்டும் - உண்மை
என்ன என்பது தெளிவாகும்.
 
- கவிஞர் பெஸ்கிதாசன்

நற்செய்தி அறிவிப்பவரின் மலரடிகள் எத்துணை அழகானவை!

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் காலையிலும் மாலையிலும் செபத்தில் ஈடுபட்டு, தங்களது பணியைத் துவங்கினார்கள். தங்கள் வாழ்வைச் செபத்தால் இறைவனைச் சுற்றியே அமைந்த வாழ்வாக மாற்றிக் கொண்டனர். இப்பழக்கத்தின்படியே இயேசுவும் செயல்படுகிறார். இந்த செப உறவே இயேசுவைப் பணிபுரியச் செய்து, அனைத்து மக்களையும் வாழச் செய்தது. திருச்சபையை நிறுவவும் வளரவும் செய்தார். தனது பணியைத் தொடர்ந்து செய்ய முடிவு எடுக்கவும், செபித்து தன் விரும்பியபடி பன்னிரு சீடர்களை அமைத்து (மாற் 3:13) திருத்தூதர் எனப் பெயரிட்டார். அந்தச் சீடர்கள் பலதரப்பட்டவர்களாக இருந்தார்கள். வரி தண்டுபவரான மத்தேயு, தீவிரவாதி சீமோன் என்று பலதரப்பட்டவர்கள். ஏன், பாவியான மரிய மதலேனாளையும் முதல் சீடத்தியாக அழைக்கவில்லையா? அனைவரும் நற்செய்தியின் பொருட்டு தங்கள் உயிரை இழக்கத் தயாராக இருந்தார்கள. எனவே திருச்சபை வளர்ந்து நிலைபெற்றது.
நம்முடைய விருப்பமின்றி கடவுள் செயல்பட மாட்டார். ஒருபோதும் வற்புறுத்தவும் மாட்டார். ஏனெனில் நமக்குக் கடவுள் முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். கொடுத்த சுதந்திரத்தை மதிப்பவர்தான் நம் கடவுள். அவரது மீட்புப் பணியைத் தொடர்ந்து செய்ய இறைவனின் மதிப்பீடுகளைத் தொடர்ந்து வழங்கவும் தொடர் ஓட்டக்காரர்களை இறைவனே தேர்வு செய்கிறார். உலகத்தில் பல அலுவலகங்களில் வேலை செய்யப் பலரைத் தேர்வு செய்கிறார்கள். அவர்களின் தேர்வு எப்படிப்பட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் கடவுள் தேர்ந்தெடுக்கும் பொழுது வயது, ஆளுமை, குணம், கொள்கை போன்றவைகளில் வேறுபட்ட வர்களையும், இனம், மதம், தீவிரவாத குணம் உள்ளவர்களையும் வேறுபாடின்றி அழைக்கின்றார். இந்தத் தேர்வு (அழைத்தல்) வேறுபட்டது, வித்தியாச மானது. இவ்வாறு பலரையும் அழைத்தது ஒரே குரல், ஒரே ஆள். அவர்தான் நம் தலைவர் இயேசு. இந்தத் தலைவராகிய இயேசுவின் குரலை ஏற்று, அவரது பணியைச் செய்வதில்தான் அழைத்தலின் சிறப்பு வெளிப்படுகிறது. இத்தகைய இறை அழைத்தல் மனித மனங்களை மாற்றி, புதிய சமுதாயத்தை உருவாக்கி, புதிய உலகைப் படைத்திட வித்திடுகிறது.
“நான் கடவுளின் கையிலுள்ள பென்சில். அவரது விருப்பம்போல் செய்ய விட்டுவிட்டேன். சில நேரங்களில் உடைந்ததாகக்கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் கடவுள் எதிர்பார்ப்பது,‘இதோ வருகின்றேன் இறைவா’  என்ற  பதிலைத்தான்” என்று அருளாளர் அன்னை தெரசா கூறினார்கள். எனவே கட்டாயத்தினால் அல்ல, சுதந்திரமாக இயேசுவின் பணிக்கு அர்ப்பணம் செய்யும் வாழ்வு மிகச் சிறந்தது, உன்னதமானது. கடவுளுக்காக வாழ்வதில்தான் வாழ்க்கையின் பொருள் உள்ளது என்பதை உணர்ந்தவர்களாய், இயேசுவின் குரலை ஏற்று வாழும் குருக்கள், துறவியர்களின் வாழ்வு சிறந்தது எனலாம்.
ஆகவே, இறை அழைத்தல் என்பது வெற்றிக்கு உழைப்பை விலையாகக் கொடுப்பது, முயற்சிக்கு நம்பிக்கையை விலையாகக் கொடுப்பது, மகிழ்ச்சிக்கு அன்பை விலையாகக் கொடுப்பது. மேலும் திறமைக்குப் பயிற்சியை விலையாகக் கொடுத்து வாழும் தியாக வாழ்வு. எனவே இறை அழைத்தலுக்கு உன் இதயத்தையும், மனித நேயத்திற்கு அனைத்தையும், இறையரசுக்காக நம்மையே விலையாக இயேசுவைப் போன்று கொடுப்பதே இந்த அழைப்பு. இத்தகைய மேன்மையான அழைப்பு ஒரு சவாலாக இருந்தாலும், அன்பின் அதிசயமாக விளங்குகிறது;  வேறுபட்ட துருவங்களை இணைக்கிறது. உள்ளங்கள் ஒன்றாகின்றன, பகை உணர்வு மாறி உறவாகின்றது. இறை அழைத்தலுக்காய் இறைஞ்சுவோம், உழைப்போம்.
“நற்செய்தி அறிவிப்பவரின் மலரடிகள் எத்துணை அழகானவை!” 
Sr. Theresita, FSM

இறையழைத்தலின் சிறப்பு

நான் கடவுளிடம் வலிமை கேட்டேன்; அதன் மூலம் நான் சாதிக்க முடியும் என்பதற்காக. ஆனால் நான் பலவீனமாகக் படைக்கப்பட்டேன்; பணிவோடு கீழ்ப்படியக் கற்றுக்கொள்வதற்காக. நான் ஆரோக்கியத்தைக் கேட்டேன்; மாபெரும் காரியங்களை ஆற்றுவதற்காக. ஆனால் எனக்குப் பலவீனம் அளிக்கப்பட்டது; சிறப்பான பணிகள் செய்ய வேண்டும் என்பதற்காக. நான் சக்தி கேட்டேன்; மக்கள் என்னைப் புகழ வேண்டும் என்பதற்காக. ஆனால் சக்தி இல்லாதவனாகப் படைக்கப்பட்டேன்; கடவுளின் தேவையை உணர வேண்டும் என்பதற்காக. எனக்கு எல்லாம் வேண்டுமென்று கேட்டேன்; வாழ்க்கையை அனுபவிப்பதற்காக. ஆனால் எனக்கு வாழ்க்கை கொடுக்கப்பட்டது; இயேசுவின் பணிவாழ்வு  யோர்தான் நதியில் திருமுழுக்கில் தொடங்கியது போல் நம் வாழ்வில் திருமுழுக்கின் வழியாக அழைப்பைப் பெறுகிறோம். காரணம், மனிதர்களிடையே மிகவும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நம்பிக்கையுள்ள மனிதர்கள்தான் இறைவனின் அழைப்பின் ஆசீர்வாதம் பெற முடியும். ஆம், “ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க, சிறைப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பினார்” (லூக் 4:18-19) என்று அழைப்பின் தன்மையும் சிறப்பும் உறுதி செய்யப்படுகின்றன.

செப வாழ்வில், நல்ல மதிப்பீடுகளில் தாங்கள் மட்டும் வளராது மற்ற மக்களையும் வளர வைத்தால்தான் அழைப்பின் மேன்மையைப் பெற முடியும். மேற்கூறிய நற்செய்தியின்படி வாழ்ந்தால் ஏழை எளிய மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடியும். நாம் செய்யும் பல பணிகளில் அர்ப்பண உணர்வும் அன்புச் சேவையும் இணைந்து விடுதலை உணர்வுகளைக் கொடுத்தால் அழைப்பின் சிறப்பைப் பெற முடியும்.

நாம் சாதி, மதம் கடந்து மனிதர்கள் ஒற்றுமையுடன், அமைதியுடன் வாழ அனைத்து சமுதாய இணைப்பு, பல்சமயக் கூட்டமைப்பு மற்றும் மன்றங்கள் மூலம் மக்கள் மனித நேயத்துடன் வாழப் பயிற்சி அளித்து வரும்போது, நம் அழைப்பு சிறப்புத்தன்மை அடையும். எங்கள் மகிழ்ச்சிக்கும் எங்கள் உயர்வுக்கும் நல்வாழ்விற்கும் காரணமாக இருப்பவர்கள் துறவிகள், எங்கள் இல்லத்தின் ஒளியேற்றும் விளக்கு என்றும் பிறர் கூறும்போது நாம் பெற்ற அழைப்பு உயர்வு அடைகிறது. நாம் பார்வையாளராக இருக்கக்கூடாது. மக்கள் சமூகத்தின் பிரச்சனைகளில் பங்கேற்பாளராக இருக்க வேண்டும். அப்போது நாமே நற்செய்தி. நாம்தான் பிறருக்காக உடைக்கப்படும் அப்பம். நாம் நல்ல மதிப்பீடுகளில் வாழ்ந்து, அவற்றைப் பிறரோடு பகிர வேண்டும். அப்போதுதான் அழைப்பின் மேன்மை சிறக்கும்.

மேலும், அல்லும் பகலும் அயராது உழைத்தாலும், வாழ்வின் அடிப்படைத் தேவைகள் இன்றித் தாழ்வுறும் சமுதாயம் ஏற்றம் பெற ஆர்வமும் ஆக்கமும் கொண்டு உழைத்து உதவுவதே அழைப்பின் சிறப்பாகும். மூலையில் முடங்கிக் கிடக்கின்ற எண்ணற்ற மக்கள் இனத்தைத் தட்டி எழுப்பி, எழுச்சி பெற்று, ஏற்றங்கள் பல பெற்று நாளும் மகிழ்வுடன் வாழச் செய்ய உதவுவதே அழைப்பின் சிறப்பாகும்.

அனைவருக்கும் அன்பு காட்டும் ஆண்டவனின் அன்புப் பிள்ளைகளாய்ப் பிறந்தும், சாதி, மதம், இனம், மொழி வேற்றுமையால் வாடும் சகோதர, சகோதரிகள் நல்வாழ்வின் உயர்வு காண உதவுவதே அழைப்பின் சிறப்பாகும். நாம் வாழும் பகுதியில் உள்ள இளையோரை இனம்கண்டு, இறையழைத்தலை ஊக்குவிப்போம்.

நந்தவன நாதம் வாசகர் பெருமக்களுக்கு எனது உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்! 

இறையழைத்தல் ஏன்? எதற்கு?

இறையழைத்தல் என்கிற தலைப்பில் என்ன எழுதுவது எனச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எழுதுவதற்காக அமர்ந்த நாள் பெரிய வியாழன். அன்றுதான் குருத்துவத்தை ஏற்படுத்திய நாள் என்றும் சொன்னார்கள். பொருத்தமாகத்தான் இருந்தது.

ஏன் இறையழைத்தல்?இறை அழைத்தல் எதற்காக என்கிற கேள்விக்குப் பெரிய வியாழனே பதிலாய் அமைந்தது. பெரிய வியாழன் அன்று பாதம் கழுவுதல், நற்கருணையை ஏற்படுத் துதல், குருத்துவத்தை உருவாக்குதல் என்கிற மூன்று முக்கிய சடங் குகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அவையே இறை அழைத் தலுக்கான இலக்காக எனக்குப்பட்டன.

பாதம் கழுவுதல்அடிமைகள் தங்கள் எஜமானருடைய கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்துவதை வழக்கமாகக் கொண்ட யூத சமூகத்தில் பிறந்த இறைமகன் இயேசு, தன்னை ஓர் அடிமை போன்று ஆக்கி, தம்மால் படைக்கப்பட்ட மனிதர்களை எஜமானர்களாக உயர்த்தி அவர்தம் பாதங்களைக் கழுவுகின்றார். தான் இறைமகனாக இருந்தாலும், தம் நிலை மறுத்து, தாழ்ந்து அடிமையாகிறார். தம் மக்களின் பாதங்களைக் கழுவித் துடைத்து முத்தமிடுகிறார். தாம் அடிமையாகி தாழ்ந்து போவதன் வழியாகவே தம்மால் படைத்து நேசிக்கப்பட்ட மனிதர்கள் பாவத்திலிருந்து விடுபட்டு உயர முடியும் என முடிவெடுக்கிறார். அவர்களின் பாவங்கள் கழுவப்பட வேண்டுமாயின், தாம் அவர்களின் பாதங்களைக் கழுவி முத்தமிட வேண்டும் என விரும்புகிறார்.

இந்த மனநிலையே இறைவனின் அழைப்பைப் பெற முதலில் தேவைப்படுகிறது. இறை அழைத்தல் முகாமிலேயே ஒருவரைத் தேவ அழைத்தல் பெற்றவராய்த் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும் முதல் நிலை யிலேயே அவருக்கு இத்தகைய தாழ்நிலை மனது - தன்னையே இழக்கும் மனநிலை இருக்கிறதா என்பதைத்தான் கண்டறிய வேண்டும்.

அவர் +2 முடித் தவரா, அறிவாளியா, உடல் பலசாலியா, திறமையானவரா போன்ற பிற தகுதிகளைத் தேடிக் கொண்டிருப் பதைக் காட்டிலும், ‘தன்னையே மறுப்பது’ என்கிற  மனநிலை பெற்றவர்களைத் தேடுவதே இறை அழைத்தலுக்கு அடிப்படைத் தகுதியாகவும் நீதியாகவும் உள்ளது.

சில சூழ்நிலைகளை இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ (கற்பனையாகவோ) கொடுத்து, “இந்தச் சூழலில் நீ இருந்தால் என்ன செய்வாய்” எனச் சிந்திக்கச் செய்து அவரது சிந்தனை வெளிப்படுவதைப் பொறுத்து அவர் எப்படிப்பட்ட மனநிலை உடையவராய் இருக்கிறார் என்பதை எளிதில் கண்டறியலாம். அதன் மூலம் இறையழைத்தலுக்கு அடிப்படையான தன்னை இழத்தல் - ம(ஒ)றுத்தல் - தாழ்த்துதல் என்கிற மனநிலை உடைய வர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த அடிப்படைத் தகுதியைக் கண்டுகொள்ளாமல், வேறு எதையயதையோ தகுதிகளாகக் கருதிச் செயல்பட்டுத் தேர்வு செய்வதால்தான் இன்று பல குப்பைகள் குருத்துவத்திற்குள்ளும் துறவு வாழ்விலும் குவிந்து விட்டன. ‘தேவ அழைத்தல்’ என்கிற சொல்லாடலே அர்த்தமற்றுப் போய் விடுமோ என்கிற அளவுக்கு ஆகிவிட்டது.

நற்கருணையை ஏற்படுத்துதல்பெரிய வியாழனின் இரண்டாவது சடங்கு நற்கருணையை ஏற்படுத்துவது.
நற்கருணையை நல்ல கருணை என்று பிரிக்க முடிகிறது. கருணை என்பதே நன்மையான ஒரு செயல்தான். அதுவே நல்ல கருணையாக மீண்டும் ஒரு நன்மைத்தனத்தைத் தனக்குள் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இரண்டிலும் சிறு வித்தியாசம் உண்டு.

கருணை என்பது நம்மிடம் உள்ளதில் சிலவற்றைப் பிறர் மேல் இரக்கம் கொண்டு கொடுப்பது அல்லது அளிப்பது என்பதைக் குறிக்கும். ஆனால் நல்ல கருணை (நற்கருணை) என்பது நம்மையே (சிலவற்றை அல்ல மாறாக முழுவதும்) பிறருக்குக் கொடுப்பது. அந்த வகையில் இறைமகன் இயேசு மனிதத்தன்மை பூண்டு தன்னை முழுவதும் மனுக்குலத்திற்காகக் கையளித்தார். பகிர்ந்து கொடுத்தார். எனவேதான் அதன் அடையாளமாக அவர் ஏற்படுத்தியதை நற்கருணை என அழகாய் அழைக்கின்றோம்.

ஆக, தேவ அழைத்தல் பெற்றவர்களின் வேலை என்னவென்றால், தன்னையே முழுவதுமாய்க் கையளிப்பது - தன்னையே பகிர்ந்து கொடுப்பது என்பதுதான் என இந்த நற்கருணைச் சடங்கு நமக்கு உணர்த்துகிறது.

தனக்கென்று வங்கிக் கணக்கு, இடம், வீடு, கார், கம்யூட்டர், லேப்டாப், இன்னும் பிற எனப் பல பொருள்களைச் சேர்த்து வைப்பது தேவ அழைத்தலின் வேலை அல்ல. பொருள்களின் மீது மோகமும் நுகர்வு வெறியும் உடையவர்கள் தேவ அழைத்தலைப் பெற்றவர்களாக ஒருக்காலும் இருக்க முடியாது.  பொருள்களின் மீது வெறியும், பண மோகமும் கொண்ட தனிமனிதர்களைத் தேவ அழைத்தலுக்குரியவர்கள் அல்ல எனும்போது, புதிது புதிதாய் இடங்களை வாங்குவது, கட்டிடங்கள் கல்லூரிகள் கட்டி சொத்து சேர்ப்பது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு, ஏன் பிறருடன், பிற சபைகளுடன் போட்டி போட்டுக்கொண்டு செயல்படும் துறவற இல்லங்களும், துறவற சபைகளும், மறைமாவட்டங்களும் ‘தேவ அழைத்தல்’ என்கிற பதத்தினைப் பயன்படுத்தவே அருகதை அற்றவர்கள்.

நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும், சொத்தும் நமக்காக, நமது வசதிக்காக, நமது சபைக்காக / சபையின் வசதிக்காக என்பதைக் காட்டிலும், நல்ல கருணையின் (நற்கருணையின்) அடிப்படையில் பிறருக்காக, பிறர்தம் வாழ்வுக்காக என்பதை மையப்படுத்தி அமைந்தால் மட்டுமே அது தேவ அழைத்தல் பணி. அந்தப் பிறர் என்பவர்கூட சமூகத்தில் கடைநிலை மக்களுக்காக, ஏழைகளுக்காக, கைம்பெண்களுக்காக என்பதாகவே இருக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் சில சொத்தை வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நாங்கள் உங்களிடமிருந்து வந்தவர்கள்தானே! உங்களை மாதிரி ஆசா பாசம், தேவைகள் எங்களுக்கும் இருக்கும் தானே! எங்களை மட்டும் ஏன் ஏஞ்சல் மாதிரி எதிர்பார்க்கிறீர்கள்? நாங்களும் மனிதர்கள் தானே! - என இந்த வாதங்கள் வைக்கப்படுகின்றன.

தேவ அழைத்தல் பெற்று சிறப்புப் பயிற்சி முடித்து ‘சிறப்பு நிலை’யை அனுபவித்து வருபவர்கள் ‘மீண்டும் உங்களை மாதிரிதானே நாங்களும்’ என்று சொன்னால், அந்தச் சிறப்பு நிலை மீது வெறுப்பு நிலைதான் ஏற்படும். அப்படி யயன்றால் தாங்கள் பெற்றது தேவ அழைத்தலா அல்லது பாவ அழைத்தலா எனக் கேள்விகள் எழும்.

அங்ஙனமே ஓரிடத்தில் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் வழியாக நல்லா சம்பாதிப்போம்; இன்னொரு கிராமத்தில் ஏழைகளுக்குப் பணி செய்து அதனை சமன் செய்துகொள்வோம் என்கிற புதிய சித்தாந்தம் தற்போது தேவ அழைப்பு பெற்றவர்களிடம் பரவி வருகிறது.

இது முதலாளித்துவ சிந்தனை. இன்றைய கார்ப்பரேட் கம்பெனிகள்கூட எப்படியயப்படியோ இலாபம் சம்பாதித்து அதில் ஒரு பகுதியைக் ‘கிராமங்களைத் தத்தெடுத்தல்’ என்கிற வழியில் செலவு செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஒரு நாளும் தங்களை இறை அழைத்தல் பெற்ற கம்பெனிகள் என்று முழங்குவதில்லை. ஆக, பெரிய வியாழன் நமக்கு வழி காட்டுவது போல, தன்னை இழக்கும் மனநிலையும், தன்னைக் கையளிப்பது - பகிர்ந்தளிப்பது என்கிற செயல்பாடும் மேற்கொண்டவர்களே குருத்துவம் பெறத் தகுதியுடையவர்கள், வார்த்தைப்பாடு பெற்றவர்கள்.  இவற்றைப் புரிந்துணர்ந்து சிறிதளவாவது ஒருவரை அடையாளம் காண முயல்வதே தேவ அழைத்தல் முகாம்களின் வேலை.

அடையாளம் கண்டவர்களை அழைத்து அதில் ஆழப்படுத்தி  வேரூன்றச் செய்வதே பயிற்சி இல்லங்களின் வேலை.  அதில் தொடர்ந்து செல்பவர்களே தேவ அழைத்தல் பெற்றவர்கள்... சிறப்பு நிலைக்கு உரியவர்கள்...

இல்லையயனில் நாம் தேவ அழைத்தல் என்கிற பெயரில் நமது நிறுவனங்களைக் கட்டிக் காக்க, வளர்க்க சில முழுநேரப் பணியாளர்களை மேனேஜர்களாக, நிர்வாகிகளாக மட்டுமே பெற்றிட முடியும். அதற்குத் தேவ அழைத்தல் என்கிற பதம் வேண்டாம்.

ஆசிரியர் பக்கம்

உயிர்ப்புப் பெருவிழா கொண்டாடி வாரங்கள் கடந்தாலும் தொடர்ந்து பாஸ்கா கொண்டாட்ட காலத்தில் இருக்கும் உங்களுக்கு கிறிஸ்துவின் வெற்றி விழா வாழ்த்துக்கள்!

‘வெற்றி’ என்பதைப் பலவற்றில் எதிர்நோக்கியுள்ள நாட்கள் இவை :

2011-இல் சட்ட மன்றத் தேர்தல் வெற்றி (ஒருவேளை இச்செய்தியை வாசிக்குமுன் தேர்தல் முடிவுகள் அறிந் திருப்பீர்கள்) +2 மற்றும் 10-ஆம் நிலைப் பிள்ளைகள் எதிர்நோக்கியிருக்கும் தேர்வுகளின் வெற்றி கடந்த ஆண்டு முழுவதுமாக அல்லது சில மாதங்களாக கடினப்பட்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று இறையழைத்தலுக்காக உழைத்து இறுதியாக இறை யழைத்தல் முகாம்கள் வெற்றி யோடு நடத்தியும் தொடர் செயல்கள் வெற்றியும் அடைய விரும்பும் நிலை  அனைத்தும் இறைவன் விரும்பும் வெற்றியாய் அமைந்திட வாழ்த்துக்கள்!

பல்வேறு இறையழைத்தல் முகாம்களுக்குச் சென்று வந்தேன். அனைவருடைய கடின உழைப்பையும் பார்க்க முடிந்தது. சவால்கள் அதிகரித்துள்ள பணியில் இறை உறுதிப்பாடு நிறைந்திருந்த நிலை காண முடிந்தது. எத்தனை பேர் வருவோர்களோ என்ற அங்கலாய்ப்போடே பல முகாம்கள் தொடங்கப்பட்டாலும், தொடர்ந்து ஏற்பட்ட மனநிறைவில் எத்தனை பேர் என்கிற எண்ணிக்கையை விட, உறுதிப்பட்ட மனநிலையோடு உள்ள வர்களை (குறைந்த எண்ணிக்கையிலும்) இனம் காணும் பணியே தலைசிறந்து இருப்பதைக் காண முடிந்தது. இருப்பினும் அந்த அங்கலாய்ப்பு, புது உள்ளங்களைத் தேர்ந்தெடுத்து முடியும் வரை தொடர்ந்தே இருக்கும். எல்லாம் நல்லதாய் நடக்கும் என்ற உறுதிப்பாட்டோடு வாழ்த்துச் சொல்வோம்.

சில நினைவுறுத்தல்கள் : சில சபைகள் / மறைமாவட்டங்களில் நல்ல எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் முகாம்களில் கலந்து கொண்டதாகச் செய்தி. ஒருவேளை உங்களது தேர்ந்தெடுப்புக்குப் பின் நீங்களே இன்னும் சிலரை ஆர்வ முள்ள நல்லவர்களாகக் கண்டால் பிற சகோதர சகோதரிகளிடம் கூறி வழிநடத்தி விடலாம். ஏற்கெனவே நமது கருத்தரங்குகளில் பேசியவற்றை நினைவுபடுத்திக்கொள்வோம். நமது பணிகளில் ஒருவருக்கொருவர் உதவியும் ஊக்கப்படுத்தலும் தேவை. யாரும் மனந்தளர்ந்து போகாதபடி உறுதிப்படட்டும். கடவுள் தாம் விரும்பியதை நம் மூலம் செயல்படுத்துவார். அவரின் கருவிகளாவோம்.

சில நாட்களுக்கு முன், வயதில் மூத்த சகோதரி அவர்கள் என் பணி பற்றி விசாரித்த பின், “நிறைய பேரைப் பிடிச்சுப் போடுங்க சாமி, கூட்டம் நல்லா கூடட்டும். நிறைய சாமிமார்கள், சிஸ்டர்ஸ் தேவை” என்றார்கள். வயதில் முதிர்ந்தவர்களிடம் நிறைய விளக்கங்களைச் சொல்ல முடியாமல் சிரித்துக்கொண்டேன்.
எப்படிப்பட்டவர்களைப் ‘பிடித்துப் போடப்போகிறோம்?’ ‘கூட்டம் காட்டுவது நமது குறிக்கோள் இல்லை’ என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அதே வேளையில் எல்லா ஆன்மீகமும், பண்புகளும், திறமைகளும் நிறைந்தே உள்ள நபர்கள்தான் கிடைப்பார்கள்... அவர்களையே தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்றல்ல. பண்புகளும் திறமைகளும் ஆன்மீகமும் வளர்ப்பதற்காகவே பயிற்சிக் காலம் உண்டு. என்றாலும் இளைய வயதில் உள்ளோரிடம் ஊன்றப்பட வேண்டிய சில அடிப்படைப் பண்புகள் அமைந்தே இருக்க வேண்டும் என விழைகிறோம்.
தேர்ந்தெடுக்கும்போது தேவையான சில மனநிலைகள் :  
  • ஆன்மீக ஆர்வம் உள்ள மனநிலை. கத்தோலிக்கக் குடும்பங்களில் வளர்ந்து, சில ஆன்மீகப் பயிற்சியும் அறிவும் பெற்றிருத்தல் நலம். கடவுளைத் தேடும் ஆர்வம் அடிப்படையில் இருத்தல் தேவையே.
  • மனித பண்புகள் (Human Qualities) உள்ள மனநிலை. இளையோருக் கென்று தனிப்பட்ட சில பண்புகள் இருந்தாலும், நல்ல மனித நிலையில் பிறரை மதித்து உறவோடு வாழும் மனப்பக்குவம், நல்ல பழக்க வழக்கங்களோடு உள்ள உறுதி நிலை முக்கியமானதே.
  • இறைப்பணிக்கான ஆர்வம் கொண்ட மனநிலை. இறையழைத்தலைக் கட்டாயத்தினால் அல்ல, மாறாக பிறருடைய வழிநடத்துதலில் தாமே விரும்பி ஏற்று வருகிற நபராக இருத்தல் மிகத் தேவை.  ‘ஏதோ படிப்போம், பிறகு பார்ப்போம்’ என்ற மனநிலையில் உள்ளோரைவிட ‘போகிறேன்... கடவுள் விரும்புவது போல் ஆகட்டும்’ என்னும் அடிப்படை உறுதிப்பாடு தேவை.
  • சமுக ஈடுபாடுள்ள மனநிலை தேவை. எல்லோரையும் ஏற்பதும், கடவுளின் சமூகமாக உலகை மாற்றுவதும், அதற்காக உழைப்பதும் என் பணி என்ற உயர் சிந்தனை தேவை. இறையழைத்தலால் நாம் பத்திர மான, சவாலற்ற உலகத்திற்குள் போகிறேன் என்ற சூழலும் மன நிலையும் பொருந்தாதவையே.
தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் மேற்கூறிய சில அடிப்படை மனநிலைகள் தாங்கியவர்களாக இருத்தலே நலம். இளைய மனந்தினருக்கென்று குறிக்கோள் உண்டு. அது உயரியதாய், சிறப்பானதாய் அமைவதே நல்லது. இவ்வடிப்படைகள் இருந்தால் மட்டுமே பயிற்சியும், பயிற்சி பெற்றுக்கொள்ளும் மனநிலையும் வளர்ச்சி பெறும்.

நலமான புது உள்ளங்களை இனம் காணும் பணியில் நலம்பெற  மீண்டும் வாழ்த்துக்கள்!
- சே. சகாய ஜாண்

திருநங்கை

கல்லூரி தொடங்கிய சில நாட்களிலேயே முதலாமாண்டு வகுப்பறைகள் சிலவற்றில் கலகம் எனக் கேள்விப்பட்டு, கல்லூரி முதல்வர் பூர்ணிமா கலங்கிப் போனார். அவர் பொறுப்பேற்ற இத்தனை ஆண்டுகளில் இப்படி மாணவர்கள் எதற்கும் வெகுண்டெழுந்தது இல்லை. கலாட்டா செய்ததும் இல்லை. எந்தப் பிரச்சனை என்றாலும் பேச்சுவார்த்தை மூலமே, அகிம்சை முறையிலேயே தீர்க்கப்படும். கல்லூரியில் அதற்கென்றே ஒரு குழுவும் இருந்தது. யாருடைய பிரச்சனை, எதுவாக இருந்தாலும் அவர்களிடம் முறையிட்டால் போதும். விசாரணை நடந்து சில நாட்களிலேயே நல்ல முடிவு, எல்லோருக்கும் சாதகமான முடிவு வழங்கப்பட்டு சமாதானம் நிலவும்.
நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே அப்படி ஓர் அருமையான புரிந்துணர்வு இருந்து வந்தது. ஊருக்கு மட்டுமல்ல, கல்லூரி வரலாற்றி லேயே அது ஒரு வித்தியானச மான கல்லூரியாக இருந்தது. ஒரு பெண் நிர்வகிப்பதால் இவ்வளவு புதுமையான முறையா என்று புரியவில்லை. பல வார்த்தைகள் சொல்ல முடியாத விளக்கங்களை, ஒரு சின்ன முன்மாதிரிகையான செயல் எப்படி சாதித்துக் காட்டுமோ, அப்படி ஒரு வித்தியாசத்தை அக்கல்லூரியில் காண முடியும்.
நவநாகரீக உடைகள் இல்லாமல், முதன்மை ஆசிரியர் முதல் கடைநிலை ஊழியர் வரை நமது பாரம்பரியம் மாறாத ஆடை அலங்காரத்தில் இருப்பார்கள். மாணவிகளும் தங்கள் ஆசிரியைகளையே முன்மாதிரிகையாகக் கொண்டு அழகழகான பாவாடை தாவணிகளில், மடிப்பு மாறா புடவைகளில், அழுந்த வாரிப் பின்னிய கூந்தலில், மலர்ச்சரங்களில், வளை குலுங்க, தமிழகத்தின் பாரம்பரியம் குறையாமல் வந்து சென்றார்கள். மாணவர்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. அவர்களே சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நாகரிகமாக ஆடை அணிந்து வருவார்கள். படிப்பிலோ, வேறு எந்தத் துறையிலுமோ அவர்கள் சோடை போகவில்லை. அந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோரும் போட்டி போடும் அளவுக்குக் கல்லூரி முன்னிலையில் நின்றது; முன்மாதிரி கையாக இருந்தது.
சக ஆசிரியர் குழுவுடன் முதலாமாண்டு வகுப்புகள் இருக்கும் பகுதிக்கு விரைந்தார் முதல்வர். அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்கள் இரத்தத்தையே உறைய வைப்பதைப் போலிருந்தது. கண்கள் சட்டெனக் கலங்கின. அரசின் ஆணைக்கு உட்பட்டு இவ்வாண்டு அவர்கள் கல்லூரியின் நான்கைந்து மூன்றாம் பாலின மாணவர்களைச் சேர்த்திருந்தார்கள். அவர்களை ஓரங்கட்டி, அவமானப்படுத்தி, தங்களுடன் சேர்த்துப் படிக்க வைக்கக்கூடாது என்று கூறித்தான் மாணவர்கள் கலவரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களோ கண் கலங்கி அவமானத்தால் குறுகிப்போய் நின்றுகொண்டிருந்தார்கள். தங்கள் முதல்வர் நிச்சயம் தங்களுக்குத் தான் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களும், தங்களுக்கு ஆதரவு காட்ட மாட்டார்கள் என்ற ஏக்கத்தில் இவர்களும் இருந்தார்கள்.
சில நிமிடங்கள் ஆழச் சிந்தித்த கல்லூரி முதல்வர், மாணவர்களிடமே காகிதம், பேனா வாங்கி எதையோ எழுதினார்கள். பின் அங்குக் கூடியிருந்த மாணவச் செல்வங்களை நோக்கிப் பேச ஆரம்பித்தார். “மாணவ, மாணவிகளே, என்னுடைய பிள்ளைகளே, நீங்கள் இவ்வளவு கல்நெஞ்சக்காரர்களாக இருப்பீர்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் உங்களுடனான வாழ்வு அவர்களுக்கு இரண்டு அல்லது மூன்றாண்டுகள்தான். அவர்கள் உங்கள் நண்பர்களாக ஏற்கும் தைரியம் ஏன் உங்களுக்கு இல்லாமல் போனது? நீங்கள் எல்லோரும் உடல் அளவில் ஆரோக்கிய மானவர்கள். அவ்வளவுதானே? அவர்களால் உங்களுக்கு என்ன தீங்கு வரும் என நினைக்கிறீர்கள்? உங்களின் மன ஊனத்தைப் பார்க்கிலும் அவர்களின் ஊனம் பெரிதல்ல. உங்களைப் போன்ற மன ஊனர்களின் முதல்வராய் நான் இருப்பதைவிட, இவர்களைப் போன்றவர்களுக்குத் தொண்டாற்றும் ஒரு சேவகியாக இருக்கவே நான் விருப்பப்படுகிறேன். அவர்கள் வலி எனக்குப் புரியும். இதோ என் ராஜினாமா கடிதம். விடைபெறுகிறேன். விடைகொடுங்கள்.”
அந்த இளம் திருநங்கைகளை அழைத்துக்கொண்டு வீரமாய் வெளியேறும் அவர்களின் மனிதாபிமானம் எல்லோரையும் மனம் மாற வைத்தது. ஒரே நிமிடத்தில் ஓடிச் சென்றவர்கள் அவர்களை முற்றுகையிட்டு வெளியே விட மறுத்தனர். அன்பு எனும் ஈர அலைகளால்தான் அகிலம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது நன்கு விளங்கிற்று. முதல்வர் மிடுக்கோடு தன் அறைக்குச் செல்ல, தங்கள் நண்பர்களான அவர்களுடன் மாணவர்கள் வகுப்பிற்குச் சென்றனர். நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே!!!
- சாந்தி ராபர்ட்ஸ், உதகை